அவனதிகாரம் - 39
அதிகாரம் – 39
அனைவரும்
அவரவர் வேலையை பார்க்க கலைந்து சென்றவுடன், கிருஷ்ணமூர்த்தி தாத்தா
வள்ளியம்மையிடம் மரகதம் பாட்டியை பார்த்துக் கொண்டே, “ஏய் வள்ளி, அபி தான் பிடிக்கலைனு சொல்றான்ல. இன்னும் எதுக்காக
இவங்க இங்க இருக்காங்க. கிளம்பி போக சொல்லு” என்று முகத்தில் அடித்தார் போல் கூறினார்.
அதற்கு
வள்ளியம்மை பாட்டி பதில் பேசுவதற்கு முன்பே மரகதம் பாட்டி, “நான் எதுக்குங்க போகணும். இது என் பொண்ணோட
வீடு. பழசெல்லாம்... நீங்க மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். இப்போ நான்
இங்க இருக்கிறது என் பேத்திக்காக. அவளுடைய வாழ்க்கை சரியானதும் நான் இங்க இருந்து
போய்கிட்டே இருப்பேன்” என்று கூறிவிட்டு அறைக்கு
சென்றுவிட்டார்.
கிருஷ்ணமூர்த்தி
வள்ளியம்மையிடம், “பாத்தியா.. எவ்வளவு திமிரா
பேசிட்டு போறாங்கன்னு பாத்தியா.. இதுக்கு தான் இவங்களுடைய உறவே வேண்டாம்னு
சொன்னேன். பொண்ணோட விடாமே... பொண்ணோட வீடு. யாருக்கு யாருடி பொண்ணு” என்று எகிறினார்.
வள்ளியம்மை,
“அவங்க உங்ககிட்ட வந்து இது என்
பொண்ணு வீடுனு உரிமை போராட்டம் நடத்துனாங்களா. நீங்க தான தேவையில்லாம வார்த்தையை
விட்டிங்க. அதான் பதிலுக்கு அவங்களும் பேசிட்டு போறாங்க. இவ்வளவு வயசாகுது இன்னும்
நம்ம மரியாதையை எப்படி காப்பாத்திக்கணும்னு தெரியல” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
‘அபி வரட்டும் உன்னை எப்படி இங்க
இருந்து அனுப்பனும்னு எனக்கு தெரியும்’
என்று மனதிற்குள் கருவிக்கொண்டு அறைக்குள் புகுந்து கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.
அறைக்கு
தரதரவென யாழினியை இழுத்துச் சென்ற அபிமன்யு சட்டென்று கையை விளக்கவும் மெத்தையின்
மேல் சென்று பொத்தென்று விழுந்தாள் யாழினி. அவளுக்கு இதெல்லாம் சற்றும் பழக்கம்
இல்லாத விஷயம்.
அவளுடைய
தந்தை கோபக்காரர் தான். இருந்தாலும், பெண் பிள்ளைகளின் மேல் கையை வைக்கும் பழக்கம்
அவருக்கு கிடையாது. ஏன், தன் அன்னையை கூட அவர் அடித்து யாழினி பார்த்தது இல்லை.
கட்டுப்பாடோடு
வளர்ப்பாரே தவிர, எல்லாம் வாய் வார்த்தையோடு நின்றுவிடும். ஆகையால், அபிமன்யு
அடித்ததும் யாழினி அதிர்ந்துவிட்டாள்.
இனி
தினம் தினம் இது தான் தொடர்கதையாக நடக்குமோ என்ற அச்சமும் தோன்றியது. இப்படி ஒரு
வாழ்க்கை நமக்கு வேண்டுமா என்ற எண்ணமும் தோன்றியது.
அபிமன்யு,
“நான் அவ்வளவு தூரம் சொல்லியும்
உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உன் பாட்டிகிட்ட பேசிகிட்டு இருப்ப” என்று கர்ஜனையாக கேட்டான்.
யாழினிக்கு
வார்த்தைகளே எழவில்லை. அபிமன்யுவின் அதிரடியால் கண்களில் கண்ணீர் கொட்ட
தொடங்கியது.
