அவனதிகாரம் - 27

 

அதிகாரம் - 27

சோகமாக யாழினி அறையினுள் நுழைகையில், ஜீவாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்தனர். ஜீவாவின் அம்மா, அப்பா, தங்கை ஸ்வேதா என அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

 

லட்சுமி, வாங்க அண்ணா, வாங்க அண்ணி, வா மா ஸ்வேதா என்று அழைத்தார்.

 

உள்ளே வந்ததும் ஜீவாவின் அம்மா லட்சுமியிடம், சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்கிறதா வெண்ணிலா சொன்னா லட்சுமி. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்று கூறிவிட்டு வள்ளியம்மையை பார்த்து, நல்லா இருக்கீங்களாமா என்று விசாரித்தார்.

 

வள்ளியம்மை, நல்லா இருக்கோம் மா. நீங்க எப்படி இருக்கீங்க? உள்ள வாங்க உட்காருங்க என்று பதில் கூறினார்.

 

ஜீவாவின் தந்தை மாணிக்கம், நல்லா இருக்கீங்களா? என்று பொதுவாக நலன் விசாரித்தார்.

 

நல்லா இருக்கோங்க. வாங்க என்று அழைத்தார் மீரா.

 

 ஸ்வேதா, அத்த யாழினி எங்க இருக்கா? என்று விசாரித்தாள்.

 

அவ இப்போ தான் ரூமுக்கு போய் இருக்காமா.

 

நேரே யாழினியை தேடி போனவள், யாழினி..... என்று அழைத்துக் கொண்டே கட்டி அணைத்தாள்.

 

ரெண்டு நாளா நம்ம பார்க்கவே இல்ல. என்னை நீ பார்க்க வரவே இல்ல. ரொம்ப பிசியா ஆகிட்டீங்களோ மேடம்.

 

அதற்கு யாழினி சோகமாக இருந்தாளே தவிர, எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. ஏன் ஒரு மாதிரி இருக்க?.

 

அதற்கு ஆரணி, ஹாய், நான் ஆரணி இவங்க வீட்டுக்கு வந்து இருக்குற கெஸ்ட். ஜோசியரை வர வச்சி ஜாதகம் பார்த்தாங்க. அப்போ யாழ் பேபியோட ஜாதகத்தை பார்த்துட்டு அவ ஆசைப்படுற மாதிரி அவளுடைய வாழ்க்கை லட்சியம் நடக்காதுன்னு சொல்லிட்டார். அதான் இவ்வளவு சோகமா இருக்கா என்று ஆரணியும் சோகமாக கூறவும், இவள் கூறியதை கேட்ட ஸ்வேதா வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

ஆரணி மனதிற்குள், என்ன இவங்க இப்படி சிரிக்கிறாங்க. நாம இப்போ கரெக்டா தானே சொன்னோம் என்று எண்ணியவள்.

 

ஏன் இப்படி சிரிக்கிறீங்க. பாவம், யாழ் பேபி.. அவளோட வாழ்க்கை லட்சியமே நிறைவேறாதுன்னு அவர் சொன்னதை கேட்டதில் இருந்து ரொம்ப வருத்தமா இருக்கா. நீங்க இப்படி சிரிக்கிறீங்களே. அவ மனசு கஷ்டப்படாத என்று ஆதங்கமாக கேட்டாள் ஆரணி.

 

அதற்கு தன் சிரிப்பை கட்டுப்படுத்திய ஸ்வேதா, அடப்போங்க நீங்க வேற, பெரிய லட்சியம்.. இந்த மேடமோட வாழ்க்கை லட்சியம் என்னனு உங்களுக்கு தெரியுமா.. சொன்னா நீங்களும் என் கூட சேர்ந்து இப்படித் தான் சிரிப்பீங்க என்று சிரிப்பை அடக்க முடியாமல் கூறினாள்.

