அவனதிகாரம் - 34

 

அதிகாரம் – 34

 

வீட்டிற்குள் நுழைந்ததும் அபிமன்யு யாழினியை கண்டு கொள்ளாமல் அவனின் அறையை நோக்கி சென்றுவிட. யாழினி அவன் சென்றதை கூட அறியாமல் சுற்றும் முற்றும் வீட்டையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

வாசலில் இருந்து வீட்டிற்குள் வருவதற்கு எப்படியும் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு  இரு புறங்களிலும் புல்வெளிகளும், பூச்செடிகளும் அமைக்கப்பட்டிருக்க. நடுவே கற்களை கொண்டு பாதை அமைக்கப்பட்டு இருந்தது.

 

வாசலில் இருந்து வீட்டிற்குள் செல்லவே யாழினிக்கு மனம் வரவில்லை. அந்த அளவிற்கு அந்த தோட்டத்திலேயே அவளின் மனம் லயித்திருந்தது. எவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்திருப்பாளோ அவளுக்கே தெரியாது.

 

தான் திருமணம் ஆகி இங்கே வந்திருக்கிறோம் என்பதையே மறந்து விட்டு, அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே இருந்த பூச்செடிகளில் பூத்துக் குலுங்கி கொண்டிருந்த பூக்களை தொட்டுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

பூச்செடிகளுக்கு நடுவிலே கண்ணாடியால் தயார் செய்யப்பட்டிருந்த ஊஞ்சல் அவளின் கண்ணை பறித்தது. இரு பக்கமும் சங்கிலி கொடுத்து அமர்வதற்கு கண்ணாடியால் ஆன பலகை போல் அமைப்பில் அமைத்திருந்தது.

 

அது அபிமன்யுவின் ரசனைக்கேற்ப பிரத்தியேகமாக தயார் செய்திருந்தான். அந்த ஊஞ்சல் யாழினிக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆசையாக ஓடிப்போய் அதில் அமரப்போனவளை தனது அறையின் பால்கனையில் இருந்து பார்த்த அபிமன்யு, ஹேய்..! என்று கோபமாக குரல் கொடுத்தான்.

 

அதில், ஊஞ்சலில் ஏறப்போனவள் கால் இடறி கீழே விழ, விழுந்த வேகத்தில் நிமிர்ந்து மாடியை பார்த்தாள். அங்கே அபிமன்யு நின்று கொண்டிருப்பது மட்டுமே தெரிந்தது.

 

அவனின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை. அவன் கோபமாக தான் இருக்கிறான் என்று முடிவு செய்த யாழினி திரும்பி பார்க்காமல் வீட்டினுள் ஓடி மறைந்தாள்.

 

இவளின் செயலால் அபிமன்யு சிரித்தானா என்று கேட்கும் அளவிற்கு லேசாக அவனின் உதடுகள் தனக்குள் சிரித்துக் கொண்டது.

 

யாழினி தங்கள் வீட்டிற்கு வரப்போகும் இந்த நிமிடத்திற்காக அவன் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறான். கிருஷ்ணமூர்த்தி தன்னால் தான் மணப்பெண் கடத்தப்பட்டுவிட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்க.

 

விசாலாட்சியோ முதல் நாள் இரவு தான் பேசியதின் தாக்கமே மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று ஓடிவிட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்க.

 

இந்த திருமணம் தடைப்பட்டதற்கு காரணமாகிய அபிமன்யுவோ அமைதியாக மணவறையில் அமர்ந்திருந்தான்.

 

ஆம்! இந்த திருமணம் தடைப்பட காரணமே சாட்சாத் நம் அபிமன்யு ஆரியன் தான்...

 

அபிமன்யுவின் குணமறிந்த அவனின் குடும்பத்தார் சீக்கிரம் வீடு வந்து சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தனர்.

 

அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைகையில் யாழினி செய்வதறியாது கைகளை பிசைந்துக் கொண்டு ஹாலின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்தாள். அபிமன்யுவை எங்கும் காணவில்லை.

