அவனதிகாரம் - 76

 

 

அதிகாரம் – 76

 

கோபத்தில் பத்ரகாளியாக மாறி இருந்தாள் யாழினி. தன் கையில் இருந்த தலையணையால் மீண்டும் அடி வெளுக்கத் தொடங்கினாள் அபிமன்யுவை.

 

உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அவளை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க போறேன்னு என்கிட்டயே சொல்றீங்க என்று கேட்டுக் கொண்டே அடிக்க.

 

நிறுத்து டி குட்டிச்சாத்தான். சொன்னா கேளு, வலிக்குது.. நிறுத்துன்னு சொல்றேன்ல.

 

அடித்து அடித்து சோர்ந்து போன யாழினி சோர்வாக தலையணையை கீழே வீசிவிட்டு அதே கோபம் குறையாத முகத்தோடு கட்டிலில் அமர்ந்தாள்.

 

அவளின் அருகில் அமர்ந்த அபிமன்யு அவளின் தோளைச் சுற்றி கை போட, அதை வெடுக்கென்று தட்டிவிட்டாள் யாழினி.

 

அபிமன்யு மீண்டும் தன் கையை அவளின் தோளைச் சுற்றி போட.

 

இந்த முறை யாழினி எவ்வளவு முயன்றும் அவளால் அதை நகர்த்தக் கூட முடியவில்லை. அவ்வளவு வலுவாக இருந்தது.

 

அபிமன்யு, இங்க பாரு...

 

யாழினியிடம் எந்த ஒரு பதிலும் இல்லை. வேறு எங்கோ முறைத்தபடி அமர்ந்திருந்தாள்.

 

அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், என்னை பாருனு சொல்றேன்ல.

 

இதற்கும் எந்த பதிலும் இல்லை. ஆனால், முறைத்த பார்வை மட்டுமே அபிமன்யுவை நோக்கி.

 

நான் ஷைலஜாவை கல்யாணம் பண்ணுவேன்னு உனக்கு தோணுதா?.

 

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே. அப்புறம் என்ன எனக்கு தோன இருக்கு.

 

நான் சொன்னா நீ அதை அப்படியே நம்பிடுவியா?.

 

இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு நீங்களே உங்க வாயால சொல்லும் போது நம்பாம எப்படி இருக்க முடியும்?.

 

யாழினி நான் உன்கிட்ட பல தடவை சொல்லி இருக்கேன். நான் உன்னை மட்டும் தான் விரும்புறேன்னு. மத்தவங்க பேசுறத வச்சு நீ என்கிட்ட இப்படி சந்தேகப்பட்டு கேட்டா நான் என்ன பண்றது? சரி, என்ன பண்ணா நீ என்ன நடந்தாலும் என்னை சந்தேகப்படாம இருப்பனு சொல்லு, நான் பண்றேன்.

 

நீங்க பண்றது எல்லாமே சந்தேகப்படுற மாதிரி தான் இருக்கு. விருப்பம் இல்லனா காலையில சொல்லி இருக்க வேண்டியது தான.

 

இப்போ சொல்ல முடியாது யாழினி. அதான் நாளைக்கு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்ல. நாளைக்கு சொல்லுவேன்.

 

யாழினி உடைந்த குரலில், அதுக்குள்ள அவங்க எல்லாம் உங்க ரெண்டு பேருக்கும் எந்த மண்டபத்துல கல்யாணம் பண்றதுன்ற வரைக்கும் பேசி முடிச்சிடுவாங்க. அப்புறம் நீங்க சொன்னா என்ன, சொல்லலைனா என்ன? என்னும் பொழுதே யாழினியின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் உருண்டு கீழே விழுந்தது.

 

அவளின் கண்களை துடைத்துவிட்ட அபிமன்யுவிற்கு உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி. ஏனென்றால், இந்த கண்ணீர் தனக்கானதல்லவா...!

 

இன்று அவள் தன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்பதை அவள் கூறாமலே, அவளின் கோபத்தினாலும், அழுகையினாலும் அறிந்து கொண்டான்.

 

என் தாத்தாவை பத்தியும், அத்தையை பத்தியும் உனக்கு தெரியும்ல. அவங்க இப்படித் தான் ஏதாவது தேவையில்லாத பிரச்சனையை உண்டாக்கிக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு தேவை நம்ம ரெண்டு பேரும் பிரியணும். அவங்க சொல்றதை கேட்டு நீ இப்படி சந்தேகப்பட்டா அவங்க நினைச்சது நடந்த மாதிரி ஆகிடும்.

