அவனதிகாரம் - 50

 

 

அதிகாரம் – 50

 

செல்லும் வழியெங்கும் யாழினி தங்கள் ஊரின் அருமை பெருமைகளை பற்றி ஆரணியிடமும், ஆரியனிடமும் கதைத்துக் கொண்டே வந்தாள்.

 

ஏற்கனவே, அந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தினால் கடுப்பாக வந்து கொண்டு இருந்த அபிமன்யுவிற்கு யாழினியின் பேச்சு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றாத குறை தான்.

 

எனவே, கடுப்பான அபிமன்யு, ஷெட் அப் யாழினி. எப்படி இப்படி நான்ஸ்டாப்பா பேசிக்கிட்டே வர. உன்னால கொஞ்ச நேரம் கூட அமைதியா வர முடியாதா? என்றான் பற்களை நரநரவென கடித்த படி.

 

யாழினி மட்டுமல்ல, அபிமன்யுவின் அதட்டலில் மற்ற இருவரும் கூட அமைதியாகிவிட்டனர். அத்தோடு ஊரை சென்று அடையும் வரையிலும், குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியின் திரு உருவமாக மூவரும் வந்து கொண்டிருந்தனர்.

 

ஒரு வழியாக யாழினியின் வீட்டின் முன்பு கார் சென்று நின்றது.

 

வேலுச்சாமி தாத்தா, ஏய் மரகதம், புள்ளைங்க வந்துட்டாங்க பாரு என்றபடி அவசர அவசரமாக வாசலை நோக்கி நடந்து சென்றார்.

 

மரகதம், புள்ளையில்லாத வீட்டுல கிழவன் துள்ளி விளையாடுனான்னு சொல்ற மாதிரி, பேத்தி வரான்னதும் உங்க தாத்தாவுக்கு 30 வயசு குறைஞ்சிடுச்சின்னு நினைப்பு போலருக்கு. எங்கையாவது ஹார்ட் பிரச்சனை இருக்குன்ற பயம் இருக்கா பாரு. எப்படி ஓடுறாரு என்று வெண்ணிலாவிடம் திட்டிக்கொண்டே பின்னால் வந்தார்.

 

கார் வீட்டின் வாயிலில் நின்றதும் அடுத்த நொடியே கதவை திறந்து கொண்டு துள்ளி குதித்து இறங்கிய யாழினி தன் தாத்தாவை பார்த்ததும் மகிழ்ச்சியில், தாத்தா... என்று கத்தியபடி வீட்டினுள் ஓடினாள்.

 

வேலுச்சாமியின் பின்னால் வந்த மரகதம், நில்லுடி உள்ள வராத என்று கத்தவும் வாசலிலேயே நின்று விட்டாள்.

 

வேலுச்சாமி, அறிவு இருக்கா கிழவி உனக்கு. ஆசையா வர புள்ளைய பார்த்து உள்ள வராதன்னு சொல்ற.

 

எல்லாம் எனக்கு தெரியும். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க. லட்சுமி அதை கொண்டாத்தா என்று உள் திரும்பி குரல் கொடுத்தார்.

 

உடனே லட்சுமி கையில் ஆரத்தியுடன் இவர்களை நோக்கி வந்தார். அதற்குள் மற்ற மூவரும் காரில் இருந்து இறங்கி இருக்க.

 

அபிமன்யு வாய்க்குள்ளே, “இனிமே இந்த மாதிரி ட்ராமாஸ் தான் நிறைய பார்க்க வேண்டி இருக்கும். ஷிட் என்று திட்டிக் கொண்டிருந்தான்.

 

லட்சுமி, மாப்ள வந்து யாழினி பக்கத்துல நில்லுங்க. முதல் முறையா நம்ம வீட்டுக்கு ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி வரீங்க ஆரத்தி எடுக்கனும் என்றார் இன்முகமாக.

