அவனதிகாரம் - 65
அதிகாரம் – 65
கயல்விழி
தன் தந்தையுடன் பேசி விட்டு கோபமாக தன் கணவன் வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக
அறைக்கு சென்றாள். அவளால் இன்னமும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எப்படி
அவர்கள் முடியாது என்று கூறலாம். நான் அவர்களுடைய மகள் இல்லையா.. நான் அவர்களுக்கு
முக்கியம் இல்லையா.. என்னுடைய வருத்தம் அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லையா என்று
பல கேள்விகளும், குமுறல்களுமாக நேரத்தை செலவிட்டவள்.
யாரோ
கதவை தட்டும் ஓசையில் தன் சிந்தை கலைந்து எழுந்து சென்று கதவை திறந்தாள். வெளியே
அவளின் மாமியார் தமிழ்ச்செல்வி தான் நின்று கொண்டிருந்தார்.
தமிழ்ச்செல்வி,
“டீ, காபி ஏதாவது குடிக்கிறியா மா.
வந்ததிலிருந்து உள்ளேயே இருக்கியே அதான் ஏதாவது வேணுமானு கேட்டுட்டு போகலாம்னு
வந்தேன்”.
கயல்விழி,
“ஏன் நான் கொஞ்ச நேரம் நிம்மதியா
இருக்க கூடாதா. உடனே இது வேணுமா, அது வேணுமானு கேட்டுகிட்டு வந்துடுங்க”.
கயல்விழியின்
வாதம் வெளியே ஹாலில் அமர்ந்திருந்த ராமலிங்கத்திற்கும், மகேஷிற்கும் தெளிவாக
கேட்க. மகேஷ் கோபமாக எழுந்து அறையை நோக்கி வந்தான்.
மகேஷ், “என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன்
மனசுல. வர வர ரொம்ப அதிகமா பேசுற நீ. உனக்கு வெளியில் ஏதாவது பிரச்சனைனா அதை
வெளியில் வச்சுக்கோ. எங்க அம்மா கிட்ட காட்டுற வேலை வச்சுக்காத. அவங்க இப்போ என்ன
கேட்டுட்டாங்க.
எதுவும்
சாப்பிடாம இருக்கியேன்ற அக்கறையில் தான கேட்டாங்க. உன்னை சமைச்சு தர சொல்லியா
கேட்டாங்க. வீட்ல வேலை தான் ஒன்னும் பண்றது கிடையாது. பெரியவங்களுக்கு மரியாதை
கொடுக்க கூட தெரியாதா” என்று சரமாரியாக திட்டி
விட்டான்.
கயல்விழிக்கு
தன் மாமியார், மாமனார் முன்னிலையில் தன் கணவன் பேசியது மேலும் மன உலைச்சலை தர.
கயல்விழியும்,
“இப்போ நான் என்ன பேசிட்டேன். ஏன்
கொஞ்ச நேரம் நான் தனியா ரூம்ல இருக்க கூடாதா. எனக்கு இந்த வீட்டில் பிரைவசி
கிடையாதா”.
மகேஷ்
தன் தாயிடம், “அம்மா நீங்க வாங்க. அவளுக்கு
பசிச்சா சாப்பிட்டுக்க தெரியும். அவ என்ன குழந்தையா, நீங்க இடுப்பில் தூக்கி
வைத்து சோறு ஊட்ட. அவளுக்கு வேணும்னா அவ சாப்பிட்டுப்பா மா. இனிமே, இவளுக்கு என்ன
தேவையினாலும் அதை இவளே தான் செஞ்சுக்கணும். நீங்க அவளுக்காக ஒரு வேலை செய்யுறதை
நான் பார்த்தேனா அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு தன் தாயின் கையை பிடித்து அழைத்து சென்று
விட்டான்.
கயல்விழிக்கு
பெறும் அவமானம் ஆகிப்போனது. கல்லூரிக்கு செல்லவும், சாயந்திர நேரத்தில் வேலைக்கு
செல்லவுமே சிரமப்படுபவள். காலை சீக்கிரம் எழுந்து மதிய உணவையும் தயார் செய்து
எடுத்து செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்று நொந்துவிட்டாள்.