 

யாழினி கோபமாக அபிமன்யுவின் கையை தட்டி விட்டு, இப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க. உங்களுக்கு உங்க தாத்தாவை ரொம்ப பிடிக்கும். அதுக்காக அவர் என்ன செஞ்சாலும் நான் அமைதியாவே இருக்கணுமா?.

 

நான் எப்போ உன்னை அமைதியாக இருக்க சொன்னேன். அதான் காலையில என் தாத்தா கிட்ட அப்படி சண்டை போட்டியே.

 

அப்போ நான் என்ன சண்டைக்காரியா?.

 

அபிமன்யுவிடம் யாழினி இப்படி சரிக்கு சரியாக சண்டை போடுவது இதுவே முதல் முறை.

 

கோபத்தில் யாழினி அதை உணரவில்லை. அபிமன்யுவிற்கு மற்றவர்களிடம் பேசுவது போல் கோபமாக யாழினியிடம் பேச முடியவில்லை. இருவருமே முதல் முறை ஒருவருக்காக மற்றொருவர் தங்களை அறியாமலே தங்கள் சுயத்தை மாற்றிக் கொண்டனர்.

 

அபிமன்யு, யாழினியை எப்படி கையாள்வது என்று புரியாமல் திணறிப் போனான். எத்தனையோ கடினமான சூழ்நிலையில் கூட இலகுவாக யாழினியைக் கையாண்ட அபிமன்யுவிற்கு, இந்த சூழ்நிலையில் கையாள பெரும் கடினமாக இருந்தது.

 

அபிமன்யு, நாம நாளைக்கு உங்க வீட்டுக்கு போகலாம்.

 

கோபத்தில் அபிமன்யு கூறியதை சரியாக கவனிக்காத யாழினி, நான் எங்கேயும் வரமாட்டேன் என்றாள் வெடுக்கென்று.

 

அபிமன்யுவிற்கு தான் கூறியது அவளுக்கு சரியாக கேட்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. இல்லையென்றால், அவளின் அம்மா வீட்டிற்கு செல்லப் போகிறோம் என்றதும் இந்நேரம் துள்ளி குதித்து இருப்பாளே. இப்படி வரமாட்டேன் என்று கூறுகிறாளே என்று எண்ணியவன்.

 

மீண்டும் ஒருமுறை தன் குரலை சற்று கடினமாக மாற்றியபடி, யாழினி நாளைக்கு நாம உங்க அம்மா வீட்டுக்கு போறோம்.

 

யாழினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அன்று சுவேதாவின் திருமணத்தன்று கிளம்பி வந்தது. அத்தோடு தன் வீட்டின் பக்கம் அவள் செல்லவே இல்லை. அவர்களும் ஒரு முறை தான் வந்தார்கள். அதிலும், போன் பிரச்சனை.

 

ஃபோனின் வாயிலாக அவர்களுடன் பேசிக்கொள்வாளே தவிர, தங்கள் வீட்டிற்கு போக வேண்டும் என்றோ அல்லது, அவர்களை இங்கே வர வைக்க வேண்டும் என்றோ நினைத்ததே இல்லை.

 

இரண்டில் எது நடந்தாலும் அவமானம் அவர்களுக்கு தானே ஏற்படுகிறது. யாழினி தான் கேட்டது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, அம்மா வீட்டுக்கா?.

 

ஆமா.

 

யாழினிக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை. மீண்டும் சந்தேகமாக, என்னோட அம்மா வீட்டுக்கா?.

 

அபிமன்யு பெருமூச்சு விட்டபடி, இன்னும் எத்தனை தடவை கேட்ப. அதான் ஆமானு சொல்லிட்டேன்ல. பேக்கிங் எல்லாம் பண்ணிக்கோ. நாளைக்கு போறோம்.

 

இங்க இருந்தா தானே சண்டை போடுறோம்னு அம்மா வீட்ல போய் விட்டுட்டு வரலாம்னு பிளான் பண்றாரோ என்று சிந்தனை வேறு எங்கோ செல்ல.

 

யாழினி, நான் போக மாட்டேன் என்றாள் சட்டென்று.

