அவனதிகாரம் - 30

 

 

அதிகாரம் – 30

 

திருமண பரபரப்பில் நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறந்து விட்டது. நேற்று தான் நிச்சயம் முடிந்தது போல் இருந்தது. அதற்குள் திருமணத்திற்கு முந்தைய நாள் வந்துவிட்டது.

 

மீரா, ஒரு மாசம் போனதே தெரியலை மா. எவ்வளவு வேலை என்று தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

 

ஆமா மீரா. ஒரு மாசம் போனதே தெரியல. எவ்வளவு வேலை, எவ்வளவு டென்ஷன். இதில் இந்த விசாலாட்சி வேற புதுசு புதுசா ஏதாவது பிரச்சனையை கிளப்ப முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தா. அவளை சமாளிக்கிறதே பெரிய வேலையா போயிடுச்சு. கல்யாண புடவை எடுக்கும் போது என்னென்ன பேச்சு பேசினா பாத்தியா. அந்த பொண்ணு இப்படி எல்லாம் பேசும்னு நான் நினைச்சு கூட பார்க்கல மீரா என்றார் வருத்தமாக.

 

சரி விடுங்கம்மா. அவங்களை பத்தி தான் நமக்கு தெரியுமே. நீங்க எதுவும் குழப்பிக்காதீங்க. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சில்ல. நாளைக்கு கல்யாணம் அதுக்குண்டான வேலையை பாப்போம்.

 

ஆரியன், மாம் இங்க பாருங்க, இந்த ஆரணிக்கு வர வர பொறுப்பே கொஞ்சம் கூட இல்ல. நாளைக்கு மேரேஜ், ஆனா மேரேஜ்க்கு போட போற டிரஸ்ஸ ஆல்ட்ரேஷனுக்கு கொடுத்து இருக்கேன்னு இப்போ போய் என்னை கடைக்கு கூப்பிடுறா என்று சலிப்பாக கூறினான்.

 

ரொம்ப பண்ணாதடா. இப்போ ஆஃப்டர்னூன் தான ஆகுது. இனிமே தான் நம்ம கிளம்புவோம் என்று சாதாரணமாக கூறினாள் ஆரணி.

 

இதெல்லாம் முன்னாடியே பார்த்து வச்சுக்க மாட்டியா ஆரணி. இப்போ நாம ஊருக்கு கிளம்பனும். ஊருக்கு போய் அபிக்கு நலங்கு வைக்கிற வேலையெல்லாம் இருக்கு. இப்போ போய் இப்படி சொல்ற என்று கோபமாக கூறினாள் மீரா.

 

சாரி மாம் என்று சோகமாக கூறிய தன் மகளை பார்த்ததும் மகேந்திரனுக்கு பாசம் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.

 

டோன்ட் வொரி ஆரணி. நான் உன்னை கூப்பிட்டு போறேன் ஓகே. ஸ்மைல் என்று கூறினார் தன் மகளிடம்.

 

அதற்கு மீரா, என்னங்க நீங்க. நாம ஊருக்கு கிளம்பனும் இல்ல.

 

உடனே ஆரியன், மாம் அவங்களை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே. பொண்ணுக்கு ஒன்னுனா அப்பாவால் தாங்க முடியாது என்று கிண்டல் செய்தான்.

 

மகேந்திரன், ஒன்னும் பிரச்சனை இல்ல மீரா. நீங்க எல்லாம் கிளம்பி ரெடி ஆகுங்க. அபியும் ரெடியாகி வருவதற்குள்ள, நான் ஆரணியை கடைக்கு கூப்பிட்டு போய் டிரஸ் வாங்கிட்டு வந்துடுறேன். ஓகே.

 

சரிங்க என்று கூறிய மீரா, ஆரி, நீ போய் அபி ரெடி ஆயிட்டானான்னு பாருப்பா. சீக்கிரம் கீழே இறங்கி வர சொல்லு. நல்ல நேரம் முடியுறதுக்குள்ள நாம எல்லாம் கிளம்பணும்.

 

ஓகே மாம் என்று படி ஏறி தன் அண்ணன் அறையை நோக்கி நடந்தான் ஆரியன்.