 

அதற்குள் மீரா, மகேந்திரன் காரும் வீட்டை வந்து அடைய. அதிலிருந்து இறங்கிய வள்ளியம்மை, என்ன அக்கா உன் பேத்திக்கு மட்டும் தான் ஆரத்தி எடுப்பியா. எங்களுக்கெல்லாம் கிடையாதா என்றார் சிரித்தபடி.

 

அதுக்கு என்னத்தா. எல்லாருக்கும் எடுத்துட்டா போச்சு.

 

கடுகடுவென அபிமன்யு யாழினியின் அருகில் சென்று நின்றான். இருவருக்கும் ஆரத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து சென்றனர்.

 

யாழினியின் வாய்க்கு வாய் இருந்தால் பாவம் அழுதுவிடும். அவ்வளவு பேச்சுக்கள் இடைவெளி இன்றி பேசிக்கொண்டே இருந்தாள். இத்தனை மாத பேச்சுக்களையும் சேர்த்து வைத்து ஒரு நொடி கூட இடைவெளி விடாமல் பேசிக் கொண்டே இருந்தாள்.

 

ஆரணி, போதும் போதும் யாழ் பேபி. கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. நாம இங்க தான் 10 டேஸ் இருக்க போறோம். நாளைக்கு பேச ஏதாவது வேணும்ல. இப்போவே எல்லாத்தையும் பேசி முடிச்சிடாத என்று யாழினியைக் கிண்டல் செய்தாள்.

 

அதற்கு என்று அசடு வழிந்த யாழினியை லட்சுமி, யாழினி மாப்பிள்ளையை ரூமுக்கு அழைச்சிட்டு போ மா. ரெஸ்ட் எடுக்கட்டும்.

 

சரிம்மா என்ற படி திரும்பி அபிமன்யுவை பார்க்க.

 

அவனிற்கும் இங்கே இருக்க பிடிக்காததால் அறைக்கு சென்று விடலாம் என்று எழுந்து யாழினியின் பின்னோடு சென்றான். அறைக்கு வரும் வழி எங்கும் அபிமன்யுவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது ஒரே விஷயம் தான். யாழினியை இங்கு அழைத்து வந்து பெரும் தவறு செய்து விட்டோமோ என்று.

 

ஏனெனில், இவர்கள் காட்டும் பாசத்தினால் யாழினிக்கு இவன் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச கவனமும் மாறிவிடுமோ. என்ன செய்யலாம் என்று நொடியில் சிந்தித்தவன்.

 

அவர்களை விட அதிக அன்பை நாம் காட்ட வேண்டும். அவளின் எண்ணம் இங்கே வந்தாலும் நம்மை சுற்றியே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான். அறையின் கதவை தாழிடும் ஓசையில் திரும்பிய யாழினிக்கு தன் பின்னால் அபிமன்யு கதவை தாழிட்டு விட்டு அதன் மேலேயே சாய்ந்து நிற்பது தெரிய தான் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக்கொண்டவள்.

 

நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் இதோ வந்துடறேன் என்று கதவை திறக்க சென்றாள்.

 

என்ன எஸ்கேப் ஆக பார்க்கிறியா?.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லையே. இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணிட்டு வந்து இருக்கீங்க. டயர்டா இருக்குமேனு சொன்னேன்.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல. கல்யாணம் பண்ணி ஃபர்ஸ்ட் டைம் உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன். இங்க யார் கூடவும் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்ல. எல்லாமே புதுசு. எனக்கு தேவையான எல்லாமே நான் உன்கிட்ட தான் கேட்பேன். நீ தான் செஞ்சு கொடுக்கணும் என்றான் அன்பாக கூறுவதாக நினைத்து.

 

ஆனால் யாழினிக்கோ இவனின் வார்த்தைகள் ஏதோ ஆர்டர் போடுவது போல் தோன்ற. என்ன இருந்தாலும் செய்வது நம் கடமை தானே என்று எண்ணியவள் சரி என்று தலையசைத்தாள்.

