அவனதிகாரம் - 43
அதிகாரம் – 43
சற்று
நேரத்திற்கு முன்பு யாழினி, “யார் நீங்க? விடுங்க.. விடுங்க..” என்று கத்தியபடி முகமூடி போட்ட இருவரால்
கடத்தி காரில் ஏற்றப்பட்டாள்.
யாழினி,
“யார் நீங்க? உங்களுக்கு என்ன
வேணும்? எதுக்காக என்னை இப்படி கூப்பிட்டுகிட்டு போறீங்க விடுங்க” என்று விடாமல் கத்திக் கொண்டே இருந்தாள்.
ஆரியன்
தன் முகமூடியை கழட்டியவாறு, “ச்ச... ச்ச.. ச்ச... என்ன சும்மா
கத்திக்கிட்டே வர. கொஞ்ச நேரம் கூட உன் வாய்க்கு ரெஸ்ட் கொடுக்க மாட்டியா. எப்படி
தான் என் அண்ணன் உன்னை சமாளிக்கிறானோ”
என்று சலிப்பாக கூறினான்.
யாழினி,
“ஹே நீ எதுக்கு இப்படி
கொள்ளைக்காரன் மாதிரி என்னை காரில் ஏத்தி கூப்பிட்டு போற” என்றாள் கோபமாக.
“பேபி.. பேபி.. அண்ணாவுக்கும்
இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் என்னோட பிளான் தான்” என்று கெத்தாக கூறிக் கொண்டே முகமூடியை
கழட்டினாள் ஆரணி.
இருவரையும்
வாயை பொத்தியவாறு ஷாக்காக பார்த்த யாழினியிடம் ஆரணி, “என்ன யாழ் பேபி, யாரோ உன்னை கடத்திட்டு போறாங்கன்னு ரொம்ப
பயந்துட்டியா” என்றாள் சிரித்துக் கொண்டே.
“இப்போ இருக்குற பிரச்சனை
பத்தாதுன்னு நீங்க வேற ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க” என்றாள் வருத்தமாக.
ஆரியன்,
“இப்போ என்ன நடந்திடுச்சின்னு
இப்படி வாழ்க்கையே வெறுத்த மாதிரி பேசுற”.
யாழினி
எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்து இருந்தாள்.
ஆரணி, “உன் மனசுல என்ன இருக்குனு சொல்லு யாழ்.
சொன்னா தானே எங்களுக்கு தெரியும். ஃபர்ஸ்ட் டைம் உன்னை பார்க்கும் போது எவ்வளவு
ஜாலியா பேசுன. இப்போ நீ இப்படி உம்முன்னு இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றாள் வருத்தமாக.
அதற்கும்
வாயை திறக்காமல் அமர்ந்திருந்தாள் யாழினி. கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேல்
இருவரும் மாறி மாறி சமாதானப்படுத்தி அவளை ஒரு வழியாக பேச வைத்தனர். இவர்களின்
சமாதான வார்த்தைகளில் யாழினிக்கு கண்களில் கண்ணீர் ஊற்றென பெருக்கெடுக்க
தொடங்கியது.
ஆரணி, “இங்க பாரு யாழ் அழாத. எல்லாம் சீக்கிரமே
சரியாயிடும்”.
யாழினி
மூக்கை உறிஞ்சியபடி அழுகையினோடு, “அதெல்லாம்
இனிமே எதுவுமே சரியாகாது ஆரணி. எல்லாமே முடிஞ்சு போச்சு” என்று தேம்பி தேம்பி அழுதாள்.
ஆரணி
கோபமாக, “யார் சொன்னா எல்லாம் முடிஞ்சு
போச்சுனு. அதெல்லாம் எதுவும் முடியல. அண்ணா கொஞ்சம் கோவக்காரர் தான் நான் இல்லைனு
சொல்லல. ஆனா சீக்கிரமே உன்னை புரிஞ்சுப்பாரு பாரு”.
“இல்ல ஆரணி. அவருக்கு என்னை
சுத்தமா பிடிக்கல. எங்க ஃபேமிலியை பழிவாங்க தான் என்னை கல்யாணம் பண்ணி
இருக்குறாராம் தெரியுமா” என்றாள்.
இவளின்
பேச்சில் குழப்பமாக இது என்னடா புது கதையா இருக்கு என்று இருவரும் இவளை பார்க்க
ஆரியன், “என்ன சொல்ற யாழினி, பழிவாங்கவா..
