அவனதிகாரம் - 20

 

 

அதிகாரம் – 20

 

மீரா தனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே சென்னையில் வசித்து வருபவர். மேலும், உறவுகள் என்று யாரும் அங்கு இல்லை. தாய், தந்தை என்று அவரின் உறவு முடிந்து விட்டது.

 

திருமணமான பிறகு தான் அவர்களுக்கு என சில உறவுகள் வந்தனர். திருமணம் முடித்து கொடுத்ததும் சென்னையில் தான். ஆகையால், கிராமத்து வாசமே இல்லாதவராய் இருந்த மிராவிற்கு, இந்த கிராமத்தின் சூழல் மிகவும் பிடித்து விட்டது.

 

இப்படி சுற்றி உறவினர்களுடன் அவர் இருந்ததே கிடையாது. கணவரின் உறவுகளுடன் இருக்கும் பொழுதும், அவருக்கு ஒரு ஏக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

 

தன் கணவருக்கு எவ்வளவு உறவுகள் இருக்கின்றனர். நமக்கு இது போல் இல்லையே என்று எண்ணி வருந்துவார். ஆனால், இப்பொழுது அவருக்கு இங்கு இருப்பவர்களை வேற்று ஆளாய் நினைக்க முடியவில்லை.

 

தன் தாயின் உடன் பிறந்தவர்கள் என்பதால் தன் நெருங்கிய சொந்தமாகவே எண்ணத் தோன்றியது. அது மட்டும் இன்றி, மரகதத்தை பார்க்கும் பொழுது ஏனோ வள்ளியம்மையையும், மரகதத்தையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க தோன்றவில்லை மீராவினால்.

 

ஆகையால், அம்மா என்னும் உரிமை தானாகவே வந்துவிட்டது. பெயருக்கு பெரியம்மா என்று அழைத்தாலும், தாய்க்கு ஈடான மதிப்பு அவர் மனதில் குடியேறிவிட்டது அவரை பார்க்கும் பொழுதே.

 

இந்த கிராமத்தினுள் நுழையும் பொழுதே சுற்றி இருந்த பச்சை பசேல் நிலங்களையும், மலைகளையும், ஏரிகளையும் பார்க்கையில் இவருக்கு ரொம்ப பிடித்து விட்டது.

 

சில நாட்கள் இங்கேயே தங்க வேண்டும் என்னும் எண்ணமும் மீராவிற்கு வந்தது. ஆனால், அதற்கெல்லாம் அபிமன்யு ஒப்புக்கொள்ள மாட்டானே.

 

வீட்டில் இருந்து கிளம்பும்போதே அவன் பாட்டி வள்ளியம்மையிடம், போய் பார்த்துவிட்டு உடனே கிளம்பி விட வேண்டும் என்னும் கண்டிஷனுடன் தான் கிளம்பினான்.

 

மீராவிற்கு ஏன் இவன் இப்படி கூறுகிறான் என்பது புரியாவிட்டாலும், அவர்களுக்குள் நடக்கும் உரையாடலை மட்டும் பார்வையாளராக இருந்து பார்த்தார்.

 

மீரா நாற்காலியில் இருந்து எழுந்து அவர்கள் வீட்டை சுற்றிப் பார்க்க தொடங்கினார். பழமை மாறாத அழகிய கிராமத்து வீடு. ஆறு அறைகளை உள்ளடக்கிய பெரிய வீடு தான்.

 

நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் கட்டப்பட்டிருந்தது. மேலும், லட்சுமியின் கைவண்ணத்தில் வீடு எந்த ஒரு தூசும், அழுக்கும் இல்லாமல் பழைய வீடு என்று கூற முடியாத அளவிற்கு ஜொலித்துக் கொண்டிருந்தது.

 

வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டே பின் வாசல் பக்கம் சென்றார் மீரா. மரகதம் பாட்டியும் அவரை பின்தொடர்ந்து எழுந்து சென்றார். மரகதம் பாட்டி மீராவை பின் தொடர்ந்து செல்வதை கவனித்த அபிக்கு டென்ஷன் அதிகமானது.

 

பார்த்து ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள ஏதோ பல வருஷம் பழகுன மாதிரி சீன் கிரியேட் பண்றாங்க. இரிடேட்டிங்.. என்று முணுமுணுத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

 

அதை கவனித்த ஜீவா, அபியை வேண்டும் என்றே வெறுப்பேற்றும் பொருட்டு, என்ன சார் ஸ்லோகன் சொல்லிட்டு இருக்கீங்களா என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான்.