 

பிறகு, அபிமன்யு தனக்கு இது வேண்டும், அது வேண்டும். இது எங்கே, அது எங்கே என்று அவளை வெளியே செல்ல விடாமல் தன்னைச் சுற்றியே வர வைத்துக் கொண்டு இருந்தான்.

 

தங்கள் வீட்டை அடைந்ததும் பயண களைப்பு இல்லாததை போல் உணர்ந்த யாழினிக்கு, அபிமன்யுவின் செயலில் மிகவும் களைப்பாக ஆகிவிட்டது.

 

இரவு உணவுக்காக மரகதம் பாட்டி வந்து அறை கதவை தட்டும் வரையிலும் இருவரும் அறையை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை விட, அபிமன்யு செல்ல விடவில்லை என்று கூறலாம்.

 

மரகதம், யாழினி.. இரண்டு பேரும் சாப்பிட வாங்க.

 

யாழினி பாட்டியின் குரல் கேட்டு கதவை திறக்க செல்லவும், அபிமன்யு அவளின் கையை பிடித்து இழுத்து அவளை செல்ல விடாமல் தடுத்தான்.

 

என்ன பண்றீங்க. பாட்டி கதவை தட்டுறாங்க. கையை விடுங்க.

 

மரகதம் பாட்டி மீண்டும் கதவை தட்டியவாறு, என்ன பண்றா இந்த பொண்ணு. இன்னும் கதவை திறக்காம இருக்கா தூங்கிட்டாங்களோ என்று தனக்குள் பேசியவாறு, யாழினி.. மணி ஆயிடுச்சு மா. வந்து சாப்பிட்டு போய் தூங்குங்க என்று மீண்டும் குரல் கொடுத்தார்.

 

அபிமன்யுவின் பிடி சற்றும் தளராததைக் கண்டு உள்ளிருந்தவாரே, இதோ வரோம் பாட்டி. நீங்க போங்க என்று குரல் கொடுத்தாள்.

 

பிறகு, அபிமன்யுவிடம், என்ன பண்றீங்க. கையை விடுங்க. மணி ஆகுது.

 

இப்போ என்ன அவசரம். பொறுமையா சாப்பிட்டுக்கலாம்.

 

இப்போது சென்றால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தேவையில்லாத பேச்சுக்களை பேசி தன்னை டென்ஷன் செய்வார்கள் என்று நினைத்தவன் பொறுமையாக போகலாம் என்று காத்திருந்தான்.

 

யாழினிக்கு அபிமன்யு முன்பு போல் தன்னிடம் கோபமாக நடந்து கொள்வதில்லை என்பது புரிந்தது. இருந்தாலும், ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரியாக நடந்துக் கொள்பவனை புரிந்து கொள்ள முடியாமல் சற்று சிரமப்பட்டாள்.

 

வெகு நேரம் கழித்து அனைவரும் உணவருந்தி முடித்திருப்பார்கள் என்று எண்ணிய அபிமன்யு யாழினியிடம், சரி வா. ரொம்ப பசிக்குது. உங்க வீட்டுக்கு வந்ததிலிருந்து நீ என்னை கவனிக்கிறதே இல்ல. பாரு, டைம் என்ன ஆகுது. இன்னும் சாப்பாடு கூட போடாமல் பட்டினியா இருக்க வைக்கிற.

 

அபிமன்யுவின் பேச்சில் யாழினிக்கு வாயடைத்துப் போனது.

 

நான் எவ்வளவு நேரமா கூப்பிட்டு இருக்கேன். நீங்க தானே வரல. என்னையும் சாப்பிட விடாம இங்கேயே உட்கார வச்சிருக்கீங்க என்றாள் கோபமாக.

