அவனதிகாரம் - 5

 

 

அதிகாரம் – 5

 

தன் தாயின் அறிவுரைகளை எல்லாம் கேட்டுக்கொண்டு வெண்ணிலா அமைதியாக இருந்தாள்.

 

லட்சுமி, சரி மா, விளக்கேத்திட்டு சாமி கும்பிடு என்றார்.

 

வெண்ணிலாவும் தன் தாய் சொல் படி அனைத்தும் செய்தாள்.

 

சாமி கும்பிட்டு முடித்ததும் வெண்ணிலாவின் தோழிகளை அழைத்தார் லட்சுமி, வெண்ணிலாவை அவளோட அறையில் கொண்டு போய் விட்டுடுங்கமா.

 

செல்லும் வழியெல்லாம் கிண்டலும், கேலியுமாக பேசிக் கொண்டு வெண்ணிலாவை அழைத்து சென்றனர். ஆனால், அவர்கள் பேசியது தான் எதுவுமே வெண்ணிலாவை சென்றடையவில்லை.

 

அவள் தான் வேறொரு எண்ணத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாளே. தோழிகளில் ஒருத்தி, ஏய் வெண்ணிலா, என்ன டி என்ன யோசிச்சிக்கிட்டிருக்க.. நாங்க பாட்டுக்கு என்னவெல்லாமோ பேசிக்கிட்டு இருக்கோம். நீ பாட்டுக்கு எதுவுமே கண்டுக்காமல் எதையோ யோசிச்சிக்கிட்டு வர.

 

அதற்கு, வெண்ணிலா பதில் கூறும் முன் இவர்கள் தோழிகளில் இன்னொருத்தி, அவளுக்கு இப்போ நம்ம நினைப்பெல்லாம் எங்கடி இருக்கும். அவ ஜீவா அண்ணாவை பத்தி மட்டும் தான் நினைச்சுக்கிட்டு இருப்பா என்று கிண்டல் செய்து வெண்ணிலாவை மேலும் பேசவிடாமல் செய்தனர். பேசிக்கொண்டே வெண்ணிலாவின் அறையை வந்து அடைந்தனர்.

 

சரி நீ உள்ள போ டி. நாங்க எல்லாம் கிளம்புறோம் என்று தோழிகளில் ஒருத்தி கூற.

 

அனைவரும் நகைத்துவிட்டு சென்றனர். இவள் எப்படி உள்ளே செல்வது..? ஜீவாவை எப்படி எதிர்கொள்வது..? என்று தடுமாற்றத்துடன் அறையின் வாயிலிலேயே நின்றிருந்தாள். வாசலில் ஏதோ நிழல் ஆடுவதைக் கண்டு ஜீவா திரும்பிப் பார்த்தான்.

 

வெண்ணிலா தான் தயங்கி, தயங்கி வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள். வெண்ணிலாவை பார்த்ததும் ஜீவாவால் அதற்கு மேல் காத்திருக்க முடியவில்லை.

 

அவனே எழுந்து சென்று, வெண்ணிலா, இங்க என்ன பண்ணிட்டு இருக்க. உள்ள வா என்று அழைத்தான்.

 

வெண்ணிலா அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் அறையினுள் சென்றாள். பிறகு, ஜீவா அறைக்கதவை தாழிட்டு வந்தான். அவன் வரும் வரையிலும் வெண்ணிலா ஒரு ஓரத்தில் நின்று கொண்டே இருந்தாள்.

 

ஜீவா, என்ன, அப்படியே நின்னுகிட்டே இருக்க. நியாயமா பாத்தா நான் தான் வெக்கப்படணும் இது உன்னோட வீடு உன்னோட ரூம்.. நான் தான் உன்னோட ரூம்ல உங்க வீட்டில் இருக்கேன். நீ என்னமோ எங்க வீட்டில் என்னோட ரூம்ல இருக்குற மாதிரி வெட்கப்பட்டுகிட்டு இருக்க என்று அவளை கிண்டல் அடித்தான்.

 

அவளுக்கு விவரம் தெரிந்து இது தான் அவர்கள் முதன் முதலில் உரையாடும் உரையாடல். அவள் என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்ற தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள்.

 

ஆனால், ஜீவா தான் அவளை தினமும் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கிறானே. ஏதோ புதிய நபருடன் புதிதாக பேசுவது போன்ற எண்ணம் எதுவும் அவனுக்கு தோன்றவில்லை. நீண்ட நாட்களாக பழகியவருடன் உரிமையாக பேசுவதைப் போல் வெண்ணிலாவிடம் பேசினான்.