 

இவன் கேள்வியில் பாட்டியிடம் இருந்து கவனத்தை இவன் பக்கம் திருப்பிய அபிமன்யு என்ன என்னும் விதமாக கேள்வியாக பார்த்தான் ஜீவாவை.

 

அதான் சார் வாய்க்குள்ள ஏதோ முணுமுணுத்துக்கிட்டு இருக்கீங்களே.. உங்க வாயிலிருந்து ஸ்லோகன் தானே அதிகமா வரும். அதான் கேட்டேன் என்று கூறி நக்கலாக பார்த்தான்.

 

கடுப்பில் தன் கைகளை இறுக்கி மூடிய அபிமன்யு ஜீவாவிற்கு மட்டும் கேட்கும் குரலில், என்ன.. உங்க வீட்டுக்கு வரவச்சிட்டோம்னு ரொம்ப பண்றியா. இடியட், யூ நோ ஹூ ஐ அம்.

 

தெரியும் சார். அதான் பார்க்குறேனே, தி கிரேட் அபிமன்யு சார்.. எவ்வளவு பெரிய பிசினஸ் மேன். ஆனா, அவர் ஏன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காருன்னு எப்படி யோசிச்சாலும் ஆன்சர் கிடைக்க மாட்டேங்குது சார். அது மட்டும் இல்லாம, உங்க ஆபீஸ்ல நான் உங்களை மீட் பண்ணும் போது நீங்க பேசுன பேச்சு என்ன.. இப்போ இப்படி எங்க வீட்டில் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறது என்ன.. ப்பா.. யோசிச்சு பாத்தா ரொம்ப கன்ஃபியூஷனா இருக்கு சார். நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா என்று திரைப்பட பாணியில் கேட்டு அவனை மேலும் வெறுப்பேற்றினான் ஜீவா.

 

ரொம்ப யோசிக்காத நான் கெட்டவன் தான் என்று பற்களை கடித்துக் கொண்டு கூறிய அபிமன்யு, யூ பெட்டர் மூவ் ஃப்ரம் ஹியர். நீ ரொம்ப பேசுற, இதுக்கெல்லாம் சேர்த்து ரொம்ப அனுபவிப்ப என்று கோபமாக பார்த்தான் ஜீவாவை.

 

அத்த அபி சார்க்கு சூடா டீ, காபி எல்லாம் வேண்டாம். பாவம்! அவரே சூடா தான் இருக்கார். அதனால ஜில்லுனு ஜூஸ் இல்லைனா, மோர் ஏதாவது இருந்தா கொடுங்க என்று சமையலறையை நோக்கி குரல் கொடுத்தான்.

 

உள்ளிருந்து லட்சுமி, சரிங்க மாப்ள. இதோ எடுத்துட்டு வரேன் என்று குரல் கொடுத்துவிட்டு அவரின் வேலையில் கவனம் ஆனார்.

 

யாருக்கா இவங்க எல்லாம்? என்று லட்சுமியிடம் தொண தொணத்துக் கொண்டே இருந்தார் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் ராணி.

 

முதலில் வந்தவங்களுக்கு காபி தண்ணி எல்லாம் கொடுத்துட்டு உன் கேள்விக்கெல்லாம் அப்புறமா பதில் சொல்றேன். முதலில் வேலையை பாரு, பக்கத்தில் நின்னுக்கிட்டு தொண தொணன்னுட்டு இருக்காத. அந்த தட்டில் இந்த பணியாரத்தை வை என்று அவரிடம் வேலையை ஏவி விட்டு, இவர் அனைவருக்கும் காபி கலந்து கொண்டிருந்தார்.

 

இவர்களின் உரையாடல் இவ்வாறு சென்று கொண்டிருக்க. வள்ளியம்மை பாட்டி ஒருபுறம் வெண்ணிலாவிடம் பேசிக் கொண்டிருந்தார். இடையில், கயல் விழியும், யாழினியும் தான் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

 

கயல்விழி யாழினியிடம், ஏய் யாழி, நம்ம இவங்களை இப்போ தான் பார்க்குறோம். ஆனா, ஜீவா மாமாவை பாரு, ரொம்ப நாளா அவங்களை தெரிஞ்ச மாதிரி பேசிக்கிட்டு இருக்கார் என்று தன் சந்தேகத்தை கேட்டாள்.