 

யாழினி அருகில் சென்ற மீரா, என்னம்மா ஏன் இங்கேயே நின்னுகிட்டு இருக்க. ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்ல.

 

அவரின் கேள்வியில் திரும்பிப் பார்த்த யாழினியின் கண்கள் கலங்கி இருப்பதை கண்ட மீரா பதட்டமாக, என்ன ஆச்சு யாழினி. அபி ஏதாவது சொன்னானா?.

 

மொத்த குடும்பமும் தன்னையே பார்ப்பதால் சங்கடமாக உணர்ந்த யாழினி இல்லை என்னும் விதமாக தலையசைத்தாள்.

 

அவளின் சங்கடத்தை புரிந்து கொண்ட மகேந்திரன், மீரா ரூமுக்கு கூப்பிட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லு. பாவம், ரொம்ப டயர்டா தெரியுறா. மத்ததெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் என்று முடித்துவிட்டார்.

 

வள்ளியம்மை பாட்டியோ, அம்மாடி மீரா, புள்ளைங்களுக்கு ஆரத்தி கூட எடுக்கலையே என்றார் கேள்வியாக.

 

அதற்கு மீரா, ஆமா மா. இப்போ அபியை கூப்பிட்டா வருவானானு தெரியலையே. அவன் வேற கோபமா இருக்கான்.

 

அது படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த அபிமன்யுவின் காதில் விழ, மாம், இப்போ என்ன வேணும் உங்களுக்கு... ஆரத்தி தானே எடுக்கணும். தாராளமா எடுங்க.

 

கூறியது அபி தானா என்று அனைவரும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கே அவன் மனம் மாறி விடுமோ என்று எண்ணிய வள்ளியம்மை, மீரா, நான் போய் ஆரத்தி கரைத்து கொண்டு வரேன் என்று கடகடவென சமையலறைக்குள் புகுந்து இரண்டு நிமிடத்தில் ஒரு தட்டில் ஆரத்தி எடுப்பதற்காக தயார் செய்து கொண்டு வந்திருந்தார்.

 

இரண்டு பேரும் வாசலுக்கு வந்து நில்லுங்க என்று அழைத்து சென்ற வள்ளியம்மை அவர்களுக்கு ஆரத்தி எடுக்கலானார். கிருஷ்ணமூர்த்தி பகைமை உணர்வுடன் யாழினியை பார்த்துக் கொண்டிருக்க.

 

விசாலாட்சிக்கும், ஷைலஜாவிற்கும் இந்த காட்சியை பார்க்கவே பிடிக்கவில்லை. விருந்தினர் அறைக்குள் நுழைந்து கொண்டனர்.

 

வலது காலை எடுத்து வச்சு உள்ள வா மா என்று கூறிய வள்ளியம்மை வெளியே சென்று விட.

 

மீரா யாழினி அருகே சென்று அவளை உள் அழைத்து வந்தார். பிறகு, விளக்கேற்ற வைத்து, இருவருக்கும் பாலும், பழமும் கொடுத்து சம்பிரதாயத்தை முடித்தனர். இப்பொழுது, யாழினியை எங்கே தங்க வைப்பது.

 

அபிமன்யுவின் அறைக்கு அனுப்பினால் அவன் ஏதாவது ஏடாகூடமாக யாழினியின் முன்பே கூறிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிய மீரா, ஆரணி, யாழினியை உன்னோட ரூமிற்கு அழைச்சிட்டு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க வை மா. பாவம், ரொம்ப டயர்டா இருக்கா.

 

சரிமா என்ற ஆரணி, யாழினியை அழைத்துக்கொண்டு அவளின் அறைக்கு சென்றுவிட்டாள்.

 

அதுவரை அபிமன்யுவின் அறைக்கு யாழினியை போக வேண்டாம் என்றதும் தான் யாழினிக்கு மூச்சே வந்தது.