 

மேலும், திருமணம் ஆகிவிட்டது தன் மனைவி தனக்கு இல்லாத உரிமையா என்னும் எண்ணமும் இப்பொழுது சேர்ந்தவுடன் உரிமை உணர்வு இன்னும் மேலோங்கி விட்டது. 

 

ஜீவாவே சாதாரணமாக முதலில் பேச்சுக் கொடுத்தவுடன் வெண்ணிலாவிற்கும் தயக்கம் சற்று தளர்ந்தது.

 

இல்ல, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. இது உங்க வீடு மாதிரி நினைச்சுக்கோங்க. உங்களுடைய ரூம் மாதிரி நினைச்சுக்கோங்க என்று வெண்ணிலா அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள்.

 

அவள் பேசுவதை கேட்டவனிற்கு சிரிப்பு வந்துவிட்டது, என்ன வெண்ணிலா தனியா ஏதோ பேசிட்டு இருக்க.. ஏதாவது முக்கியமான விஷயம் தனியா பேசணும்னு நினைச்சிட்டு இருக்கியா..  நான் வேணும்னா வெளியில் வெயிட் பண்றேன் நீ பேசிட்டு சொல்றியா என்று அதற்கும் கிண்டல் அடித்தான் ஜீவா.

 

இல்ல, நான் உங்ககிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் என்று அவசரமாக அவளிடம் இருந்து பதில் வந்தது.

 

எங்கே அவன் உண்மையாகவே வெளியே போய்விடுவானோ என்ற பயம் அவளிடம்.. ஏனெனில், அவன் வெளியே சென்று விட்டால் அதற்கும் இவளை தானே கேள்வி கேட்பார்கள்.

 

அப்படியா! நீ பேசுனது எனக்கு ஒன்னும் கேட்கலையே. அதனால் நீ தனியா பேசிக்கிட்டு இருக்கியோனு நினைச்சுட்டேன். சரி உக்கார் பேசலாம் என்று கட்டிலை கை காட்டினான்.

 

சரி என்று தலையை அசைத்தவளும் சிறு தயத்துடனே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். அவளின் செய்கை ஒவ்வொன்றும் ஜீவாவினுள் பல பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்தது.

 

இருவருக்குமான முதல் நேர்முக உரையாடல். அதில், வெண்ணிலா இவ்வாறு தயங்கி, தயங்கி பேசுவதும் ஜீவாவிற்கு ஒரு விதத்தில் பிடித்திருந்தது. ஏதோ, ஒரு புதிய அனுபவத்தை உணர்ந்து கொண்டிருந்தான் அவள் அருகில்.... ஒவ்வொரு வினாடியும்...

 

பார்த்து! கைப்பிடியை நல்லா பிடிச்சுக்கோ. இல்லைனா, கீழே விழுந்துட போற என்று அவளின் செய்கை ஒவ்வொன்றுக்கும் இவனின் பதில் கிண்டலாகவே வந்து கொண்டிருந்தது.

 

இவனின் இவ்வாறான பேச்சுகளால் அவள் தான் திணறிப் போனாள். எப்படி இவனுக்கு பதில் கூறுவது, எப்படி இவனை எதிர்கொள்வது.. என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

ஏற்கனவே, எப்படி ஜீவாவை எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் இருந்த வெண்ணிலாவிற்கு இவனின் இத்தகைய பேச்சுக்கள் மேலும் மேலும் அவளை நாணத்தால் சிவக்க செய்தது.

 

ஜீவா, என்ன நிலா, ஒன்னுமே சொல்ல மாட்டேங்குற.. ஒரு வேளை, இப்படி ஓரமா உட்கார்ந்து நீ கீழே விழுந்தா நான் தாங்கி பிடிப்பேன்னு இப்படி ஓரமா உட்கார்ந்து இருக்கியா? என்றான் மீண்டும் அவளை சீண்டும் பொருட்டு.

 

அதில் பதறிய வெண்ணிலா, ஐயையோ! அதெல்லாம் இல்லைங்க என்று நன்றாக ஏறி உட்கார்ந்துக் கொண்டாள்.

 

வெண்ணிலாவின் இத்தகைய செயலை பார்த்ததும் ஜீவாவிற்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வெடித்து கிளம்பியது. சற்று சத்தமாகவே சிரித்து விட்டான். வெண்ணிலாவிற்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது.

