அவனதிகாரம் - 25
அதிகாரம் – 25
அபிமன்யு
தன் தாத்தா கூறியதை கேட்டுவிட்டு குழப்பத்துடனும், யோசனையுடனும் அறையை விட்டு
வெளியே வந்தான்.
மீரா, “அபி கிளம்பிட்டியாப்பா.. டிபன் ரெடியா
இருக்கு வந்து சாப்பிட்டு போ” என்று அழைத்தார்.
“நோ மாம். எனக்கு ஒரு இம்பார்டன்ட்
மீட்டிங் இருக்கு ஆபீஸ்ல. ஐ ஹேவ் டு கோ. அங்க போய் பாத்துக்குறேன்” என்று கூறிவிட்டு வெளியேறி விட்டான்.
வீட்டிலிருந்து
காரை எடுத்துக் கொண்டு கிளம்பியவன் அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக இவர்களின்
பிரைவேட் பீச்சில் அமைந்துள்ள பீச் ஹவுஸிற்கு சென்றான்.
அபிமன்யுவிற்கு
அலுவலகத்திலோ அல்லது குடும்பத்திலோ ஏதேனும் குழப்பங்கள் ஏற்படும் பொழுது தெளிவு
பெறவும், தனக்கான நேரத்தை செலவழிக்கவும், இந்த பீச் ஹவுஸிற்கு தான் வருவான்.
அவர்கள்
குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே பொதுவாக கட்டப்பட்டது தான் இந்த பீச் ஹவுஸ்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்டப்பட்டது.
இவனுக்காக
முதல் மாடியில் கடலை பார்ப்பது போன்ற ஒரு பெரிய பால்கனியோடு சேர்த்து பெட்ரூம்
வேண்டும் என்று தனித்துவமாக அவனே டிசைன் செய்து கட்டியுள்ளான்.
என்ன
மனக்குழப்பம் வந்தாலும் இங்கு வந்து கடற்கரையை பார்த்தவாறு சிறிது நேரம்
பால்கனியில் அமர்ந்தால் அவனுக்கு ரிலாக்ஸ் ஆகிவிடும். அபிமன்யு ஏதேனும் சிந்திக்க
வேண்டுமானால் அமைதியை நாடி இங்கே தான் வருவான்.
அவன்
பிஸ்னஸில் பல முக்கிய முடிவுகளை இங்கு தான் எடுத்தான். இப்போதும் தன்
வாழ்க்கையில் எடுக்கப் போகும் மிகப்பெரிய முடிவு சரியா, தவறா என்று சிந்திக்கவே
இங்கு வந்துள்ளான்.
என்ன
தான் தன் தாத்தா கூறினாலுமே கண்மூடித்தனமாக அதை ஒப்புக் கொள்பவன் இல்லை அபிமன்யு.
தனக்கு அது சரி வருமா என்று யோசித்தே செயல்படுவான்.
அப்படி
தான் இப்பொழுதும் கயல்விழியோடு திருமணம் செய்வது ஒத்து வருமா என்று
சிந்திக்கலானான். பல மணி நேர சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவோடு கிளம்பி வீட்டிற்கு
சென்றான். காலையில் அலுவலகம் செல்லும் அபிமன்யு அத்தோடு இரவு தான் வீடு
திரும்புவான்.
ஏதேனும்
தேவை என்றால் மட்டுமே இப்படி இடையில் வருபவன், இன்று திடீரென மதியமே வீடு
திரும்பவும் மீரா ‘என்ன’ என்று விசாரித்தார்.
“என்ன அபி.. இந்த டைமுக்கு
வீட்டுக்கு வந்து இருக்க. எனி ப்ராப்ளம்”.
“நத்திங் மாம். ஐ ஹேவ் டு டாக்
வித் கிராண்ட்மா” என்று மீராவிடம் கூறியவன், “பாட்டி....” என்று உரக்க அழைத்தான்.
பூஜை
அறையில், ‘அபிமன்யுவிற்கும், கயல்விழிக்கும்
எப்படியாவது திருமணம் நடத்தி வைக்க வேண்டும்’ என்று முருகனிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்த பாட்டியின்
காதில் திடீரென அபிமன்யு அழைக்கும் குரல் கேட்கவும் வெளிவந்து எட்டிப் பார்த்தார்.