 

அதற்கு போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த யாழினி பதில் கூறாமல் மும்முரமாக போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் தலையில் கொட்டிய கயல்விழி, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கோவமாக கேட்டாள்.

 

இவள் கொட்டியதினால் ஏற்பட்ட வலியில், ஸ்ஸ்.. என்னக்கா.. என்ன வேணும் உனக்கு என்று தலையை தேய்த்துக் கொண்டே கேட்டாள் கயல்விழியிடம்.

 

நம்ம ஜீவா மாமாவுக்கு மட்டும் அவரை எப்படி முன்னாடியே தெரியும் என்று மீண்டும் கேட்டாள் கயல்விழி.

 

அதை போய் மாமாகிட்டயே கேளு. எனக்கு எப்படி தெரியும். நானும் இப்போ தானே பார்க்குறேன் என்று கோபமாக கூறிவிட்டு மீண்டும் விளையாட்டில் மும்முரம் ஆகிவிட்டாள்.

 

ஆனால், கயல்விழியால் யாழினியைப் போல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இங்கே என்ன நடக்கிறது என்று அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

பின் வாசல் சென்ற மீரா அப்படியே தோட்டத்தின் பக்கம் சென்றார். அவளை பின்தொடர்ந்து வந்த மரகதம், என்னத்தா.. என்ன வீட்டை இப்படி சுத்தி, சுத்தி பாக்குறவ? என்று கேட்டார்.

 

அதில் திரும்பி மரகதத்தை பார்த்து சிரித்த மீரா, எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு பெரியம்மா என்று கூறி சிரித்தார். மீராவையே ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார் மரகதம்.

 

இந்த ஊர், இந்த வீடு, இங்க இருக்குற உங்களை எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு விவரம் தெரிஞ்சு அம்மா வீட்டில் இத்தனை பேரோட நான் இருந்ததே இல்ல. இந்த மாதிரி இடத்துக்கும் இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் வரேன். இந்த ஊரு ரொம்ப அழகா இருக்கு பெரியம்மா.

 

தன் ஆசை மகள் இங்கேயே துள்ளி குதித்து ஆசைத்தீர விளையாடி வளர்ந்திருக்க வேண்டியவள். இப்படி அனைத்தையும் ஏக்கமாக பார்ப்பதைப் பார்த்து அத்தாயின் மனம் ஊமையாக அழுதது.

 

வேணும்னா ரெண்டு நாள் தங்கிட்டு போங்கலேன். எங்களுக்கும் உங்க கூட எல்லாம் இருந்து ரொம்ப நாள் ஆகுதுல என்று ஆசையாக கேட்டார் மரகதம்.

 

இல்ல பெரியம்மா, அபி ஒத்துக்க மாட்டான். அவனுக்கு ஆபீஸ்ல நிறைய முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கும். நாங்க கூப்பிட்டதுக்காக தான் எங்க கூட வந்தான் என்று ஏமாற்றமாக கூறினார் மீரா.

 

வீட்டில் நடந்த உரையாடல்கள் அவருக்கு தெரியுமே.. வேறு என்ன கூற முடியும்.

 

சரிமா, நான் வேணும்னா தம்பிகிட்ட பேசி பாக்கவா. தம்பியை வேணும்னா கிளம்பி போக சொல்லுங்க. நீங்க ரெண்டு பேரும் கூட ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல.

 

வீட்டில் ஆரணி வேற தனியா இருப்பா பெரியம்மா. அவ நான் இல்லைனா இருக்க மாட்டா.

 

சரிமா, கவலைப்படாத. போயிட்டு பெரியப்பாவை வீட்டுக்கு கூப்பிட்டு வந்ததும் திரும்ப வாங்க. அப்போ வரும் போது பிள்ளைங்களை எல்லாம் கூப்பிட்டு வந்து பத்து நாள் தங்கிட்டு தான் போகணும். அந்த மனுஷன் இருக்கும் போது நீங்க எல்லாம் வந்தீங்கன்னா அவரும் ரொம்ப சந்தோஷப்படுவார்.

 

கண்டிப்பா பெரியம்மா.. கண்டிப்பா வருவேன் என்று வாக்களித்தார் மீரா.

 

தோட்டத்தில் இவ்வளவு செடி வச்சிருக்கீங்களே, இதெல்லாம் யாரு பார்த்துக்குறது என்று விசாரித்தார் மீரா.