 

நான் சும்மா உன்னை டெஸ்ட் பண்றதுக்காக அப்படி சொன்னேன். நான் அப்படி வேண்டாம்னு சொன்னா நீ என்னை கம்பெல் பண்ணி கூப்பிட்டு போறியான்னு பார்க்கலாம்னு சொன்னேன். நீ இதான் சாக்குனு சாப்பிடாமலே கிடக்கட்டும்னு விட்டுட்ட.

 

யாழினிக்கும் தன் மேல் தான் தவறோ என்ற எண்ணம் எழுந்து விட்டது. நம்ம தான் சரியா கவனிக்காம விட்டுட்டோமோ என்று சிந்திக்கலானாள்.

 

அபிமன்யு யாழினிக்கு தெரியாத வண்ணம் சிரித்தவன், சரி சரி வா. டைம் ஆயிடுச்சு என்றபடி கதவை திறந்து கொண்டு முன்னே நடந்தான்.

 

அவனின் பின்னோடு சோகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் யாழினி. திடீரென எதிலோ மோத ஆ.. என்று முணங்கியபடி நிமிர்ந்து பார்க்க. அபிமன்யு தான் சடன் ப்ரேக் போட்டு நின்று இருந்தான்.

 

அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்தவள் மகிழ்ச்சியில் குதூகலமாகிவிட்டாள். ஏனென்றால், மொத்த குடும்பத்தினரும் இன்னும் உணவருந்தாமல் இவர்களுக்காக காத்திருந்தனர்.

 

யாழினி அபிமன்யுவை முந்திக் கொண்டு முன்னே சென்றவள், அம்மா, பாட்டி, அத்தை.. யாருமே இன்னும் சாப்பிடலையா.

 

மீரா, நீங்க வந்ததும் ஒன்னா சாப்பிடலாம்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்படியே பேசிக்கிட்டே இருந்தோம் டைம் போனதே தெரியல.

 

சரி அத்தை. வாங்க சாப்பிடலாம். உங்க பிள்ளைக்கும் ரொம்ப பசிக்குதாம்.

 

யாழினியின் வார்த்தை அபிமன்யுவை திகைப்பிலிருந்து தளர்த்த விரைப்பாக வந்து அமர்ந்தவன். இவங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சு இருப்பாங்க. நிம்மதியா சாப்பிடலாம்னு பார்த்தா, எல்லாம் அப்படியே உட்கார்ந்து இருக்காங்க என்று முணங்கிய படி உணவருந்த ஆரம்பித்தான்.

 

வள்ளியம்மை, என்ன அபி, நாங்க எல்லாம் சாப்பிட்டு இருப்போம்னு நினைச்சியா என்றார் சிரித்தபடி.

 

எல்லாரும் எதுக்காக எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க. நாங்க பொறுமையா சாப்பிடுவோம். நீங்க டைமுக்கு சாப்பிடணும்ல.

 

மரகதம், எங்க குடும்பத்துல நாங்க எல்லாருமே ஒன்னா தான் தம்பி உட்கார்ந்து சாப்பிடுவோம். இப்போ நீங்களும் எங்க குடும்பத்துல ஒரு ஆள் ஆயிட்டீங்க என்றார் அழுத்தமாக.

 

அப்படி என்றால் இனி நீங்களும் எங்களுடன் சேர்ந்து தான் உணவருந்த வேண்டும் என்று மறைமுகமாக கூறினார். அதை புரிந்து கொண்ட அபிமன்யுவிற்கு இவங்க யாரு எனக்கு ஆர்டர் போட என்று கோபம் எழுந்தது.

 

எங்க வீட்டில் எல்லாம் இப்படி கிடையாது. ஒன்னா சாப்பிடுறதால மட்டும் பாசமா இருக்கோம்னு அர்த்தம் கிடையாது என்றான் வெடுக்கென்று.

 

மகேந்திரன், அபி வாட் இஸ் திஸ். அவங்க அவங்களுடைய தாட்ஸை தான் நம்ம கூட ஷேர் பண்ணுனாங்க. ஏன் நீ கூட எல்லாம் ஒன்னா சாப்பிடணும்னு எத்தன தடவ ஆர்டர் போட்டு இருக்க.