 

அண்ணா... என்று கதவை தட்டியதும் கதவை திறந்த அபிமன்யு, வாட் ஆரி என்றான் சலிப்பாக.

 

ஆரியன், அண்ணா நாங்க எல்லாம் கிளம்பிட்டோம். சீக்கிரம் உங்களை கிளம்பி அம்மா கீழே வர சொன்னாங்க. ஊருக்கு கிளம்பனுமாம் டைம் ஆகுது.

 

நீ போ. நான் வரேன் என்று கூறினான் அபிமன்யு.

 

மீரா, அம்மா நான் போய் அப்பாவை அழைச்சிட்டு வரேன்.

 

வேண்டாம் நானே அப்பாவை கூட்டிட்டு வரேன். நீ மத்ததெல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோ என்றார் வள்ளியம்மை.

 

தங்கள் அறைக்கு சென்று பார்க்கையில் அங்கே கடுகடுவென கோபமாக அமர்ந்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவரின் கோபத்தைக் கண்டுகொள்ளாத வள்ளியம்மை, என்னங்க கிளம்பலாமா என்று கேட்டு அவர் அருகில் சென்றார்.

 

என்ன வள்ளி, உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி படைக்கிறியா. இந்த கல்யாண பேச்சே எனக்கு சுத்தமா பிடிக்கல. ஆரம்பத்தில் இருந்து நான் இதைத் தான் சொல்றேன். ஆனா, நீ கண்டுக்கவே மாட்டேங்குற. நிச்சயத்துக்கு நான் வரலைனாலும் பரவாயில்லைனு போய் நடத்துற. என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல. இப்போ கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்ட, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல வள்ளி என்றார் கோபமாக.

 

இப்போ எதுக்குங்க கோபப்படுறீங்க. எப்படி இருந்தாலும் இந்த கல்யாணம் நடக்க தான் போகுது. எல்லாரும் கிளம்பிட்டாங்க. நிச்சயத்துக்கும், புடவை எடுக்குறதுக்கும் எதுக்குமே நீங்க வர முடியாதுன்னு சொல்லிட்டீங்க. நானும் சரின்னு விட்டுட்டேன். ஆனா, இப்போ நம்ம அபிக்கு கல்யாணம். உங்க பேரன் கல்யாணத்தை பார்க்கணும்னு உங்களுக்கும் ஆசை இருக்கும்ல. உங்க கோபத்தை எல்லாம் விட்டுட்டு எங்க கூட வாங்க என்று கூறி அவரின் வீல் சேரைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தார்.

 

எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தன் மனதிற்குள் ஒரு திட்டத்துடன் வள்ளியம்மையுடன் புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. விசாலாட்சிக்கும், அவளின் மகள் ஷைலஜாவிற்கும் தான் முகமே விடியவில்லை.

 

அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் இந்த திருமணத்தை நிறுத்த முடியவில்லை. இதோ நாளை திருமணம். எப்படி இதனை தடுப்பது என்று புரியாமல் அம்மாவும், மகளும் மண்டையை குடைந்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

 

அபிமன்யு கிளம்பி கீழே வரவும், ஆரணியும், மகேந்திரனும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. பின்னர், அனைவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற மீரா கடவுளின் முன்பு இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலை வைத்துவிட்டு அனைவரையும் சாமி கும்பிட வைத்து பின்னர் காரில் ஏறி குடும்பமாக அரசனூரை நோக்கி புறப்பட்டனர்.

 

அங்கே பெண் வீட்டில் அனைவரும் பரபரப்பாக கிளம்பி கொண்டு இருந்தனர் மண்டபத்திற்கு செல்வதற்கு.

 

ராணி இந்த பேக் எல்லாம் கொண்டு போய் காரில் வை என்று ராணிக்கு வேலையை ஏவினார் லட்சுமி.

 

சரிங்கம்மா என்று கூறியவர், அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து கொண்டிருந்தார்.

 

அதற்குள் மரகதம் பாட்டி லட்சுமியிடம், மாப்பிள்ளைக்கு போட வேண்டிய நகை எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிட்டியா என்று விசாரித்தார்.

 

எல்லாம் எடுத்து வச்சாச்சு அத்தை. வெண்ணிலா கையில் தான் கொடுத்து இருக்கேன்.