 

திரும்பி யாழினியைப் பார்த்த ஆரணி அவள் எதுவும் கூறாமல் சோகமாக இருக்கவும், என்ன லட்சியம் அது?.

 

நான் சொல்றேன் கேளுங்க என்று அழைத்த ஸ்வேதா, மேடம்க்கு வாழ்க்கையுடைய பெரிய லட்சியமே என்னனா... 12-ஆம் கிளாஸ் முடிச்சதும் ஒரு நல்ல அழகான மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் மட்டும் இல்ல, அதுக்கப்புறம் ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல, மூணு புள்ள பெத்துக்கணும். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே ஜாலியா இருக்கணும். இது தான் இந்த மேடமோட வாழ்க்கை லட்சியம் என்று கூறி வெடித்து சிரித்தாள்.

 

அதை கேட்ட ஆரணியும் ஸ்வேதாவுடன் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

ஸ்வேதா, பார்த்தீங்களா.. நான் சொல்றதை கேட்டா நீங்களும் என்னோட சேர்ந்து சிரிப்பீங்கன்னு சொன்னேன் நடந்திடுச்சு பார்த்திங்களா என்று கூறினாள் சிரிப்பினோடே.

 

ஆரணி யாழினியை பார்த்து, ஹேய் யாழ் பேபி என்ன இது.. நிஜமாகவே இது தான் உன்னுடைய வாழ்க்கை லட்சியமா?.

 

அதற்கு கோபமாக யாழினி, ஏன் இதுக்கு என்ன குறைச்சல். இது என்னோட வாழ்க்கை லட்சியமா இருக்கக் கூடாதா.

 

இதில் என்ன லட்சியம் இருக்கு. எல்லாருடைய வாழ்க்கையிலுமே சாதாரணமா நடக்கிறது தானே. படிச்சு ஏதாவது பெரிய ஆள் ஆகணும்னு நினைச்சனா அதை வாழ்க்கை லட்சியம்னு சொல்லலாம். நீ என்னடானா கல்யாணம் பண்ணிக்கணும், குழந்தை பெத்துக்கணும்னு சொல்லிட்டு இதை போய் வாழ்க்கை லட்சியம்னு சொல்ற என்றாள் ஆரணி.

 

நல்லா படிச்சு கலெக்டர் ஆகணும்னு நினைச்சா மட்டும் நடந்திடுமா. என் அக்கா ரெண்டு பேருமே நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டாங்க. எங்க நடந்துச்சு... பெரியவளுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை பிறக்க போகுது. சின்ன அக்காவுக்கு இதோ கல்யாணம் நடக்கப்போகுது. நாளைக்கு எனக்கும் இதே தான நடக்க போகுது. அதான் நமக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறிக்கோள் வேணுமேனு இதையே என்னுடைய வாழ்க்கை குறிக்கோளா வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். வெளியில் வேலைக்கு போய் எதுக்கு கஷ்டப்படணும். வீட்டிலேயே இருந்தா நல்லா தானே இருக்கும்.

 

இவள் சீரியஸாக கூறுவதை கேட்க ஆரணிக்கு மீண்டும் சிரிப்பு வெடித்து கிளம்பியது.

 

இப்படி திரும்பத் திரும்ப சிரிச்சீங்கனா அப்புறம் நான் கோச்சிக்கிட்டு வெளியில போயிடுவேன்.

 

சரி.. சரி.. இல்ல, சிரிக்கல போதுமா. ஆமா உன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்னனு உங்க வீட்டில் எல்லாருக்கும் தெரியுமா? என்று கேட்டாள் ஆரணி.

 

யாழினி தெரியும்.

 

தெரியுமா! எப்படி?.

 

நான் தான் சொன்னேன்.

 

நீயே சொன்னியா என்றாள் ஆரணி.