அபிமன்யு,
“சொல்லுடி, வாயில் என்ன
கொழுக்கட்டையா வச்சு இருக்க. உன்கிட்ட தான கேட்டுக்கிட்டு இருக்கேன். எதுக்கு
அவங்க கிட்ட பேசுன” என்று முறைத்தான்.
யாழினி,
“இ... இல்ல... அக்கா... போன்
பண்ணா... அதான் பாட்டி கொடுத்தாங்க...”
என்று அழுகையினோடு திக்கி திணறி கூறினாள்.
அவளின்
கண்ணீரை பார்க்க முடியாமல், “சரி கிளம்பு”.
‘எங்கே’ என்று புரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தவளை, அவனே
அலமாரியிலிருந்து ஒரு பீச் நிற சல்வாரை எடுத்து நீட்டி, “இதை போட்டுக்கிட்டு கிளம்பு. இன்னும் 10 மினிட்ஸ்ல நீ
ரெடியாகி இருக்கணும்” என்று கூறிவிட்டு கீழே இறங்கி
சென்றுவிட்டான்.
அவசர
அவசரமாக அவன் கொடுத்த கால அவகாசத்திற்குள் தயாராகி கீழே இறங்கி ஓடினாள் யாழினி.
கீழே ஹால் ஷோபாவில் காலின் மேல் கால் இட்டு அமர்ந்திருந்த அபிமன்யுவின் முன்
சென்று நின்றாள் யாழினி.
அவளை
நிமிர்ந்து பார்த்தவன், “குட்” என்று கூறிவிட்டு, வாசலை நோக்கி நடந்தான். யாழினியும் அவனை
பின் தொடர்ந்து செல்ல.
மீரா, “அபி, எங்க கூப்பிட்டு போற யாழினியை?” என்றார் இடைமறித்து.
“மாம், ஷி இஸ் மை வைஃப். நான்
ஒன்னும் இவளை தனியா கூப்பிட்டு போய் கடிச்சு சாப்பிட்டுடமாட்டேன். பயப்படாதீங்க..
இவளை என்கூட ஆஃபீஸ்க்கு தான் கூப்பிட்டு போறேன்”.
மீரா, “ஆஃபீஸ்க்கு எதுக்கு யாழினி?” என்றார் புரியாமல்.
அதற்கு
சலிப்பாக அபிமன்யு, “மாம்... வாட் இஸ் திஸ்.. என்
வைஃபை நான் வெளியில் கூப்பிட்டு போகணும்னா கூட ஏன், எதுக்கு, எப்படி, எல்லாம்
உங்ககிட்ட சொல்லிட்டு தான் நான் போகணுமா. ஐ டோன்ட் ஹேவ் எனி ரைட்ஸ் டு டேக் ஹர்
அவுட்” என்று கூறியவன். “கம் லெட்ஸ் கோ” என்று யாழினியைப் பார்த்து கூறிவிட்டு வெளியேறினான்.
யாழினி
யாரிடமும் எதுவும் கூறாமல் அவன் கூறுவதை கேட்கும் நாய்க்குட்டி போல் அவனின்
பின்னோடு ஓடினாள்.
மீராவின்
அருகில் வந்த வள்ளியம்மை பாட்டி, “என்ன
மீரா, எங்க யாழினியை கூப்பிட்டு போறான். சாப்பிட கூட இல்லை”.
“ஆஃபீஸ்க்கு கூப்பிட்டு போறானாம்
மா. ரெண்டு பேரும் சாப்பிட கூட இல்லை”
என்று வருத்தமாக கூறிவிட்டு சமையல் அறைக்கு சென்றுவிட்டார் மீரா.
இங்கே
நடந்தவற்றையெல்லாம் பார்த்த ஆரணி ஆரியனிடம், “அபி அண்ணா பண்றது கொஞ்சம் கூட சரியில்ல ஆரி. ஏன் இப்படி
எல்லாம் கோவமா நடந்துக்குறாங்க. யாழினியோட அக்கா பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா
பாவம்”.