 

அபிமன்யு, யாழினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்தவனிற்கே அதிர்ச்சியாகி போனது யாழினியின் பதில்.

 

அபிமன்யு அதிர்ச்சியாக, என்ன உங்க அம்மா வீட்டுக்கு போக மாட்டேன்னு சொல்ற?.

 

நான் இங்க இருந்தா ஏதாவது பிரச்சனை பண்றேன்னு என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பலாம்னு பார்க்குறீங்களா. நான் எங்கேயும் போக மாட்டேன். இது தான் என்னோட ரூம் நான் இங்க தான் இருப்பேன்.

 

அபிமன்யுவிற்கு யாழினியின் பதிலில் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. தான் இவ்வளவு தூரம் எடுத்துக் கூறியும், அவள் அவளின் பிடியிலேயே நிற்கிறாளே.

 

இங்க பாரு, இது நம்ம ரூம் தான். நீ இனிமே இங்க தான் இருக்க போற போதுமா.

 

அப்புறம் ஏன் என்னை அம்மா வீட்டுக்கு போக சொல்றீங்க?.

 

உன்னை மட்டும் யாரு டி போக சொன்னா என்றவன், வேறு புறம் பார்த்தபடி, நானும் தான் வரேன்.

 

யாழினிக்கு உண்மையிலேயே இது அதிர்ச்சி தான். இன்ப அதிர்ச்சியா என்று கேட்டால் அது அவளிற்கே தெரியவில்லை.

 

ஆனால் அதிர்ச்சி..! எங்கே ஏதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பதட்டம், பயம் கலந்த அதிர்ச்சி..!

 

என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குற. நான் உங்க வீட்டுக்கு வர வேண்டாமா?.

 

ஐயோ இப்போ என்ன சொல்றதுன்னு தெரியலையே வர வேண்டாம்னு சொன்னாலும் பிரச்சனை. போகலாம்னு சொன்னாலும் பிரச்சனை என்று மனதிற்குள் போராடியவள், ஆங்.. நிஜமாவா.. எப்படி?.

 

என்ன எப்படி? நான் ஏதோ உன்னை கொடுமை படுத்துற மாதிரி அன்னைக்கு உங்க வீட்ல இருந்து போன் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்து என்னை இன்சல்ட் பண்ணாங்கல்ல. அதுக்கு பழி வாங்க தான் இப்போ நாம உங்க வீட்டுக்கு போறோம் என்றான் சீரியஸான முகத்தோடு.

 

யாழினிக்கோ, போச்சு.. நாம நினைச்ச மாதிரியே சொல்றானே. எப்போ நம்ம வீட்டுக்கு போனாலும், ஏதாவது ஒரு பெரிய பிரச்சனை நடக்கும். இப்போ திரும்பவும் அங்க போய் கஷ்டப்பட்டு திரும்பி வரர்துக்கு போகாமலே இருக்கலாம் என்று எண்ணியவள்.

 

இல்ல.. பரவாயில்ல.. எனக்கு செமஸ்டர் வருது படிக்கிற வேலை எல்லாம் இருக்கு. எதுக்கு வேஸ்ட்டா இப்போ போய் போய்கிட்டு, அப்புறமா போகலாமே.

 

அபிமன்யு, யாழினியின் எண்ணத்தை அவளின் முகத்தை வைத்தே தெளிவாக படித்தவன்.

 

பயப்படாத நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். என்னால உங்க வீட்ல எந்த பிரச்சனையும் வராது.

 

நான் அதுக்காக சொல்லல. இப்போ ஸ்டடி ஹாலிடேஸ் லீவு தான் விட்டு இருக்காங்க. படிக்கிற வேலை வேற நிறைய இருக்கு. அதான் சொன்னேன்... என்று இழுத்தாள்.

 

எனக்கு தெரியாதா உன்னை பற்றி என்று நினைத்தவன், பரவாயில்ல, நான் எதுவும் தப்பா நினைக்கல. நாளைக்கு கிளம்பலாம். நாளைக்கு ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு நைட் கிளம்பலாம்.

 

சரி என்று வெளியே சென்ற யாழினிக்கு தன் அம்மாவின் வீட்டிற்கு வெகு நாட்கள் கழித்து செல்வதை நினைத்து மகிழ்வதாக, கவலைப்படுவதா என்று ஒன்றும் புரியவில்லை.

