அவனதிகாரம் - 48

 

 

அதிகாரம் – 48

 

யாழினிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. மீண்டும், இல்ல, நான் பாட்டி கூட ஊருக்கு போயிட்டு கொஞ்சம் நாள் இருந்துட்டு வரவா? என்று மீண்டும் கேட்டாள்.

 

அபிமன்யு, பாட்டி ஊருக்கு போனா என்ன, அவங்க கூடவே நீயும் போயிடணுமா. அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா? என்றான் வெடுக்கென்று.

 

எங்கே போக வேண்டாம் என்று கூறி விடுவானோ என்று யாழினிக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது.

 

இல்ல மாமா. போயிட்டு திரும்ப வந்திடுவேன்.

 

அபிமன்யு சற்று நேரம் அவளை கூர்ந்து பார்த்தவன், “சரி போகலாம்.

 

உடனே மகிழ்ச்சியான யாழினி, தேங்க்ஸ் மாமா. நான் போய் பாட்டிகிட்ட நானும் வரேன்னு சொல்லிட்டு வந்துடறேன்.

 

ஹே.. ஒரு நிமிஷம் நில்லு. நான் என்ன சொன்னேன்னு கவனிச்சியா.. போகலாம்னு சொன்னேன்.. ஐ மீன், நானும் உன் கூட வரேன் என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.

 

யாழினிக்கு தான் கேட்பது உண்மை தானா என்று தன் காதுகளையே நம்ப முடியவில்லை, “நிஜமாவா மாமா? என்றாள் தன் குட்டி கண்களை விரித்து பார்த்தபடி ஆச்சரியமாக.

 

ம்ம்.. நிஜமா தான். உங்க பாட்டி இன்னைக்கு ஊருக்கு போகட்டும். எனக்கு ஆபீஸ்ல இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. நாம ஒன் வீக் கழித்து போகலாம்.

 

யாழினிக்கு பொங்கி வந்த சந்தோஷம் புஸ் என்று ஆகிவிட்டது. இப்பொழுது வேண்டாம் என்று தட்டிக் கழிப்பதற்காக அபிமன்யு இப்படி கூறுகிறானோ என்று எண்ணியவள்.

 

நான் வேணும்னா பாட்டி கூட போறேன். நீங்க ஒன் வீக் அப்புறம் வரிங்களா?.

 

கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு போற, நீ மட்டும் தனியா போனா உங்க வீட்ல எதுவும் கேட்க மாட்டாங்களா. போய் உன் பாட்டிக்கிட்டயே கேளு. அதான் ஒன் வீக் அப்புறம் கூப்பிட்டு போறேன்னு சொல்றேன்ல. அதுக்குள்ள என்ன அவசரம்? என்றான் சிடுசிடுப்பாக.

 

அதில் முகம் வாடி போக அமைதியாக வெளியே சென்று விட்டாள்.

 

மரகதம் பாட்டி இவளின் முகத்தை பார்த்ததுமே அபிமன்யு என்ன கூறி இருப்பான் என்று யூகித்தவர். யாழினி அருகில் வந்ததும், அவளின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தபடி, சரி கவலைப்படாத யாழினி. இப்போ என்ன ஆயிடுச்சுன்னு முகத்தை இப்படி வச்சிருக்க. மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மனசு மாறுற வரைக்கும் நாம பொறுத்து தான் போகணும்.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. அவர் ஊருக்கு போக சம்மதிச்சிட்டார்.

 

மரகதம் பாட்டியால் நம்பவே முடியவில்லை.

 

அப்படியா.. அப்புறம் ஏன் உம்முன்னு இருக்க.

 

இப்போ உன்னை மட்டும் தனியா போக சொல்றார். அவருக்கு ஆஃபீஸில் முக்கியமான வேலை இருக்காம். அது முடிச்சிட்டு ஒரு வாரம் கழிச்சு என்னை கூப்பிட்டு வரேன்னு சொல்றார்.