 

சரி மா. எதையும் மறந்துடாமல் எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கோங்க. அப்புறம் மண்டபத்தில் வந்து அதை காணும், இதை காணும்னு தேடுற மாதிரி இருக்க போகுது என்று கூறிவிட்டு, நான் போய் உன் மாமா கிளம்பிட்டாரானு பாத்துட்டு வரேன் என்று தங்கள் அறையை நோக்கி சென்று விட்டார்.

 

யாழினி, கயல் என்ன பண்றீங்க ரெண்டு பேரும். ரெடி ஆயிட்டீங்களா என்று குரல் கொடுத்தார் லட்சுமி.

 

இதோ மா ரெடியாயிட்டே இருக்கோம் என்று குரல் கொடுத்தாள் யாழினி.

 

லட்சுமி, கயல் இந்த புடவையை கட்டிக்கோ. இந்த நகையெல்லாம் போட்டுக்கோ. மண்டபத்துக்கு நம்ம போனதும் உனக்கும், மாப்பிள்ளைக்கும் நலங்கு வைக்கணும். அங்க போயிட்டு ரெடியாகுறது எல்லாம் சரி வராது. அதனால இங்கேயே ரெடி ஆயிட்டா. உனக்கு ஈசியா இருக்கும்.

 

சரிமா என்று கூறிய கயல் அவர் கூறிய படி தயாரானாள்.

 

வெண்ணிலா மாப்பிள்ளையும், கண்ணாவும் (கண்ணன் வெண்ணிலாவின் மகன்) ரெடி ஆயிட்டாங்களானு போய் பாருமா. மணி ஆகுது மண்டபத்துக்கு கிளம்பனும் என்றார் லட்சுமி.

 

இதோ பாக்குறேன் மா என்று அவர்கள் அறையை நோக்கி சென்றுவிட்டாள் வெண்ணிலா.

 

லட்சுமி, எல்லாம் சரியா பாத்து எடுத்து வச்சுக்கோ. அப்புறம் மண்டபத்துக்கு வந்து அதை காணும், இதை காணும்னு என் மண்டையை போட்டு உருட்ட கூடாது புரிஞ்சுதா என்றார்.

 

சரிமா, சரிமா. அதெல்லாம் நான் பாத்துக்குறேன். நீ ஃப்ரீயா விடு என்று கூறினாள் யாழினி.

 

அதற்குள் சுப்ரமணி வெளியே இருந்து, லட்சுமி... என்று குரல் கொடுத்தார்.

 

சரி அப்பா கூப்பிடுறாங்க. நான் போய் என்னனு பாத்துட்டு வரேன். நீங்க சீக்கிரம் ரெடி ஆகுங்க என்று கூறிவிட்டு வெளியே நடந்தார்.

 

என்னங்க?.

 

நேரம் ஆகுது லட்சுமி. சீக்கிரம் எல்லாம் கிளம்பியாச்சா, சொந்தக்காரங்க எல்லாம் மண்டபத்துக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க அவங்களுக்கு முன்னாடி நம்ம போனா தான் நல்லா இருக்கும். எல்லாரையும் வரவேற்கனும்ல.

 

இதோ ஆச்சிங்க என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஜீவா, வெண்ணிலா தம்பதி கண்ணனுடன் தயாராகி வெளியே வந்தனர்.

 

சுப்ரமணியை பார்த்ததும் தாத்தா என்று தன் மழலை மொழியில் கூறிக்கொண்டு அவரிடம் தாவிவிட்டான் கண்ணன்.

 

ஹே கண்ணா. வா வா என்று வாங்கிக் கொண்ட சுப்பிரமணி, என்ன மாப்ள நீங்க கிளம்பியாச்சா. மண்டபத்துக்கு கிளம்பலாமா.

 

நாங்க ரெடி மாமா. அம்மாவும், அப்பாவும் நேரா மண்டபத்துக்கு வந்துருவாங்க.

 

சரிங்க மாப்பிள்ளை.

 

அதற்குள் வேலுச்சாமி தாத்தாவும், மரகதம் பாட்டியும் தயாராக வந்தனர்.

 

மரகதம் பாட்டி லட்சுமியிடம், என்ன லட்சுமி எல்லாரும் கிளம்பிட்டோம், இன்னும் கயலும், யாழினியும் மட்டும் என்ன பண்றாங்க.

