அவனதிகாரம் - 6

 

 

அதிகாரம் – 6

 

நிலவு மகள் இரவு முழுவதும் தன் வேலையை செய்து விட்டு அதிகாலையில் விடை பெற்றாள். பிறகு, சூரிய பகவான் தன் கதிர்களை வீசி செயலாற்ற தொடங்கினார்.

 

அதிகாலை 4 மணி வரையிலும் தூக்கம் வராமல் வெண்ணிலா புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். ஒரு வழியாக அதிகாலை 4 மணி அளவில் தான் உறக்கத்தை தழுவினாள்.

 

காலை ஏழு மணிக்கு யாரோ தூரத்தில் வெண்ணிலா என்று அழைக்கும் சத்தம் கேட்டு கண்களை திறக்க முடியாமல் திறந்து பார்த்தாள். ஜீவா படுத்திருந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது.

 

உடனே, வெண்ணிலா அவசர அவசரமாக எழுந்து சென்று கதவை திறந்தாள். அறை வாயிலில் அவளின் அம்மா லட்சுமி தான் நின்று கொண்டிருந்தார். தன் மகளின் கண்கள் சிவந்து கிடப்பதை பார்த்தவருக்கு மனம் குளிர்ந்து விட்டது. தன் மகள் நல்ல விதமாக இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து விட்டாள் என்று எண்ணினார்.

 

பாவம்! அவருக்கு தெரியாதே... அவரின் மகள் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்று.

 

என்ன மா இப்போ தான் எழுந்தியா... சீக்கிரம் போய் குளிச்சிட்டு புது புடவை கட்டிக்கிட்டு வா பூஜை பண்ணனும். மாப்பிள்ளை அரைமணி நேரம் முன்னையே கீழே வந்துட்டார் என்று கூறி விட்டு சென்றார்.

 

வெண்ணிலாவின் வீடு 5 படுக்கை அறைகள் கொண்ட வீடு. கீழே 2 படுக்கை அறையும், சமையல் அறையும் உள்ளன. அதில், சுப்ரமணியன் மற்றும் லட்சுமி ஒரு அறையிலும், வேலுச்சாமி தாத்தா மற்றும் மரகதம் பாட்டி ஒரு அறையிலும் உள்ளனர்.

 

வீட்டின் நடுவில் முற்றமும் பின் பக்கம் பெரிய அளவில் தோட்டமும் உள்ளது. தோட்ட வேலைகள் அனைத்தும் மரகதம் பாட்டியின் பொறுப்பு. அவருக்கு மரம் மற்றும் செடி, கொடிகள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.

 

வீட்டின் மேல் பகுதியில் 3 அறைகள் உள்ளன. மூன்று பெண் பிள்ளைகளுக்கு மூன்று அறை என்று ஒதுக்கியிருந்தனர். மூன்று அறைகள் இருந்தாலும் மூவரும் தனித்தனியாக படுக்க மாட்டார்கள்.

 

மூவரும் அவர்களின் அக்கா வெண்ணிலாவின் அறையில் தான் படுத்துக் கொள்வார்கள். கயல்விழியும், யாழினியும் அவரவர் துணிகளையும், பாட புத்தகங்களையும் வைப்பதற்காகவும், படிக்கும் வேலையிலும் மட்டுமே அவர்களின் அறையை உபயோகித்தனர். மற்றபடி, இரவு நேரங்களில் படுப்பதற்கு வெண்ணிலாவின் அறைக்கு சென்று விடுவர்.

 

மூவரும் ஒன்றாக தான் உறங்குவார்கள். தற்பொழுது, வெண்ணிலாவிற்கு திருமணமானதால் கயல்விழியும், யாழினியும் கயல்விழியின் அறையில் உறங்குகின்றனர்.

 

வெண்ணிலா குளித்து முடித்து தயாராகி கீழே வருகையில் மணி 8ஐ நெருங்கி இருந்தது. கீழே வந்ததும் பூஜை அறை  சென்று பூஜை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

 

மரகதம் பாட்டி, என்ன மா இம்புட்டு நேரம் தூங்கி இருக்க.. நாளையிலிருந்து மாப்பிள்ளை எழுந்திரிக்கிறதுக்கு முன்ன எழுந்து பழகு. மாப்பிள்ளை வீட்டில் யாரும் நம்மை ஒன்னு சொல்லுற போல வச்சிக்கக் கூடாது என்றார்.