 

ஏனெனில், திருமணம் முடிந்த பின்பு இவள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பிரச்சனை வருகிறது என்று சிந்தித்தவாறு வெளியே செல்ல.

 

இவள் வருவதற்காகவே கார்த்திருந்த ஆரியனும், ஆரணியும் ஓடி வந்தனர்.

 

ஆரியன், என்னாச்சு யாழினி. நான் சொன்ன மாதிரியே அண்ணா உன்னை ரூமை விட்டு வெளியே அனுப்பிட்டானா? என்றான் ஆவலாக.

 

ஆரணியும், எங்கே ஆரியன் சொன்னது போல் நடந்திருக்குமோ என்று பதட்டமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

 

யாழினி சலிப்பாக, அதெல்லாம் ஒன்றும் இல்லை. ரொம்ப ஆசைப் படாத.

 

ஆரியன், நிஜமாவா.. நீ இருந்த கோபத்துக்கு உள்ளே ஏதாவது பெருசா நடந்திருக்கனுமே.

 

நடந்துச்சே, உங்க அண்ணனை செமையா அடிச்சுட்டேன்.

 

ஆரியன் சிரித்தபடி, யாரு நீ எங்க அண்ணனை அடிச்ச, இதை நாங்க நம்பனும்.

 

நீ நம்புனா எனக்கு என்ன. நம்பலைனா எனக்கு என்ன. நடந்ததை நீ தான கேட்ட அதான் சொன்னேன்.

 

ஆரணி, நிஜமாவே அண்ணனை அடிச்சியா யாழ்?.

 

ஆமா. பின்ன, அவர் செஞ்ச காரியத்துக்கு கொஞ்சவா முடியும்.

 

நீ சொல்றதை என்னால நம்பவே முடியல. அண்ணாவை போய் எப்படி நீ அடிச்சிருக்க முடியும். எனக்கு ஒண்ணுமே புரியல என்றாள் குழப்பமாக.

 

இதுவரை கம்பீரமாகவும், யாருக்கும் அடங்காமலும், திமிராகவுமே பார்த்த அண்ணன், யாழினியின் முன்பு மட்டும் எப்படி இப்படியெல்லாம் மாறுகிறான் என்று இருவருக்குமே பெரும் ஆச்சரியம் தான்.

 

யாழினி, சரி நான் சாப்பிட போறேன் என்று சென்றுவிட.

 

ஆரணி ஆரியனிடம், நிஜமாவே அடிச்சிருப்பாளா?” என்றாள் சந்தேகமாக.

 

அவ முகத்தைப் பார்த்தா க்ளியரா இருக்கா. எந்த ஒரு கன்ஃபியூஷனோ, கவலையோ இல்ல. சோ, கண்டிப்பா அடிச்சிருப்பா.

 

நம்ம அண்ணன் எப்படிடா இப்படி மாறினார். நம்பவே முடியல.

 

நான் தான் அப்போவே சொன்னேனே ஆரணி. இவ என்னமோ செஞ்சு இருக்கா. அவ ஏதாவது மந்திரம் பண்றாளானு உன் ரூம்ல தங்கி இருக்கும் போது நோட் பண்ண வேண்டியது தான.

 

ஏன் டா லூசு மாதிரி உளருற.

 

பின்ன எப்படி இருந்த அண்ணனை இவ பேச்சை கேட்கிற மாதிரி மாத்திட்டால்ல.

 

உன் கிட்ட போய் கேட்டேன் பாரு.

 

அங்கே டைனிங் ஹாலில் மீரா, என்ன யாழினி, எதை யோசிச்சுக்கிட்டே இருக்க. அபி ஏதாவது சொன்னானா?.

 

அத்தை நாளைக்கு நாங்க ஊருக்கு போறோம்.

 

மீரா புரியாமல், நாங்கனா யார் யார் போறீங்க. எந்த ஊருக்கு போறீங்க?.

 

நானும், உங்க பையனும் தான் போறோம். எங்க அம்மா வீட்டுக்கு.

 

மீரா ஆச்சரியமாக, என்ன சொல்ற யாழினி. நிஜமாவா?.

 

ஆமா அத்தை, எனக்கும் ரொம்ப குழப்பமா இருக்கு. ஏன் திடீர்னு எங்க வீட்டுக்கு கூப்பிடுறார்னு தெரியலையே. ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?.

 

ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் எதுவும் இருக்காது.