 

இதோ கிளம்பிட்டே இருக்காங்க அத்தை.

 

ஏய் யாழினி, என்னடி பண்ற. வெளியில் வா என்று குரல் கொடுத்தார் மரகதம் பாட்டி.

 

அக்கா சீக்கிரம் பாட்டி கத்த ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் கிளம்பிட்டாங்க. நீ மட்டும் என்ன யோசிச்சுகிட்டு இருக்க, வா கிளம்பலாம் என்று கூறி கயல்விழியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் யாழினி.

 

மரகதம் பாட்டி, ஏன் டி இவ்வளவு நேரமா உனக்கு கிளம்புறதுக்கு என்றார் யாழினியை பார்த்து.

 

பாட்டி நான் ஒன்னும் லேட் பண்ணல. அக்கா தான் பொறுமையா கிளம்புறா என்று கயல்விழியை போட்டுக் கொடுத்தாள் யாழினி.

 

கயல்விழி மணப்பெண் ஆயிற்றே. ஆகையால், அவளை எதுவும் கூறாத மரகதம் பாட்டி, சரி, சரி வாங்க கிளம்புவோம். நேரம் ஆகுது என்று கூற, அனைவரும் காரில் ஏறி மண்டபத்தை நோக்கி புறப்பட்டனர்.

 

திருமணம் முடிந்த மறுநாள் ரிசப்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருப்பதால் திருமணத்திற்கு முந்தைய இரவு மணப்பெண்ணிற்கும், மணமகனுக்கும் நலங்கு வைக்கும் சம்பிரதாயம் மட்டும் செய்ய முடிவு செய்திருந்தனர்.

 

பெண் வீட்டினர் மண்டபத்தை அடைந்ததும் லட்சுமி, வெண்ணிலா, யாழினி ரெண்டு பேரும் கயல்விழியை பொண்ணு ரூமுக்கு அழைச்சிட்டு போங்க. நாங்க கூப்பிடும் போது கூப்பிட்டு வந்தா போதும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

 

பிறகு, சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு உறவினர்களாக வரத் தொடங்கினர். அனைவரையும் வரவேற்பதில் பிசியாகிவிட்டனர் பெரியவர்கள்.

 

ஜீவாவின் குடும்பத்தினர் வந்ததும் ஸ்வேதா யாழினியுடன் ஐக்கியமாகிவிட்டாள். கயல்விழியை வெண்ணிலாவின் பொறுப்பில் விட்டுவிட்டு யாழினி, ஸ்வேதாவுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்து சேர்ந்தனர். அனைவரையும் நல்ல முறையில் வரவேற்ற சுப்பிரமணி குடும்பத்தினர், மணமகன் அறையை காண்பித்தார்.

 

வெண்ணிலாவிற்கு திருமணம் நடந்த அதே பெரிய மண்டபம் தான் கயல்விழியின் திருமணத்திற்கும். வெண்ணிலாவின் திருமணத்தை போலவே நல்ல கூட்டம்.

 

முந்தைய நாள் ரிசப்ஷன் இல்லாததால் கயல்விழி மிதமான ஜரிகை வேலைப்பாடுகளை கொண்ட நீல நிற பட்டுப் புடவையில் அளவான நகைகளுடன் தயாராக இருந்தாள்.

 

அபிமன்யு வேஷ்டி, சட்டை எதுவும் அணிய மாட்டேன் என்று அடம் பிடித்து பேண்ட், சர்ட்டில் இருந்தான். இப்படியே நலங்கு வைத்தால் வையுங்கள் இல்லை என்றால் நலங்கே வேண்டாம் என்று கூறிவிட்டான்.

 

வேறு வழியில்லாமல் அவன் போக்கிற்கே விட்டுவிட்டார் மீரா. முதலில் மணமகனுக்கு நலங்கு வைக்க அழைத்து வரப்பட்டான் அபிமன்யு. ஒரு பக்கம் ஜீவாவும், யாழினியும், ஸ்வேதாவும் நின்றுக்கொள்ள.