எதுக்கு?”.
யாழினி
பழைய கதைகள் மொத்தத்தையும் கூறியவள், “எங்க
வீட்ல இருக்கவங்களை கஷ்டப்படுத்த தான் என்னை கல்யாணம் பண்ணி இருக்காங்க உங்க
அண்ணன். அப்புறம் எப்படி என்னை நல்லா பார்த்துப்பாங்கனு சொல்றீங்க. எனக்கு இங்க
இருக்கவே பயமா இருக்கு”.
இவள்
கூறும் விஷயம் இவர்களுக்கே புதியது.
ஆரணி
அதிர்ச்சியாக, “நீ சொல்றதெல்லாம் உண்மையா...
யாருமே என்கிட்ட இதை பத்தி சொல்லலையே”.
யாழினி,
“இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.
உங்க அண்ணனுக்கு மட்டும் தான் தெரியும் “.
ஆரியன்,
“அப்போ தாத்தா சொன்னதெல்லாம்
பொய்னு தெரிஞ்சா அண்ணன் மாறிடுவார் யாழினி”.
யாழினி,
“அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்.
உங்க தாத்தா சொன்னது பொய்னு அவரே சொன்னா தான் உங்க அண்ணன் நம்புவார். மத்த யாரு
சொன்னாலும் நம்ப மாட்டார்”.
ஆரணி, “இவ்வளவு நாள் விஷயம் என்னனு தெரியாம
குழம்பி இருந்தோம். இப்போ தான் என்ன விஷயம்னு தெரிஞ்சிருச்சில்ல. நீ அழாத,
சீக்கிரமே நாம சரி பண்ணிடலாம். இனிமே நீ அழவே கூடாது. சும்மா உம்முன்னு சுத்தி
சுத்தி வருவதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல. எனக்கு என்னோட பழைய யாழ் பேபி தான்
வேணும். அவளை தான் எனக்கு பிடிக்கும்”.
யாழினி
மௌனமாக அமர்ந்திருந்தாள்.
மீண்டும்
தொடர்ந்த ஆரணி, “சரி உங்க அப்பாவுக்கு தெரியாம
ஏதாவது திருட்டு வேலை எல்லாம் செஞ்சிருக்கியா”.
தன்
குடும்பத்தினரைப் பற்றி கேட்டதும் யாழினி குஷியாக, “அதெல்லாம் நிறையா செஞ்சிருக்கேன்”.
ஆரணி, “உங்க அப்பா மேலயும் உனக்கு பயம் தான. ஆனா,
அவருக்கு பயந்துகிட்டு அவருக்கு பிடிக்காத விஷயத்தை நீ செய்யாமல் இல்லையே..
அவருக்கு தெரியாம மறைமுகமாக செஞ்சிருக்க தான. அதே மாதிரி இனிமே எங்க அண்ணன் கிட்ட
ஃபாலோ பண்ணு. அண்ணன் முன்னாடி பேசாத மாதிரி இருந்துட்டு, அவருக்கு தெரியாம பேசு.
தட்ஸ் ஆல்”.
யாழினி
யோசனையாக, “அதெல்லாம் சரி வருமா
மாட்டிக்கிட்டா..”.
ஆரணி, “எல்லாம் சரி வரும். இப்போ நீ தனி ஆள்
இல்ல. உனக்கு ஹெல்ப் பண்ண நாங்களும் இருக்கோம்” என்றாள்.
ஆரியனை
பார்த்து, “என்னடா அண்ணா ஓகே தான”.
ஆரியன்,
“டபுள் ஓகே. நாங்க இருக்கும் போது
நீ எதுக்கு யாழினி கவலைப்படுற. பாத்துக்கலாம் விடு” என்று தெம்பூட்டினான்.
ஒரு
வழியாக யாழினி பெரும் குழப்பத்திலிருந்து வெளிவந்தவள் பழையபடி கலகலவென மாறினாள்.
பிறகு, மூவரும் சேர்ந்து சிறிது நேரம் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு
திரும்பினர்.
வீட்டினுள்
யாருக்கும் தெரியாமல் நுழையும் பொழுது தான் அபிமன்யுவிடம் மாட்டிக் கொண்டனர்.
