அவனதிகாரம் - 26

 

அதிகாரம் – 26

 

அபிமன்யுவிடம் பேசிய ஜீவா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்ற முடிவுடன் வீட்டினுள் நுழைந்தான். அவன் நுழைகையில் இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அக்கா, இவ பேசுறதெல்லாம் நீ ஒன்னும் பெருசா எடுத்துக்காத. சரியான வாலு என்று ஆரணியை கைகாட்டி கூறிக் கொண்டிருந்தார் வள்ளியம்மை.

 

நான் ஏன் வள்ளி ஏதாவது நினைச்சுக்க போறேன். எங்க வீட்டுலயும் தான் ஒருத்தி இப்படி இருக்காளே என்று யாழினியை பற்றி அவர் கூற.

 

ஆரணியும், யாழினியும் ஒரே நேரத்தில், பாட்டி... என்று பல்லை கடித்தார்கள்.

 

குடும்பத்தில் அனைவரும் மன நிறைவுடன் நகைத்துக் கொண்டு இருந்தனர். சுப்பிரமணியனும், மகேந்திரனும் அவர்களின் தொழில் சம்பந்தமாகவும், வெளி விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

மீராவும், லட்சுமியும் திருமணத்திற்கு புடவை எப்படி வாங்கலாம், எங்கே வாங்கலாம் என்பதை பற்றியும், நகைகளை பற்றியும் மேற்கொண்டு திருமணத்திற்கு செய்ய வேண்டியவை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.

 

பாவம், ஆரியன் தான் பேசுவதற்கு ஆட்கள் இல்லாமல் தவித்துக் கொண்டு தன் போனை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

அவன் அருகில் வந்து அமர்ந்த ஜீவா, என்ன தம்பி ரொம்ப போர் அடிக்குதா.

 

தன்னிடம் பேசவும் ஒருத்தர் கிடைத்துவிட்டார் என்ற திருப்தியில் நிமிர்ந்து ஜீவாவை பார்த்தவன், ரொம்ப சந்தோஷங்க.. இப்போவாவது என்கிட்ட நீங்க பேசினீங்களே. எனக்கு மட்டும் பேச ஆள் இல்லாமல் ரொம்ப கடுப்பில் இருந்தேன் என்று ஆரணியை பார்த்துக் கொண்டே கூறினான்.

 

ஏனெனில், யாழினியிடம் ஆரணி பேசிக்கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது ஆரியனை பார்த்து, என்ன ஆரி உன்கிட்ட பேச யாருமே இல்லையா பாவம் நீ என்று வெறுப்பேத்திக் கொண்டே இருந்தாள்.

 

அதான் இப்போ நான் வந்துட்டேன்ல என்ற ஜீவா, என் கிட்ட பேசுங்க.

 

சரிங்க அண்ணா என்றான் ஆரியன்.

 

இருவருக்கும் இடையே பொதுவான விசாரிப்புகள் முடிந்ததும் ஜீவா அபியை பற்றி ஆரியனிடம் விசாரித்தான்.

 

அதற்கு ஆரியன், அண்ணாவை பத்தி சொல்றதுக்கு பெருசா எதுவும் இல்ல. ஆபீஸ் போவார், வீட்டுக்கு வருவார், சாப்பிடுவார், அப்புறம் ஏதாவது வீட்டில் பேசுனா கோவப்படுவார், இல்லைனா யார்கிட்டயும் பதிலே சொல்ல மாட்டார். அவ்வளவு தான் என்றான் தோள்களை குலுக்கியபடி.

 

இப்படி ஒரு பதிலை யாரும் சொல்ல மாட்டாங்க தம்பி. அப்போ சப்ஜெக்ட்க்கு உயிர் இருக்குன்னு சொல்றீங்க என்று கூறி சிரித்தான் ஜீவா.

 

அதற்கு என்ன பண்றது இருக்கிறது தானே சொல்ல முடியும். எங்க அண்ணா இவ்வளவு தான் வீட்டில் பண்ணுவான். எங்க கிட்ட கூட சிரிச்சு பேச மாட்டான் என்று கூறினான் ஆரியன்.

 

வந்து ரொம்ப நேரம் ஆனதை உணர்ந்த அபிமன்யு, டேட் கிளம்பலாமா.

