அவனதிகாரம் - 81

 

 

அதிகாரம் – 81

 

யாழினி கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் அபிமன்யுவை திட்டியபடி வந்தாள்.

 

உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா. எல்லார் முன்னாடியும் இப்படி தான் நடந்துப்பீங்களா.

 

இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு நீ இப்படி கத்திகிட்டே வர என்று சிடுசிடுத்தான்.

 

அப்பாகிட்டயே போய் பர்மிஷன் கேட்குறீங்க. அவர் என்ன நினைப்பார்.

 

நீ தான டி சொன்ன. எல்லாரும் பார்க்குறாங்க எங்க அப்பா இருக்காருனு அதான் அவர்கிட்ட கேட்டேன்.

 

அதுக்காக நேரடியா அவர்கிட்டயே போய் உங்க பொண்ண தூக்கலாமானு கேட்பீங்களா. எல்லாரும் நம்ம பத்தி என்ன நினைப்பாங்க.

 

என்ன நினைப்பாங்க... நான் என் பொண்டாட்டியை எப்படி தாங்குறேன்னு பார்ப்பாங்க. யாரு என்ன நினைச்சா எனக்கு என்ன டி. என் பொண்டாட்டிக்கு கால் வலிக்குதுனு நான் தூக்கிக்கிட்டு போறேன். மத்தவங்க என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்ல. நான் இப்படி தான் நடந்துப்பேன். அவங்கள வேணும்னா கண்ண மூடிக்க சொல்லு.

 

என்ன சொன்னாலும் நீங்க புரிஞ்சுக்கவே மாட்டீங்க. உங்க கிட்ட எப்படி தான் பேசுறதுன்னு எனக்கு தெரியல என்று முகத்தை திருப்பிக் கொள்ள.

 

இப்போ நீ ஒழுங்கா என்னை பார்க்கலைனா அப்படியே கீழ போட்டுட்டு போயிடுவேன் என்று மிரட்டும் தோணியில் கூறினான்.

 

என்ன மிரட்டுறீங்களா... அதெல்லாம் பார்க்க முடியாது.

 

என்னை பத்தி உனக்கு தெரியும்ல. நான் சொன்னா கண்டிப்பா செய்வேன்.

 

யாழினி அதற்கும் திரும்பாமல் இருக்க. தன் கையை சற்று கீழே இறக்கி பாவனை செய்தான். அதில், எங்கே அபிமன்யு சொன்னது போல் செய்து விடுவானோ என்று பதறிய யாழினி, அவனின் கழுத்தை சுற்றி தன் கைகளை போட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

 

ஐயோ மாமா! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கீழ போட்டுடாதீங்க என்று கத்தினாள்.

 

அந்த பயம் இருக்கணும் என்று விட்டு மீண்டும் நடக்க தொடங்க.

 

யாழினி சிடுசிடுப்பாக, ச்ச... இவர புரிஞ்சுக்கவே முடியவில்லை. ஒரு நேரம் பாசமா பேசுறார், ஒரு நேரம் சிடுசிடுன்னு இருக்கார். சில நேரத்துல இவர் நடந்துக்குறத பார்த்தா நிஜமாவே என்னை லவ் பண்றாரானு சந்தேகமா இருக்கு. கடவுளே! இன்னும் எவ்வளவு நாள் நான் இப்படி சந்தேகத்தோடவே வாழணுமோ தெரியல என்று புலம்பியபடி வந்தாள்.

 

என்ன எப்போ பார்த்தாலும் ஏதாவது முணுமுணுத்துக்கிட்டே வர.

 

ம்ம்... கோவிலுக்கு போறோம்ல அதான் ஸ்லோகன் சொல்லிக்கிட்டே வரேன்.

 

சரி இறங்கு.

 

எதுக்கு?.

 

கோவில் வந்துடுச்சு டி.

 

யாழினி சுற்றி முற்றி பார்த்தவள், அதுக்குள்ள வந்துடுச்சா வந்ததே தெரியல.