இந்த
நேரத்தில் அவனை எதிர்பார்த்திராத பாட்டி, “என்ன அபி?” என்று கேட்டார்.
“எனக்கு இந்த கல்யாணத்தில்
சம்மதம். பொண்ணு வீட்டில் சொல்லிடுங்க”
என்று கூறிவிட்டு யாரின் பதிலையும் எதிர்பாராமல் திரும்பி காரை எடுத்துக் கொண்டு
பறந்து விட்டான்.
சற்று
நேரத்தில் இங்கே நடந்த விஷயத்தை யாராலும் நம்ப முடியவில்லை. மீரா புரியாமல்
வள்ளியம்மையை பார்க்க, வள்ளியம்மையோ தான் கேட்டது உண்மை தானா என்ற குழப்பத்தோடு
மீராவை பார்த்தார்.
வள்ளியம்மை,
“இப்போ.. அபி கல்யாணத்துக்கு
சம்மதம்னு தானே சொல்லிட்டு போறான்”
என்று சந்தேகமாக கேட்டார்.
“இதில் என்ன மா சந்தேகம்
உங்களுக்கு. அவனே ஒத்துக்கிட்டானே”
என்று மகிழ்ச்சியாக தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தார் மீரா.
“அதை தான் என்னால் நம்ப முடியல
மிரா. அவன் பாட்டுக்கு வந்தான், சம்மதம்னு சொல்லிட்டு போய்ட்டான்” என்று சந்தேகமாக கேட்டார் பாட்டி.
“ஏன் மா.. அவன் சம்மதிக்க
கூடாதுன்னு நினைச்சீங்களா” என்று கிண்டலாக கேட்டார் மீரா.
“ச்ச.. ச்ச.. நானே அவன் எப்போ
சம்மதம் சொல்லுவான்னு தான் முருகன் கிட்ட கேட்டுகிட்டு இருந்தேன். நான் கேட்டதும்
முருகன் எனக்கு கை மேல பலன் கொடுத்துட்டார்” என்று கூறி, நேரே பூஜை அறை சென்றவர் கைகூப்பி முருகனிடம் தன்
வேண்டுதலை உடனே நிறைவேற்றி தந்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு, இதற்கு பின்னால்
எந்த சூழ்ச்சியும் இருக்கக் கூடாது என்று மேலும் ஒரு வேண்டுதலையும் வைத்துவிட்டு
வந்தார். வணங்கிவிட்டு வந்தவர்க்கு இருப்பு கொள்ளவில்லை.
உடனே
தன் அக்காவிற்கு அழைத்து, “ஹலோ.. அக்கா நான் வள்ளி பேசுறேன்.
எங்க குடும்பத்தில் எல்லார்கிட்டயும் கலந்து பேசிட்டேன். எங்க எல்லாருக்குமே இந்த
கல்யாணத்தில் விருப்பம்” என்று மகிழ்ச்சியாக கூறினார்.
அந்த
பக்கம் மரகதத்திற்கும் இவரின் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது, “ரொம்ப சந்தோஷம் வள்ளி. ரெண்டு பேரோட
ஜாதகத்தையும் ஜோசியர் கிட்ட காட்டிட்டு மேற்கொண்டு பேசலாம். முறைப்படி நீங்க தான்
பொண்ணு கேட்டு வரணும். எப்போ வரீங்க? வரும் போது ஜாதகத்தை கொண்டு வாங்க”.
அழைப்பை
துண்டித்த வள்ளியம்மை மீராவிடம், “நம்ம
தானே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க. அதனால் முறைப்படி நாம தான் பொண்ணு கேட்டு போகணும்
மீரா. என்னைக்கு போகலாம்னு மாப்பிள்ளைகிட்ட கேட்டு சொல்லுமா. மாப்பிள்ளை எப்போ
ஃப்ரீயா இருக்காங்களோ ஒரு நல்ல நாளா பார்த்து போயிட்டு வந்துடலாம்” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலே மகேந்திரன்
அறையில் இருந்து வெளி வந்தார்.