ஆரியன்,
“அபி அண்ணா எது பண்ணாலும் சரியா
தான் இருக்கும். ஆனா, இந்த விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக்கிறாங்கன்னு எனக்கும்
ஒன்னும் புரியல ஆரணி”.
“ஆரி நீயும், நானும் ஆபீஸ்க்கு
போய் அபி அண்ணா கிட்ட பேசி பார்ப்போமா”.
“நோ வே. அதுவும் ஆபீஸ்ல அண்ணா
டென்ஷனா இருப்பாங்க. அண்ணாகிட்ட ஆபீஸ்ல போய் பேசவே முடியாது. சான்சே இல்ல.
வீட்டுக்கு வந்த அப்புறம் வேணும்னா பேசி பார்க்கலாம்”.
“அதான் ஆரி எனக்கும் பயமா இருக்கு.
வீட்டிலேயே யாழினி கிட்ட இவ்வளவு கோபப்படுறாங்க. ஆபீஸ்ல டென்ஷனா வேற இருப்பாங்க.
அந்த பிரஷர்ல யாழினி கிட்ட இன்னும் ரூடா நடந்துப்பாங்களோன்னு பயமா இருக்குடா”.
“அப்படியெல்லாம் நடக்காது ஆரணி.
இன்னைக்கு ஒன் டே மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நைட் அண்ணா வந்ததும் அவங்க மூடு
சரியா இருக்கான்னு பார்த்துட்டு நாம பேசலாம்”.
ஆஃபீஸிற்கு
யாழினியை அழைத்து சென்றவன். அனைவரிடமும் தன்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்தான்.
பிறகு, அவனுடைய அறையிலேயே அவளிற்கும் ஒரு சேர், சிஸ்டம் அமைத்துக் கொடுத்து
தன்னுடனே தங்க வைத்துக் கொண்டான்.
இவன்
ஆஃபீஸ் வேலைகளை பார்க்க, அவளோ என்ன செய்வது என்று புரியாமல் திருதிருவென
அமர்ந்திருப்பாள். சிறிது நேரம் சிஸ்டமில் கேம் விளையாடுபவள், நேரம் போகாமல்
கடிகாரத்தையே பார்த்து பார்த்து நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு இரவு அபியுடன்
சேர்ந்து வீட்டிற்கு வருவாள்.
இதையே
வழக்கமாக்கிக் கொண்டான் அபிமன்யு. ஏனெனில், வீட்டில் யாழினியை தனியாக விட்டு
சென்றாள், அவள் மேலும் அவளின் பாட்டியுடன் பேசிக்கொண்டே இருப்பாள்.
அவர்களிடமிருந்து இவளை பிரிக்க முடியாது என்று எண்ணியவன், யாழினியை அவனுடன்
அழைத்து செல்வதை வழக்கமாக்கி கொண்டான்.
இப்படியே
நான்கு நாட்கள் செல்ல. அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் செல்லும் வேலை இல்லாததால்
அபிமன்யு வீட்டிலேயே இருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதை கூட மறந்த யாழினி வழக்கம்
போல் காலையில் சீக்கிரம் எழுந்து அவனுடன் செல்வதற்காக தயாராகி கீழே வந்தாள்.
ஆனால்,
அபியோ சாதாரண உடையில் அமர்ந்து நியூஸ் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்தான். அவன்
அருகில் தயாராக சென்று நின்றவர்களை விழி விரிய பார்த்தவன், “குட்” என்று சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, “இன்னைக்கு சண்டே. சோ, ஆஃபீஸ் போற வேலை
இல்லை”.
யாழினிக்கு
‘அப்பாடா’ என்று நிம்மதியாக இருந்தாலும், இவனின் முன்பு அதை காட்ட
முடியாது என்று எந்த ஒரு ரியாக்ஷ்னையும் காட்டாமல் அமைதியாக நின்றாள்.
“என்ன நின்னுகிட்டே இருக்க போ”.
‘சரி’ என்னும் விதமாக தலையை அசைத்தவள், பசிக்கவும் டைனிங் டேபிளில்
சென்று அமர்ந்தாள். யாழினி வீட்டில் உள்ளவர்களுடன் பேசி நான்கு நாட்கள் ஆகிறது.