 

மரகதம் பாட்டிக்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை, நிஜமாவா டி சொல்ற. மாப்பிள்ளையே உன்னை கூப்பிட்டு வரேன்னு சொன்னாரா. அப்புறம் எதுக்குடி மூஞ்சை இப்படி வச்சிருக்க. சந்தோஷமா இருக்க வேண்டியது தானே.

 

இல்ல பாட்டி, அவர் இப்போ நான் உன் கூட ஊருக்கு போகாமல் இருக்குறதுக்காக இப்படி சும்மா சொல்லுறாரோனு பயமா இருக்கு. ஒரு வாரம் கழிச்சு கூப்பிட்டு போக முடியாதுன்னு சொல்லிட்டா என்றாள் சந்தேகமாக.

 

யாழினியின் சந்தேகம் பாட்டிக்கும் தொற்றிக்கொள்ள அமைதியாக யோசித்தபடி நின்றார்.

 

மீண்டும் தொடர்ந்த யாழினி, கல்யாணம் முடிஞ்சு முதல் தடவை நீ மட்டும் எப்படி தனியா போவனு கேட்குறார் பாட்டி. உங்க வீட்ல நீ தனியா போனா எதுவும் நினைச்சுக்க மாட்டாங்களா, அதனால நானே உன்ன கூப்பிட்டு போறேன். ஒரு வாரம் வெயிட் பண்ணுனு சொல்றார்.

 

அதுவும் வாஸ்தவம் தான யாழினி. கல்யாணம் முடிஞ்சு முதல் தடவ அம்மா வீட்டுக்கு வரப்போற. நீ மட்டும் தனியா வந்தா நல்லா இருக்காது. அவர் சொல்ற மாதிரி இரண்டு பேரும் சேர்ந்து வந்தா தான் நல்லா இருக்கும். இப்போ நான் கிளம்புறேன் ஒரு வாரம் கழிச்சு நீ மாப்பிள்ளை கூட வா.

 

வேறு வழி இன்றி சரி என்று ஒப்புக்கொண்டாள் யாழினி. பிறகு, மரகதம் பாட்டி அனைவரிடமும் தான் கிளம்புவதாக கூற.

 

மீரா, என்ன பெரியம்மா அவசரம் பொறுமையா கிளம்பலாம். ஏன் இவ்வளவு காலையிலேயே.

 

காலையில கிளம்புனா தான் மா சரியா இருக்கும். அப்புறம் அப்படியே லேட்டா போயிடும்.

 

மரகதம் பாட்டியின் கைகளை பிடித்துக் கொண்ட மீராவிற்கு கண்கள் கலங்கியது.

 

மரகதம், என்னாச்சு மா மீரா? என்றார் பதட்டமாக.

 

ஒன்னும் இல்ல பெரியம்மா. அடிக்கடி வீட்டுக்கு வாங்க. யாழினி பத்தி கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்.

 

அந்த நம்பிக்கையில தான் நான் ஊருக்கே போறேன். உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறேன்

 

சரிங்க பெரியம்மா போயிட்டு போன் பண்ணுங்க. பாத்து பத்திரம்.

 

அபிமன்யுவை அறைக்கு சென்று பார்த்தவர், தம்பி ஒரு வாரம் கழிச்சு நீங்க யாழினியை வீட்டுக்கு கூப்பிட்டு வரர்தா சொன்னா. நாங்க எல்லாரும் காத்துக்கிட்டு இருப்போம். நான் கிளம்புறேன் பா யாழினி சின்ன பொண்ணு தெரியாம ஏதாவது தப்பு பண்ணா அவள மன்னிச்சிடுங்க. இனிமே நீங்க தான் அவளை பாத்துக்கணும்.

 

அபிமன்யு வேறெங்கோ பார்த்தபடி, என் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும். யாரும் சொல்ல தேவையில்ல என்றான் வெடுக்கென்று.

 

பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு மரகதம் பாட்டி இவர்களின் காரிலேயே ஏறி தங்கள் ஊரை நோக்கி புறப்பட்டார். யாழினி தான் அழுது அடம் பிடித்து சிறு குழந்தை போல் மரகதம் பாட்டியை ஒரு வழி செய்து விட்டாள்.