ஒவ்வொரு நேரம் அன்பாகவும், ஒவ்வொரு நேரம் கோபமாகவும் இருக்கும் அபிமன்யுவை
யாழினியால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இது
அனைத்தையும் யோசித்தபடி யாழினி காலை காபியை தோட்டத்தில் அமர்ந்து அருந்திக்
கொண்டிருந்தாள். அருகில் ஏதோ பேச்சு சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள். அங்கே
மீராவும், அபிமன்யுவும் பேசிக் கொண்டிருப்பதை கண்டாள்.
அபிமன்யு,
“மாம், என்ன ஆச்சு உங்களுக்கு. ஏன்
டல்லா இருக்கீங்க”.
மீரா, “ஒன்னும் இல்லைபா. நான் ஏன் டல்லா இருக்க
போறேன். நான் நல்லா தான் இருக்கேன்”.
“இல்ல.. உங்க முகமே சரியில்ல.
எப்பவுமே பிரைட்டா இருப்பீங்க. இப்போ கொஞ்ச நாளா வர்க் பிரஷர்ல நானும் உங்களை
சரியா கவனிக்காம விட்டுட்டேன். என்ன ஆச்சுன்னு சொல்லுங்க” என்றான் வற்புறுத்தியபடி.
எங்கே
மரகதம் பாட்டி ஏதேனும் கூறியிருப்பாரோ என்று அபிமன்யுவிற்கு உள்ளுக்குள் ‘திக்திக்’ என்று இருந்தது.
மீரா, “என்ன சொல்ல சொல்ற அபி?” என்றார் விட்டேட்றியாக.
“ஏன் சரியா பேச மாட்டேங்குறீங்க.
ரீசன் சொல்லுங்க மாம்”.
“என்னோட வளர்ப்பு தப்பா ஆயிடுச்சு.
என்னால அதை தாங்கிக்க முடியல” என்றார் கண்கள் கலங்க.
தன்
தாயின் கண்கள் கலங்குவதை அபிமன்யுவால் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவரின்
தோள்களில் கையை வைத்து, “இப்போ என்ன ஆச்சுன்னு நீங்க
இப்படி கண்கலங்குறிங்க. என்ன வளர்ப்பு சரியில்ல. யார், இப்போ என்ன பண்ணிட்டாங்க” என்றான்.
“உனக்கு இன்னும் புரியலையா. நீ
அன்னைக்கு யாழினியை அடிச்சது ரொம்ப தப்பு”.
அபிமன்யு
எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான்.
மீரா, “அவ சின்ன பொண்ணு அபி. நீ
நடந்துக்குறதெல்லாம் வச்சு பார்க்கும் போது உனக்கு அவளை பிடிக்கலைனு நல்லா
தெரியுது. உனக்கு பிடிக்கலைனா எதுக்காக அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட. கல்யாணம்
பண்ணிட்டா அவ்வளவு தான், ஒரு பொண்ணோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சின்னு நினைச்சியா?
இனிமே அவ உனக்கு மட்டும் தான் சொந்தம்னு நினைச்சியா? அவளை பெத்தவங்களுக்கு,
சொந்தக்காரங்களுக்குலாம் அவ மேல எந்த உரிமையும் கிடையாதுனு நினைச்சிட்டியா?” என்றார் கோபமாக.
அபிமன்யு
எதுவுமே கூறாமல் தன் தாயின் வார்த்தைகளை கவனமாக கேட்டுக் கொண்டு நின்றான்.
மீரா, “எனக்கும் முதல் முதல்ல யாழினியை
பார்க்கும் போது உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் தோணுச்சு. ஆனா, நீ இப்படி
அவகிட்ட நடந்துப்பனு தெரிஞ்சி இருந்தா, நீ அவளை தான் கட்டிப்பேன்னு சொல்லும் போது
நானே வேண்டாம்னு சொல்லி இருப்பேன். என் பையன் ஒரு பொண்ண கையை நீட்டி அடிச்சு
கொடுமைப்படுத்துறதை என்னால பார்க்க முடியல அபி” என்று குரல் உடைந்து அழ தொடங்கி விட்டார்.
அபி
அவரை சமாதானப்படுத்தும் விதமாக, “ப்ளீஸ், நான் எதோ கோவத்துல அப்படி
நடந்துகிட்டேன். நான் பண்ணது தப்பு தான் மாம். சாரி”.