 

எப்படி தெரியும். நீ தான் கிளம்பினதுல இருந்து என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே வரியே. கொஞ்ச நேரமாவது வாயை மூடுனா தான நடக்குறது தெரியும். நடக்குற எனக்கு தான் கஷ்டம் தெரியும் என்று விட்டு முன்னே செல்ல.

 

ரொம்ப தான். யாரு தூக்க சொன்னா, நானா தூக்க சொன்னேன் என்று முணுமுணுத்தவாறு பின்னே சென்றாள்.

 

பிறகு கோவில் பூசாரியிடம் சாமியின் பெயரிலேயே அர்ச்சனை செய்தவர்கள். கண்களை மூடி மனம் உருகி வேண்டிக் கொண்டு நின்றிருந்தனர்.

 

அபிமன்யு, யாழினியின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று வேண்டுதலை வைக்க.

 

யாழினி, அபிமன்யுவின் மனது சீக்கிரமாக மாற வேண்டும். அனைத்து உண்மையும் அவன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுதலை வைத்தாள்.

 

கண்களை திறக்கும் பொழுது எதிரே நின்றிருந்த பூசாரி, ஏம்மா நீ சுப்பிரமணி ஐயா பொண்ணு தான?.

 

யாழினி, ஆமாங்க என்பதற்குள் அபிமன்யு முந்திக்கொண்டு, சுப்பிரமணி ஐயா பொண்ணா இருந்த காலமெல்லாம் முடிஞ்சு போச்சு. இப்போ என்னோட பொண்டாட்டி... என்றான்.

 

யாழினி அவனை திரும்பிப் பார்த்து முறைக்க. அவனும் பதிலுக்கு முறைக்க. இருவரும் முறைத்துக் கொண்டே நின்றிருந்தனர்.

 

சரிங்க தம்பி. உங்க பொண்டாட்டியாவே இருக்கட்டும். இந்தாங்க இதை பிடிங்க என்று அபிமன்யுவின் கையில் ஒரு தொட்டிலை கொடுத்தார்.

 

அதை வாங்கிய அபிமன்யு, என்ன இது? என்று விசாரிக்க.

 

இது தான் பா தொட்டில். கல்யாணமான புது தம்பதிங்க சீக்கிரமா அவங்களுக்கு குழந்தை பிறக்கணும்னு வேண்டிக்கிட்டு, அதோ அந்த மரத்துல நிறைய தொட்டில் கட்டி இருக்கு பார்த்தீங்களா. அந்த மாதிரி கட்டுவாங்க. இது ரொம்ப சக்தி வாய்ந்த கோவில். மனசுல நல்லா சாமியை வேண்டிக்கிட்டு நீங்களும் கட்டுங்க. சீக்கிரமாவே உங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

 

கண்டிப்பா நடக்குமா என்று சந்தேகமாக கேட்டான்.

 

அட என்ன தம்பி நீங்க. சாமி விஷயத்துல போய் நான் பொய் சொல்லுவேனா. பல வருஷமா குழந்தை இல்லாதவங்க கூட இந்த கோவிலுக்கு தேடி வந்து இந்த பரிகாரத்தை செய்வாங்க. இது தான் இந்த கோவில்லையே சிறந்த பரிகாரமும் கூட. வெளியூரிலிருந்து எத்தன பேர் இதுக்காகவே இந்த கோவிலுக்கு வராங்கனு தெரியுமா. கட்டிப் பாருங்க நீங்களும் அடுத்த வருஷமே கையில குழந்தையோட அம்மனை தரிசிக்க வருவீங்க என்று உறுதியாக கூறினார்.

 

அவரிடமிருந்து அந்த தொட்டிலை வாங்கிய அபிமன்யு மரத்தை நோக்கி நடக்க.

 

அவனை பின் தொடர்ந்த யாழினி, இப்போ எதுக்கு நீங்க இதை கட்ட போறீங்க?.

 

அவர் சொன்னத நீயும் கேட்டல்ல. ரொம்ப சக்தி வாய்ந்த கோவிலாமே. நம்மளும் கட்டி வேண்டிக்கலாம்.