 

அதற்கு வெண்ணிலா, சரிங்க பாட்டி என்று கூறினாள்.

 

அதற்குள் வெளியே சென்றிருந்த ஜீவாவும், வெண்ணிலாவின் தந்தை சுப்ரமணியனும் உள்ளே நுழைந்தனர்.

 

சுப்ரமணியன், லட்சுமி எனக்கும், மாப்பிள்ளைக்கும் காபி கொண்டாமா என்று குரல் கொடுத்தார்.

 

சரிங்க என்ற லட்சுமி அடுத்த ஐந்து நிமிடத்தில் காபியுடன் வந்து அவர்கள் முன் நின்றார்.

 

காபியை வாங்கிய சுப்ரமணியன் ஒரு மிடர் குடித்துவிட்டு, லட்சுமி இன்னைக்கு நாள் நல்லா இருக்குன்னு உங்க அண்ணனும், அண்ணியும் இன்னைக்கே வந்து பொண்ணு மாப்பிள்ளையை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறதா சொல்லி இருக்காங்க.

 

என்னங்க அதுக்குள்ள... இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லி இருக்கலாமே என்று தன் மகள் தங்கள் வீட்டை விட்டு செல்லப் போகிறாள் என்ற ஆதங்கத்தில் கூறினார்.

 

அதுக்கு என்னம்மா நம்ம ஊரில் தான கட்டிக் கொடுத்திருக்கோம். நினைச்ச நேரம் போய் பாத்துக்கிடலாம். பாக்கணும்னு சொன்னா எந்த நேரமா இருந்தாலும் அவங்களே கூட்டிட்டு வந்து ரெண்டு நாள் கூட தங்கிட்டு போக போறாங்க.

 

வெண்ணிலாவின் மனதிலோ அவர்களின் தந்தைக்கு தங்கள் மேல் அன்பே இல்லையோ என்று தோன்றியது. திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் தருவாயில் கூட எந்த ஒரு வருத்தமும் இன்றி பேசுகிறாரே என்று வருத்தமாக இருந்தது.

 

அவளின் முக மாறுதல்களை பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிற்கு அவளின் மனதின் ஓட்டம் நன்றாகவே புரிந்தது. காபி அருந்தி முடித்தவுடன் சிறிது நேரம் கழித்து காலை உணவு உண்பதாக கூறிவிட்டு ஜீவா அவர்கள் அறை நோக்கி நடந்தான்.

 

செல்லும் வழியில், நிலா, கொஞ்சம் ரூமுக்கு வா என்று கூறிவிட்டு சென்றான்.

 

அனைவரின் முன்பும் அவன் நிலாவை ரூமுக்கு வரும்படி அழைத்தது, அவளுக்கு சற்று அசௌகரியமாக இருந்தது. பாட்டியும், லட்சுமியும் மௌனமாக சிரித்துக் கொண்டனர்.

 

அவர்கள் இருவரும் மாடிப்படி ஏறியதும் மரகதம் பாட்டி, லட்சுமி இன்னும் கயலும், யாழினியும் எழுத்திரிச்சு வரலையா? என்று வினவினார்.

 

அப்பொழுது தான் ஞாபகம் வந்தது லட்சுமிக்கு, ஆமா அத்தை, இன்னும் காணும் நான் போய் பார்த்துட்டு வரேன் என மாடி ஏற சென்றார்.

 

நீ இங்க இருந்து சமையல் வேலையை பாரு. நான் போய் பார்த்துட்டு வரேன் என்று கூறிவிட்டு, மணி என்ன ஆகுது இன்னும் ரெண்டு பேரும் எழுந்திரிக்காம தூங்குறதை பார்த்தியா.... என்று கூறிக்கொண்டே மாடிப்படி ஏறினார்.

 

அறைக்கு சென்ற ஜீவா, வெண்ணிலாவின் வருகைக்காக காத்திருந்தான்.

 

வெண்ணிலா வந்தபின், என்ன ஆச்சு.... ஏன் ஒரு மாதிரி இருக்க?.