 

மறுப்பக்கம் ஆரணியும், ஆரியனும் நின்று கொண்டு மாற்றி, மாற்றி கிண்டலும், கேலியுமாக நலங்கு வைக்க தொடங்கினர். யாழினி, ஜீவா, ஸ்வேதா மூவரும் அபிமன்யுவை கிண்டல் செய்வதும்.

 

அதற்கு ஆரணியும், ஆரியனும் பதில் கொடுப்பதுமாக கலகலவென சென்றது நலங்கு வைக்கும் நிகழ்ச்சி.

 

என்ன மாமா அமைதியா இருக்கீங்க என்று கேட்டாள் யாழினி.

 

அவள் யாரையோ கேட்கிறாள் என்று எண்ணிய அபிமன்யு வேறு ஒரு சிந்தனையில் அமர்ந்திருந்தான்.

 

என்ன ஆரணி மாப்பிள்ளைக்கு சரியா காது கேட்காதா, சொல்லவே இல்லையே என்று அதிர்ச்சியாக கேட்பது போல் கிண்டல் அடித்து, ஸ்வேதாவுடன் கூடி சிரித்தாள்.

 

அதற்குள் ஜீவா, அப்படி இல்லை மா யாழினி. மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்க பயப்படுறார் போல என்று கிண்டல் செய்தான்.

 

பதில் பேசும் நிலையில் இல்லாத அபிமன்யு கோபமாக அமைதியாக அமர்ந்திருந்தான். அவனின் மனதிற்குள் இவர்கள் எல்லாருக்கும் இருக்கு ஒரு நாள் என்று திட்டிக் கொண்டிருந்தான்.

 

ஆரியனோ, யாருக்கு பயம்.. எங்க அண்ணன் சிங்கம் மாதிரி. எதுக்கும் பயப்பட மாட்டார். உங்க பொண்ணு தான் எங்க அண்ணாவை பார்த்து பயப்படனும் என்று கூறி சிரித்தான்.

 

ஆரணி, அப்படி சொல்லுணா என்று ஹை ஃபை போட்டுக்கொண்டு சிரித்தாள் ஆரியனுடன்.

 

இப்படியே கலகலவென வளவளத்து கொண்டு நலங்கு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தனர். இவர்களின் கலகலப்பும், மகிழ்ச்சியும் ஷைலஜாவிற்கு பெரும் வயிற்றெரிச்சலை கொடுத்தது. காதில் புகை வராத குறையாக அமர்ந்திருந்தனர் ஷைலஜாவும், விசாலாட்சியும்.

 

என்னம்மா நலங்கும் முடிஞ்சிடுச்சு. நாளைக்கு விடிஞ்சா கல்யாணம். அப்போ அபி மாமா எனக்கு கிடைக்க மாட்டாரா என்று சிணுங்கினாள் ஷைலஜா.

 

ஆமா, இப்போ வந்து புலம்பு. இவ்வளவு நாள் கையில் வெண்ணெய்யை வச்சுக்கிட்டு இருக்கும் போது அவனை பேசி கவுக்க தெரியல. இப்போ வந்து கிடைக்க மாட்டானானு கேட்டா. நம்ம கையில் என்ன இருக்கு. இன்னைக்கு ஒரு ராத்திரி மட்டும் தான் உனக்கு டைம். ஏதாவது பண்ண முடிஞ்சா பண்ணு என்று எரிச்சலாக கூறினார்.

 

என்ன மா இப்படி சொல்றீங்க. நீங்க ஏதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்திடுவீங்கன்னு தான் நான் தைரியமா இருக்கேன்.

 

என்னை என்னடி பண்ண சொல்ற. என்னை கேட்டா இங்க எல்லாம் நடக்குது. முதலிலாவது இந்த மீரா என்னை பார்த்தா பொட்டி பாம்பா அடங்கி இருந்தா. இந்த கல்யாண பேச்சை எடுத்ததில் இருந்து என்னை மதிக்கவே மாட்டேங்குறா. ஆத்தாளும், மகளும் சேர்ந்துக்கிட்டு என்ன ஆட்டம் போடுறாங்க. சரி, பொண்ணு வீட்டு பக்கம் எதாவது பேசி பத்த வைக்கலாம்னு பார்த்தா. நம்ம என்ன சொன்னாலும் அவங்க சரி, சரின்றாங்க. எனக்கே ஒன்னும் புரியல இங்க என்ன நடக்குதுன்னு. ரொம்ப குழப்பமா இருக்கு என்று சலிப்பாக கூறினார் விசாலாட்சி.