“இதோ அவரே வந்துட்டார். இப்போவே
கேட்டுவிடலாம்” என்று கூறிய மீரா நேரே
மகேந்திரனிடம் சென்று, “என்னங்க அபி கல்யாணத்துக்கு
சம்மதம் சொல்லிட்டான். நம்ம எல்லாருக்குமே விருப்பம் என்பதால் நாம தான் மாப்பிள்ளை
வீட்டுக்காரங்க பொண்ணு கேட்டு போகணும். நீங்க எப்போ ஃப்ரீயா இருக்கீங்கன்னு
சொல்லுங்க. ஒரு நல்ல நாளா பார்த்து போய் பொண்ணு கேட்டுட்டு வந்துடலாம்”.
“நல்ல காரியத்தை எதுக்கு தள்ளி
போடணும் மீரா. காலண்டரில் தேதி பார்த்துட்டு முடிவு பண்ணிடலாம்” என்று கூறிக் கொண்டே, கேலண்டரை எடுத்துப்
பார்த்த வள்ளி, “ம்ம்.. நாளைக்கு மறுநாள் ரொம்ப
நல்ல நாளா இருக்கு. அன்னைக்கு நம்ம எல்லாரும் போயிட்டு பொண்ண பார்த்துட்டு தேதி
குறிச்சுட்டு வந்திடுவோம்”.
“மீரா ஆரணிக்கும், ஆரியனுக்கும்
லீவு போட சொல்லிடு. எல்லாரும் குடும்பமா போயிட்டு வந்துருவோம்” என்று கூறினார் மகேந்திரன்.
“சரிங்க” என்றார் மகிழ்ச்சியுடன் மீரா.
ஆனாலும்,
அவர் முகத்தில் என்னமோ குறைவது போல் உணர்ந்தார் மகேந்திரன்.
இரவு
வீட்டிற்கு வந்த அபிமன்யுவிடம் மகேந்திரன் இதைப் பற்றி கூற, “டாட் இப்போ இதெல்லாம் தேவையா. டைரக்டா
டேட் பிக்ஸ் பண்ணிக்கலாமே. எதுக்கு இந்த பொண்ணு கேட்குற ஃபார்மாலிட்டி எல்லாம்”.
“அப்படி இல்ல அபி. எது செஞ்சாலும்
முறையாக செய்யணும்” என்றார் மகேந்திரன்.
மீரா, “அபி அப்பா இன்னும் பொண்ண பார்க்கல இல்லடா” என்றார்.
அதற்குள்
முந்தி கொண்ட ஆரணி, “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை
மா. நம்ம அபி அண்ணாவுக்கு வரப்போற அண்ணியை நான் தானே முதலில் பார்த்து செலக்ட்
பண்ணனும். என்னையும், ஆரியனையும் ஒரு ஆளவே கண்டுக்க மாட்டேங்கிறீங்க. நாங்க கூட
தான் இன்னும் பொண்ண பார்க்கல. அப்பாவை மட்டும் மென்ஷன் பண்ணி சொல்றீங்க” என்று கோபித்துக் கொண்டாள்.
“ஐயோ ஆரணி, உங்க எல்லாருக்காகவும்
தான் பொண்ணு பார்க்குற ஃபார்மாலிட்டி பிக்ஸ் பண்ணி இருக்கோம். போதுமா” என்றார் மீரா தப்பிக்கும் பொருட்டு.
“சரி, சரி” என்று ஒருவாறு ஒத்துக் கொண்டாள் ஆரணி.
“ஓகே அபி. டே ஆப்டர் டுமாரோ ஏதாவது
ஒர்க் இருந்தா போஸ்ட்பான் பண்ணிடு. நம்ம பொண்ணு வீட்டுக்கு போகணும்” என்று கூறிவிட்டு எழுந்து சென்று
விட்டார் மகேந்திரன்.
இதை
வள்ளியம்மை மரகதத்திடம் தெரிவித்ததும், மரகதத்திற்கு மிகுந்த சந்தோஷம்.
சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.
வீட்டில்
அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது மரகதம், “சுப்பிரமணி வள்ளி குடும்பத்தோட பொண்ணு கேட்டு நாளைக்கு இங்க
வராலாம்”.