இவளையும்
சேர்த்து அலுவலகம் அழைத்து செல்ல ஆரம்பித்தில் இருந்து உணவு கூட வெளியிலேயே
உண்பதனால் வீட்டில் உள்ளவர்களிடம் பேச நேரம் கூட கிடைக்கவில்லை யாழினிக்கு.
அவ்வளவு
ஏன், இந்த நான்கு நாட்களில் அவளின் பேச்சே குறைந்துவிட்டது. டைனிங் டேபிளில்
யாழினியை பார்த்ததும் ஆரணிக்கு குஷி ஆகி போக.
யாழினி
அருகில் வந்து அமர்ந்தவள், “ஹே யாழ் பேபி, எவ்வளவு நாளாச்சு
உன்கிட்ட பேசி. என்ன இன்னைக்கு ஹிட்லர் உனக்கு லீவ் விட்டுட்டாரா” என்று கிசுகிசுப்பாக யாழினியின் காதில்
கேட்டாள்.
இவள்
கூறியதை கேட்ட யாழினிக்கு தூக்கி வாரி போட்டது. எங்கே அபியின் காதில் ஏதேனும்
விழுந்து விடுமோ என்று சட்டென்று திரும்பி அவனை பார்க்க. அவள் பேசியதை அறியாதவன்
பேப்பரில் உன்னிப்பாக எதையோ படித்துக் கொண்டிருந்தான்.
பிறகு,
நிம்மதி பெருமூச்சுவிட்டு திரும்பினாள். அவளை பார்த்த ஆரணி, “என்ன யாழினி ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற”.
அதற்கு
மெலிதாக, “ஒன்னும் இல்ல”.
பிறகு,
மீரா யாழினியை டைனிங் ஹாலில் பார்த்தவர். அவள் அருகில் வந்து, “சாப்பிடுறியாமா?”.
“ம்ம்” என்று தலை அசைத்தாள் யாழினி.
அவர்
பூரி கிழங்கை தட்டில் வைத்ததும் வேறு எதுவும் பேசாமல் அமைதியாக உண்டவள், கை கழுவி
விட்டு அறைக்கு சென்றுவிட்டாள்.
பொதுவாக
தொண தொணத்துக் கொண்டும், வாயாடிக் கொண்டும் சுற்றிக்கொண்டு இருந்த யாழினியை
பார்த்த மரகதம் பாட்டிக்கு அவளின் இந்த பரிமானம் புதிதாக இருந்தது.
யாரிடமும்
எதுவும் பேசாமல் அமைதியாக அறையை நோக்கி செல்லும் யாழினியை சற்று நேரம் உற்றுப்
பார்த்த அபிமன்யுவை கிருஷ்ணமூர்த்தியின் குரல் கலைத்தது.
“கொஞ்சம் உள்ள வா அபி” என்று கூறிவிட்டு தன் சக்கர நாற்காலியை
சுழற்றிக்கொண்டு அறையனுள் சென்று மறைந்தார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியை
பின் தொடர்ந்து சென்ற அபிமன்யு, “என்ன தாத்தா”.
கிருஷ்ணமூர்த்தி,
“அபி உனக்கு தான் அந்த பொண்ணையும்,
அவ குடும்பத்தையும் பிடிக்கலைல. அப்புறம் எதுக்கு இன்னும் இங்க வச்சுக்கிட்டு
இருக்க. அந்த பொண்ணு இங்க இருக்க வரைக்கும் அவளோட பாட்டியும் இங்கிருந்து போக
மாட்டாங்க. அதனால ரெண்டு பேரையும் முதலில் இங்க இருந்து அனுப்பி விடு” என்றார் எரிச்சலாக.
“ஏன் தாத்தா. என்ன ஆச்சு?”.
“என்ன அபி இப்படி கேட்குற. நம்ம
எதுக்காக இந்த கல்யாணத்தை பண்ணோம். மீரா கிட்ட அவங்க குடும்பத்தில் இருக்குறவங்க
எந்த பொய்யும் சொல்லக்கூடாதுன்னு தான. அதான் கல்யாணம் ஆயிடுச்சுல்ல போதும் அபி.