 

யாழ் பேபி என்ன ஆச்சு.. ஏன் டல்லா இருக்க என்று கேட்டாள் ஆரணி.

 

அதற்கு, ஒன்னும் இல்லை என்று அவள் தலையசைக்க.

 

என்கிட்ட பேச மாட்டியா.

 

அப்படி எல்லாம் இல்ல ஆரணி.

 

இந்த புதிய உறவை எப்படி எதிர்கொள்வது என்ற அவளின் தயக்கத்தை உணர்ந்த ஆரணி, மண்டபத்தில் இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல. ஆனால், எது மாறி இருந்தாலும். நீ எப்பவுமே எனக்கு யாழ் பேபி தான் என்று கூறி யாழினியை கட்டியணைத்தாள்.

 

யாழினிக்கும் ஆரணியின் வார்த்தைகளை கேட்டு மனம் லேசானது போல் உணர்ந்தாள். புதிய வீடு, புதிய மனிதர்கள் எப்படி எதிர்கொள்வது என்று இருந்த பயம் ஆரணியின் பேச்சில் சற்று மட்டுபட்டது.

 

மேலும், தனக்கு துணையாக ஆரணி இருக்கிறாள் என்று சற்று தைரியமும் வந்தது. ஆனால், யாழினிக்கு தெரியாத ஒன்று, யார் இருந்தாலும் அவளை அபிமன்யுவிடமிருந்து மீட்க முடியாது என்பது.

 

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு சாயந்திர வேளையில் வள்ளியம்மை பாட்டி மீராவிடம், மீரா.. மத்த சம்பிரதாயத்துக்கெல்லாம் ஏற்பாடு பண்ணனுமே என்றார் தயக்கமாக.

 

அவர் என்ன கூற வருகிறார் என்பதை புரிந்து கொண்ட மீரா, நல்ல படியா பேசி வச்சு கல்யாணம் பண்ணி இருந்தா எல்லாம் கரெக்டா செய்யலாம். இப்போ நம்ம சொல்லுறதை கேட்பானானு தெரியலையே. பொண்ணு வீட்டுக்கே போக மாட்டேன்னு கிளம்பி வந்துட்டான். அதுவும் இல்லாம திடிர்னு கல்யாணம் பண்ணதால இரண்டு பேரோட மனநிலையும் எப்படி இருக்குன்னு தெரியல. அவங்களுக்கு கொஞ்சம் நேரம் குடுக்கலாமே.

 

அதுக்காக அப்படியே விட்டுட முடியாதுல்ல. அபிகிட்ட போய் பேசி பாருமா என்றார் வள்ளியம்மை.

 

நான் போய் எப்படிமா... என்று இழுத்தார் மீரா.

 

உன் பையன் கிட்ட நீ பேசாம வேற யாரு பேசுவா என்றார் வள்ளியம்மை பதிலிற்கு.

 

நீங்க போய் கேளுங்கம்மா என்று வள்ளியம்மையை அனுப்பி வைத்துவிட்டார் மீரா.

 

இவன்கிட்ட எப்படி கேட்கிறது என்று யோசித்துக் கொண்டே சென்று கதவை தட்டவும், எந்த சலனமும் இன்றி அமைதியாகவே கதவை திறந்தான்.

 

அபி உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் தயங்கியபடி.

 

எதுவா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க பாட்டி. எனக்கு டைம் இல்லை.

 

சடங்குக்கு ரெடி பண்ணனும் என்றார் தயக்கமாக.

 

உங்க இஷ்டபடியே பண்ணுங்க என்று விட்டு கதவை அடைத்துவிட்டான்.