 

மகேந்திரனின் பேச்சில் எதுவும் கூறாமல் அபிமன்யு அமைதியாகி விட்டான். பிறகு, அனைவரும் உணவை முடித்துக் கொண்டு ஆங்காங்கே பேச அமர்ந்து விட்டனர்.

 

யாழினியிடம் அபிமன்யு, போகலாமா. எனக்கு தூக்கம் வருது.

 

கோரசாக அண்ணா.. என்றார்கள் ஆரியனும், ஆரணியும்.

 

ஆரியன், உங்களுக்கு தூக்கம் வந்தா நீங்க போய் தூங்குங்க அண்ணா. நாங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருக்கோம். ஊருக்கு வந்ததே எல்லாரும் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்றதுக்காக தான. நீங்க இப்படி அவளை மட்டும் தனியா கூப்பிட்டு போனா என்ன அர்த்தம்.

 

அபிமன்யு, ஆரி.... என்று பல்லை கடத்தபடி கூற.

 

ஆரணி, டென்ஷன் பண்ணாத ஆரி. வாங்க நம்ம எல்லாரும் ஒன்னா போய் யாழினி ரூம்ல கதை பேசலாம். இப்போ ஓகேவாண்ணா என்றாள்.

 

அதில் கடுப்பான அபிமன்யு, யாழினி இப்போ வர போறியா இல்லையா என்றான் கோபத்தை உள்ளடக்கியவாறு.

 

அவனின் குரல் மாற்றத்தை உணர்ந்த யாழினி, வரேன் என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

 

பிறகு ஆரியனையும், ஆரணியையும் ஒரு பார்வை பார்த்தவன் அறைக்கு சென்று விட்டான். நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மரகதம் பாட்டி வள்ளியம்மை பாட்டியை பார்த்து சிரிக்க.

 

வள்ளியம்மை, உங்க குடும்பத்துல இருந்து உன் பேத்தியை பிரிச்சு வைக்கிறாராம் என்றார் சிரிப்பினோடு.

 

மரகதம், பாக்கலாம் எவ்வளவு நாள் இப்படி பண்ண முடியும்னு. அவ மேல இவன் வச்சிருக்க அன்பே இவனை மாத்தும் பாரு.

 

அது மட்டும் நடந்துட்டா போதும்க்கா. அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழுறதை பாக்கணும். நம்ம ரெண்டு குடும்பமும் ஒத்துமையா இருக்கணும்.

 

கண்டிப்பா நடக்கும்.

 

அப்போது மகேந்திரனுடன் பேசிக் கொண்டிருந்த சுப்பிரமணி, அம்மா யாழினிக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க போகவே இல்ல. ஒரு நல்ல நாள் பார்த்து போயிட்டு வந்துடுவோம்.

 

சரிப்பா ஜோசியரை வர சொல்லு.

 

சரி மா.

 

வேலுச்சாமி, குடும்பமா போனா நல்லா இருக்கும் வள்ளி. ஏன் உன் வீட்டுக்காரர் வரலையா.

 

வள்ளியம்மை, மாமா.. அது வந்து.. அவருக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அவரை பத்தி தான் உங்களுக்கு தெரியுமே என்று ஒருவாறு சமாளித்தார். இப்படியே இரண்டு நாட்கள் கடந்து விட்டது.

 

யாழினியை அபிமன்யு தனியே விடவே இல்லை. அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தான். ஜோசியர் வந்து மூன்று நாட்கள் கழித்து நல்ல நாள் இருப்பதாக கூற, அனைவரும் சேர்ந்து அன்றே குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கலாம் என முடிவெடுத்தனர்.