 

அவரும் மணியை பார்த்தவர், ஓகே அபி என்று வள்ளியம்மையை பார்த்தார்.

 

உடனே மரகதம், வள்ளி நான் உன்கிட்ட தங்கிட்டு போற மாதிரி தானே வர சொன்னேன்.

 

வள்ளியம்மை மீராவை பார்க்க, இதைப் பற்றி ஏற்கனவே மகேந்திரனிடம் மீராவும் கேட்டு வைத்திருந்ததால் மகேந்திரனும் ஒரு கிளைன்ட் மீட்டிங்கிற்காக வெளியூர் செல்ல வேண்டியது இருப்பதாலும் மீராவின் பார்வையை வைத்தே அவர் என்ன கூற விரும்புகிறார் என்பதை உணர்ந்த மகேந்திரன், ஓகே மீரா. டூ டேஸ் ஆர் த்ரீ டேஸ் ஸ்டே பண்ணிட்டு வீட்டுக்கு வாங்க. நம்ம டிரைவரை அனுப்பி வைக்கிறேன் என்று கூறிவிட்டு, அபியிடம், கிளம்பலாம் அபி.

 

அதைக் கேட்ட அபிமன்யுவிற்கு தலையில் கல்லை தூக்கி போட்டது போல் இருந்தது. அதிர்ச்சியாக அமர்ந்திருந்தவனை பார்த்த ஜீவா, இவ்வளவு நேரம் தன்னை வெறுப்பேற்றியவனை பழிவாங்கும் பொருட்டு, அம்மாவையும், தம்பி, தங்கச்சியையும் நாங்க பார்த்துக்குறோம் என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

 

எங்கே யாராவது உண்மையை கூறிவிடுவார்களோ என்று பயந்த அபிமன்யு, டாட்.. அப்போ நானும் இவங்களோட ஸ்டே பண்ணிட்டு ரிட்டர்ன் வரேன்.

 

இவன் இப்படி கூறுவான் என்று அங்கே யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், அவனே சற்று நேரத்திற்கு முன்பு யாரேனும் நீ இங்க தான் டூ டேஸ் ஸ்டே பண்ண போற என்று கூறியிருந்தால் ஓங்கி ஒன்று விட்டு இருப்பான்.

 

ஆனால், இப்பொழுது வேறு வழி இல்லையே.. தானாக முன்வந்து தங்குகிறேன் என்று கூறிவிட்டான். பாட்டியாலும், மீராவாலும் நம்பவே முடியவில்லை. நம் அபியா இது என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

மகேந்திரன், அபி... என்று சந்தேகமாக கேட்டார்.

 

ஏனெனில், அவனின் வேலை பளு பற்றி அவருக்கு தெரியுமே. இப்படி இரண்டு நாள் முன்னறிவிப்பு இன்றி தங்குபவன் கிடையாது.

 

அபிமன்யு, நான் இங்க இருந்து கிஷோர் மூலமா அங்க எல்லாத்தையும் பார்த்துக்குறேன். ஐ கேன் மேனேஜ் டேட் என்று சிரித்த முகமாக கூறினான். மகேந்திரனுக்கே இவன் நடந்து கொள்வது வித்தியாசமாக தெரிந்தது.

 

அப்படி இருக்கையில், வீட்டினரை பற்றி கூறவே வேண்டாம். ஆரணியும், ஆரியனும் நம்ம அபிமன்யு அண்ணன் தானா என்னும் வகையில் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

மற்றவர்களின் பார்வையை எல்லாம் உணர்ந்தவன் அங்கு இருக்க சங்கடமாகவும், ஓகே டாட். வாங்க உங்களை வழி அனுப்பி வச்சிட்டு வரேன் என்று எழுந்துக் கொண்டான்.

 

அவன் கூறுவதை கேட்க மேலும் மேலும் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. யாராவது கிளம்புகிறேன் என்றால் கிளம்பட்டும் என்று தன் வேலையை பார்ப்பவன். இப்படி அனுப்பி வைத்து விட்டு வருகிறேன் என்று கூறுவதெல்லாம் முதல் முறை பாட்டியும், மீராவும் கேட்கின்றனர்.

 

குடும்பம் மொத்தமும் அவனையே வென்று பார்ப்பதை உணர்ந்த மகேந்திரன், ஓகே மீரா. நான் கிளம்புறேன்.

