அவனதிகாரம் - 63

 

அதிகாரம் – 63

 

அபிமன்யுவின் இந்த மாற்றம் யாழினி சற்றும் எதிர்பாராதது. இவ்வளவு விரைவில் அபிமன்யு மாறுவான் என்று யாழினி நினைத்துப் பார்க்கவே இல்லை. மகிழ்ச்சியில் அவளின் கால்கள் தரையில் நிற்கவே இல்லை.

 

யாழினி, நான் இதை ஆரணிகிட்டயும், ஆரியன்கிட்டயும் காட்டிட்டு வரேன் என்றபடி வெளியே செல்ல எத்தனித்தவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன்.

 

நான் உனக்கு கிப்ட் கொடுத்தேன்ல பதிலுக்கு நீ எனக்கு எதுவுமே தரல.

 

உங்ககிட்ட தான் எல்லாமே இருக்கே என்ன வாங்கி தரர்து.

 

கிஃப்ட்னா வாங்கி தான் தரணும்னு இல்ல, மனசு வச்சா தரலாம் என்றான் இழுத்தபடி.

 

யாழினி, அபிமன்யுவின் எதிர்பார்ப்பு புரியாமல் பார்க்க. அபிமன்யு யாழினியை நோக்கி ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து முன்னேறினான்.

 

யாழினி என்ன என்று பார்த்தபடி பின்னோக்கி நகர. இறுதியில் சுவற்றில் முட்டியபடி நின்றாள்.

 

யாழினியை சுற்றி வளைத்தபடி தன் இரு கைகளையும் அரண் போல் அவளுக்கு இரு பக்கமும் சுவற்றில் வைத்தவன், அவளின் முகம் நோக்கி குனிந்து, கிப்ட் நீயே தரியா இல்ல, நானே எடுத்துக்கவா.

 

அபிமன்யுவின் எண்ணம் புரியவும், யாழினிக்கு வயிற்றுக்குள் பல பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கின. படபடவென இதயம் தாளமிட, விழியோ ஒரு இடம் நிலைத்து நில்லாது நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தது.

 

யாழினியின் அவஸ்தையை அதிகரிக்க செய்து தனக்கு தேவையான பரிசு பொருளை பெற்றுக் கொண்டே அவளை அறையை விட்டு வெளியே செல்லவிட்டான்.

 

அறையை விட்டு வெளியே வந்தவள் நேராக தனிமையைத் தேடி மொட்டை மாடிக்கு விரைந்தாள்.

 

இன்னும் படபடப்பு குறையவில்லை.

 

இதோ, இதயத்தில் மேளம் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது.

 

பட்டாம்பூச்சிகள் வேகமாக படபடவென இன்னும் பறந்து கொண்டு தான் இருக்கிறது. தன் நெஞ்சின் மீது கையை வைத்து தன்னை சற்று ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தவளிற்கு வெட்க சிரிப்பு மட்டும் உதட்டில் நிலைத்துவிட்டது.

 

யாழினி மாடிக்கு செல்வதை பார்த்த ஆரியன், ஆரணியையும் அழைத்துக் கொண்டு இவளை பின்தொடர்ந்து வந்தான்.

 

ஆரியன், இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?”.

 

தனக்கு பின்னே கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பிய யாழினி இவர்களை கண்டு சற்று ஆசுவாசம் அடைந்தபடி, ச்ச.. நீங்க தானா பயந்துட்டேன்.

 

ஆரியன், யாரு.. நீ எங்களை பாத்து பயந்துட்டியா.. இதை நாங்க நம்பனும். எங்க அண்ணனையே ஆட்டிப்படைக்கிற உனக்கு நாங்க எல்லாம் ஜுஜுபி மாதிரி.

 

நான் என்ன பண்ணேன்?.