 

ஒன்னும் இல்ல, நான் நல்லா தான் இருக்கேன்.

 

உனக்கு இன்னும் இங்க 2 டேஸ் இருக்கணும் போல இருக்கா.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க... என்று பதிலளித்தாள்.

 

அப்பறம் ஏன் உன் முகம் ஒரு மாதிரி மாறிடுச்சு, இன்னைக்கு நாம எங்க வீட்டுக்கு போறோம்னு சொன்னதும் நீ ஒன்னும் வருத்தப்படாத உனக்கு எப்போ தோணுதோ அப்போ நாம வந்து உங்க வீட்டில் எல்லாரையும் பார்த்துட்டு போகலாம். இல்லைனா, தங்கிட்டு கூட போகலாம் என்று சமாதானம் கூறினான்.

 

அவளும், சரி என்னும் விதமாக தலை அசைத்தாள்.

 

சரி, நான் கீழே போய் அம்மாவுக்கு சமையல் பண்ண உதவி பண்றேன் என கூறிவிட்டு கீழே ஓடி விட்டாள்.

 

கயல்விழியின் அறைக்குள் நுழைந்த பாட்டி கயல்விழியும், யாழினியும் குப்புற படுத்துக்கொண்டு ஏசியை ஓடவிட்டு போர்வையை தலை வரை போர்த்திக் கொண்டு படுத்திருந்த காட்சியை தான் கண்டார்.

 

அவருக்கு பிபி சரசரவென ஏற தொடங்கி விட்டது. இருவருக்கும் முதுகில் இரண்டு அடி போட்டார்.

 

யாழினி, ஐயோ அம்மா...! என்ற அலறலுடன் எழுந்தமர்ந்தாள்.

 

கயல்விழியோ தூக்க கலக்கத்தில் விழுந்த அடியில் ஒன்றும் புரியாமல் எழுந்து அமர்ந்தாள்.

 

இருவரையும் நன்கு முறைத்து பார்த்த மரகதம் பாட்டி, அடியே, மணி என்ன ஆகுது... ரெண்டு பேரும் போர்வையை தலை வரைக்கும் போத்திக்கிட்டு இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க. எழுந்திரிச்சு குளிச்சிட்டு கீழ வாங்க. உங்க அக்காவுக்கு புதுசா கல்யாணம் ஆகி இருக்கு. இன்னைக்கு அவ மாமியார் வீட்டுக்கு போக போறா. அது கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா. உங்க அம்மாவுக்கு அடுப்படியில் செத்த கூட மாட ஒத்தாச பண்ணலாம்ல. அத விட்டுட்டு, இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க. எழுந்திரிங்கடி ரெண்டு பேரும் என்று அதட்டல் போட்டார்.

 

இவரின் பேச்சை கேட்ட யாழினிக்கு, கோபம் சரசரவென ஏறத் தொடங்கியது, பாட்டி, இதை கொஞ்சம் அடிக்காமலே சொல்லி இருக்கலாம்ல. எதுக்கு நீ என்ன அடிச்ச வலி தாங்க முடியல என்று பொங்கி கொண்டு வந்தாள்.

 

கீழே உன் அப்பன் இருக்கான். அவன் தான் உன்னைய எழுப்ப சொன்னான். போய் அவன் கிட்டயே கேளு என்ற பாட்டி கீழே இறங்கி விட்டார்.

 

இந்த பாட்டிக்கு என்ன சொல்லி என்னை ஆப் பண்றதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கு என்று புலம்பினாள்.

 

உடனே யாழினி கயல்விழியை பார்த்து, அக்கா நல்லா மாட்டிக்கிட்டோம். அப்பா தான் நம்மை கூப்பிட்டு வர சொன்னாராம். சீக்கிரம் வா, கிளம்பி கீழே போகலாம் என்று  கூறிவிட்டு பாத்ரூமிற்கு ஓடிவிட்டாள்.

 

பிறகு, இருவரும் தயாராகி கீழே சென்றனர். கீழே வந்த பாட்டி வேலுச்சாமி தாத்தா இன்னும் அறைக்குள்ளேயே அமர்ந்திருப்பதை கண்டு, “இந்த வீட்டில் பெருசுலருந்து சிறுசு வரைக்கும் நம்ம சொல் பேச்சை கேட்க மாட்டேங்குது என்று புலம்பி கொண்டே அவரை தேடிச் சென்றார்.