 

அனைவரிடமும் சொல்லிவிட்டு அபி உடன் சேர்ந்து வெளியே கிளம்பினார் மகேந்திரன். அவரை அனுப்பிவிட்டு வீட்டினுள் வரவே சற்று சங்கடமாக இருந்தது அபிமன்யுவிற்கு, வாசலிலேயே திண்ணையின் மீது அமர்ந்து விட்டான்.

 

அவனுக்கு இதெல்லாம் புது அனுபவமாக இருந்தது. இப்படி கிராமத்து வாடையே இல்லாமல் வளர்ந்தவன். தன் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டான். இப்படி கிராமத்திற்கு வருவோம் என்று.

 

மேலும், இவர்கள் வீட்டில் வந்து இப்படி வாசலில் உட்காருவான் என்பதெல்லாம் அவன் கனவு கண்டால் கூட நடக்காது என்று நினைக்கும் காரியம். அபிமன்யு இங்கே தங்குகிறேன் என்று கூறியதில் பாட்டிக்கு ஆச்சரியமே தவிர காரணம் தெரியும்.

 

எங்கே அவன் தாயிடம் யாராவது உண்மையை கூறிவிடுவார்களோ என்று பயந்து தான் அபிமன்யு தங்குகிறான் என்பதை உணர்ந்து கொண்டார்.

 

ஆனால், மீராவிற்கு தான் காரணம் தெரியாதே. தன் மகன் முதல் முறை கிராமத்திற்கு வந்ததும் தன்மையாக பேசியவன். இரண்டாம் முறை வந்ததும், தங்களோடு இங்கே தங்குகிறேன் என்றது அவருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

 

ஏனெனில், இதுவரை அபிமன்யு யார் வீட்டிலுமே தங்கியது கிடையாது. வேலை விஷயமாக செல்பவன் வெளியே ஹோட்டலில் தங்குவானே தவிர, இப்படி உறவினர்கள் வீட்டில் அவன் தங்கியது கிடையாது.

 

திருமண பேச்சை எடுத்ததற்கே தன் மகனிடம் இவ்வளவு மாறுதல்கள் என்றால், திருமணம் முடிந்தால் சுத்தமாக மாறிவிடுவான் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டார்.

 

குடும்பத்தினரின் உரையாடலையும் மேலும் அவர்கள் மூன்று நாட்கள் தங்கப் போகிறார்கள் என்பதையும் பார்த்துக் கொண்டிருந்த வேலுச்சாமிக்கு மிகுந்த மகிழ்ச்சி.

 

யாழினி அறையில் கயல்விழி, யாழினி, ஆரணி மூவரும் தங்கி கொண்டனர். கயல்விழியின் அறையில் அபிமன்யுவும், ஆரியனும் தங்க வைக்கப்பட்டனர். மீராவும், வள்ளியம்மையும் கெஸ்ட் அறையில் தங்கி கொண்டனர்.

 

அனைவரும் அவரவர்கள் அறைக்குச் சென்று ரெப்ரெஷ் ஆகி வந்ததும் ஆரணி யாழினியிடம், ஹே யாழ் பேபி, ரொம்ப போர் அடிக்குது வீட்டுக்குள்ளவே இருக்கிறது. எங்கேயாவது வெளியில் போயிட்டு வரலாமா... உங்க ஊரை எனக்கு சுத்திக் காட்டேன்.

 

சரி போகலாம் வா என்று அழைத்து செல்ல முன் வந்தால் யாழினி.

 

உடனே, இவர்களுடன் சேர்ந்து கொண்ட ஆரியன், நானும் உங்க கூட வருவேன்.

 

லட்சுமியிடம் சென்ற யாழினி, அம்மா இவங்க எல்லாம் என்னை நம்ம ஊரை சுத்தி காட்ட சொல்றாங்க. நாங்க சும்மா அப்படியே வெளியில் போயிட்டு வரோம்.

 

சரிமா சீக்கிரமா வந்திடுங்க என்று கூறி அனுப்பி வைத்தார் லட்சுமி.

 

அண்ணா நீயும் வரியா சும்மா ஒரு வாக் போயிட்டு வரலாம் என்று அபிமன்யுவை அழைத்தான் ஆரியன்.

 

அதற்கு மீராவை பார்த்த அபிமன்யு, இல்ல நான் வரல. நீங்க போங்க.