 

என்ன மா நீயே இப்படி சொன்னா எப்படி மா.. ஏதாவது பண்ணு. எனக்கு அபி வேணும். அவன் இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை. ப்ளீஸ்மா.

 

சரி, சரி கடைசியா உனக்காக கல்யாண பொண்ணு கிட்ட போய் பேசி பார்க்கிறேன். இதுவும் சரி வரலைனா அப்புறம் என் கையில் ஒன்னும் இல்ல. உன் தலை எழுத்து இதான்னு ஏத்துக்க வேண்டியது தான்.

 

அதற்கு சிரித்த முகமாக ஷைலஜா, ஓகே, ஓகே.. நீ போய் பேசிட்டு வாஎன்று தன் தாயை மணமகள் அறை நோக்கி அனுப்பி வைத்தாள்.

 

அங்கே நலங்கு வைத்து முடிக்கப்பட்ட கயல்விழி ஏதோ சிந்தனையில் சுவற்றை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

உள்ளே நுழைந்த விசாலாட்சி, உன்னை உங்க அம்மா கூப்பிட்டாங்க என்று வெண்ணிலாவை பார்த்து கூறினார்.

 

வெண்ணிலா கயல்விழியிடம், பார்த்துட்டு வந்துடுறேன் நீ இரு என்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.

 

கயல்விழி தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள நினைத்த விசாலாட்சி, என்னம்மா கல்யாண பொண்ணு, என்ன விஷயம்.. கல்யாணத்துக்கு அப்புறம் தான் நீ உம்முன்னு இருப்பனு நினைச்சேன். ஆனா, நீ இப்போவே இவ்வளவு சோக கீதம் வாசிக்கிற.

 

இவர் என்ன கூறுகிறார் என்று புரியாமல் பார்த்த கயல்விழியை, என்ன நான் பேசுறது ஒன்னும் புரியலையா. எங்க அபியை கல்யாணம் பண்ணிக்க போறியே ரொம்ப பாவம் தான் நீ. அவனை பத்தி முழுசா தெரிஞ்சு பண்ணிக்கிறியா இல்ல, தெரியாமலே பண்ணுறியா.

 

அதற்கும் எந்த பதிலும் கூறாமல் அமைதி காத்தாள் கயல்விழி.

 

இங்க பாரு, அபிமன்யுவும் என் பொண்ணு ஷைலஜாவும் 2 வருஷமா காதலிக்குறாங்க. உன்னை கட்டிக்க அபிமன்யுவிற்கு சுத்தமா சம்மதம் கிடையாது. அவங்க அம்மா இருக்காளே மீரா, அவ தான் சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டி அபியை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கா. நீ அபியை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ள உன்னை டைவர்ஸ் வாங்கி அனுப்பிட்டு, என் பொண்ண தான் அபி கல்யாணம் பண்ணிக்குவான். அதுக்கு இந்த கல்யாணத்தை நீயே நிறுத்திடு என்றார் அசால்டாக.

 

கயல்விழி அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வெண்ணிலா மீண்டும் வந்து விடவும் விசாலாட்சி, சரிமா நான் கிளம்புறேன். நான் சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோ. பார்த்து நல்ல முடிவா எடு என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார்.

 

ஏற்கனவே, குழப்பத்தில் இருந்த கயல்விழிக்கு, இவரின் இத்தகைய பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிருஷ்ணமூர்த்தி ஒரு பக்கம் இந்த திருமணத்தை எப்படி நிறுத்தலாம் என்று சிந்தித்து கொண்டு இருக்க.

 

ஷைலஜாவும், விசாலாட்சியும் ஒரு பக்கம் இந்த திருமணத்தை நிறுத்த தங்களால் முடிந்த சூழ்ச்சியை செய்து கொண்டு இருந்தனர்.

 

இவர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி கயல்விழியின் வாழ்க்கை தடம் மாறுமா..? அல்லது, அபிமன்யுவுடன் திருமணம் இனிதே நடைபெறுமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5