உடனே
தன் மாமியாரிடம், “சாரி அத்தை. ஏதோ கோவத்துல
பேசிட்டேன். எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க”.
மகேஷ், “கோவம்னா என்னை பேசினா நான்
பொறுத்துப்பேன். அதுக்காக என் வீட்டு ஆளுங்க கிட்ட எல்லாம் இப்படி நடந்துக்குற
வேலை வச்சுக்காத கயல். இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்”.
கயல்விழி,
“சாரி மகேஷ்” என்று விட்டு அறைக்கு சென்று விட்டாள்.
தமிழ்செல்வி,
“சரி விடுப்பா. ஏதோ கோவத்துல
பேசிட்டா போலருக்கு. அதான் மன்னிப்பு கேட்டுட்டாளே. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை”.
“நீங்க தேவையில்லாத பிரச்சனைனு
நினைச்சு ஒதுங்கி போறதால் தான் மா அவ ரொம்ப ஆடுறா. அவ என்ன செஞ்சாலும் இப்படி வாயை
மூடிக்கிட்டு அமைதியா இருக்காதீங்க”.
“என்னப்பா பண்றது. அவ வசதியா
வளர்ந்த பொண்ணு நம்ம வீட்டு சூழ்நிலையை ஏத்துக்க கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்.
போக போக அவளே புரிஞ்சுக்குவா. அவளுக்கும் நாம கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும்ல”.
“நானும் அதுக்காக தான் மா அவ என்ன
சொன்னாலும் பொறுத்துக்கிட்டு போறேன். அதுக்காக அவ பண்ற எல்லா விஷயத்துக்கும்
பொறுத்துக்கிட்டு போக முடியாதுல்ல. இங்க நம்மகிட்ட கோவத்துல பேசுறான்றது கூட
பரவாயில்ல. அவங்க வீட்டுக்கு போய் நமக்கு வீடு வாங்கி தர சொல்லி கேட்குறாமா” என்றான் ஆற்றாமையாக.
தமிழ்செல்வி
அதிர்ச்சியாக, “என்னப்பா சொல்ற?”.
“ஆமா மா. அப்பாவுக்கு எல்லா
விஷயமும் நான் முன்னாடியே சொல்லிட்டேன். வர வர அவளுடைய நடத்தையே சரியில்ல. அவ
அவங்க குடும்பத்துல சேர்ந்ததுக்கு அப்புறம் அவங்க அக்காவும், தங்கச்சியும் வசதியா
வாழுறதை பார்த்துட்டு நம்ம தான் கஷ்டப்படுகிறோம்னு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு.
அதனால்
தான் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா. அவங்களுக்கு சரிக்கு சமமா வரணும்னு
நினைக்கிறது எல்லாம் சரி தான். அதுக்காக உடனே வரணும்னா நம்ம என்ன கொள்ளையா
அடிச்சுக்கிட்டு வர முடியும். நமக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும்ல. இதைப் பத்தி
நான் அவகிட்ட பலமுறை பேசி பாத்துட்டேன். ஆனா, அவ ஒத்துக்குறதா இல்ல. இன்னைக்கு
நேரா அவங்க அப்பா வீட்டுக்கு கிளம்பி போயிட்டா”.
தமிழ்ச்செல்வி,
“அச்சச்சோ! அவங்க நம்மளை பத்தி
என்னப்பா நினைச்சிருப்பாங்க. நம்ம தான் கேட்க சொல்லி அனுப்பி இருக்கோம்னு
நினைச்சுக்க மாட்டாங்களா. ஏன் பா இவ இப்படி எல்லாம் பண்றா”.
மகேஷ், “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்கம்மா. இவ
போறதுக்கு முன்னாடி நான் காலையிலேயே போய் அவங்க அப்பாவை பார்த்து உங்க பொண்ணு
இப்படி எல்லாம் பண்றா. வீட்ல இந்த மாதிரி எல்லாம் நடந்துக்குறா. அவ பேசுறதுக்கும்,
எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. அவளுக்குன்னு நீங்க எதுவும் செய்ய வேண்டாம்
என் பொண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்னு சொல்லிட்டேன்”.