 

மீரா, ஏன் அபி, நீயும் போய்விட்டு வா. இந்த ஊர் ரொம்ப அழகா இருக்கு. போய் ஒரு வாக் போயிட்டு வா என்று அனுப்பி வைத்தார்.

 

சரி என்று அவர்களுடன் கிளம்பினான் அபிமன்யு.

 

இவர்களை அழைத்துக் கொண்டு அவர்களின் ஊரை சுற்றி காட்ட தொடங்கினாள் யாழினி. செல்லும் வழியில் உள்ள தெரிந்த வீடுகளில் இருந்து அனைவரும் யார் என்று இவர்களை விசாரித்தனர்.

 

இவர் தான் எங்க கயல்விழி அக்காவை கட்டிக்க போற மாமா. ஊரில் இருந்து வந்திருக்காங்க என்று அபிமன்யுவை அனைவரிடமும் கை காட்டினாள் யாழினி.

 

மாப்பிள்ளை சும்மா ஜம்முனு இருக்கார் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

 

அதற்கு எதுவும் கூறாமல் சிறு தலையசைப்புடன் நகர்ந்து சென்றான் அபிமன்யு. மேலும், எரிச்சலாகவும் உணர்ந்தான்.

 

அவர்கள் ஊரின் வயல்வெளிகள், ஏரிகள், மலைகள் என அனைத்தையும் சுற்றி காட்டினாள் யாழினி.

 

அனைத்தையும் பார்த்த ஆரணி, வாவ்! யாழ் பேபி உங்க ஊர் செமையா இருக்கு டா. எனக்கு வீட்டுக்கு வரவே மனசு இல்ல. இங்கேயே இருக்கலாம் போல இருக்கு என்றாள் அந்த இயற்கை காட்சிகளை சுற்றிப் பார்த்துக் கொண்டே.

 

அதற்கு அபி, இங்க என்ன இருக்குன்னு நீ இவ்வளவு பில்டப் பண்ற ஆரணி என்று எரிச்சலாக கேட்டான்.

 

உங்களுக்கு இதெல்லாம் தெரியாது அபி அண்ணா. கொஞ்சம் அங்க பாருங்க எவ்வளவு கிரீனரியா இருக்கு இந்த சீனரி பார்க்கவே சூப்பரா இருக்கு. என் பிரெண்ட்ஸ் அப்போவே சொன்னாங்க வில்லேஜ் நல்லா இருக்கும்னு. பட், இப்போ தான் ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பீரியன்ஸ் பண்றேன். ரொம்ப நல்லா இருக்கு என்று கூறினாள்.

 

ஹேய் பொண்ணு, சும்மா என்ன சுத்தி சுத்தி ஒன்னும் இல்லாத ஏரி, குலத்தையே காமிச்சுக்கிட்டு இருக்க. கெட்டிங் போர்.. வேற எதுவும் இன்ட்ரெஸ்ட்டா உங்க ஊரில் கிடையாதா என்று கேட்டான் அபிமன்யு.

 

நீங்க என்ன கேட்குறீங்கன்னு புரியல மாமா என்றாள் யாழினி.

 

இங்க பாரு, முதலில் இப்படி மாமானு கூப்பிடுறதை நிறுத்து இரிட்டேட்டடிங் என்று முணுமுணுத்தான்.‌

 

இவனின் கோபத்தை உணர்ந்த ஆரியன் டக்கென அபியின் கையை பிடித்து, அண்ணா வாங்க.. நம்ம அந்த பக்கம் போய் பார்த்துட்டு வரலாம் என்று அழைத்து சென்று விட்டான்.

 

அபி கூறியதை கேட்டு அதிர்ந்து நின்ற யாழினியிடம் சென்ற ஆரணி அவளின் தோளில் கை வைத்து, யாழ் என்ன ஆச்சு. வீட்டுக்கு போகலாமா என்று கூப்பிட்டாள்.

 

போகலாம் என்று கூறி அவளுடன் வீட்டிற்கு சென்றாள் யாழினி.

 

இருந்தாலும், அவளிற்கு அபிமன்யு தன்னிடம் கூறியதே மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு நாட்கள் பேசாத கதைகள் மொத்தத்தையும் ஒரே நாளில் பேசி தீர்த்து விட்டிருந்தனர் இரு பாட்டிகளும்.