“சரிமா வரட்டும். ஜாதகம்
ஒத்துப்போகுதானு பார்ப்போம். அப்புறமா மேற்கொண்டு பேசுவோம்” என்று முடித்து விட்டார்.
பிறகு
லட்சுமியிடம் மரகதம் பாட்டி, ‘என்ன, என்ன பலகாரம் செய்யலாம்’ என்று இருவரும்
சேர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போதும்
தெளியாத முகத்துடன் இருந்த கயல்விழியிடம் யாழினி, “என்னக்கா மாமா எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காங்க. அவங்களை
கட்டிக்க உனக்கு கசக்குதா. ஏன் எப்போ பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வச்சிருக்க.
இப்போ தான் அவங்க வீட்டில் எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்கல்ல. இப்பவாவது கொஞ்சம்
சிரியேன்”.
அதற்கு
எந்த பதிலும் கூறாமல் கயல்விழி சிரித்தாள். ஆனாலும், அவளின் முகம் தெளிவடையவில்லை.
மறுநாள் வள்ளியம்மை கூறியது போலவே குடும்பத்துடன் கிளம்பி மரகதம் வீட்டிற்கு
வந்திருந்தார்.
வந்தவர்களை
வாசல் வரை சென்று மரகதம், “வாங்க, வாங்க” என்று வணக்கம் கூறி உள்ளே அழைத்து வந்து
உட்கார வைத்தார்.
அனைவரும்
வந்து அமர்ந்ததும் வள்ளியம்மை, “இவங்க தான் மீராவோட வீட்டுக்காரர்” என்று மகேந்திரனை அனைவருக்கும்
அறிமுகப்படுத்தி வைத்தார்.
சுப்பிரமணியன்
அவருக்கு வணக்கம் கூறி நலம் விசாரிக்க. அவரும் பதிலுக்கு விசாரித்தார். எந்த ஒரு
திமிரும் இல்லாமல் சாதாரணமாக பேசிய மகேந்திரனை சுப்பிரமணிக்கு மிகவும் பிடித்து
விட்டது.
சுப்பிரமணி,
“லட்சுமி.. எல்லாருக்கும் குடிக்க
ஏதாவது கொண்டு வா மா”.
“சரிங்க” என்று சமையலறைக்கு சென்ற லட்சுமி அனைவருக்கும் கொடுக்க
காபியும், சிற்றுண்டியும் எடுத்துக்கொண்டு வெளிவந்தார்.
அனைவரும்
காபி குடித்து கொண்டிருக்கும் போதே அபிமன்யு எழுந்து நின்றான். உடனே,
வள்ளியம்மையின் வயிற்றில் புளியை கரைத்தது ‘என்ன கூறப்போகிறானோ’
என்று.
வள்ளியம்மை,
“அபி..” என்று ஆரம்பிக்கும்போதே, அவரை பார்வையால் அடக்கியவன், “நான் பார்த்துக்கிறேன் பாட்டி” என்று அமைதியாக கூறினான்.
அபிமன்யு
திமிராக பேசினால் கூட அவன் இப்படித்தான் என்று எண்ணி இருப்பார் பாட்டி. ஆனால்,
அவனின் அமைதி தான் அவரை அச்சுறுத்தியது.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க” என்றார் சுப்பிரமணியன்.
சுத்தி
வளைக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தவன், “எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம். பட், இப்போ என்னால் மேரேஜ்
பண்ணிக்க முடியாது. எங்க கம்பெனியோட பிரான்ச் ஒன்னு ரஷ்யால ஸ்டார்ட் பண்ற பிராசஸ்
போயிட்டு இருக்கு. ஒன் இயர்ல அது முடிஞ்சிடும். சோ, அதுக்காக நான் ரஷ்யா போகிற
வேலை இருக்கு. அதனால் மேரேஜ் நெக்ஸ்ட் இயருக்கு பிக்ஸ் பண்ணிக்கோங்க. இது என்னோட
ட்ரீம் ப்ராஜெக்ட். ஜஸ்ட், மேரேஜ்காக என்னால் அதை விட்டுக் கொடுக்க முடியாது” என்று கூறிவிட்டு உட்கார்ந்து விட்டான்.