 

வள்ளியம்மைக்கு தான் கேட்டது நிஜம் தானா என்று ஒன்றும் புரியாமல் தன் கையையே கிள்ளி பார்த்தவர், ஸ்ஸ்.. உண்மை தான். அங்க பொண்ணு வீட்டுக்கு போக முடியாதுனு அடம் பிடிச்சி வந்தான். இப்போ எல்லாத்துக்கும் சரினு சொல்றான். இதுக்கு பின்னாடி எந்த சூழ்ச்சியும் இருக்கக்கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு கீழே இறங்கி வந்தார்.

 

மீரா, என்ன மா என்ன ஆச்சு. அபி என்ன சொன்னான் என்று விசாரித்தார்.

 

சம்மதம்னு சொல்லிட்டான்.. என்று சந்தேகமாக இழுத்த வள்ளியம்மையை மீரா கண்டுகொள்ளவே இல்லை.

 

மீராவிற்கு பெரும் மகிழ்ச்சி, சரிமா. அப்போ இன்னைக்கு நல்ல நேரம் பார்த்து ரெடி பண்ணிடலாம். நம்ம ஜோசியருக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.

 

இதோ கேட்டு சொல்றேன் என்ற வள்ளியம்மை பாட்டி தங்கள் குடும்ப ஜோசியருக்கு போனின் மூலம் விஷயத்தை கூற, அவரும் நல்ல நேரத்தை குறித்துக் கொடுத்தார்.

 

இன்னைக்கு ராத்திரி 11:30ல இருந்து 1 மணி வரைக்கும் நல்ல நேரம்னு ஜோசியர் குறித்து கொடுத்திருக்கார் மீரா.

 

ஆனாலும், வள்ளியம்மை பாட்டிக்கு உள்ளுக்குள் திக் திக் என்று தான் இருந்தது. அபிமன்யு இப்படி சாதாரணமாக பேசுபவன் கிடையாது. அதுவும் எதிர்பாராத திருமணம் வேறு. ஆகையால், அவருக்கு சந்தேகமாகவே இருந்தது.

 

சரிமா, அப்போ இன்னைக்கே ரெடி பண்ணிடலாம் என்று மகிழ்ச்சியாக கூறிய மீரா.

 

மணி இப்போவே ஏழு ஆகுது. நான் போய் யாழினியை ரெடி பண்றேன். நீங்க ரூமை டெக்ரேசன் பண்றதுக்கு ஆரியன் கிட்ட சொல்லிடுங்க என்று கூறி ஆரணியின் அறை நோக்கி நகர்ந்தார்.

 

இவர் உள்ளே நுழைகையில் யாழினியும், ஆரணியும் நன்கு உறக்கத்தில் இருந்தனர். யாழினிக்கு இன்றைய சம்பவத்தின் தாக்கத்தில் படுத்தவுடன் உறக்கம் வரவில்லை.

 

வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்தவள். அரை மணி நேரத்திற்கு முன்பு தான் தன்னையும் மீறி கண்ணயர்ந்தாள். மீரா விளக்கை ஒளிரவிட்டும் இருவரிடமும் சிறு அசைவு கூட இல்லாமல் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்து, ஆரணிக்கு ஏத்த ஜோடி தான் கிடைச்சிருக்கு என்று சிரித்துக் கொண்டே முணுமுணுத்தபடி ஆரணியை எழுப்பினார்.

 

அதற்கு ஆரணியோ தூக்க கலக்கத்தில், என்ன மா... அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா.

 

இப்போ தான் சாயந்திரம் ஆகுது. அதுக்குள்ள விடிஞ்சிடுச்சானு கேக்குற. இன்னும் ராத்திரியே ஆகல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொன்னா, இப்படித்தான் விளக்கு வைக்கிற நேரம் வரைக்கும் தூங்குறதா. எழுந்து போ. பாட்டி உன்னை கூப்பிடுறாங்க.

 

சரி விடு, அப்படியே தூங்கி காலையில் எழுந்திடுறேன் என்று கூறி புரண்டு படுத்தாள் ஆரணி. அவளின் முதுகில் இரண்டு போட்டு எழுப்பி அனுப்பினார் மீரா.