 

அப்போது ஞாபகம் வந்தவராக மரகதம் வள்ளியம்மையிடம், வள்ளி எங்க உன் வீட்டுக்காரர் வரல என்று கேட்டார். அப்போது அவரின் உடல்நிலை குறித்து தன் அக்காவிடம் கூறினார் வள்ளியம்மை.

 

இவ்வளவு நடந்திடுச்சா. ஏன் வள்ளி என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. நாங்க வந்து பார்த்து இருப்போம்ல என்று கேட்டார். அதற்கு ஒரு மௌனத்தை மட்டுமே பதில் அளித்தவர்.

 

பரவாயில்லைக்கா என்று கூறி முடித்துக் கொண்டார்.

 

பிறகு, இரவு உணவை உண்டு விட்டு அனைவரும் படுக்க சென்று விட்டனர். கயல்விழியின் அறையை சுற்றிப் பார்த்த அபிமன்யுவிற்கு எதுவும் பிடிக்கவில்லை.

 

என்ன ஆரி இது. ரூம் இப்படி இருக்கு. இவ்வளவு குட்டியா என்று தன் விருப்பமின்மையை கூறினான்.

 

அண்ணா உங்களுக்கு அன்கம்பர்டபுல்லா இருந்தா நீங்க வேணும்னா ஊருக்கு போங்க. நாங்க மட்டும் இங்க ஸ்டே பண்ணிட்டு வரோம் என்றான் ஆரியன்.

 

ஏனெனில், அபிமன்யுவிற்கு இங்கே தங்கி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்று  அவனின் பேச்சை வைத்தே தெரிந்துக் கொண்டான் ஆரியன்.

 

நோ நீட் என்று கூறிய அபிமன்யு, வேறு எதுவும் பேசாமல் கட்டிலின் ஒரு ஓரத்தில் சென்று படுத்துக் கொண்டான்.

 

இரவு பல கதைகளை பேசி, சிரித்து அரட்டை அடித்துக் கொண்டு தூங்கிப் போயினர் கயல்விழி, யாழினி, ஆரணி.

 

மீராவும், வள்ளியம்மையும் மற்ற பெரியவர்களும் பல நாட்கள் கழித்து இவ்வளவு சொந்த பந்தங்களுடன் இருப்பதில் மனநிறையுடன் உறங்கினர்.

 

மறுநாள் காலை விடிந்ததும் மீண்டும் குடும்பமாக அனைவரும் சேர்ந்து குலதெய்வ கோவிலிற்கு சென்றனர். முதல் முறை மீரா அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு வருவதால், கோவிலில் சிறப்பு பூஜையும், பொங்கல் வைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்.

 

மரகதம் பாட்டி மீராவின் கைகளாலேயே கோவிலில் பொங்கல் வைக்க செய்தார். சிறப்பு பூஜையும் முடிந்து அவர்களின் நிலங்களை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றனர்.

 

அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்பினர். இவ்வளவு தூரம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றும் பொழுது கூட கயல்விழியை, அபிமன்யு ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

 

அவ்வப்பொழுது கயல்விழி இவனை ஓரப்பார்வையில் பார்ப்பதை உணர்ந்தும் இவன் அவளை கண்டுகொள்ளவில்லை. இதை கவனித்த ஜீவாவிற்கு மனம் சங்கடமாக இருந்தது.

 

என்ன இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளப் போகிறவன். இப்படி பாராமுகம் காட்டினால் அவளுக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கும் என்று எண்ணினான் ஜீவா.

 

இவ்வாறு இரண்டு நாட்களும் மகிழ்ச்சியாக செலவிட்டனர் மீராவின் குடும்பத்தினர். அபிமன்யு தன் அலுவலக வேலைகள் அனைத்தையும் போன் மூலமே கிஷோருக்கு தெரிவித்து முடித்தான்.

 

மூன்றாவது நாள் வீட்டிற்கு ஜோதிடரை வரவழைத்து, இருவரின் ஜாதகத்தையும் காட்டி பொருத்தம் பார்க்க கூறினார்கள். இருவரின் ஜாதகத்தையும் பார்த்த ஜோதிடர், பொருத்தங்கள் நல்லா தான் மா பொருந்தி வருது. ஆனா... என்று இழுத்தார்.