 

இப்படி அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு பேசுனா நான் உன்னை நம்பிடுவேனா.. அன்னைக்கு என்னடானா எங்க அண்ணனை மாமானு கூப்பிடுற, உடனே கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்ற. இப்போ இப்படி தனியா வந்து நின்னுகிட்டு வெக்கப்படுற. உங்களுக்குள்ள என்ன நடக்குதுனு எங்களுக்கு ஒன்னும் புரியாம மண்டையை பிச்சுக்கலாம் போல இருக்கு.

 

ஆரணி, வெக்கப்படுறாளா... எங்கடா... என் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியல.

 

உனக்கு முதல்ல வெட்கப்படுறதுனா என்னனு தெரிஞ்சா தானே. இவ வெட்கப்படுறாளான்னு கண்டு பிடிப்ப. உனக்கு தான் அப்படினா என்னன்னே தெரியாதே.

 

ஆரியனின் முதுகில் இரண்டு போட்ட ஆரணி, உன்னை தான் பாட்டி இவங்களுக்கு நடுவுல என்ன நடக்குதுன்னு நோண்டாதன்னு சொல்லி இருக்காங்கல்ல. எதுக்கு சும்மா இவங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்க. கல்யாணம் ஆனவங்களுக்கு நடுவில ஆயிரம் இருக்கும். நீ சின்ன பையன், இதெல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத.

 

ஆரியன், அதுக்கு.. கல்யாணம் ஆனவங்க கல்யாணம் ஆகாத வயசு பையன் முன்னாடி பார்த்து நடந்துக்கணும். இப்படி எங்களை உசுப்பேத்துற மாதிரி ஏதாவது செஞ்சுக்கிட்டே இருந்தா, நான் என்ன பண்றது.

 

யாழினி இவர்கள் இருவரும் பேசுவதை மாற்றி மாற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆரியன், சரி இப்போ எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு தனியா சிரிச்சுகிட்டு இருந்த.

 

ஓ... அது... அதுவா... ஆங்.. இந்த போன் உங்க அண்ணன் எனக்கு கிப்ட் கொடுத்தார். இதை உங்ககிட்ட காட்டலாம்னு தான் வந்தேன். ஏதோ யோசனையில அப்படியே மேல வந்துட்டேன்.

 

ஆரணி, வாவ் சூப்பரா இருக்கு. டேய் இங்க பாருடா.. அண்ணா டேஸ்ட்டே வேற லெவல் போ.

 

ஆரியன் போனை பிடுங்கி பார்த்தவன், இது லேட்டஸ்ட் மாடல் டி. பார்த்தியா, நான் உன்கிட்ட அப்போவே சொன்னேன்ல. இவ நம்ம அண்ணனுக்கு ஏதோ வசிய மருந்து வச்சுட்டாடி. இவ்வளவு காஸ்ட்லியான போனை உனக்கு அண்ணன் எப்படி வாங்கி கொடுத்தார் என்று யாழினியிடம் கேள்வி எழுப்பினான்.

 

தெரியல, அவர் தான் வாங்கி கொடுத்தார். அது மட்டும் இல்ல, இனிமே என்னை யார்கிட்ட வேணும்னாலும் இந்த போன்ல பேசிக்கலாம்னு சொல்லிட்டார். எங்க வீட்லயும் பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு தெரியுமா.

 

ஆரியன், போச்சு.. எல்லாம் போச்சு.. இவ நம்ம அண்ணனை மொத்தமா மாத்திட்டா. சிரிக்கவே தெரியாத ரோபோட் மாதிரி எங்க வீட்ல வளர்ந்த அண்ணனை எப்படி உன் கைக்குள்ள போட்டியோ தெரியல. உன் இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கிற இல்ல. இதுக்கு தான் இந்த பொண்ணுங்களை கல்யாணமே பண்ண கூடாது.

 

ஆரணி, அப்போ நீ பொண்ண கல்யாணம் பண்ணாம என்ன பையனையா கல்யாணம் பண்ண போற?.