 

இந்த உரையாடலில் யாழினி எழுந்து அமர்ந்து கண்களை கசக்கி கொண்டிருக்க, என்ன டா ரிலாக்ஸா இருக்கா என்று கேட்டார் மீரா.

 

ம்ம்... என்று லேசாக தலையை ஆட்டினாள் யாழினி தூக்க கலக்கத்தில்.

 

சரி மா, எழுந்திரிச்சு போய் குளிச்சிட்டு வா. இந்த புடவையை கட்டி விடுறேன்.

 

இப்போவா.

 

ஆமா இப்போ தான்.

 

இப்போ எதுக்கு அத்தை. தூங்க தானே போறோம். காலையில் குளிச்சுக்குறேனே.

 

இவளிடம் எப்படி தயாராக சொல்வது என்று எண்ணிய மீரா, நம்ம ஜோசியர்கிட்ட கேட்டோம். இன்னைக்கு நைட்டு நல்ல நேரம் குறிச்சு கொடுத்திருக்காங்கமா. உனக்கும், அபிக்கும் இன்னைக்கு முதலிரவு ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று கூறி யாழினியின் தலையில் குண்டை போட்டார்‌.

 

அபிமன்யு கோபமாக இருப்பதால் எப்படியும் தன்னை சிறிது காலம் அவனின் அறைக்கு செல்ல  விடமாட்டார்கள் என்று எண்ணிய யாழினிக்கு, மீராவின் பதில் பெரும் இடியாக விழுந்தது.

 

அவளின் அதிர்ச்சியான முகத்தை பார்த்த மீரா, என்ன ஆச்சு யாழினி.

 

ஒ.. ஒன்னும்.. இல்ல.. அத்தை என்று தட்டு தடுமாறி ஒருவாறு சமாளித்தாள் யாழினி.

 

பிறகு, அவள் சென்று குளித்து வரவும், அவளிற்கு அழகான பட்டுப் புடவையை கட்டிவிட்டு மிதமான அலங்காரத்தில் தயார் செய்தார் மீரா.

 

பார்ப்பதற்கு அந்த மிதமான அலங்காரத்திலும் அழகு சிலை போல் இருந்த யாழினிக்கு, என் கண்ணே பட்டுடும் போலருக்கு யாழினி என்று கூறி சிரித்த முகமாக திருஷ்டி கழித்தார்.

 

வெளியே சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது யாழினிக்கு. தன்னை கண்டாலே எரிந்து விழும் அபிமன்யுவை இப்போது எப்படி தனியே எதிர்கொள்வது.

 

சிங்கத்தை அதனின் குகைக்குள் சென்று ஹாய் சொல்லிவிட்டு வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது யாழினிக்கு. ஐயோ கடவுளே நான் தெரியாம பேசிட்டேன். பன்னிரெண்டாவது முடிச்சதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் பேசினது எல்லாம் தப்பு தான். என்னை மன்னிச்சிடு. எப்படியாவது நடந்தது எல்லாம் ஒரு கனவா மாறி கலையனும் என்று தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டே இருந்தாள்.

 

உண்மையை ஏற்றுக்கொள்ள அவளின் மனது முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தது. நடந்ததை மாற்ற முடியாது. இனி, நடக்கப் போவதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு தான் தயாராக வேண்டும் என்பதை அறியாத பேதை மனம் பிதற்றிக் கொண்டு இருந்தது.

 

தன் அறைக்குள் நுழைந்த ஆரணி, வாவ் யாழ்.. சூப்பர்! என்னம்மா இன்னும் ஏதாவது ஃபங்ஷன் பண்ண வேண்டியது இருக்கா. என்கிட்ட சொல்லவே இல்லையே. நானும் ரெடி ஆகி இருப்பேன்ல என்று கோபித்துக் கொண்டாள்.