 

ஆமா, அவங்க தான் கேட்டாங்க.. படிச்சிட்டு என்ன பண்ண போறன்னு. நான் கல்யாணம் பண்ணி மூணு குழந்தை பெத்துக்க போறேன்னு சொன்னேன். ஜாலியா வீட்டில் இருப்பேன்னு சொன்னேன்.

 

அடிப்பாவி! அதுக்கு உங்க அம்மா என்ன சொன்னாங்க? என்றாள் ஆரணி.

 

ஒன்னும் சொல்லல, ஒரு மாதிரி பாத்துட்டு போயிட்டாங்க.

 

யாழினி கூறிய பதிலை கேட்ட ஆரணி திரும்பி ஸ்வேதாவை பார்த்தாள். அவளோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருந்தாள்.

 

இவள் கூறுவதை கேட்டு, நீங்க ஏன் இப்படி சிரிக்கிறீங்க. ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான. நான் தான் இப்படி சிரிக்கணும் என்றாள் ஆரணி.

 

சிரித்துக் கொண்டே, ஐயோ ஆரணி, எத்தனை தடவ கேட்டாலும் இந்த விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்கும் போது சிரிப்பு வந்துகிட்டே தான் இருக்கு. நான் என்ன பண்றது. இவளும் என்கிட்ட கோச்சுக்கிட்டு பேசவே மாட்டா. அப்புறம் இவளை சமாதானம் பண்ணி சாரி கேட்டு பேச வைப்பேன். திரும்ப எப்போவாவது சொன்னானா எனக்கு திரும்பவும் சிரிப்பு வந்திடுது. என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல என்றாள் ஸ்வேதா.

 

அதற்கு யாழினி, வரும் டி.. வரும்.. என் வாழ்க்கையே இங்க சிரிப்பா சிரிச்சுக்கிட்டு இருக்கு. உனக்கு என்னை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருதா. அந்த ஜோசியர் என்னடானா என்னுடைய வாழ்க்கை லட்சியமே நிறைவேறாது. வேற என்னமோ என் வாழ்க்கையில நடக்க போகுதுன்னு சொல்லிட்டு போறார்.

 

வேற என்னடி நடக்கும். நீயே சொல்லு. எப்படியும் எங்க வீட்டில் படிக்க வைக்க போறதில்ல. கல்யாணம் தான் பண்ணி தர போறாங்க. கல்யாணம் பண்ணா குழந்தை தானே பிறக்கும். நீ இதை போய் நடக்காதுன்னு சொல்ற, அந்த ஜோசியர் இது நடக்காதுன்னா வேற என்ன டி நடக்க போகுது.

 

என்ன, நான் படிச்சு கலெக்டர் ஆயிடுவேனா. நீ வேணா பாரு, அந்த ஜோசியர் சொன்னது பொய்னு நான் ஆக்கி காட்டுறேன். ஒரு வருஷத்தில் 12ஆம் கிளாஸ் முடிக்குறேன், கல்யாணம் பண்றேன், புள்ளையை பெக்குறேன். இனிமே, இது தான் என்னுடைய லட்சியமே என்று வீர வசனம் பேசினாள்.

 

பேசும் அவளையே வென பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரணி.

 

அம்மா தாயே, நீ உடனே சபதம் எல்லாம் எடுக்காத. நடக்கிறது நடக்கட்டும். நீ ஃப்ரீயா விடு என்றாள் ஸ்வேதா.

 

இவளை பாரு ஆரணி, எப்போ பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டே இருக்கா. ஒரு பிரெண்ட்னா இப்படித் தான் இன்னொரு பிரெண்டோட லட்சியம் நம்ம கண்ணு முன்னாடியே கருகி போறதை பார்த்து சிரிப்பாங்களா.. அவளுக்கு சப்போர்ட் தான பண்ணனும் என்றாள் கோபமாக ஸ்வேதாவை பார்த்து.