 

ஆரியன், நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். அப்படியே பண்ணாலும், நான் ஒன்னும் அண்ணனை மாதிரி கிடையாது. ஸ்டெடியா இருப்பேன். யார் நினைச்சாலும் என்னை மயக்க முடியாது.

 

ஆரணி, பார்ப்போம்... பார்ப்போம்... அண்ணனே மாறிட்டாரு. நீ எல்லாம் எம்மாத்திரம்.

 

இவர்களின் உரையாடல் இங்கே நடந்து கொண்டிருக்கும் போதே கீழே அபிமன்யு, ஓ காட்! இதை நான் எப்படி மறந்தேன் என்று தன் தலையில் கையை வைத்தபடி அமர்ந்தான்.

 

இப்போ என்ன பண்றது. காலேஜுக்கு வேற அட்மிஷன் வாங்கிட்டேன். திரும்ப அவ பாட்டிகிட்ட பேசி பார்க்கலாமா... ச்ச.. ச்ச.. நான் போய் எப்படி.. அவங்ககிட்ட.. என்று யோசித்தவனிற்கு தன்னுடைய ஈகோவை விட யாழினியின் உயிரே முக்கியம் எனப்பட்டது.

 

அன்னைக்கு அவளோட பாட்டி ஒன் இயர்குள்ள அவளுக்கு குழந்தை பிறக்கணும், இல்லைனா அவளுடைய உயிருக்கே ஆபத்துன்னு சொன்ன விஷயத்தை எப்படி நான் மறந்தேன். இப்போ என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலையே என்று அந்த அறையையே நடையினால் அளந்துக் கொண்டிருந்தவன்.

 

அப்படி குழந்தை பெத்துக்குற அளவுக்கு அவளுக்கு இன்னும் வயசு கூட ஆகலையே. அவளே இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்கா என்று எண்ணுகையில் அபிமன்யுவின் இதழோரம் மெல்லிய புன்னகை ஒன்று ஒட்டிக்கொண்டது.

 

இனி சிந்தித்து நேரத்தை வீணாக்க கூடாது என்று எண்ணியவன் தன் போனை எடுத்து யாழினியின் பாட்டிக்கு முயற்சித்தான்.

 

மூன்று ரிங்கில் போனை எடுத்த மரகதம் பாட்டி, ஹலோ.. ஹலோ.. யார் பேசுறது? என்று அந்த பக்கம் கத்திக் கொண்டிருக்க.

 

அபிமன்யுவிற்கு சில மணித்துளிகள் தயக்கத்தில் கழிந்தது. பின்பு ஒருவாறு, ஹலோ என்றான்.

 

யாருப்பா, என்ன வேணும்?.

 

நான் அபி பேசுறேன்.

 

அபியா... எந்த அபி? என்றார் யோசனையாக.

 

நான் யாழினியோட புருஷன் என்று சொல்லும்போதே இதழோரம் மெல்லிய புன்னகை, என்னோட ஐடன்டிட்டியவே மாத்திட்டா. அபினு சொன்னாலே எல்லாருக்கும் தெரியும். ஆனா, இப்போ யாழினி புருஷன்னு சொன்னா தான் தெரியுது என்று நினைத்தான்.

 

மரகதம் பாட்டிக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகளே எழவில்லை, சொல்லுங்க தம்பி.

 

நீங்க சொன்னது உண்மையா?.

 

நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலையே.

 

அன்னைக்கு சொன்னீங்கல்ல யாழினிக்கு  ஜாதகத்தில் ஏதோ பிரச்சனைனு.

 

ஓ அதுவா.. என்று இழுத்தவர் என்ன கூறுவது என்று தெரியாமல், ஆமா.. உண்மை தான்.

 

யாழினிக்கு இப்போ குழந்தை பெத்துக்குற வயசு கிடையாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நாங்க நினைக்கிறோம். இப்போ தான் அவளுக்கு காலேஜ்ல அட்மிஷன் வேற கிடைச்சிருக்கு. அதனால, உங்க ஊரு ஜோசியர்கிட்ட கேட்டு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருந்தா சொல்லுங்க.