 

இவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று நினைத்த மீரா, நீ போய் தூங்கு ஆரணி. ஒன்னும் இல்லை சாமி கும்பிட வைக்க போறோம் அவ்வளவு தான் என்று மேற்கொண்டு எதுவும் கூறாமல் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

 

இவர்கள் தயாராகி வருவதற்குள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரைவில் உண்டுவிட்டு அவரவர் அறைக்கு படுக்க சென்று விட்டனர்.

 

அதுவரை யாழினிக்கு சற்று நிம்மதியாக இருந்தது. யாழினியை அழைத்து சென்று டைனிங் டேபிளில் அமர வைத்து சாப்பாடு பரிமாற.. ஒரு வாய் கூட அவளிற்கு உள்ளே இறங்கவில்லை.

 

தொண்டைக் குழியில் சிக்கி உள்ளே இறங்க மறுத்தது உணவு. அவள் இருந்த படபடப்பில் கையில் இருந்த உணவு தடுமாறுவதை உணர்ந்த வள்ளியம்மை பாட்டி. அவளை சமாதானம் படுத்தும் முயற்சியில் தலையை தடவி கொடுத்தார்.

 

வள்ளியம்மை, குடு மா, நான் ஊட்டி விடுறேன் என்று கூறி, அவளிடம் இருந்த தட்டை தன்னிடம் எடுத்தவர். ஒவ்வொரு வாயாக யாழினிக்கு ஊட்டத் தொடங்கினார்.

 

அவள், போதும் பாட்டி என்று மெலிதாக கூறவும்.

 

அவளின் பதட்டத்தை உணர்ந்த பாட்டி, இன்னும் கொஞ்சம் சாப்பிடு டா. எங்க அக்கா அடிக்கடி சொல்லுவா அவளுக்கு உன்னை தான் ரொம்ப பிடிக்குமாமே என்று ஏதேதோ பேச்சு கொடுத்தபடி யாழினி அறியாமலே அவளிற்கு மொத்த உணவையும் ஊட்டி முடித்தார்.

 

இன்னும் சிறு பிள்ளை குணம் மாறாத யாழினியை நினைத்து சிரித்த பாட்டி. அந்த கோபக்காரனை இவ எப்படி சமாளிக்க போறாளோ என்று மனதிற்குள் பரிதாபமும் பட்டுக் கொண்டார். பிறகு, மீரா யாழினியை அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட வைத்தவர்.

 

அவளை அழைத்து சென்று அபிமன்யுவின் அறை அருகே விட்டுவிட்டு, உள்ள போடா என்று கூறிவிட்டு, தங்கள் அறை நோக்கி நகர்ந்து விட்டார்.

 

வாசலில் நின்ற யாழினிக்கு கால்கள் எல்லாம் கிடு கிடுவென ஆடத் தொடங்கியது. எப்படி உள்ளே போவது. கதவை தட்டிட்டு போகலாமா இல்ல, போனா திட்டுவாரோ என்று பலவாறு யோசித்தவரே அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தாள்.

 

ஒரு வழியாக, சரி கதவை தட்டி பார்ப்போம் என்று கைகளை கதவின் மேல் வைக்க. அந்த நேரம் பார்த்து சரியாக கதவை திறந்த அபிமன்யு, யாழினி நிற்பதைக் கண்டு அவளின் கையைப் பிடித்து உள்ளே இழுத்தான்.

 

இதனை சற்றும் எதிர்பாராத யாழினி தடுமாற்றத்துடன் உள்ளே செல்ல, பல நாட்கள் கழித்து தன் தாயை காணும் பிள்ளையை போல் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அபிமன்யு.

 

அந்த அணைப்பே கூறியது, இனிமேல் உன்னை ஒரு நொடி பொழுது கூட பிரிய விடமாட்டேன் என்று அபிமன்யுவின் செயலால் செய்வதறியாது திகைத்து நின்றாள் பாவை.

 

அபிமன்யுவின் எண்ணம் தான் என்ன...?

 

அபிமன்யு யாழினியின் ராவணனா, ராமனா...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5