 

ஸ்வேதா, தெரியாமல் சிரிச்சுட்டேன் டி ஆத்தா. இனிமே சிரிக்கவே மாட்டேன். உன் வாழ்க்கை லட்சியம் நீ ஆசைப்படுற மாதிரி நடக்கிறதுக்கு என்னால முடிஞ்ச உதவியை நானும் பண்றேன் போதுமா! என்று கூறி கையெடுத்து கும்பிட்டாள்.

 

ஒருவழியாக சமாதானம் ஆகி மூவரும் வெளியே வருகையில் மீரா, யாழினியை அழைத்தார்.

 

சொல்லுங்க அத்தை என்று அவர் அருகில் சென்று அமர்ந்தாள் யாழினி.

 

யாழினி, ஜோசியர் இப்படி சொல்லிட்டாரேனு வருத்தமா இருக்கியா டா என்று கேட்டு பாசமாக யாழினியின் தலையை தடவினார் மீரா.

 

யாழினி மனதிற்குள், ஐயோ, இப்போ தான் எல்லாம் சிரிச்சு முடிச்சாங்க. திரும்பவும் அத்தை முதலில் இருந்து ஆரம்பிக்கிறாங்களே என்று எண்ணிக் கொண்டு, திரும்பி ஸ்வேதாவை பாவமாக பார்த்தாள்.

 

அதற்குள் ஆரணி, மாம்.. உங்களுக்கு இவளோட வாழ்க்கை லட்சியம் என்னனு தெரிஞ்சா இப்படி சென்டிமென்டல் டயலாக் எல்லாம் பேச மாட்டீங்க என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

 

ஏன் ஆரணி இப்படி சொல்ற. அவளை கிண்டல் பண்ணாத. பாவம், அவளே வருத்தத்தில் இருக்கா என்று யாழினிக்காக பரிந்து பேசினார் மீரா.

 

ஆரணி, மாம் வேண்டாம். அப்புறம் என்ன விஷயம்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் இப்போ பேசுறதுக்கெல்லாம் ரொம்ப பீல் பண்ணுவீங்க என்று கிண்டலாக கூறினாள்.

 

மீரா, அப்படி என்ன லட்சியம் யாழினி? என்று நேரடியாக யாழினியிடம் கேட்டார்.

 

இவருக்கு எப்படி தன் வாழ்க்கையின் லட்சியத்தை விளக்கி கூறுவது என்று சங்கடமாக உணர்ந்த யாழினி, அது ஒன்னும் இல்ல அத்தை. சும்மா எல்லாம் கிண்டல் பண்றாங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று நைசாக கூறி மழுப்பினாள்.

 

அதற்குள் ஆரணி, யாழ் பேபி, இப்போ எதுக்காக ஒன்னும் இல்லைனு சொல்ற. உன் லட்சியம் என்னனு சொல்லு, அப்போ தான எங்க அம்மாவுக்கும் கொஞ்சம் புத்தி வரும். என்னை சும்மா படி படினு சொல்லி டார்ச்சர் பண்ணுறாங்க தெரியுமா. உன்னோட லட்சியத்தை பத்தி தெரிஞ்சா தான் பொண்ணுங்களுக்கு இப்படியும் ஒரு லட்சியம் இருக்கும்னு எங்க அம்மா மாதிரி ஆளுங்களுக்கு தெரியும்.

 

மீரா, அப்படி என்னவாக இருக்கும். பில்டப் எல்லாம் ஓவரா இருக்கு என்று எண்ணியவர், நீ சொல்லு மா அவ கிடக்குறா. என்ன உன் வாழ்க்கை லட்சியம்?.

 

இவர் கேட்ட உடனேயே கூறியிருந்தால் கூட இது இவ்வளவு பெரிய விஷயமாக ஆகி இருக்காதோ என்னவோ. யாழினி நேரம் கடத்தி சமாளிக்கிறேன் என்று கூற. ஆரணி அதற்கு பதில் கூற என மொத்த குடும்பமும் இவர்களை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது.