 

நான் தான் மா பார்த்துக்குறேன். எனக்கு இந்த மாதிரி செடிங்க வளர்க்குறது எல்லாம் ரொம்ப பிடிக்கும். லட்சுமிக்கு வீட்டு வேலையும், பிள்ளைங்களை பார்த்துக்கவுமே நேரம் சரியா போயிடுது. பாவம், அவ என்ன பண்ணுவா. வேலை செய்யுற ஆளுங்க அவ்வளவு நல்லா பார்த்துக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு இந்த மாதிரி தோட்ட வேலைங்கன்னா, அப்போலருந்தே ரொம்ப பிடிக்கும். அதனால நான் தான் பார்த்துக்கிடுவேன்.

 

எல்லா மரமும் வச்சிருக்கீங்களா.

 

ஆமா மா. இங்க வாயேன் காட்டுறேன் என்று கூறி, மீராவை கையோடு அழைத்துச் சென்று அனைத்து மரங்களையும் ஒவ்வொன்றாக காட்டி, அது என்ன மரம் என்னும் விவரத்தையும் கூறினார்.

 

அவர் சொல்ல சொல்ல ஒவ்வொரு மரத்தையும், அதில் உள்ள பழங்களையும் தொட்டுப் பார்த்த மீராவுக்கு ஏதோ தான் சிறுபிள்ளையாக மாறிவிட்டது போல் எண்ணம் தோன்றியது.

 

உண்மையிலேயே அனைத்தையும் தொட்டு தொட்டு பார்த்து சிறுபிள்ளை போல் மகிழ்ந்தார். அதை பார்த்த மரகதம் பாட்டிக்கு ஏதோ தன் பிள்ளை மீண்டும் தன் கையில் கிடைத்து விட்டதை போல் பெரும் மகிழ்ச்சி. மனதிற்குள் இனம் புரியாத நிம்மதி ஒன்று ஏற்பட்டது.

 

இவ்வளவு நாள் ஃப்ரூட்ஸ் எல்லாமே நாங்க கடையில் தான் வாங்கி இருக்கோம். இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி நேரில் அதை செடியிலேயே தொட்டுப் பார்க்கிறேன் பெரியம்மா என்று கூறி சிறுபிள்ளை என ஆசையாக தொட்டு பார்த்து சிரித்தார் மீரா.

 

உங்க வீடும் பெரிய வீடு தான மா. தோட்டம் கூட பெருசா இருந்துச்சே. அங்க நீங்களும் இந்த மாதிரி மரம் எல்லாம் வச்சிருக்கலாம்ல என்று கேட்டார் மரகதம் பாட்டி.

 

ஆமா பெரியம்மா, தோட்டம் பெருசு தான். ஆனா பராமரிக்கணும்ல.. இந்த அளவுக்கு எங்களால் அங்க பார்த்துக்க முடியுமானு தெரியல. சும்மா அழகுக்காக பூச்செடிகளை தான் வச்சிருக்கோம். இப்படி ஃப்ரூட்ஸ், வெஜிடபிள்ஸ் எல்லாம் நாங்க வச்சதில்லை பெரியம்மா. ஆனா, இப்போ இங்க பார்த்ததில் இருந்து, எனக்கும் இதே மாதிரி ரெடி பண்ணனும்னு ஆசையா இருக்கு என்று கூறினார்.

 

அதுக்கு என்னத்தா தாராளமா பண்ணு. ஏதாவது சந்தேகம்னா எனக்கு போன் பண்ணு. நான் சொல்லி தரேன்.

 

சரிங்க பெரியம்மா என்று கூறிய மீரா, திடீரென யோசனை வந்தவராக, பெரியம்மா எங்க வீடு பெருசு, தோட்டம் பெருசுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? என்று கேள்வியாக கேட்டார்.

 

அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் பார்த்த மரகதம் பாட்டி, அது... வந்து... வள்ளி தான் மா சொல்லுச்சு என்று கூறி சமாளித்தார்.

 

ஓ.. அம்மா சொன்னாங்களா. சரி, சரி என்று மீராவும் ஏற்றுக்கொண்டார்.

 

தோட்டத்தின் பக்கம் சென்ற தன் தாயை காண எண்ணி, தன் நாற்காலியில் இருந்து எழுந்து தோட்டம் நோக்கி சென்றான் அபி.