“இன்னும் ஒரு வருஷமா...” என்று இழுத்தார் சுப்பிரமணி.
அதற்குள்
மரகதம் பாட்டி, “கல்யாணம் கட்டிக்கிட்டு அப்புறமா
எங்க வேணாலும் போங்கலேன் தம்பி” என்றார் அபிமன்யுவிடம்.
அவர்
கூறியதை தன் காதிலேயே வாங்காதவன் போல் அமர்ந்திருந்தான் அபிமன்யு.
சூழ்நிலையை
சமாளிக்கும் பொருட்டு வள்ளியம்மை, “அக்கா,
நீங்க எல்லாம் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க. அவன் முன்னாடியே எங்ககிட்ட
சொல்லிட்டு தான் வந்தான். ரொம்ப நாளா அவனுக்கு பிரான்ச் ஓபன் பண்றதுக்காக வேலை
நடந்துக்கிட்டு இருக்கு. உங்க வீட்டு பொண்ண அவன் கட்டிக்கிட சம்மதிச்ச நேரம் தானோ,
என்னவோ அவனுக்கு வேலையெல்லாம் முடிஞ்சு பர்மிஷன் கிடைச்சிடுச்சு. அடுத்த வருஷம்
பண்ணா மட்டும் என்ன, என் பேரன் தான் மாப்ள, உன் பேத்தி தான் பொண்ணு. இதில் எந்த
மாற்றமும் இல்ல”.
“அதுக்கு இல்ல வள்ளி.... இன்னும்
ஒரு வருஷம் இருக்கே” என்றார் மரகதம்.
“ஒரு வருஷம் எல்லாம் டக்குனு
போயிடும்க்கா. நீ யோசிக்காத, எல்லாம் நல்ல படியா நடக்கும்” என்றார் வள்ளி.
‘சரி’ என்றவர் சுப்பிரமணியை பார்த்தார். அவரும் சூழ்நிலை கைதியாக
வேறு என்ன செய்ய முடியும் என்று அமைதியாக அமர்ந்திருந்தார்.
அனைவரும்
திருமணத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்க. ஒருவர் மட்டும் மனதுக்குள் ‘இதெல்லாம் தேவையா. இப்போ யாரு கேட்டா இந்த
கல்யாணத்தை’ என்னும் மனநிலையில்
அமர்ந்திருந்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ‘ஜீவா’ தான்..
ஆரம்பத்தில்
சகோதரிகளின் உரையாடல் மூலம் கயல்விழிக்கும், அபிமன்யுவிற்கும் திருமணப் பேச்சை
எடுத்ததை பற்றி அறிந்தவனிற்கு ‘ஐயோ’ என்று இருந்தது.
‘போயும்
போயும் இவன் கூட போயா பாட்டி கல்யாண பேச்சை பேசணும். சென்னை போயிட்டு வந்ததுமே
எல்லா உண்மையையும் இவங்க கிட்ட சொல்லி இருக்கணும்’ என்று தன்னைத் தானே நொந்து
கொண்டான்.
வீட்டினுள்
நுழையும் பொழுதே அபிமன்யு ஜீவாவை கவனித்து விட்டான். ஜீவாவின் முகத்தில்
அபிமன்யுவை பார்த்தவுடனே எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதனை
கண்ட அபிமன்யுவிற்கு ஏனோ மிகவும் சுவாரசியமாக இருந்தது. வீட்டினர் கூப்பிட்டதற்காக
இங்கே வந்தானே தவிர, இது எதிலும் தலையிடும் விருப்பம் அவனுக்கு இல்லாமல் இருந்தது.
ஆனால்,
ஜீவாவை வெறுப்பேற்ற எண்ணியவன். தற்பொழுது திருமணத்திற்கு சம்மதம் என்று அனைவரின்
முன்பும் கூறினான். அதைக் கேட்ட ஜீவாவிற்கு கோபம் தலைக்கேறியது.
மேலும்,
அபிமன்யு கூறிய ‘ஜஸ்ட் மேரேஜ்’ ஜீவாவை கோபத்தின் உச்சிக்கே கொண்டு
சென்றது. அவனின் முகமே அவனுடைய விருப்பமின்மையை எடுத்துக் கூறியது.