 

அவளை சமாதானம் படுத்திவிட்டு கிளம்பவே மரகதம் பாட்டிக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஒரு வழியாக அவர் கிளம்பியதும் சோகத்தின் மறு உருவமாக தோட்டத்தில் அமர்ந்திருந்தாள் யாழினி.

 

நேற்று நடந்த சம்பவமே இன்னும் அவளை வெகுவாக பாதித்திருக்க. மேலும், இன்றே மரகதம் பாட்டி கிளம்பியது. யாழினிக்கு மன வருத்தத்தை இரட்டிப்பாக்கியது. காலை நேரம் என்பதால் ஆரணி தூக்கத்திலிருந்து எழுந்திரித்திருக்கவே இல்லை.

 

நேற்று நடந்த சம்பவத்திலிருந்து சங்கடப்பட்டுக் கொண்டு யாழினி ஆரியனை பார்ப்பதையே தவிர்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்க சற்று நேரம் தன்னை சமாதானம் படுத்திக் கொண்டவள் எழுந்து வீட்டினுள் சென்றாள்.

 

அப்போது அலுவலகம் செல்ல தயாராக கீழே இறங்கி வந்த அபிமன்யு யாழினி சோகமான முகத்துடன் வருவதை கண்டு, ஆஃபீஸ்க்கு வரியா?.

 

அதற்கு பதில் கூறாமல் இல்லை என தலையசைத்தாள் யாழினி.

 

ஓகே.. டேக் ரெஸ்ட் என்று கூறிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க.

 

விசாலாட்சியும், ஷைலஜாவும் யாழினியை அறையின் வாயிலில் நின்று முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் யாழினிக்கு நேற்றைய சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனக்கண் முன்பு அலைமோத.

 

சட்டென்று அபிமன்யுவின் பின்னோடு ஓடியவள், நானும் ஆபீஸ்க்கு வரேன் என்றாள்.

 

இப்போ தான் வரலைனு சொன்ன என்றான் கேள்வியாக.

 

யாழினி எங்கே தன்னை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று விடுவானோ என்ற பயத்தில், இங்க போர் அடிக்கும் மாமா. நானும் வரேனே ப்ளீஸ்.. என்றாள் மீண்டும்.

 

அபிமன்யுவிற்கோ காரியம் ஆகணும்னா மட்டும் மாமா மாமான்னு கீ வர்டு மாதிரி யூஸ் பண்ணிக்குறா, எங்கையாவது ஆசையா கூப்பிடுறாளா பாரு என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்.

 

வெளியே, ஓகே. யுவர் விஷ் சாப்பிட்டியா?.

 

இல்ல.

 

மாம்... நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ்க்கு கிளம்பிட்டோம். பிரேக் பாஸ்ட் வெளியில் பார்த்துகிறோம். கெட்டிங் லேட். பாய் மாம் என்று கூறிவிட்டு முன்னே நடக்க.

 

போய்ட்டு வரேன் அத்தை. வரேன் பாட்டி... என்று கூறிவிட்டு அபிமன்யுவை பின்தொடர்ந்து ஓடினாள்.

 

யாழினி மனதிற்குள் பல வகையான உணர்வுகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

 

குடும்பத்தினரை விட்டு பிரிந்து வந்ததிலிருந்து மரகதம் உடன் இருக்கவே அவ்வளவாக யாழினிக்கு தெரியவில்லை. இன்று மரகதமும் சென்று விட ஏதோ வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தாள்.

 

ஏதோ தான் மட்டும் எங்கோ புதிய இடத்தில் தெரியாத மனிதர்களுடன் வாழ்வது போல் தோன்றியது. பொதுவாக திருமணம் முடிந்து பெற்றோர் வீட்டில் இருந்து மாமியார் வீட்டிற்கு செல்லும் அனைத்து பெண்களும் கடந்து வரக்கூடிய வலி மிகுந்த நாட்களை தான் யாழினியும் தற்போது கடந்து கொண்டிருக்கிறாள்.