அந்த பொண்ண அவங்க வீட்டுக்கு அனுப்பி விடு.
கூடவே
அவங்க பாட்டியும் கிளம்பிடுவாங்க. கல்யாணம் ஆன புது பொண்ணு வாழா வெட்டியா அவங்க
வீட்டிலேயே இருந்தா தான், ஒரு பொண்ணோட வாழ்க்கை எவ்வளவு முக்கியம்னு அவங்களுக்கு
புரியும். பெத்த பொண்ணோட வாழ்க்கை முக்கியம் இல்லைனு தூக்கிப் போட்டவங்களுக்கு,
இந்த பொண்ணு தினம் தினம் அவங்க வீட்டில் இருக்குறதை பார்க்கும் போது மனசு
வலிக்கனும் அபி” என்றார் குரூரமாக.
இவர்
கூறுவதை கேட்டு அபி சத்தமாக சிரிக்க, அவனை புரியாமல் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி.
‘என்ன இவனுக்கு கிறுக்கு ஏதாவது
புடிச்சி போச்சா சம்பந்தமில்லாமல் சிரிக்கிறான்’ என்று மனதினுள் எண்ணியவர்.
“என்ன அபி, நான் எவ்வளவு
முக்கியமான விஷயம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ சிரிக்கிற” என்றார்.
அபிமன்யு
சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு, “பின்ன என்ன தாத்தா. சிரிக்காமல்
வேற என்ன பண்ண சொல்றீங்க. நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க. அம்மா கிட்ட
அவங்க எந்த பொய்யும் சொல்ல கூடாதுன்னு நான் அவளை கட்டிக்கிட்டேன்னா. எல்லாம் சரி
தான். ஆனா, அதுக்காக மட்டும் தான் நான் இந்த பொண்ண கல்யாணம் பண்ணேன்னு
நினைச்சீங்களா” என்று கேட்டான்.
கிருஷ்ணமூர்த்தி
இவன் கூறுவதை கேட்டு அதிர்ந்தவர், “பின்ன
வேற... வேற என்ன... வேற எதுக்காக இந்த கல்யாணம் பண்ணி இருக்க” என்றார் தடுமாற்றத்துடன்.
“தாத்தா ஐ லவ் ஹர். ஷீ இஸ் மை
கேர்ள்” என்றான் அசராமல்.
இவன்
கூறுவதை கேட்ட கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு நிமிடம் உலகமே ஸ்தம்பித்தது போல் ஆனது.
அதிர்ச்சியாக,
“என்ன அபி சொல்ற. அவங்க வீட்டு
பொண்ண நீ எப்படி” என்றார் கேள்வியாக.
“ஃபஸ்ட் ஆஃப் ஆல், இவ அவங்க வீட்டு
பொண்ணுன்னு தெரியுறதுக்கு முன்னாடியே நான் அவளை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்
தாத்தா” என்றான்.
கிருஷ்ணமூர்த்தி,
“அபி இதெல்லாம் நமக்கு சரி வராது.
உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா. இவளை போய் லவ் பண்ற” என்றார் கோபமாக.
“தாத்தா இப்போ இவளை லவ் பண்றதால
என்ன பிரச்சனை”.
“நம்ம தகுதிக்கு அவ எல்லாம் ஒரு
ஆளா. உனக்கு ஷைலஜா தான் சரியா இருப்பா. இவளுக்கு டிவோர்ஸ் குடுத்துடலாம்” என்றார் கராராக.
“ப்ளீஸ் ஸ்டாப் இட்... எனக்கு இவளை
தான் பிடிச்சிருக்கு. இனிமே, இதை பத்தி பேச வேண்டாம்” என்று கூறிவிட்டு வெளியேற சென்றவனை.
“ஒரு நிமிஷம் நில்லு அபி” என்ற கிருஷ்ணமூர்த்தியின் வார்த்தை
தடுத்தது.
‘என்ன’ என்னும் விதமாக திரும்பி பார்த்தவனிடம், “உனக்கு எப்படி இந்த பொண்ண முதலிலேயே
தெரியும்” என்று யோசனையாக கேட்டார்.