இவர்களின்
பேச்சு வார்த்தையை அறையில் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்த கயல்விழியின் காதில்
மகேஷின் வார்த்தைகள் விழ பத்திரகாளியாக மாறிவிட்டாள்.
கோபமாக
அறையிலிருந்து விறு விறுவென வெளியே வந்தவள் மகேஷிடம், “ஓ..! எல்லாரும் ஒன்னு கூடிக்கிட்டு தான் இப்படி எல்லாம்
பண்றீங்களா. நான் போய் எங்க வீட்ல பேச போறேன்னு சொன்ன உடனே எனக்கு முன்னாடி நீங்க
போய் எதுவும் தரக்கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க. அதனால் தான் எங்க அப்பா எதுவும்
தர முடியாதுன்னு சொல்லி என்னை முகத்தில் அடிச்ச மாதிரி திருப்பி அனுப்பி
இருக்கார். ஏன் இப்படி பண்றீங்க”.
மகேஷ், “என்னை வேற என்ன பண்ண சொல்ற. நீ ஒழுங்கா
இருந்தா உங்க அப்பாகிட்ட போய் கெஞ்சனும்னு எனக்கு என்ன தலையெழுத்தா. உன்னால் உங்க
அப்பா கிட்ட எல்லாம் நான் அவமானப்பட்டு நிக்கிறேன். அவர் என்னை பத்தி என்ன
நினைச்சிருப்பார்னு கொஞ்சமாவது யோசிச்சியா. உனக்கு உன்னோட சுயநலம் தான் இப்போ
பெருசா போச்சு இல்ல”.
கயல்விழி,
“சுயநலமா... நான் என்ன எனக்காக
மட்டுமா கேட்குறேன். ஏன் எங்க அப்பா எனக்கு வீடு வாங்கி கொடுத்தா அந்த வீட்டுல
நீங்களும் தான குடும்பமா வந்து உட்கார்ந்துக்க போறிங்க. அந்த வீட்ல நீங்களும் தானே
இருக்க போறீங்க. உங்களுக்காகவும் தானே சேர்த்து கேட்கிறேன்”.
மகேஷ், “தேவையே இல்ல கயல். இப்படி அடுத்தவங்க
கிட்ட கையேந்தி வாங்கிக்கிட்டு வர வீட்டுல ஜம்பமா உட்காரனும்னு நாங்க என்னைக்குமே
நினைச்சது கிடையாது. குறைஞ்ச வருமானமா இருந்தாலும், அதுல நிறைவா வாழ்ந்துகிட்டு
இருக்கோம். எங்களுக்கு இப்படி அடுத்தவங்க காசுல எந்த பொருளும் தேவையில்லை. அதுவும்
நீ கேட்டு வாங்கிக்கிட்டு வர எதுவும் எங்களுக்கு தேவையில்லை”.
கயல்விழி
கோபத்தில், “என்ன பேசுறிங்க மகேஷ் நீங்க.
போயும் போயும் உங்களை போய் காதலிச்சு கட்டுனேன் பாருங்க என்னை சொல்லணும்”.
தன்
மாமியார், மாமனாரின் முன்னிலையில் மகேஷிடம் நேருக்கு நேர் சண்டைக்கு நின்றாள்.
தமிழ்ச்செல்வி,
“சரி விடு மகேஷ். பிரச்சனை
வேண்டாம்”.
கயல்விழி,
“உங்ககிட்ட தான் ஒன்னும் இல்லையே,
ஒன்னும் இல்லாத வீட்டுப் பொண்ண பார்த்து லவ் பண்ண வேண்டியது தான. எதுக்காக வசதியான
வீட்டு பொண்ண பார்த்து லவ் பண்ணீங்க. அவ மூலமா சொத்து எல்லாம் கைக்கு வரும்னு தான.
இப்போ நல்லவங்க வேஷம் போடுறீங்களா”
என்று அனைவரையும் பார்த்து கேட்க.
அதில்
மகேஷிற்கு கோபம் ஏகத்துக்கும் ஏற. கோபத்தில் கயல்விழியை நோக்கி கை ஓங்கி விட்டான்.