 

காலம் தானே அனைத்திற்கும் மருந்து. இனி இதுதான் நம் வீடு, இவர்கள் தான் நம் உறவு என்று புரிந்து கொள்ளும் காலம் வரை தனித்து விடப்பட்டது போல் தான் எண்ணம் தோன்றும்.

 

கார் அலுவலகம் சென்று அடையும் வரையிலும் அமைதியாக அமர்ந்திருந்த யாழினியை திரும்பி திரும்பி பார்த்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான் அபிமன்யு. அவர்களுடைய அறைக்குள் நுழையும் வரையிலும் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.

 

அபிமன்யு உடன் யாழினி செல்வதை பார்த்த அவர்கள் அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியா, உடன் பணிபுரியும் சந்தியாவிடம், சந்து யார் இந்த பொண்ணு? பாஸ் கூட ஜோடி போட்டுக்கிட்டு போறா என்றாள் வெறுப்பாக, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

 

சந்தியா, ஓ.. அவங்களா.. அவங்க நம்ம பாஸோட வைஃப் என்று கூறி பிரியாவின் தலையில் இடியை தூக்கி போட்டாள் சந்தியா.

 

பிரியா அதிர்ச்சியாக, வாட்...! என்று சத்தமாக கூறியபடி எழுந்து நின்று விட்டாள்.

 

அக்கம் பக்கத்து டேபிளில் இருப்பவர்கள் தங்களை ஒரு மாதிரி பார்ப்பதை உணர்ந்த சந்தியா, சாரி கைஸ். யூ கேரி ஆன் என்று கூறி விட்டு நீ வா என்கூட என்று பிரியாவின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு கேன்டீன் நோக்கி சென்றாள். உனக்கு என்ன பைத்தியமா.. ஏன் இப்படி கத்துற.

 

நிஜமாவே சாருக்கு கல்யாணம் ஆயிடுச்சா? என்றாள் இன்னும் அதிர்ச்சி மாறாமல்.

 

என்னடி லூசு மாதிரி பேசிக்கிட்டு இருக்க. அவருக்கு கல்யாணம் ஆனா உனக்கு என்ன, ஆகலைனா உனக்கு என்ன. நீ ஏன் இவ்வளவு ஷாக் ஆகுற.

 

அதற்கு பிரியா சலிப்பாக தன் முகத்தை திருப்பியவள், லூசு மாதிரி பேசாத சந்தியா. நான் இந்த ஆஃபீஸில் ஜாயின் பண்ணதே அவருக்காக தான்.

 

சந்தியா அதிர்ச்சியாக, என்னடி சொல்ற. எனக்காக தான் ஆபீஸில் ஜாயின் பண்ண போறேன்னு சொன்ன. இப்போ அவருக்காகன்னு சொல்ற. உனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம். நீ ஏன் அவருக்காக இந்த ஆபீஸில் ஜாயின் பண்ணி இருக்க?.

 

என்னோட பழைய கலிக்ஸ்லாம் சேர்ந்து கிளைன்ட் மீட்டிங்காக வெளியில் போயிருந்தோம். அப்போ டாப் பிசினஸ் மேன்ஸ்கான மீட்டிங் அந்த பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அப்போ தான் நான் அபிமன்யுவை மீட் பண்ணேன். ஃபர்ஸ்ட் லுக்லையே எப்படி என்னை இம்ப்ரஸ் பண்ணினார் தெரியுமா. வாட் எ மேன்..! ஹொவ் ஹேன்ட்சம் ஹி இஸ்..! இதுவரைக்கும் யாரையும் பார்த்து நான் இம்ப்ரஸ் ஆனதே இல்ல. பட், ஹீ இஸ் ஸ்பெஷல் டு மீ. அப்போலருந்து நான் அபியை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். யூ நோ, லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்று பழைய நினைவுகளில் ரசித்து கூறிக் கொண்டிருந்தாள்.

 

என்னடி உளறிட்டு இருக்க. நீ இப்படி எல்லாம் கிடையாதே. அது மட்டும் இல்லாம, அவருக்கு இப்போ தான் ரீசண்டா கல்யாணம் முடிஞ்சது.