 

ம்ம்.. சரிங்க தம்பி கேட்டுட்டு சொல்றேன் என்று போனை அணைத்தவர், நல்ல வேளை தப்பிச்சோம். உண்மை மட்டும் தெரிஞ்சு இருந்துச்சு அவ்வளவு தான். இருக்க பிரச்சனையில இது வேற புது பிரச்சனையா போயிருக்கும். என்ன பரிகாரம் சொல்றதுன்னு ஒன்னும் புரியலையே. சரி, எதையாவது யோசிச்சு சொல்லுவோம்.

 

ஏற்கனவே இவளை காலேஜுக்கு அனுப்புறது ஏதோ சின்ன குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி இருக்கு. இதுல இவளுக்கு ஒரு குழந்தையா.. இரண்டு குழந்தையை வச்சு சமாளிக்கிற அளவுக்கு எனக்கு இப்போ தெம்பு இல்ல. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

 

அப்போது அறையினுள் நுழைந்த யாழினி, நான் எல்லார்கிட்டயும் போனை காட்டிட்டேன். எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்க.

 

சரி இங்க வா.

 

யாழினி அவன் அருகில் சென்று, சொல்லுங்க.

 

குழந்தை பெத்துக்குறது பத்தி நீ என்ன நினைக்கிற.

 

குழந்தை பிறக்க போகுதா யாருக்கு?.

 

நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. இப்போ நமக்கு குழந்தை பிறக்க போகுதுன்னு வச்சிக்கோ. உனக்கு ஓகேவா?.

 

யாழினி அதிர்ச்சியாக தன் கண்களை விரித்தபடி, குழந்தையா.. நமக்கா? என்று சிந்தித்தவள், இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு. குழந்தை பிறந்துட்டா அப்புறம் காலேஜுக்கு போய் படிக்க வேண்டாம்ல. சரினு சொல்லிடுவோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்க.

 

அபிமன்யு, நீ என்ன யோசிக்கிறனு எனக்கு தெரியும். குழந்தை பிறந்தாலும், பிறக்கலைனாலும் நீ காலேஜ் போய் தான் ஆகணும்.

 

ஆனா, குழந்தை எல்லாம் வச்சுக்கிட்டு காலேஜ் போனா கஷ்டமா இருக்குமே. நான் போயிட்டா யார் பார்த்துப்பா.

 

அந்த கவலை உனக்கு வேண்டாம். அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

 

அப்போ எனக்கு குழந்தையே வேண்டாம்.

 

வெரி குட். நானும் இதை தான் நினைச்சேன்.

 

என்ன இவன்.. குழந்தை வேண்டும் என்கிறான். இப்போ வேண்டாம் என்கிறான். ஒண்ணுமே புரியலையே குழப்பமாக யோசிக்க.

 

இன்னும் 2 டேஸ்ல காலேஜ் ஸ்டார்ட் பண்ண போறாங்க. கெட் ரெடி

 

இன்னும் 2 டேஸ் தானா. நீங்க ஏன் என்னை இப்படி படிக்க வைக்கணும்னு அடம் பிடிக்கிறீங்க. இனிமே, நான் படிச்சு என்ன பண்ண போறேன்.

 

என்னோட வைஃப் ட்வல்த் மட்டும் படிச்சா போதாதுனு நான் நினைக்கிறேன். யாரும் கிண்டல் பண்ற மாதிரி என் வைஃப் கிட்ட எந்த ஒரு விஷயமும் இருக்கக்கூடாது. எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனும்.

 

அதுக்கு படிச்ச பொண்ணா பார்த்து நீங்க கல்யாணம் பண்ணனும். என்னை ஏன் பண்ணீங்க?என்று சட்டென்று கேட்டுவிட்டாள்.