 

ஏங்க, இங்கன உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க... அங்க பொண்ணு மாப்பிள்ளைக்கு சாப்பாடு வைக்கணும். நீங்களும் வந்தா எல்லார்கூடயும் சேர்ந்து சாப்பிடலாம்ல என்று கேட்டார்.

 

இல்ல மரகதம், எனக்கு பசி இல்ல. நீ போய் சாப்பிடு, நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்.

 

ஏன், இப்போ என்ன ஆச்சு உங்களுக்கு.. இன்னும் பழசை நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா.. நடந்தது நடந்து போச்சு, இனிமே நம்ம கையில் என்ன இருக்கு. கடவுள் விட்ட வழியில் போக வேண்டியது தான். எனக்கும் தான் மனசுல கஷ்டம் இருக்கு. அதுக்காக உங்களை மாதிரியா கவலைப்பட்டுக்கிட்டே இருக்கேன் என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

 

உன்னை மாதிரி என்னால் இருக்க முடியல மரகதம். தப்பு பண்ணிட்டேன்னு மனசை போட்டு உறுத்திக்கிட்டே இருக்கு. நான் சாகுறதுக்குள்ள எப்படியாவது இதை சரி பண்ணிடனும்னு நினைக்கிறேன்.

 

அவர் கூறியதை கேட்டு பதறிய பாட்டி, காலங்காத்தால என்ன பேச்சு இது அபசகுணம் மாதிரி என்று அவரை கடிந்தார்.

 

சரி வாங்க, எதுவா இருந்தாலும் சாப்பிட்டு பேசிக்கலாம் என்று அவரை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு வந்தார்.

 

அதற்குள் சுப்பிரமணியனும், ஜீவாவும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க. தாத்தாவை பார்த்த ஜீவா, வாங்க தாத்தா.. எங்கே காலையிலிருந்து உங்களை ஆளையே காணோம் என்று விசாரித்தான்.

 

இல்லப்பா, காலார வயலுக்கு ஒரு நடை நடந்துட்டு வரலாம்னு போனேன்.

 

அப்படியா, என்கிட்ட சொல்லி இருந்தா நானும் வந்து இருப்பேனே என்று கூறிக் கொண்டே மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

 

லட்சுமி, ராணி, நீ பின்வாசல் எல்லாம் பெருக்கி வாரிட்டு வந்துடு என்று அனுப்பி வைத்தார்.

 

காலை வேலை முடிந்ததும் மதிய விருந்துக்காக தடபுடலாக தயார் செய்து கொண்டிருந்தார் லட்சுமி, ராணியின் உதவியுடன். அவருக்கு உதவியாக கயல்விழி இதர வேலைகளை செய்து கொண்டிருந்தாள். பாட்டியும், யாழினியும் வழக்கம் போல் வாயடித்துக் கொண்டிருந்தனர். தாத்தா எதிலும் கலந்து கொள்ளாமல் ஏதோ ஒரு யோசனையுடனேயே சுற்றிக் கொண்டிருந்தார்.

 

மதியம் மாணிக்கமும் அவரது மனைவி சுமதியும் ஸ்வேதாவுடனும் மேலும் சில சொந்த பந்தங்களுடனும் வெண்ணிலாவின் வீட்டிற்கு வந்தனர்.

 

நல்ல விதமாக அவர்களுக்கு விருந்து உபசரிப்புகள் முடிந்ததும், வெண்ணிலாவை அவர்களுடன் ஜீவாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் அவளின் பெற்றோர்.

 

கிளம்பும் முன்பு அனைவரிடமும் அழுது கரைந்துவிட்டே சென்றாள் வெண்ணிலா. கயல்விழியும், யாழினியும் கூட தங்கள் அக்காவை பிரிவதில் ஒரே அழுகை தான். அழுவதை தவிர வேறு என்ன செய்திட முடியும்...!

 

தாத்தா செய்த தவறை அவர் எப்படி சரி செய்வார்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5