 

யாழினி, அம்மா வெண்ணிலா அக்காவும் கோவிலுக்கு வருவாங்களா. அன்னைக்கு நாங்க ஊரில் இருந்து வந்ததும் உடனே கிளம்பிட்டாங்க.

 

லட்சுமி, வருவாங்க. அக்காவும், மாமாவும் வரேன்னு சொல்லி இருக்காங்க. மத்தவங்க எல்லாம் வர முடியாது. வீட்ல கல்யாண வேலை இருக்குல.

 

யாழினி, ஓ அப்படியா! ஸ்வேதாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு மா. நானும், ஆரணியும் இன்னைக்கு போய் பாத்துட்டு வந்துடறோம்.

 

சரி மா போய் பாத்துட்டு வாங்க.

 

காலை உணவை முடித்தவுடன் அபிமன்யுவிடம் ஸ்வேதாவை பார்க்கப் போவதாக கூறிவிட்டு செல்லலாம் என்று எண்ணியவள் அறைக்கு சென்று பார்த்தாள்.

 

அங்கு அபிமன்யு மடிக்கணினியுடன் யாருடனோ ஹெட்போனில் பேசிக் கொண்டிருந்தான். தன் எதிரே வந்து நிற்கும் மனைவியை பார்த்தவன். என்ன என்று சைகை மூலமாக கேட்க.

 

ஸ்வேதாவை பாக்க போறோம் என்றாள்.

 

தன் ஹெட்போனை கழட்டிய அபிமன்யு, யார் கூட?.

 

நானும், ஆரணியும் போய் பாத்துட்டு வந்திடுவோம்.

 

அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. அதான் கல்யாணத்துல பார்க்க போறீங்கல்ல. அப்புறம் என்ன?.

 

யாழினி தயக்கமாக, இல்ல வந்ததில் இருந்து அவளை போய் பார்க்கவே இல்ல. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதான் ஒரு தடவை போய் பார்த்துட்டு வந்துடலாம்னு கேட்டேன்.

 

உன்கிட்ட ஊருக்கு கூப்பிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணதுக்காக தான் இப்போ உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். அதுக்காக நீ என்ன சொன்னாலும் நான் சரினு சொல்லுவேன்னு எதிர்பார்க்காத. டோன்ட் டேக் ஓவர் அட்வான்டேஜ் என்றான் சிடுசிடுப்பாக.

 

யாழினி எதுவும் பதில் கூறாமல் வாடிய முகத்துடன் வெளியேறிவிட்டாள்.

 

வாசலிலேயே யாழினிக்காக காத்திருந்த ஆரணி, என்ன ஆச்சு. அண்ணா ஓகே சொல்லிட்டாங்களா.

 

போடி நீ வேற கடுப்பேத்தாத. உங்க அண்ணன் வேண்டாம்னு சொல்லிட்டார். கல்யாணம் பண்ணா என் சொந்தக்காரங்க வீட்டுக்கு போறதுக்கு கூட உங்க அண்ணன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமா. எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்லை. முதலே தெரிஞ்சிருந்தா நான் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன் என்றாள் வெறுப்பாக.

 

ஐயோ! பேபி அவசரப்பட்டு இப்படி எல்லாம் பேசிடாத. நீ மட்டும் கல்யாணம் பண்ணி எங்க அண்ணனுக்கு வாழ்க்கை குடுக்கலைனு வச்சுக்கோ, எங்க அண்ணனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணமே நடந்து இருக்காது என்று கூறி சிரித்தாள்.

 

யாழினி சோகமாக, விளையாடாத ஆரணி. போக வேண்டாம்னு சொல்லிட்டார். அதான் கல்யாணத்துல மீட் பண்ண போறோம்ல. அதுக்குள்ள என்ன அவசரம்னு வேண்டாம்னு சொல்லிட்டார்.