 

எனக்கு அது பத்தி எதுவும் தெரியாது சந்தியா. நான் அபிமன்யுவை பத்தி கூகுள்ல சர்ச் பண்ணும் போது அன்மேரிட்ன்னு தான் போட்டு இருந்துச்சு. அதனால அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு நினைச்சேன். அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நீ சொல்றது எனக்கே ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு என்று தன் தலையை இரு கைகளிலும் தாங்கியபடி அருகில் இருந்த டேபிளில் பொத்தென்று அமர்ந்தாள்.

 

அவரோட மேரேஜ்ல நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் நடந்திருக்கு டி. இப்போ கல்யாணம் பண்ணி இருக்காருல்ல அந்த பொண்ணோட அக்காவுக்கும், அபி சார்க்கும் தான் கல்யாணம் நடக்கிறதா இருந்தது. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியல. பொண்ணு மாறி போச்சு. இந்த பொண்ணு கூட படிச்ச பொண்ணு கிடையாதாம். அரசல் புரசலா இவங்கள பத்தி பேசும் போது கேட்டு இருக்கேன். அபி சார்க்கு அந்த பொண்ணு கொஞ்சம் கூட மேட்சிங் இல்ல. படிக்கவே இல்ல.

 

சந்தியாவின் பேச்சில் சட்டென்று சந்தியாவை நிமிர்ந்து பார்த்த ப்ரியா, என்னடி சொல்ற! நிஜமாவா! படிக்காத பொண்ணையா கல்யாணம் பண்ணி இருக்கார்.

 

ஆமா டி. அதான் சொன்னேன்ல மேரேஜ்ல ஏதோ ப்ராப்ளம்.

 

ஓ... சரி நான் பாத்துக்குறேன் என்றாள் யோசனையோடு.

 

என்னடி பண்ண போற, எதுவும் லூசு மாதிரி செஞ்சு வச்சிடாத. அபி சார்க்கு மட்டும் தெரிஞ்சது நம்மள தொலைச்சிடுவார்.

 

நீ பயப்படாத. எந்த பிரச்சனையும் உனக்கு வராது. என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என்றவள் அவசரமாக மனதிற்குள் கணக்கு போட்டாள்.

 

கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாத பொண்ணுக்கும் அபிக்கும் எப்படி செட் ஆகும். அபி எவ்வளவு பெரிய பிசினஸ் மேன்.. எத்தனையோ பெரிய க்ளையன்ட்ஸை எல்லாம் அசால்ட்டா ஹேண்டில் பண்றவர். அவருக்கு போய் இப்படி படிப்பறிவு இல்லாத பொண்ணா.. நினைச்சு பார்க்கவே கன்றாவியா இருக்கு. நான் இருக்க வேண்டிய இடத்துல வேற ஒருத்தி வந்துட்டாளேனு கவலைப்பட்டேன். கடைசியில அபிக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாம இருக்காளே. எப்படியாவது அந்த இடத்துக்கு நான் வரணும். அதுக்கு அபியோட மனசுல நான் இடம் பிடிக்கனும்.

 

பிரியா, சரி வா டைம் ஆகுது. கேபின்க்கு போகலாம்.

 

வழக்கம் போல் யாழினி அறைக்குள் நுழைந்ததும் தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்தவள். சற்று நேரம் எதுவுமே செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அபிமன்யு ஒரு புறம் வேலையை செய்து கொண்டிருந்தாலும் கவனத்தை யாழினியின் மேலே வைத்திருந்தான்.

 

இருவரின் எண்ணத்தையும் கலைக்கும் படி கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது, “மே ஐ கம் இன் சார் என்ற குரலுடன். 

 

எஸ். கம் இன் என்று அபிமன்யு குரல் கொடுக்க. கதவை திறந்தபடி உள்ளே நுழைந்தாள் பிரியா.

 

உள்ளே நுழைந்ததும் நேராக அவளின் பார்வை யாழினி இருக்கும் திசையை தான் நோக்கி சென்றது. யாழினியை எடை போடும் படி ஒரு பார்வையை பார்த்தவள், அபிமன்யுவின் குரலில் களைந்தாள்.