யாழினியை
பற்றி கேட்ட உடனே அபியின் முகம் பிரகாசம் அடைவதை கவனித்த கிருஷ்ணமூர்த்திக்கு
உள்ளுக்குள் திக் திக் என்று இருந்தது. அபியின் மனக்கண்னின் முன்னே யாழினியை முதல்
முறை சந்தித்தது முதல் இவனின் மனதிற்குள் அவள் நுழைந்தது வரை படம் போல் காட்சி
அளித்தது.
“அது வந்து தாத்தா...” என்று இழுத்தவனை புதிதாக பார்ப்பது போல்
பார்த்தார்.
இந்த
அபிமன்யு புதியவன்.
இதுவரை
அனைவரையும் திட்டி, அதிகாரம் செய்பவனை பார்த்த கிருஷ்ணமூர்த்திக்கு, இப்படி அசடு
வழிந்தபடி பேச தயங்கி நிற்கும் அபிமன்யு புதிதாக தெரிந்தான்.
கிருஷ்ணமூர்த்திக்கோ
இதுவரை தன் சொல் பேச்சை மீறாத அபிமன்யு இப்படி பேசியதைக் கேட்க திகைப்பாக
இருந்தது. இவ்வளவு காலங்களாக எது நடக்கக்கூடாது என்று பயந்தாரோ அது விரைவில்
நடந்து விடுமோ என்ற அச்சமும் தோன்றியது.
கிருஷ்ணமூர்த்தி,
‘இதை இப்படியே விடக்கூடாது.
எப்படியாவது அந்த பொண்ண இங்க இருந்து அனுப்பனும். அப்போ தான் அபி பழையபடி நம்ம
பேச்சை கேட்பான்’ என்று எண்ணியவர் அடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை
யோசிக்கலானார்.
“உங்களுக்கு யாழினியை பார்த்தா
என்ன தோணுது தாத்தா” என்று கேட்டான் அபிமன்யு.
‘இவ ஏன்டா இங்க இருக்கான்னு தான்
எனக்கு தோணுது. அதை எப்படி இப்போ இவன்கிட்ட சொல்ல முடியும்’ என்று எண்ணியவர்.
“எனக்கு ஒன்னும் தோணல” என்றார்.
இவர்களின்
உரையாடல் இங்கே நடந்து கொண்டிருக்க. அங்கே யாழினியின் அறைக்குள் நுழைந்தார் மரகதம்
பாட்டி. யாழினி தனியாக பால்கனியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவளின் அருகில்
சென்றவர்.
“யாழினி” என்று அவளின் தோளில் கையை வைத்தார்.
திரும்பி
மரகதம் பாட்டியைப் பார்த்த யாழினி பதறிவிட்டாள். இப்போது என்ன செய்ய வேண்டும்.
இவரிடம் பேசுவதா வேண்டாமா.. பேசுவது அபிக்கு தெரிந்தால் அவன் மீண்டும் என்ன
செய்வானோ என்று எண்ணிய யாழினிக்கு வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை.
மரகதம்
பாட்டி, “பாட்டிகிட்ட பேச மாட்டியா” என்றார் ஏக்கமாக.
யாழினி
பதட்டமாக வாசலையும், மரகதம் பாட்டியையும் மாற்றி மாற்றி பார்ப்பதை பார்த்த மரகதம்
பாட்டிக்கு அவள் எதை நினைத்து பயப்படுகிறாள் என்பது புரிந்தது.
யாழினியின்
கையைப் பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்து சென்றவர், “உன் வீட்டுக்காரர் என்கிட்ட பேசக் கூடாதுன்னு சொல்லிட்டா, நீ
என்கிட்ட பேச மாட்டியா யாழினி”.
அதற்கு
எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாக தரையை பார்த்துக்கொண்டு நின்றாள் யாழினி.
அபிமன்யுவின்
மனதிற்குள் யாழினி எப்படி நுழைந்து இருப்பாள்...?
கிருஷ்ணமூர்த்தியின்
எண்ணம் நிறைவேறுமா…?
கருத்துகள்
கருத்துரையிடுக