ராமலிங்கம்,
“மகேஷ்..!” என்று குரல் கொடுத்தபடி எழுந்து நின்று விட்டார்.
அதில்
ஓங்கிய கை அந்தரத்திலேயே நிற்க, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்.
கோபம்
குறையாத குரலில் கயல்விழியை பார்த்து, “மரியாதையா
உள்ள போயிடு. தேவையில்லாமல் எதுவும் பேசி என்கிட்ட வாங்கிக்காத. என் அப்பா, அம்மா
பொண்ணுங்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு சொல்லிக் கொடுத்து தான் என்னை
வளர்த்திருக்காங்க. அதான் எவ்வளவு கோபம் வந்தாலும் வாயால் பேசிக்கிட்டு இருக்கேன்.
தேவையில்லாமல் வார்த்தையை விடாத”.
கயல்விழி,
“ஏன் நிறுத்திட்டீங்க அடிங்க.
அடிச்சாலும் என்னால் எங்க போக முடியும். போறதுக்கு எனக்கு ஏதாவது இடம் இருந்தால்
தான போக முடியும். எங்க அம்மா வீட்டுக்கு போனாலும், நீயே தேடிக்கிட்ட வாழ்க்கை நீ
தான் பார்த்துக்கணும்னு சொல்றாங்க. இங்கேயும் அடிக்க வரிங்க. என் வாழ்க்கையே நாசமா
போயிடுச்சு” என்று கண்களில் கண்ணீருடன்
புலம்பியபடி அறைக்கு சென்று விட்டாள்.
மகேஷ்
தன் தாய் தந்தையரின் முகத்தை பார்க்கவே சங்கடமாக தலை குனிந்த படி, “சாரிப்பா” என்று விட்டு வெளியே சென்று விட்டான்.
பெரியவர்கள்
இருவருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை. எப்படி இருந்த தங்கள் குடும்பம்
இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையோடு தங்களுக்குள்ளேயே உழன்றுக் கொண்டிருந்தனர்.
மீராவும்
மற்ற குடும்பத்தினர் அனைவரும் ஹாலில் அமர்ந்த படி டிவி பார்த்துக் கொண்டிருக்க.
யாழினி மட்டும் நிமிடத்திற்கு ஒருமுறை சாமி அறைக்கு செல்வதும் கைகூப்பி ஏதோ
வேண்டுவதும் பிறகு, வெளியே வருவதுமாக இருந்தாள்.
இதை
கவனித்துக் கொண்டிருந்த ஆரணி, “என்னம்மா இன்னைக்கு உங்க மருமக
ரொம்ப பக்தி பரவசம் ஆகிட்டா போலருக்கு. நிமிஷத்துக்கு ஒரு தடவை சாமிகிட்ட போய் ஏதோ
அப்ளிகேஷன் போட்டுட்டு வரா.”.
ஆரியன்,
“நானும் கவனிச்சுக்கிட்டு தான் டி
இருக்கேன். இப்போ என்ன பிளான் பண்றானு தெரியலையே. ஏற்கனவே, அண்ணனை மாத்திட்டா.
இப்போ, வேற என்ன புது பிளான்னு தெரியலையே”.
வள்ளியம்மை
பாட்டி, “சும்மா இருங்க ரெண்டு பேரும்.
அங்க பாரு ஆரணி, எப்படி யாழினி சாமி கும்பிடுறா. நீயும் தான் இருக்கியே கொஞ்சமாவது
உனக்கு பொறுப்பு இருக்கா. நீயும் போய் கும்பிடலாம்ல”.
ஆரணி, “பாட்டி ஒரு நாளைக்கு ஒரு தடவை, ரெண்டு
தடவை கும்பிட்டா பரவாயில்ல. அவளை பாருங்க, இப்படி போறா அப்படி வரா.. இப்படி போறா
அப்படி வரா.. இப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் சாமி கும்பிட்டு நான் என்ன
சன்னியாசியாவா போக போறேன். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி அவரை போய் டிஸ்டர்ப் பண்ண
கூடாது. அவருக்கே நிறைய பேருடைய பிராப்ளம்சை சால்வ் பண்ண வேண்டியது இருக்கும்.