 

என்ன ஆச்சு ஐயா. ஏதாவது பிரச்சனையா என்றார் வேலுச்சாமி. 

 

எந்த பிரச்சனையும் இல்லைங்க ஐயா. ஆனா, கல்யாணத்தில் பெரிய தடங்கல் இருக்கு என்று அனைவரின் தலையிலும் குண்டை தூக்கி போட்டார்.

 

இதை கேட்ட அபிமன்யுவும், ஜீவாவும் மட்டும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர். அப்பாடா கல்யாணம் நின்னுடும் என்று. மற்றவர்கள் அனைவரும் பதட்டமாக, என்ன சொல்றீங்க என்று கேட்டனர்.

 

ஆமா, கல்யாணம் நடக்கிறதுக்கு பெரிய தடங்கல் இருக்கு. ஆனா, நீங்க கும்புடுற ஆத்தா நல்ல படியா நடத்தி கொடுப்பா. நான் சொல்ற பரிகாரத்தை நம்ம பாப்பாவை வச்சு செஞ்சுகிட்டு வாங்க. நல்லபடியா இந்த கல்யாணம் நடக்கும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு கல்யாண வேலையை ஆரம்பிப்போம்.

 

மரகதம் பாட்டி, ஐயா கல்யாண வாழ்க்கையில் எதுவும் பிரச்சனை இல்லையே.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லை மா. அமோகமா வாழ்வாங்க.

 

இதுவரை மீரா அவரின் பிள்ளைகளுக்கு ஜாதகம் பார்த்ததில்லை என்பதால் ஆரணி உடைய ஜாதகத்தையும், ஆரியனுடைய ஜாதகத்தையும் சேர்த்து எடுத்து வந்திருந்தார்.

 

இவர்களின் ஜாதகத்தை பார்த்தவுடன், ஆரணியுடையதையும், ஆரியனுடையதையும் கொடுத்தவர்.

 

இவங்க ரெண்டு பேருக்கும் வாழ்க்கை எப்படி இருக்கும்னு பார்த்து சொல்லுங்க.

 

முதலில் ஆரணியில் ஜாதகத்தை பார்த்த ஜோசியர், நல்ல அருமையான ஜாதகம்மா. வாழ்க்கை அவங்க ஆசைப்படுற மாதிரி அமையும். என்ன வாய் தான் கொஞ்சம் நீளமா இருக்கும். அதை அடக்கி கிட்டா நல்லபடியா வாழலாம்.

 

அடுத்தது ஆரியனுடையதை பார்த்தவர், இவருடைய அண்ணனுக்கு பக்கபலமாக இருக்க போறார். இவர் ஜாதகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே இவருக்கு நல்லதா தான் அமையும் என்று கூறி முடித்தார்.

 

உடனே மரகதம் பாட்டி, லட்சுமி, போய் நம்ம யாழினியுடைய ஜாதகத்தை கொண்டு வா.

 

சரிங்க அத்த என்று கூறிய லட்சுமி சென்று ஜாதகத்தை எடுத்து வந்தார்.

 

இதையும் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க ஐயா. எப்போ பார்த்தாலும் சும்மாவே சுத்திக்கிட்டு திரியுறா.

 

அதற்கு பாட்டியை முறைத்த யாழினி, அனைவரின் முன்பும் எதுவும் கூற முடியாமல் அமைதியாக நின்றாள்.

 

யாழினியின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் அவளைப் பார்த்து சிரித்தார். ‘ஐயோ! என்ன சொல்ல போறாறோ தெரியலையே’ என்று படபடப்பாக நின்று கொண்டிருந்தாள் யாழினி.

 

உன்னோட வாழ்க்கை திசை மாறப் போகுது தாயி. நீ ஆசைப்படுற மாதிரி உன்னுடைய வாழ்க்கை லட்சியம் நிறைவேறாது. நீ ஒன்னு நினைச்சி இருக்க. ஆனா, உன் வாழ்க்கையோட லட்சியம் வேறயா மாறப் போகுது.

 

அதைக் கேட்டே யாழினிக்கு தன் தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டது. யாரிடமும் எதுவும் கூறாமல் சோகமாக அறைக்கு சென்று விட்டாள்.

 

யாழினியின் வாழ்க்கை லட்சியம் என்னவாக இருக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5