 

வாட் யூ வாண்ட்? என்றான் பிரியாவை பார்த்து.

 

பிரியா, சார் இந்த டாக்குமெண்ட்ல உங்க சைன் வேணும்... என்று இழுத்தவள். யாழினியை பார்த்து, புதுசா டைப்பிங்க்கு ஆள் எடுத்து இருக்கீங்களா சார். என்னோட பிரண்ட் ஒருத்தவங்க நல்லா எக்ஸ்பீரியன்ஸ் ஆன பெர்சன் இருக்காங்க. எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அவங்களை ரெகமெண்ட் பண்ணி இருப்பேன் என்றாள் நக்கலான குரலில்.

 

அவள் கூறுவது யாழினிக்கு புரியாவிட்டாலும், அபிமன்யு யாழினியைப் போல் இல்லையே. யாழினி தன் எதிரே நிற்கும் புதியவளை புரியாமல் பார்க்க.

 

அபிமன்யு, நோ நீட். எனக்கு ரெக்கமண்டேஷன் பிடிக்காது என்று முதலில் முகத்தில் அடித்தது போல் கூறியவன், அண்ட் ஒன் மோர் திங் என்றவன் எழுந்து யாழினியின் அருகில் சென்று அவளின் தோளின் மீது கையை போட்டபடி ஷீ இஸ் மை வைஃப் என்றான் யாழினியை பார்த்தபடி.

 

அப்போது தான் யாழினிக்கு உரைத்தது. அவள் தன்னை தான் புதிதாக வேலைக்கு சேர்த்து இருக்கிறார்கள் என்று நினைத்து பேசுகிறாள் என்று.

 

மேலும் தொடர்ந்த அபிமன்யு, இங்க நீங்க எந்த வேலையை பார்க்க வந்தீங்களோ அதை மட்டும் பாருங்க. தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்க வேண்டாம். யாரு என்னன்னு தெரியாம திரும்ப இப்படி பேசுற வேலை வச்சுக்காதீங்க. காட் இட்! என்று அடி குரலில் சீறும் படி கூறினான்.

 

யாழினியை மட்டம் தட்டுவது போல் பேச எண்ணி வந்த பிரியாவிற்கே அபிமன்யுவின் பேச்சில் அவமானம் ஆகிப்போனது. பதில் எதுவும் கூறாமல் வெடுக்கென வெளியேறி விட்டாள்.

 

அபிமன்யு யாழினியிடம், அவ உன்னை தான் டைப்பிஸ்டானு கேட்குறா. இல்ல, நான் இவரோட வைஃப்னு சொல்லாமல் வேடிக்கை பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க.

 

யாழினியோ இவன் கூறுவது அனைத்தையும் காற்றில் விட்டவள். நிஜமாவே ஊருக்கு கூட்டிட்டு போவீங்களா மாமா? என்றாள் மீண்டும்.

 

அதில் கடுப்பான அபிமன்யு பல்லை கடித்த படி தன் இருக்கையில் சென்று அமர்ந்து தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டான். இப்படியே ஒரு வாரம் கடந்து விட்டது. யாழினி அபிமன்யுவிடம் பேச கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் ஊருக்கு போவதை பற்றியே பேசிக்கொண்டு இருந்தாள்.

 

அன்று ஞாயிற்றுக்கிழமை, அபிமன்யு தங்கள் தோட்டத்தில் ஒரு கையில் காபியும், மறுகையில் நியூஸ் பேப்பரமாக அமர்ந்திருந்தான். அப்போது, வணக்கம் மாப்பிள்ளை என்று பின்னால் குரல் கேட்க, திரும்பி யார் என்று பார்த்தான்.

 

வந்தவர்கள் யார் என்று அபிமன்யுவிற்கு தெரியவில்லை. அவர்களின் மாப்பிள்ளை என்ற அழைப்பு அபிமன்யுவிற்கு எரிச்சலை கொடுக்க. அதை சற்றும் மறைக்காது முகத்தில் காட்டினான்.

 

யாழினியின் எண்ணம் நிறைவேறுமா…?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5