ஜீவா, “நான் மாப்பிள்ளைகிட்ட கொஞ்சம் தனியா
பேசணும்” என்றான் அனைவரின் முன்பும்.
அதற்கு
ஆரணி, “என்ன ப்ரோ சொல்றீங்க. எல்லாம்
பொண்ணு, மாப்பிள்ளையை தானே தனியா பேச வைப்பாங்க இந்த மாதிரி சிச்சுவேஷன்ல. நீங்க
என்னடானா, நீங்க மாப்பிள்ளை கூட பேசணும்னு சொல்றீங்க” என்று கிண்டலாக கூற, அனைவரும் நகைத்தனர்.
ஜீவாவோ
மனதிற்குள் ‘இந்த பொண்ணு வேற நம்ம நிலைமை
தெரியாமல் காமெடி பண்ணுது’ என்று எண்ணியவன். அவனும்
சாதாரணமாக சிரிப்பது போல் சிரித்து வைத்தான்.
சுப்பிரமணி,
“என்ன மாப்ள” என்றார் ஜீவாவை பார்த்து.
ஜீவா, “ஒன்னும் இல்ல மாமா. சும்மா அவரை பத்தி
விசாரிக்கலாம்னு நினைச்சேன்”.
“ஓ அப்படியா.. சரி சரி” என்றவர், ஆரம்பத்தில் அபிமன்யு திருமண
பேச்சை எடுத்ததும் கத்திவிட்டு சென்றதை லட்சுமி அவரிடம் கூறியிருந்ததால், ஜீவா
அபிமன்யுவிடம் பேச்சு கொடுப்பதும் நல்லதுக்கு தான் என்று எண்ணியவர், “பின்பக்கம் கூப்பிட்டு போய் பேசிட்டு
வாங்க” என்றார்.
உடனே
எழுந்த ஜீவா அபிமன்யுவிடம் சென்று, “வாங்க
மாப்ள சார். போய் பேசிட்டு வருவோம்”
என்றான்.
அதற்கு
எந்த பதிலும் கூறாத அபிமன்யு கெத்தாக எழுந்து தோட்டத்தை நோக்கி சென்றான்.
இவர்களை
பார்த்துக் கொண்டிருந்த ஆரணி வேண்டுமென்றே யாழினியை கைகாட்டி, “அம்மா.. நானும் இவங்க கிட்ட கொஞ்சம் தனியா
பேசணும்” என்றாள்.
“என்னடி சொல்ற” என்றார் மீரா.
“அவங்க ரெண்டு பேரும் மட்டும்
பேசிக்க போறாங்க. ஏன், நாங்க ரெண்டு பேரும் பேசிக்கக் கூடாதா” என்றாள் பதிலுக்கு.
இவளிடம்
வாய் அடிக்க நேரமில்லை என்று எண்ணிய மீரா, “சரி, சரி போ. போய் பேசிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.
யாழினியை
பார்த்து ‘ஹாய்’ என்று கை காண்பித்துக் கொண்டே அருகில் சென்றாள் ஆரணி.
பதிலுக்கு கைகாட்டிய யாழினி இருவரும் என்ன படிக்கின்றனர் என்று விசாரித்துக்
கொண்டனர்.
ஆரணி, “ஹே! நாம ரெண்டு பேரும் சேம் கிளாஸ் தான்
படிக்கிறோம்” என்று ஹை ஃபை போட்டுக் கொண்டாள்.
பழகிய
சிறிது நேரத்திலேயே யாழினியும், ஆரணியும் நண்பர்கள் ஆகிவிட்டனர்.
அப்போது
யாழினி ஆரணியிடம், “உங்க அபி அண்ணா ரொம்ப கெத்தா
இருக்காங்க இல்ல”.
“ஆமா.. ஆமா.. அவர் அப்படித்தான்.
போகப்போக உங்களுக்கே தெரியும். அவர் எவ்வளவு கெத்தான ஆளுன்னு” என்று கூறி சிரித்தாள்.