மீரா, “நீ சாரி கேட்க வேண்டியது என்கிட்ட இல்ல.
நீ சாரி கேட்க வேண்டியது யாழினி கிட்ட. அத்தனை பேரு முன்னாடி அடிச்சியே.. அப்போ அவ
எவ்வளவு பீல் பண்ணி இருப்பா.
அதுவும் கல்யாணம்
பண்ணி வந்த கொஞ்ச நாளிலேயே. நம்ம எல்லாருமே அவளுக்கு புதுசு. ஏன், இந்த கல்யாணமே
அவளுக்கு புதுசு. அக்காவுக்கு தயார் பண்ண மணவறையில் தங்கச்சியை உக்கார வச்சு
கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தது உனக்கு வேணும்னா ஈஸியான விஷயமா இருக்கலாம்.
ஆனா,
அவளுக்கு அது நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருந்திருக்கும். திடீர்னு உனக்கு
கல்யாணம் போய் உட்காருன்னா.. அவளோட மனநிலை எப்படி இருக்கும்னு கொஞ்சமாவது யோசிச்சு
பாத்தியா. இருந்தாலும் அவங்க குடும்பத்துக்காக அவங்க சொன்னதை இவ செஞ்சா. உங்களுக்குள்ள நல்ல புரிதல் வருவதற்கு
இன்னும் கொஞ்சம் காலம் தேவைப்படும். அதிலும் யாழினி சின்ன பொண்ணு. இன்னும்
விளையாட்டுத்தனமாவே இருக்கா. அவளை போய் அடிச்சு இப்படி ஓரமா முடக்கி வைக்கணும்னு
நினைக்கிறதெல்லாம் ரொம்ப தப்பு அபி”.
தன்
தாயின் கேள்விகளில் தான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய அபிமன்யு, “மாம், நான் அப்படியெல்லாம் நினைக்கல மாம்.
எதோ கோவத்துல அப்படி செஞ்சுட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் எந்த எண்ணமும்
இல்ல மாம்”.
“இந்த விஷயத்துல நீ என்ன காரணம்
சொன்னாலும் என்னால அதை ஏத்துக்க முடியாது. இவ்வளவு நாள் என் பையன் எது செஞ்சாலும்
சரியா இருக்கும்னு நான் உன்னை எதுவும் கேட்டதில்லை. ஒரு பொண்ண நீ கை நீட்டி
அடிச்சது, என்னோட வளர்ப்பு தப்புன்ற மாதிரி ஆயிடுச்சு. உன்னை நான் இப்படி
வளர்க்கலையே. உனக்கும் கூட பொறந்த தங்கச்சி ஒருத்தி இருக்கா. அவகிட்ட யாராவது
இப்படி நடந்துக்கிட்டா உனக்கு எப்படி இருக்கும். நீ யாழினி கிட்ட சாரி கேளு. அவ
உன்னை மன்னிச்சு ஏத்துக்கிட்டா தான் நான் உன்கிட்ட பேசுவேன்”.
இவ்வளவு
காலங்கள் மற்றவரின் தவறை சரியாக சுட்டிக்காட்டி கொண்டிருந்த அபிமன்யுவிற்கு தன்
தவறை உணரவே இவ்வளவு நாட்கள் ஆனது. மேலும், மன்னிப்பு கேட்பதெல்லாம் அவன்
வாழ்நாளில் இதுவரை யாரிடமும் செய்திடாத காரியம்.
‘சரி’ என்னும் இடத்திலேயே இருந்தவனுக்கு, தன்னால் ஒரு தவறு நடந்து
அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டு பிடித்தது.
தவறு தான் என்று தெரிந்த போதிலுமே, அவளிடம் மன்னிப்பு கேட்க ஒருவித தயக்கம்.
“மாம்.. எப்படி மாம்.. நான் போய்..
எப்படி அவகிட்ட சாரி கேட்கிறது.. ப்ளீஸ் மாம் புரிஞ்சுக்கோங்க.. தப்பு தான். இனிமே
நான் இப்படி நடந்துக்க மாட்டேன். அதுக்காக அவகிட்ட என்னால சாரி எல்லாம் கேட்க
முடியாது”.
“பாத்தியா.. இப்போ கூட உன்னால அவ
கிட்ட சாரி கேட்க முடியல. அப்படினா இன்னும் நீ செஞ்ச தப்பை உணரல அப்படி தான”.