 

சரி சரி விடு. உடனே, நீ சோக கீதம் வாசிக்க ஆரம்பிச்சிடாத. உனக்காக அண்ணன் உங்க வீட்டுக்கு வந்து 10 டேஸ் தங்க ஒத்துக்கிட்டார். அதுவே பெரிய விஷயம் தான.

 

ஆரணி கூறுவதும் சரி தான் என்பது போல் தோன்ற யாழினி இதை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. மறுநாள் குலதெய்வ கோவிலுக்கு அனைவரும் கிளம்பி செல்ல, யாழினி அழகான பட்டுப்புடவை உடுத்தி இருந்தாள்.

 

அபிமன்யுவையும் வேட்டி சட்டை அணிய வேண்டும். அது தான் பொங்கல் வைக்கும் முறை என்று கூறி விட. வேறு வழி இன்றி கடினப்பட்டு வேட்டியுடன் மல்லுக் கட்டி ஒரு வழியாக அணிந்து கொண்டான்.

 

வெண்ணிலா தம்பதியினர் நேராக குலதெய்வ கோவிலுக்கு வருவதாக கூறிவிட. இவர்கள் மட்டும் கிளம்பி கோவிலை அடைந்தனர். இவர்கள் சென்ற சற்று நேரத்திற்குள் ஜீவாவும், அவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தான்.

 

ஜீவா, வெண்ணிலா உடன் அவனுடைய அம்மா, அப்பாவும், ஸ்வேதா என அனைவரும் வந்திருந்தனர். ஸ்வேதாவை யாழினி சற்றும் இங்கே எதிர்பார்க்கவில்லை.

 

யாழினி ஓடிச்சென்று  ஸ்வேதாவை அணைக்கும் வேளை, போ டி. என்கிட்ட பேசாத. என்னை வந்து பாக்கணும்னு உனக்கு தோணவே இல்லல்ல. இப்போ நான் மட்டும் வரலைனா, நீ வந்து என்னை பார்த்து இருக்கவே மாட்ட என்றாள் கோபமாக.

 

அப்படி எல்லாம் இல்ல டி. வீட்டுக்கு ரொம்ப நாள் கழிச்சு வந்தனா, கொஞ்சம் வேலை.. அப்படியே போயிடுச்சு.

 

நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். கல்யாணம் ஆன பிறகு நீ ரொம்பவே மாறிட்ட யாழ்.

 

நான் எங்க மாறுனேன். எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு முடிவெடுக்குறாங்க. அவங்க சொல்றதை நான் செய்யறேன். அவ்வளவு தான்.

 

இவர்களின் பேச்சு ஒரு புறம் சென்று கொண்டிருக்க.

 

சுப்பிரமணி, என்ன மச்சான், கோவிலுக்கு வரர்தா சொல்லவே இல்லையே. மாப்பிள்ளை கூட சொல்லல.

 

மாணிக்கம், திடீர்னு தான் முடிவு பண்ணோம். சரி, கல்யாணத்துக்கு முன்னாடி நாமளும் பொங்கல் வைக்கலாம்னு தோணுச்சு. நல்ல காரியம் பண்றதுக்கு முன்னாடி பொங்கல் வைக்கிறது நல்லது தான. அதான் கிளம்பிட்டோம்.

 

அதுவும் சரி தான்.

 

பொங்கல் வைத்து முடித்துவிட்டு சாமி கும்பிட்டவுடன், இளையவர்கள் அனைவரும் ஒருபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க. பெரியவர்கள் அனைவரும் மறுபுறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

ஸ்வேதா, சொல்ல மறந்துட்டேன். உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.

 

யாழினி, சர்ப்ரைஸா.. என்ன சர்ப்ரைஸ்.

 

வெண்ணிலா அண்ணி காலேஜ்ல ஜாயின் பண்ணி இருக்காங்க.

 

நிஜமாவா அக்கா.

 

ஸ்வேதாவின் திருமணத்திற்குள் யாழினியை அபிமன்யு என்ன பாடு படுத்தப் போகிறானோ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5