 

பேசாமல் கீழே விழுந்தாலும் பரவாயில்லைனு ஓரமாவே உட்கார்ந்து இருக்கலாம் போலருக்கு என்று மனதிற்குள் தன்னைத் தானே கொட்டிக் கொண்டாள்.

 

ஜீவா, நான் சும்மா தான் சொன்னேன். இதுக்கு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற. சரி சொல்லு, என்னை பார்த்தா உனக்கு அவ்வளவு பயமாவா இருக்கு?.

 

இல்லை, பயம் எல்லாம் இல்லை... இப்போ தான முதல் தடவை பேசுறேன் அதான் என்ன பேசுறதுன்னு தெரியல.

 

ஆனா, எனக்கு அப்படி தெரியல. உன் கூட இப்போ தான் முதல் தடவை பேசுற மாதிரி எனக்கு தோணல. ஏதோ, பல வருஷமா உன்னோட பழகுன போல இருக்கு.. முன்னாடியே உன்கிட்ட சொல்லணும்னு நிறைய தடவை முயற்சி பண்ணி இருக்கேன். சொல்லக்கூடிய சந்தர்ப்பம் அமையல, சொல்றதுக்கான வயசும் உனக்கு வரல. சரி, இப்போ சொல்லலாம்னு நினைக்கும் போது வீட்டில் கல்யாணத்துக்கு பேசி முடிச்சிட்டாங்க. அதனால், இப்போ சொல்றேன்...

 

ஜீவா பேச ஆரம்பித்த முதலே வெண்ணிலாவின் மனதில் தடதடவென ரயில் ஓட்டம் தொடங்கி விட்டது. அவனின் ஒவ்வொரு வாக்கியத்தையும் கேட்கும் பொழுது இவளின் மனம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது. என்ன கூற போகிறானோ என்று..

 

பதில் தெரியாத கேள்விக்கு தான் என்ன பதிலாக இருக்குமோ என்ற எண்ணம் எழும். ஆனால், பதில் தெரிந்த கேள்விக்கு... இவளிற்கு தான் அவன் என்ன கூற போகிறான் என்று தெரியுமே!

 

நிலா.... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். எப்போலருந்துனு கேட்டா எனக்கே தெரியாது. எப்போலருந்து எனக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு கேட்டாலும் எனக்கு தெரியாது. தெரியாத வயசிலிருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் நான் ரசிச்சிருக்கேன் உனக்கே தெரியாமல்... சிலது உனக்கே தெரிஞ்சிருக்கலாம்... சிலது உனக்கு தெரியாமலும் இருக்கலாம் எனக் கூறி சிறு இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

 

என்னோட பிடித்தம் எப்போ காதலா மாறுச்சின்னு எனக்கு தெரியல... வீட்டில் எனக்கு பொண்ணு பார்க்கணும்னு பேசும் போது தான் எனக்கே தெரிஞ்சது என் மனசுல நீ தான் இருக்கனு... நீ இல்லாமல் என்னால் வேற யார் கூடவும் வாழ முடியாதுன்னு... என்று விழி அகலாமல் அவளின் கண்களை பார்த்தே கூறிக்கொண்டு இருந்தான்.

 

ஜீவா இப்படி அதிரடியாக அவனின் மனதில் இருப்பதை கூறுவான் என்று வெண்ணிலா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் இவளை விரும்புகிறான் என்பதை இவளும் சில நாட்களாக உணரத் தொடங்கியிருந்தாள். ஆனாலும், இப்படி திருமணம் ஆன முதல் நாளே அவன் தன் விருப்பத்தை கூறுவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் கூறுவது என்று திருதிருவென விழித்தாள்.

 

அவளின் அமைதியை கண்டு, நிலா, ஏதாவது சொல்லு... என்று அவளை பேசுவதற்கு ஊக்குவித்தான் ஜீவா.

 

அவளிடம் மௌனம் மட்டுமே...

 

சரி, எனக்கு புரியுது. இப்படி திடீர்னு சொன்னா உனக்கும் கொஞ்சம் டைம் வேணும்ல. என் மனதில் இருக்குறதை இதுக்கு மேல் என்னால் மூடி வைக்க முடியல. ஏன்னா, நான் உன் மேல வச்சிருக்குற அன்பு ரொம்பவே ஆழமானது.. தூரத்தில் இருக்கும் போது கூட சொல்லாமல் இருந்திடலாம். இப்படி பக்கத்தில் வச்சுக்கிட்டு தினம், தினம் சொல்லாமல் இருக்குறது மூச்சு முட்டுற மாதிரி இருக்கும். அதான் இப்போவே சொல்லிட்டேன். உனக்கு எப்போ தோணுதோ.. என் மேல முழுசா உனக்கு எப்போ அன்பு வருதோ, அப்போ சொல்லு.. அதுவரைக்கும் நான் காத்துட்டு இருப்பேன்.. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன் நிலா.. ஐ லவ் யூ என்று அவள் கண்களை பார்த்து கூறி முடித்தான் நிலாவின் ஜீவா.