அபிமன்யு
சலிப்பாக முகத்தை திருப்பவும் எங்கே இவர்கள் இருவருக்கும் ஏதேனும் வாய் சண்டை
ஏற்பட்டு விடுமோ. பிறகு, அந்த கோபத்தையும் இவன் நம்மிடம் தானே காட்டுவான் என்று
எண்ணிய யாழினி, “அத்தை..” என்றாள் மீராவை பார்த்து.
அபிமன்யுவும்,
மீராவும் ஒரு சேர திரும்பி யாழினியை பார்த்தார்கள். மீரா அவசர அவசரமாக தன் கண்ணீரை
புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டு முடிந்தவரை இயல்பாக இருப்பது போல் காட்டிக்
கொண்டார்.
யாழினி,
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றாள் மீராவிடம்.
மீரா, “ஒன்னும் இல்லடா. சும்மா பேசிகிட்டு
இருந்தோம். சரி வா சாப்பிட போகலாம்”.
“நான் கல்யாணம் பண்ணி இந்த
வீட்டுக்கு வந்ததிலிருந்து ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்குல்லத்த” என்றாள் வருத்தமாக.
“ச்ச.. ச்ச.. அப்படி எல்லாம்
இல்லடா. யாரு சொன்னா அப்படினு”.
“எனக்கு தெரியும். நீங்க இப்போ
பேசுனதெல்லாம் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். நீங்க ஏன் இவர் கூட பேசாம கோவமா
இருக்கீங்க. அதுக்கு நான் தானே காரணம்”.
“அந்த இடத்துல நீ இல்லாம வேற யாரு
இருந்திருந்தாலும், நான் இப்படி தான் இவன் கிட்ட நடந்து இருப்பேன் யாழினி. ஏன்னா,
அபி பண்ணது தப்பு”.
“ப்ளீஸ் அத்தை, அவர் தான் தப்புனு
ஒத்துக்கிட்டாரே. அப்புறமும் ஏன் நீங்க பேச மாட்டேன்னு கோவமா இருக்கீங்க. நீங்க
அவர்கிட்ட பேசுங்க”.
“தப்புனு ஒத்துக்கிட்டாலும, அதை
உணர்ந்து தப்பை சரி பண்ண நினைக்கலையே”.
“இல்லத்த, அதெல்லாம் எப்பவோ
உணர்ந்துட்டார். எங்களுக்குள்ள இப்போ எந்த பிரச்சனையும் இல்ல. என்கிட்ட அன்னைக்கே
சாரி கூட சொல்லிட்டார்” என்றவள் அபிமன்யுவை பார்த்து
திருட்டு முழி முழித்தாள்.
மீரா, “நிஜமாவா சொல்ற யாழினி. இப்போ நான்
கேட்டதுக்கு சாரி சொல்ல முடியாதுன்னு சொன்னான்”.
“அதுவா..” என்று இழுத்தவள் “ஆங்.. அது.. என்கிட்ட சாரி சொல்லிட்டேன்னு
உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் ஈகோ.. அவ்வளவு தான். மத்தபடி நாங்க ரெண்டு
பேரும் சமாதானம் ஆகிட்டோம் அத்த. நான் சந்தோஷமா தான் இருக்கேன். நீங்க இப்படி
வருத்தமா இருக்கிறது பார்க்கும் போது தான், எனக்கும் வருத்தமா இருக்கு”.
யாழினியை
தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட மீரா, “இனிமே நான் வருத்தப்பட மாட்டேன் டா. நீயும்
வருத்தப்படக்கூடாது. நீ எப்பவுமே இந்த வீட்ல சந்தோசமா இருக்கணும்”.
இருவருக்கும்
கண்களில் ஆனந்த கண்ணீர் துளிர்விட்டது. அபிமன்யு என்ன நடக்குது இங்க என்று
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான். தன் தாயை எப்படி சமாளிக்க போகிறோம் என்று
குழம்பி நின்றவனை இவ்வளவு எளிதில் யாழினி சேர்த்து வைத்து விட்டாளே. யாழினியை
பார்க்கும் போது பெருமிதமாகவும் இருந்தது.