இதுல நம்மளும் அவரை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தா மத்தவங்க பிரச்சனையை அவர் எப்படி
பார்ப்பார்”.
வள்ளியம்மை,
“ஏதாவது சொன்னா நல்லா வாய் கிழிய
பேசு”.
மீரா, “யாழினி இங்க வா”.
யாழினியைப்
பார்த்த ஆரணி சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுப்போனாள்.
ஆரியன்,
“ஆமா என்ன இது? நெற்றியில் கலர்
கலரா பூசி வச்சிருக்க”.
யாழினி,
“சாமி கும்பிட்டு வரேன். பார்த்தா
தெரியலையா”.
“சாமி கும்பிட்டுட்டு வரேன்னு
தெரியுது. எல்லா சாமியையும் சேர்த்து ஒரே நேரத்துல கும்பிட்டுட்டு வர போலருக்கு.
அப்படி என்ன வேண்டுதல்”.
“காலேஜ் போக போறேன்ல அதான்”.
வள்ளியம்மை
பாட்டி, “பார்த்தியா ஆரணி, நான் உன்கிட்ட
அப்போவே சொன்னேன்ல. படிப்பு மேல எந்த அளவுக்கு அக்கறை இருந்திருந்தா யாழினி இப்படி
சாமி கும்பிடுகிறா. நீயும் தான் இருக்கியே உனக்கும் தான் காலேஜ் திறக்கப் போறாங்க.
எங்கேயாவது சாமி கும்பிட்டு வரியா”.
ஆரணி, “இன்னும் டூ டேஸ் இருக்கே யாழ் காலேஜ்
திறக்க. இப்போவே ப்ரே பண்ணிக்கிட்டு இருக்கியே. ஃபர்ஸ்ட் டே ப்ரே பண்ணிட்டு காலேஜ்
போகலாம்ல”.
“இப்போவே ப்ரே பண்ணாலாவது என்னுடைய
வேண்டுதல் நிறைவேறுதானு பார்க்கலாம்னு தான் வேண்டிக்கிட்டு இருக்கேன்”.
ஆரியன்,
“அப்படி என்ன வேண்டுதல். காலேஜ்
சேர்வதற்கு முன்னாடியே காலேஜ் பர்ஸ்ட் வரணும்னு வேண்டிக்கிட்டு இருக்கியா”.
யாழினி,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உங்க
அண்ணன் எப்படியாவது மனசு மாறி காலேஜ் அட்மிஷன் வேண்டாம்னு சொல்லிடனும்னு
வேண்டிக்கிட்டு இருந்தேன்”.
இவள்
கூறியதை கேட்ட பாட்டியும், மீராவும் அதிர்ந்து பார்க்க. ஆரியனும், ஆரணியும்
வாய்விட்டு சிரித்தனர்.
ஆரணி
வள்ளியம்மை பாட்டியிடம், “பார்த்தீங்களா பாட்டி உங்க பேத்தி
அக்கறையா சாமி கும்பிட்டு இருக்கா”
என்றாள் நக்கலாக.
மீரா, “ஏன் யாழினி உனக்கு காலேஜ் போக விருப்பம்
இல்லையா”.
யாழினி,
“ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம்
இல்லத்த. நான் நல்லா தான் படிப்பேன் இருந்தாலும், காலேஜ் போகணும்னா என்னமோ பயமா
இருக்கு”.
மீரா, “இங்க வா. பக்கத்துல உட்காரு” என்று தன் அருகில் அமர வைத்தவர், “என்ன பயம் உனக்கு. படிக்க தான போற”.
யாழினி,
“அத்தை காலேஜ்ல ரேகிங் எல்லாம்
பண்ணுவாங்களாம். என்கூட ஸ்கூலில் படிக்கிற பொண்ணு சொல்லி கேட்டு இருக்கேன். அப்போ
எல்லாம் நம்ம என்ன காலேஜா படிக்க போறோம்னு விட்டுட்டேன். இப்போ காலேஜ் போகணும்னா
பயமா இருக்கு”.