 

ஆரணி, மாம் நானே சொல்றேன் கேளுங்க என்று உள்ளே இவர்களுக்குள் நடந்த உரையாடலை கூறினாள்.

 

அதனை கேட்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்து உட்கார்ந்து விட்டார் மீரா. மற்றவர்கள் அனைவருக்கும் அடக்கமாட்டாமல் சிரிப்பு பெருக்கெடுத்தது.

 

ஆரியன் நேராக யாழினி அருகே வந்து, கையை குடு யாழினி என்று வம்படியாக அவளின் கையைப் பிடித்து கை குலுக்கி, சூப்பர்! இப்படி ஒரு வாழ்க்கை லட்சியத்தை நான் கேள்விப்பட்டதே இல்ல. இது எப்படி நீயே தனியா ரூம் போட்டு யோசிச்சியா இல்ல, யாராவது உனக்கு ஐடியா கொடுத்தாங்களா என்று நக்கலாக பாராட்டினான்.

 

யாழினியோ இவன் உண்மையிலேயே நம்மை பாராட்டுகிறான் என்று எண்ணி, இல்ல.. இல்ல.. நானே தான் யோசிச்சேன் என்று பெருமை பேசினாள்.

 

அப்போது அங்கே தூரமாக அமர்ந்திருந்து லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு, இவளை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, இடியட் என்று முணுமுணுத்து விட்டு எழுந்து சென்று விட்டான்.

 

ஆரியன் தன்னை கிண்டல் செய்வது கூட தெரியாமல் வெள்ளந்தியாக இவள் அவனுக்கு பதில் கூறவும் அனைவரும் நகைத்தனர்.

 

மீரா உடனே, ஆரி இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாது. இப்போ அவ என்ன சொல்லிட்டானு எல்லாரும் இப்படி பேசுறீங்க. எல்லாருக்கும் என்ன நடக்குமோ அதை தானே அவளும் சொல்றா. இதுக்காக அவளை இப்படித் தான் கேலி பண்ணுவீங்களா. ஜஸ்ட் லீவ். அப்போ ஜோசியர் சொன்ன படி பார்த்தா, நீங்க எல்லாம் இவளை கிண்டல் பண்ணி சிரிக்கிற மாதிரி இல்லாம இவ பெரிய ஆளா வரப்போறா பாருங்க.

 

அதைக் கேட்ட ஸ்வேதா, ஐயோ ஆன்ட்டி, ப்ளீஸ் இப்படி சொல்றதுக்கு பதில் நீங்க எங்க எல்லாரையும் ரெண்டு திட்டு கூட திட்டிடுங்க என்று கிண்டல் பேசினாள்.

 

அதற்கு யாழினி அவளை அடிக்க துரத்தவும், ஆரணி ஸ்வேதாவிற்காக சப்போர்ட்டிற்கு வரவும் என சற்று நேரத்தில் வீடே கலகலத்து விட்டது.

 

யாழினியையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் மீரா. அவரின் மனதில் மீண்டும் பழைய எண்ணம் குடிகொள்ள ஆரம்பித்தது. அன்றைய நாளை இவ்வாறு மகிழ்ச்சியாக கழித்துவிட்டு மீராவின் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு புறப்பட்டனர்.

 

லட்சுமி, ஏன் அண்ணி அதுக்குள்ள கிளம்பிட்டீங்க. இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல.

 

மீரா, பரவாயில்ல இருக்கட்டும் அண்ணி. ஆரணி அப்பாவும் நாளைக்கு ஊரில் இருந்து வருவதா சொல்லி இருக்காங்க. நாங்க இன்னைக்கு போனா தான் சரியா இருக்கும். அபிக்கும் ஆபீஸில் நிறைய வேலை இருக்கும். எங்களுக்காக அவன் த்ரீ டேஸ் லீவ் போட்டதே பெரிய விஷயம். நீங்க எல்லாம் ஊருக்கு ஸ்டே பண்ற மாதிரி வாங்க அண்ணி. அதான் கல்யாணத்துக்கு இன்னும் ஒன் இயர் கேப் இருக்குல்ல.