மீரா, “யாழினி சொன்னதுக்காக தான் இப்போ உன்கிட்ட
பேசுறேன் சரியா. இனிமே இந்த மாதிரி நடந்துக்க கூடாது” என்று விளையாட்டாக கண்டித்தார்.
“ஓகே மாம்” என்று மென்னகை செய்தவன் “ஆபீஸ்க்கு கிளம்பனும் டைம் ஆயிடுச்சு. நான் வரேன்” என்று கூறிவிட்டு யாழினியை ஒரு பார்வை
பார்த்து தலையசைத்துவிட்டு அறைக்கு சென்று விட்டான்.
அலுவலகம்
செல்ல வேண்டும் என்று அபிமன்யு கூறும் பொழுது தான் யாழினிக்கு நினைவு வந்தது.
அவளும் உடன் செல்ல வேண்டுமே.
மீராவிடம்
ஸ்ருதி இறங்கிய குரலில், “ஓகே அத்தை. நானும் கிளம்புறேன்.
டைம் ஆயிடுச்சு” என்று கூறிவிட்டு அறைக்கு செல்ல
திரும்பினாள்.
மீரா, “ஏன் யாழினி உனக்கு ஆஃபீஸ் போக பிடிக்கலையா?”.
“அதெல்லாம் ஒன்னும் இல்லத்த.
ஆபீஸ்ல ஜாலியா தான் இருக்கு. நிறைய ஸ்நாக்ஸ் எல்லாம் கொடுக்குறாங்க” என்று கூறி சிரித்தாள். “நேரம் ஆகுது பாய்” என்று கூறிவிட்டு அறையை நோக்கி ஓடிவிட்டாள்.
செல்லும்
யாழினியை பார்த்து புன்னகைத்த மீரா, “இன்னும்
விளையாட்டு பொண்ணாவே இருக்கா” என்று கூறிவிட்டு வீட்டிற்குள்
சென்றார்.
அறையினுள்
நுழைந்த யாழினியை, “எதுக்கு எங்க அம்மா கிட்ட பொய்
சொன்ன” என்ற அபிமன்யுவின் வார்த்தைகளே
வரவேற்றன.
யாழினி,
“நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு
இருந்ததை நான் கேட்டேன். பாவம் அத்தை உங்க கிட்ட பேசாமல் அவங்களும்
வருத்தப்பட்டுக்கிட்டு இருப்பாங்க. அவங்க முகமே சரியில்ல. உங்களுக்கும் அம்மாகிட்ட
பேசாமல் கவலையா தானே இருக்கும். அதான் அப்படி சொன்னேன்” என்றாள் மெதுவாக.
“எங்க அம்மா கிட்ட பேசாம எனக்கு
கவலையா இருக்குன்னு நான் உன்கிட்ட சொன்னேனா”.
இப்படி
ஒரு கேள்வியை எதிர்பாராத யாழினி கைகளை பிசைந்தபடி நிற்க.
“சொல்லு”.
“இல்ல.. எங்க அம்மாகிட்ட பேசாம
எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அதான் நீங்களும் அப்படி நினைப்பிங்களோனு நினைச்சு..” என்று இழுத்தாள்.
திடீரென
எதிர்பாராத திருமணம். ஒரே நாளில் தன் குடும்பத்தை விட்டு இப்படி பிரிந்து வருவோம்
என்று யாழினி எதிர்பார்க்கவில்லை. சட்டென்று அனைத்தும் நடந்து முடிந்து விடவே,
அவளுக்கு தாயின் ஏக்கம் அதிகமாக இருந்தது.
இரவில்
தினமும் அக்காக்களுடனும், தாயுடனுமே படுத்து பழகியவளுக்கு பகலில் இல்லாவிட்டாலும்,
இரவு நேரங்களில் தாயின் ஏக்கம் அதிகமாக இருக்கும்.
வெளியே
யாரிடமும் சொல்லாவிட்டாலும். ஆரணி அவளின் அம்மாவிடம் பேசுவதை பார்க்கும் பொழுது
யாழினிக்கு ஏக்கமாக இருக்கும். யாழினியின் வாய் மொழியாகவே அவள் தன் தாயைத்
தேடுகிறாள் என்பது புரிய, அபிமன்யு அவளையே பார்த்தபடி நின்றான்.
யாழினிக்காக
தன் மனதை அபிமன்யு மாற்றிக் கொள்வானா...?
கருத்துகள்
கருத்துரையிடுக