மீரா, “அதெல்லாம் கிடையாது யாழினி. பாரு ஆரியன்
கூட தான் காலேஜ் போறான். அவன் காலேஜ்ல ரேகிங் எல்லாம் கிடையாது. இப்போ எல்லாம்
ராகிங் பண்ண கூடாதுனு எல்லா காலேஜ்லையும் ரூல்ஸ் போட்டுட்டாங்க. அதனால் நீ பயப்பட
தேவையில்லை”.
யாழினி,
“இருந்தாலும், எனக்கு காலேஜ் போகவே
பிடிக்கல அத்தை. நான் உங்க கூட வீட்டிலேயே இருக்கேனே”.
அப்பொழுது
அலுவலகத்தில் இருந்து அபிமன்யு வீட்டிற்குள் நுழைய, யாழினியின் வார்த்தை அவனின்
காதில் விழுந்தது.
அபிமன்யுவை
பார்த்த ஆரியன் வேண்டுமென்றே யாழினியிடம், “உனக்கு தான் விருப்பம் இல்லையே யாழினி. அப்புறம் ஏன் காலேஜ்
போற. பேசாமல் போகாமல் நின்னுடு”.
யாழினி,
“உங்க அண்ணன் விடமாட்டேங்குறாரே.
நான் என்ன பண்றது. காலேஜ் போய் தான் ஆகணும்னு ஒத்த காலில் நிக்கிறார்”.
ஆரியன்,
“அப்போ நீ என் அண்ணாவுக்காக தான்
காலேஜ் போறியா. உனக்கு விருப்பம் இல்லையா”.
யாழினி,
“ஆமா” என்றாள் கவலையாக.
ஆரியன்,
“சரி சரி. அதான் கடவுள் கிட்ட
வேண்டிக்கிட்டு கலர் கலரா நெற்றியில் பட்டையெல்லாம் போட்டு இருக்கல்ல. கண்டிப்பா
உன்னோட கோரிக்கையை கடவுள் நிறைவேத்திடுவார் கவலைப்படாத”.
அபிமன்யுவை
பார்த்த மொத்த குடும்பத்தினரும் அமைதியாக அமர்ந்திருக்க.
அபிமன்யு
நேராக யாழினியிடம் வந்தவன், “என்ன இது?” என்று அவளின் நெற்றியை கைகாட்டினான்.
அபிமன்யுவிற்கும்
உள்ளுக்குள் யாழினியின் தோற்றத்தை பார்த்து அடக்க முடியாமல் சிரிப்பு எழ, அதை
கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டுப்போனான்.
இருந்தும்,
அவனால் கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு பீறிட்டுக் கிளம்ப, அவனும் சத்தமாக
சிரித்து விட்டான். வெகு நாட்கள் கழித்து அபிமன்யு வாய்விட்டு சிரிக்கும் காட்சியை
அந்த குடும்பத்தினர் பார்க்கின்றனர். அனைவருமே ஆச்சரியமாக அபிமன்யுவை பார்க்க.
யாழினிக்கு
அபிமன்யு தன்னை கிண்டல் செய்வது போல் சிரிப்பதில் கோபம் எழுந்தது, “இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் கோபமாக.
அபிமன்யு,
“என்னடி இது?” என்று அவளின் முகத்தை காட்டி மேலும்
சிரிக்க.
“நான் சாமிக்கு வேண்டிக்கிட்டு
இருக்கேன். இப்படியெல்லாம் நீங்க சிரிச்சீங்கனா அப்புறம் தெய்வ குத்தம் ஆயிடும்”.
“இவ்வளவு பூசி வச்சிருக்கியே,
அப்போ பெரிய வேண்டுதலா”.
யாழினி
மனதிற்குள், “இவன் கிட்ட போய் உளறிட்டோமே. நம்ம
வேண்டுதலை சொன்னா அவ்வளவு தான்” என்று நினைத்தவாறு, “ரொம்ப பெருசாலாம் ஒன்னும் இல்ல. சும்மா
சின்ன வேண்டுதல் தான்” என்று சமாளித்தாள்.
யாழினியின்
வேண்டுதல் நிறைவேறுமா?
கருத்துகள்
கருத்துரையிடுக