 

வள்ளியம்மை பாட்டி இவர்களின் பேச்சு வார்த்தையை கவனித்தபடி இவர்களை நோக்கி வந்தவர். நாளைக்கு அம்மா வீட்டுக்கு போறியா யாழினி? என்றார் ஆவலாக.

 

ஆமாம் பாட்டி.

 

சரி, அப்போ நானும் வரேன்.

 

என்ன பாட்டி, உங்க அக்கா நியாபகம் வந்திடுச்சா? என்று யாழினி பாட்டியை கிண்டல் செய்ய.

 

ஆமா மா. ரொம்ப நாள் ஆகிடுச்சுல்ல அதான். எத்தனை நாள் தங்க போறீங்க?.

 

தெரியலையே பாட்டி. நான் அதைக் கேட்கவே இல்லை. திடீர்னு அம்மா வீட்டுக்கு போறோம்னு சொன்னதும், எங்க ஏதாவது பிரச்சனையா இருக்குமோனு யோசிச்சுக்கிட்டே இதைக் கேட்க மறந்துட்டேன்.

 

அதெல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது. நீ கவலைப்படாத. அபியே உன்னை கூப்பிட்டு இருக்கான்னா ஏதாவது விஷயம் இருக்கும்.

 

அதான் பாட்டி பயமா இருக்கு. என்ன விஷயம்னு தெரியலையே. எப்போ அங்க போனாலும் ஏதாவது சண்டை வந்துடுது. அவங்க இங்க வந்தாலும் ஏதாவது சண்டை வந்துடுது. அதான் இப்போ போகலாமா, வேண்டாமானு ஒரே யோசனையா இருக்கு.

 

வள்ளியம்மை பாட்டியும் யோசனையோடு, அபி என்ன சொல்றான்?.

 

அவங்க கண்டிப்பா போகணும்னு சொல்லிட்டாங்க.

 

மீரா, நீ எதைப் பத்தியும் யோசிக்காத. அதான் அம்மா உங்க கூட வராங்கல்ல‌ மூணு பேரும் போயிட்டு வாங்க எந்த பிரச்சனையும் வராது.

 

அன்றைய இரவே யாழினி தாங்கள் ஊருக்கு வர இருப்பத்தை தன் தாய்க்கு ஃபோனின் மூலம் தெரிவித்தாள்.

 

அவருக்கோ பெரும் மகிழ்ச்சி. வெகு நாட்கள் கழித்து தன் மகள் தங்கள் வீட்டுக்கு வரப்போவதை எண்ணி மகிழ்ந்து போனார்.

 

அம்மா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.

 

என்கிட்ட சொல்றதுக்கு என்ன டி தயக்கம் உனக்கு. எதுவா இருந்தாலும் சொல்லு. ஏதாவது உனக்கு பிடிச்சது சமைச்சு வைக்கணுமா? என்றார் ஆசையாக.

 

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா. என் வீட்டுக்காரர் அங்க வந்து ஏதாவது உங்கள எல்லாம் பேசிடுவாரோனு தான் எனக்கு பயமா இருக்கு. அவர் ஏதாவது பேசிட்டா, நீங்க எதுவும் வருத்தப்படாதீங்கம்மா. அப்பாகிட்டயும் சொல்லிடுங்க என்றாள் வருத்தமாக.

 

லட்சுமி தன் சிறிய மகள், பெரிய பெண் போல் பேசுவதை கேட்டுப் பூரித்து போனவர், நீ ஒன்னும் வருத்தப்படாத மா. நாங்க அவர் என்ன பேசினாலும் பெருசா எடுத்துக்க மாட்டோம் போதுமா.

 

யாழினி கலங்கிய கண்களுடன், ரொம்ப தேங்க்ஸ் மா என்றபடி அழைப்பை துண்டித்து திரும்புகையில் அபிமன்யு தன் இரு கைகளையும் கட்டியவாறு இவளையே கூர்ந்து பார்த்தபடி நின்று இருந்தான்.

 

யாழினியின் பதட்டமான முகமே கூறியது, அபிமன்யுவை அவள் இங்கு எதிர் பார்க்கவில்லை என்று.

 

யாழினி பதட்டமாக, நான் அம்மாகிட்ட நாளைக்கு நம்ம வரர்தைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன் என்றாள் அபிமன்யு கேட்காமலே.

 

அபிமன்யுவின் பதில் என்னவாக இருக்கும்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5