 

என்ன அதுக்குள்ள எங்க போறீங்க என்று கேட்டான் ஜீவா.

 

மாம் பார்க்க போறேன் என்று கூறிவிட்டு கடகடவென சென்றுவிட்டான்.

 

ஜீவாவிடம் இருந்து தப்பிக்கவே சென்றான் என்பது அவன் மட்டுமே அறிந்த உண்மை

 

இவன் தோட்டத்திற்கு சென்று பார்க்கையில் மீரா, மரகதத்தின் கையை பிடித்துக் கொண்டு ஏதோ உருக்கமாக பேசிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த அபிமன்யுவிற்கு, ஒரு நிமிடம் எல்லாம் தெரிந்து விட்டதோ என்ற பதட்டம் ஏற்பட்டது.

 

பதட்டத்துடனும், அதிர்ச்சியுடனும், மாம்... என்று சத்தமாக மீராவை அழைத்தான்.

 

அபிமன்யுவின் அழைப்பில் டக்கென்று திரும்பிய மீரா, அபிமன்யுவை பார்த்து, என்ன அபி.. இங்க வந்து நிக்கிற.. என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா? என்று கேட்டார்.

 

அதற்குள் சுதாரித்த அபிமன்யு அவர் அருகில் வந்து சாதாரணமாக, மாம், இட்ஸ் கெட்டிங் லேட் கிளம்பலாமா என்று கேட்டான்.

 

அதற்கு மரகதம் பாட்டி, என்ன தம்பி, இப்போ தான வந்தீங்க. இருங்க கொஞ்சம் நேரம் கழிச்சு போகலாம்.

 

அபிமன்யு, இல்லைங்க, பரவாயில்ல.. ஏற்கனவே, நிறைய நேரம் ஆயிடுச்சு. அங்க ஆரணி ஸ்கூலில் இருந்து வந்துருப்பா, அம்மாவை தேடுவா. நாங்க கிளம்புறோம். இன்னொரு நாள் வரோம் என்று இப்போதைக்கு இங்கிருந்து தப்பிக்க எண்ணி வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்.

 

அபிமன்யுவிற்கு யாரிடமும் இப்படி பொறுமையாக விளக்கம் கொடுக்கும் பழக்கம் கிடையாது. கிளம்பலாம் என்றால் கிளம்பலாம் தான் . வேண்டாம் என்றால் வேண்டாம் என்று இருப்பவன்.

 

இப்படி அமைதியாக மரகதம் பாட்டிக்கு விளக்கம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது மீராவிற்கு. இந்த கிராமத்தின் சூழல் நம் மகனை எப்படி மாற்றி இருக்கிறது என்று ஆச்சரியமாக அபிமன்யுவை பார்த்தார்.

 

இங்கே வந்ததும் நம் மகனுக்கு கலாச்சாரமும், பண்பாடும் பெரியவர்களுக்கு எவ்வாறு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதும் தானாகவே வந்து விட்டது என்று எண்ணிய மீரா.

 

எப்படியாவது அபிமன்யுவை சிறிது காலம் இங்கே தங்க வைத்து விட வேண்டும் என்றும் எண்ணினார். அப்படி தங்கினால் இவன் மேலும் மாறுவான் என்று எண்ணிய அவனின் தாய்க்கு தெரியவில்லை. தன் மகன் எங்கிருந்தாலும் அப்படி தான் இருப்பான் என்று..

 

இப்பொழுது, அபிமன்யுவிற்கு எப்படியாவது மீராவை இங்கிருந்து அழைத்து சென்று விட வேண்டும். அதற்காகவே மரகதம் பாட்டியிடம் பொறுமை காத்து விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறான் என்பதை மீரா அறியவில்லை.

 

அபிமன்யு ஒன்றும் சிறு வயதில் இப்படி அடம் பிடிக்கும் குழந்தை அல்ல. சிறு வயதில் ஆரம்பத்தில் தன் தாயிடம் அன்பாக இருந்தவன் தான் இப்படி மாறிவிட்டான்.

 

 

இவனின் இத்தகைய மாற்றத்திற்கு காரணம் என்ன..?

 

அவனின் அம்மா எண்ணுவதை போல் அபிமன்யு சிறிது காலம் கிராமத்தில் தங்கும் சூழல் ஏற்படுமா..?

 

அப்படி தங்கினாள் இவனின் குணம் மாறுமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5