 

அவன் அவளை பிடித்திருக்கிறது என்று கூறியதுமே அவளுக்கு தன்னை சுற்றி நடப்பது அனைத்தும் நின்று விட்டது போன்ற உணர்வு. அவன் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் விழி அகற்றாது.

 

அவன் உருகி உருகி பேசிய காதல் வசனங்கள் எதுவும் இவள் காதில் விழவில்லை. அவளுக்கும் அவன் மேல் பிடித்தம் இருந்தது. ஆனாலும், பெண்களுக்கே உரிய நாணம் அவளை கூறவிடாமல் தடுத்தது.

 

இவன் கூறிய வார்த்தைகளுக்கே அவள் முகம் செந்தனலாய் மாறிவிட்டது. அவளின் இத்தகைய மாற்றமே அவனின் கேள்விக்கான பதிலை கூறிவிட்டது. இருந்தும், அவள் வாய்மொழியால் அறிய விரும்பினான் ஜீவா. எனவே, அவளுக்கான அவகாசத்தை அளித்தான். மேலும், தற்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் ஜீவாவுக்கு கிடையாது.

 

வெண்ணிலாவிற்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வயது இன்னும் வரவில்லை என்று அவன் எண்ணினான். எனவே, இரண்டு வருடங்கள் கழித்து பிள்ளை பெறுதலை பற்றி பார்க்கலாம் என்று மனதில் நினைத்திருந்தான். அது மட்டும் இன்றி, அவளிற்கும் இந்த அவகாசம் தேவையாகப்பட்டது.

 

தன்னையே மெய் மறந்து கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிலாவிடம் ஜீவா பதட்டமாக, என்ன ஆச்சு நிலா என்னை சைட் அடிச்சிட்டு இருக்கியா என்று அவளை சாதாரணமாக மாற்றும் பொருட்டு கூறினான்.

 

திடீரென ஜீவா பதட்டமாக ஏதோ கூறவும். என்னவோ, ஏதோ என்று அவளுக்குள்ளும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பிறகு, தான் அவன் கூறிய வாக்கியத்தை உணர்ந்து நிதானம் அடைந்தாள்.

 

ஐயையோ, இல்லைங்க என்றாள் சற்று தடுமாற்றத்துடன்.

 

தன் மனதில் இருக்கும் ஒட்டுமொத்த காதலையும் கொட்டி விட்டு ஒன்றும் அறியாதவன் போல் சாதாரணமாக இருந்தான். இவள் தான் பாவம், தன்னை பழைய நிலைக்கு மாற்ற சிரமப்பட்டு போனாள். ஒரு வழியாக கடினப்பட்டு தன்னிலை அடைந்தாள் நிலா.

 

அதனை உணர்ந்த ஜீவா, சரி, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு தூங்கலாமா என்று கேட்டான்.

 

சரி என்னும் விதமாக தலை அசைத்தவள் எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு கட்டிலிற்கு மறுபுறம் வந்து படுத்தாள்.

 

ஜீவா இத்தனை நாட்களாக மனதிற்குள் பூட்டி வைத்திருந்த அவள் மேல் அவன் வைத்திருந்த அன்பை இன்று சொல்லிவிட்ட திருப்தியில் நிம்மதியான நித்திரையை தழுவினான்.

 

ஆனால், வெண்ணிலாவிற்கோ எதிர்மறையாக இன்றைய தூக்கம் மொத்தமாக ஜீவாவின் வார்த்தைகளால் பறிபோனது. கண்களை மூடினால் திரும்பத் திரும்ப அவன் கூறிய வாக்கியங்களே கண் முன் வந்து நின்றன. அன்றைய இரவு‌ வெண்ணிலாவிற்கு தூங்கா இரவாகிப் போனது.

 

இப்படி சிறு வயது முதல் உருகி உருகி காதலிக்கும் ஜீவா தன் காதல் மனைவியின் ஆசையை உணர்ந்தாள் என்னவாகும்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3