 

சரிங்க அண்ணி. பார்க்குறோம்.

 

பின்பு அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு சென்னையை நோக்கி புறப்பட்டனர் மீராவின் குடும்பத்தினர்.

 

காரில் ஏறி கிளம்பிய பின்பு தான் அபிமன்யுவிற்கு மூச்சுக்காற்றே சீராக வந்தது. அந்த ஊரில் அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் அனைவரையும் கண்காணித்துக் கொண்டே சுற்றி கொண்டு இருந்தான்.

 

மற்றவர்கள் நல்லதாக செய்வது கூட, இவன் கண் பார்வைக்கு கெட்டதாகவே பட்டது. சிறுவயது முதல் ஏற்பட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது அல்லவா.. காலம் தான் அவனின் மனதை மாற்ற வேண்டும்..

 

இவர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்த இரண்டு நாட்களில் வெண்ணிலாவிற்கு இடுப்பு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சில மணி நேர போராட்டங்களுக்குப் பிறகு அழகிய ஆண் மகனை ஜீவாவின் கைகளில் கொடுத்தனர் செவிலியர்கள்.

 

குடும்பம் மொத்தமும் மகிழ்ச்சியில் திளைத்து விட்டது. மூன்றுமே பெண் பிள்ளைகளாய் பிறந்த சுப்ரமணியனின் குடும்பத்து முதல் ஆண் வாரிசு அல்லவா..!

 

ஜீவாவின் குடும்பத்திற்கும் இதுவே முதல் வாரிசு என்பதாலும், இரு குடும்பங்களுக்கும் அவன் பிறந்தது பெரும் கொண்டாட்டமாகவே இருந்தது.

 

மீராவிற்கும் ஃபோனின் மூலம் தகவல் கூறப்பட்டது. அவர்களும் குடும்பத்துடன் வந்து குழந்தையையும், வெண்ணிலாவையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றனர். வழக்கம் போல் அபியும் இவர்களின் பின்னே வந்து விட்டான்.

 

அவனின் வருகை கயல்விழிக்காக தான் என்று அவனின் மொத்த குடும்பமும் நம்பியது. ஆனால், அவனுக்கு தானே தெரியும். அவனின் இந்த வருகை மீராவிற்காக என்று.

 

எத்தனை முறை வந்தாலும் கயல்விழியை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டான் அபிமன்யு. கயல்விழிக்கும் இவனின் மீது பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை. இவனின் பார்வைகளையும், எண்ணங்களையும் அவளும் விரும்பவில்லை என்பது அவளின் நடவடிக்கையிலேயே அபிமன்யு புரிந்து கொண்டான்.

 

எதுவோ சரி இல்லையே என்று அவனின் மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தது. ஜீவாவும் இவர்களுக்கு இடையே நடக்கும் சம்பாஷனைகளை கண்டும் காணாமல் இருந்தான்.

 

திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற அவனுடைய எண்ணம் நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். ஏனென்றால், இரு குடும்பத்தில் உள்ள அனைவரும் திருமணத்தை நடத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

 

அபிமன்யு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு திரும்பி வந்த உடனேயே, அந்த மாதத்திலே திருமணத்தையும், நிச்சயத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று பெரியோர்கள் அனைவரும் கூடி முடிவு செய்து இருந்தனர். அபிமன்யு எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. ஒரு மாதங்கள் கழித்து அபிமன்யு எதிர்பார்த்த வெளிநாட்டு பயணம் தொடங்கியது.

 

கயல்விழியின் மனதிற்குள் என்ன இருக்கிறது..?

 

அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பமா..?

 

விரும்பாத இரு இதயங்களும் இந்த திருமணத்தின் மூலம் ஒன்று கூடுமா..‌?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5