“உங்க அக்காவுக்கு இந்த
கல்யாணத்தில் சம்மதம் தானே” என்று கேட்டாள் ஆரணி.
“ம்ம்.. சம்மதம் தான்” என்றாள் யாழினி.
தோட்டத்தில்
ஜீவா, “என்ன சார், எங்க ஊருக்கு வரவே
அப்படி யோசிச்சீங்க. இப்போ எங்க வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு வந்து
நிக்கிறீங்க” என்று கேட்டு தன் இரு கைகளையும்
மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்றான்.
அபிமன்யு,
“எக்ஸ்கியூஸ் மீ. நான் கல்யாணம்
பண்ணனும்னு நினைச்சா, எனக்காக எத்தனையோ கோடீஸ்வரர் வீட்டு பொண்ணுங்க லைன்ல வந்து
நிப்பாங்க. உங்க வீட்டு பொண்ண கட்டணும்னு எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்ல. என்
பாட்டிக்காக மட்டும் தான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சிருக்கனே தவிர, உங்க
வீட்டு பொண்ணு மேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் கிடையாது” என்று போட்டு உடைத்தான்.
ஜீவா, “என்ன சார் விளையாடுறீங்களா! இது ஒன்னும்
நீங்க பண்ற பிசினஸ் மாதிரி கிடையாது. இது கல்யாணம், ஒரு பொண்ணோட மனசு
சம்பந்தப்பட்டது”.
அபிமன்யு,
“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், எனக்கு இப்படி
அட்வைஸ் பண்றத நிறுத்து. நீ யாரு என்னை கேள்வி கேட்குறதுக்கு. வேண்டாம்னா உங்க
வீட்டிலேயே சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடு. எதுக்கு தேவையில்லாமல் என்கிட்ட
வந்து பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” என்று எரிச்சலாக கூறினான்.
மேலும்,
ஜீவாவை வெறுப்பேற்ற எண்ணியவன், “யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை
உன்கிட்ட மட்டும் சொல்றேன். எனக்கு இப்போ பார்த்து இருக்காங்களே பொண்ணு, அவ பெயர்
என்ன சம்திங்... லைக் கயல்விழி ரைட். அவ மேல எனக்கு எந்த ஒரு இன்ட்ரஸ்ட்மே இல்ல.
ஏன், நான் இதுவரைக்கும் அவளை பார்த்தது கூட கிடையாது. ஆஃப்டர் மேரேஜ், எனக்கு அவ
கூட வாழ பிடிக்கலைனா நான் என் வழியை பார்த்துகிட்டு போயிடுவேன். அதுக்காக அவளை
உங்க வீட்டுக்கு போனு சொல்லி அனுப்பிட மாட்டேன். அவளும் வேணும்னா, எங்க வீட்டிலேயே
ஒரு ஓரமா இருந்துக்கலாம்” என்று பெருந்தன்மையாக கூறினான்.
அதை
கேட்ட ஜீவாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. இவனிடம் பேசி எந்த பயனும் இல்லை
என்று எண்ணிய ஜீவா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். இவனை பற்றிய
உண்மையை வீட்டில் கூறி நிறுத்தி விடலாம் என்று எண்ணினான். ஆனால், அது சரி வராதே.
தாத்தாவிற்கு இந்த திருமணம் நடக்காது என்று சொன்னால் மீண்டும் உடல் நலம் சரி
இல்லாமல் போய் விடுமோ என்று யோசித்தான்.
இந்த
கல்யாணத்தின் மூலம் தான் பிரிந்த இரண்டு குடும்பங்கள் ஒன்று சேருகின்றன. அதை நாமே
கெடுக்க வேண்டுமா என்றும் யோசித்தான். இறுதியில், அவன் மனம் குடும்பம் சேருவதை
விட, கயல்விழியின் வாழ்க்கை தான் முக்கியம் என்று எடுத்துக் கூறியது.
ஆகையால்,
இந்த திருமணத்தை நடத்தாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று எண்ணத் தொடங்கினான்.
கயல்விழி,
அபிமன்யு திருமணம் நடக்குமா..?
ஜீவாவின்
திட்டம் என்ன..?
கருத்துகள்
கருத்துரையிடுக