 

நான் என்ன பண்றது, படிச்ச பொண்ணுங்களை எல்லாம் எனக்கு பிடிக்கல. உன்னை தான் பிடிச்சிருக்கு. இங்க பாரு, உனக்கு படிப்பு விஷயத்துல எந்த ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்றேன். ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. சும்மா படிக்காம ஓபி அடிக்கலாம்னு நினைக்காத.

 

யாழினி மனதிற்குள், என்னோட வாழ்க்கை லட்சியத்தையே இப்படி நடக்க விடாம செஞ்சிட்டானே ராட்சசன் என்று திட்டியபடி உறங்கினாள்.

 

மறுநாள் மரகதம் பாட்டி அபிமன்யுவிற்கு ஃபோன் செய்ய ஹலோ என்றான் அபிமன்யு.

 

நீங்க சொன்ன மாதிரி பரிகாரம் இருக்குதாம் தம்பி.

 

அபிமன்யு ஆர்வமாக, அப்படியா! என்ன அது?.

 

எங்க ஊர் கோவிலுக்கு நீங்க ரெண்டு பேரும் ஜோடியா வந்து கோவில் அரச மரத்துல தொட்டில் கட்டனுமாம்.

 

அவ்வளவு தானா.. இது மட்டும் செஞ்சா போதுமா.

 

ஆமா பா இது மட்டும் செஞ்சா போதுமாம். ஆனா... என்று இழுத்தார்.

 

எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க.

 

அது வந்து... தம்பி...  நீங்க ரெண்டு பேரும் தொடர்ந்து பதினொரு நாள் இங்க வந்து தொட்டில் கட்டினால் தான் இந்த பரிகாரம் நிறைவேறுமாம்.

 

என்னது 11 நாளா....! 11 நாள் எப்படி... அதெல்லாம் சரி வராது.

 

இல்லைனா குழந்தை பெத்துக்குறது தவிர வேற வழியே இல்லையாம் பா.

 

சரி வைங்க என்று வெடுக்கென்று ஃபோனை வைத்தவன். 11 நாள் எப்படி அவ வீட்ல போய் தங்குறது. இன்னும் டூ டேஸ்ல காலேஜ் வேற ஸ்டார்ட் ஆக போகுதுஎன புலம்பிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

பிறகு, சரி காலேஜ் லீவ் வந்தா போய்க்கலாம் என்ற முடிவோடு தன் வேலைகளை பார்க்க சென்று விட்டான்.

 

இப்பொழுதெல்லாம் ஷைலஜா யாழினியை பார்த்தாலே புன்னகை செய்கிறாள்.

 

ஏனென்றால், யாழினி அபிமன்யுவை விட்டுப் பிரிந்ததும், இவள் அபிமன்யுவை திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா.. ஆனாலும், தன் தாய்க்கு இது தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.

 

ஏனென்றால், அவருக்கு ஷைலஜாவை ஆரியனுக்கு திருமணம் முடிப்பதில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. ஆனால், ஷைலஜா எவ்வளவு ஸ்விட்சு போட்டாலும் ஆரியனிடம் தான் பல்பு எரியவே இல்லை. அதில் நொந்து போனவள் மீண்டும் அபி இடமே வந்து நின்றாள்.

 

இப்பொழுதெல்லாம் யாழினிக்கு யாராவது அபிமன்யுவை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினால் ஏன் என்று தெரியாமல் கோபம் வருகிறது.

 

முன்பெல்லாம் இப்படி கிடையாது, யாராவது அவனை விரும்புகிறேன் என்று சொன்னால் இவனை எல்லாம் எப்படி விரும்புகிறார்கள் என்று யோசிப்பாள். இப்போது இவனையே ஏன் எல்லோரும் விரும்புகிறேன் என்று கூறுகிறார்கள் என்று கோபப்படுகிறாள்.

 

அந்த கோபத்தில் அறைக்கு சென்றவள், இங்க பாருங்க, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் அபிமன்யுவிடம்.

 

என்ன கோவமா இருக்கியா? என்றான் வெறுப்பேற்றுவது போல்.

 

அதெல்லாம் ஒன்னும் இல்ல. நமக்குள்ள ஒரு அக்ரீமெண்ட் போட்டுக்கலாமா?.

 

அக்ரிமெண்ட்டா.. என்ன அக்ரிமெண்ட்?.

 

நீங்க சொல்ற மாதிரி நான் காலேஜுக்கு போக சம்மதிக்குறேன். ஆனா, அதுக்கு எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு.

 

அபிமன்யு தன் பேண்ட் பாக்கெட்டினுள் கையை விட்டபடி, என்ன கண்டிஷன்? என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி.

 

நான் காலேஜ் போகணும்னா இனிமே நீங்க எந்த பொண்ணுகிட்டயும் பேசக்கூடாது.

 

வாட்! என்ன பேசுற நீ?.

 

ஆமா, இனிமே எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணா தான் நான் காலேஜ் போவேன்.

 

என்ன விளையாடுறியா நீ. என் கம்பெனியில எத்தனையோ லேடிஸ் வொர்க் பண்றாங்க. அவங்ககிட்ட பேசாம நான் எப்படி வேலை வாங்க முடியும்.

 

எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க பேசினா உடனே எல்லாரும் உங்களை லவ் பண்றேன்னு என்கிட்ட வந்து சொல்லுவாங்க. எனக்கு தேவை இல்லாம டென்ஷன் ஆகும். இதெல்லாம் தேவையா?”.

 

இப்போ யாரு உன்கிட்ட என்னை லவ் பண்றேன்னு சொன்னாங்க நீ இப்படி டென்ஷன் ஆகுற?.

 

ஏற்கனவே வீட்ல ஒருத்தவங்க சொல்றாங்க. இப்போ ஆபீஸ்லயும் சொல்லிட்டாங்க. இனிமே என்னை காலேஜ்ல விட போறேன்னு நீங்க வர போக இருந்தா அங்க இருக்க பொண்ணுங்களும் சொல்லுவாங்க.

 

அபிமன்யுவிற்கு யாழினியின் வாக்குவாதத்தில் சிரிப்பு வர.

 

யாழினி கோபமாக, என்ன சிரிக்கிறீங்க. என்னை பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா. இனிமே தேவையில்லாம எந்த பொண்ணுகிட்டயும் பேச மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க.

 

என்னை பார்த்தா பொண்ணுங்ககிட்ட கடலை போடுற ஆள் மாதிரி தெரியுதா?என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி.

 

அது தான் எனக்கும் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. இப்படி சிடுமூஞ்சி மாதிரி இருக்கீங்க. உங்கள போய் எப்படி எல்லாரும் லவ் பண்றாங்க.

 

அதை நீ அவங்ககிட்ட தான் கேட்கணும்.

 

சரி, யாரு எப்படி போனா எனக்கென்ன. நீங்க ஒழுங்கா இருந்தா போதும்.

 

நான் ஒழுங்கா தான டி இருக்கேன்.

 

ஒழுங்கா தான் இருக்கீங்க. இனிமேலும், அதே மாதிரியே இருக்கணும்

 

அது உன் கையில் தான் இருக்கு.

 

என் கையிலையா? நான் என்ன பண்றது?.

 

எனக்கு தேவைப்படும்போது கிடைக்க வேண்டியது கிடைச்சா நான் ஏன் வேற யார்கிட்டயும் பேச போறேன் என்றபடி யாழினியை நோக்கி ஒரு அடி முன்னேற.

 

யாழினி அபிமன்யுவின் எண்ணத்தை புரிந்து கொண்டவள், சரி, சரி. எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. காலேஜ் போறதுக்கு நிறைய திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு. நான் ஆரணியை போய் பார்க்கிறேன் என்றபடி ஓடிவிட்டாள்.

 

அபிமன்யுவிற்கு பாட்டி கூறிய பொய் தெரிய வருமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5