 

நான் அப்போவே சொன்னேன். அப்போ கேட்காம காலேஜ்ல சேர்த்துவிட்டுட்டு. இப்போ போய் தொட்டில் கட்ட போறேன்னு சொல்றார். எல்லாத்தையும் மாத்தி மாத்தி செய்ய வேண்டியது. அப்புறம் நம்ம கிட்ட வந்து சிடுசிடுக்க வேண்டியது என்று முணுமுணுத்தாள்.

 

என்ன டி எப்போ பார்த்தாலும் ஏதாவது முணங்கிட்டே வர.

 

யாழினி சமாளிப்பாக சிரித்தபடி, ஸ்லோகன்ங்க ஸ்லோகன்.

 

பிறகு, அபிமன்யு அந்த மரத்தில் தொட்டிலை கட்ட செல்ல.

 

இருங்க.. இருங்க.. ஒரு நிமிஷம். இதெல்லாம் கேர்ள்ஸ் தான் பண்ணனும். நீங்க போய் கட்டுறீங்க. குடுங்க நான் கட்டுறேன்.

 

உனக்கு பிறக்குற குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதா. நீ மட்டுமா தனியா குழந்தை பெத்துக்க போற என்று கேட்க.

 

ஐயோ! கோவில்ல நின்னுகிட்டு என்ன பேச்சு பேசுறீங்க. யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க.

 

இப்போ நான் என்ன டி தப்பா சொல்லிட்டேன். அது உனக்கு மட்டும் குழந்தை இல்லை, எனக்கும் குழந்தை தான. அதான் சொன்னேன்.

 

சரி, நீங்க தான் அப்பா, நான் தான் அம்மா போதுமா. குடுங்க, நான் கட்டுறேன்.

 

அதெல்லாம் முடியாது. நான் தான் கட்டுவேன் என்று அடம்பிடித்தான்.

 

என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி இப்படி அடம்பிடிக்கிறீங்க.

 

இது என்ன பெரிய வேலையா. இந்த மரத்துல இந்த கயிறை கட்டணும் அவ்வளவு தான. எனக்கு கட்ட தெரியும். நீ ஒன்னும் கட்ட தேவையில்ல என்றான் வீம்பாக.

 

யாழினி சலிப்பாக, சரி என்னமோ பண்ணுங்க போங்க என்று நகர.

 

அவளின் கையைப் பிடித்து தடுத்த அபிமன்யு, எங்க டி போற. ஒழுங்கா இங்கேயே நின்னு வேண்டிக்கோ. அப்போ தான் பலிக்கும்.

 

யாழினி, சரி என்று அபிமன்யு கூறியபடியே செய்தாள்.

 

அபிமன்யு தன் மனதில் ஒரு வேண்டுதலுடன் அந்த தொட்டிலை கட்டி முடித்தான். பிறகு, இருவரும் கீழே இறங்கி செல்ல.

 

அபிமன்யு, நான் வேணும்னா உன்னை தூக்கிக்கவா என்று யாழினியை தூக்க வர.

 

ஒன்னும் தேவையில்ல. எனக்கு கால் வலி எல்லாம் சரியாயிடுச்சு. நான் நடந்தே வரேன். சரி, ரொம்ப நேரமா வேண்டுனீங்களே என்ன வேண்டுனீங்க..? என்றாள் ஆர்வமாக.

 

வேண்டுதலை எல்லாம் வெளியில் சொன்னா நடக்காதுன்னு சொல்லுவாங்களே.

 

ஓ.. உங்களுக்கு இதெல்லாம் கூட தெரியுமா.

 

ம்ம்.. சின்ன வயசுல பாட்டி கூடவும், அம்மா கூடவும் கோவிலுக்கு போகும் போது அவங்க சொல்லி கேட்டு இருக்கேன்.

 

நம்ம குழந்தையை பத்தின வேண்டுதல் தான. என்கிட்ட சொன்னா ஒன்னும் ஆகாது சொல்லுங்க.

 

அது ஒன்னும் இல்ல. நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் தோத்ததில்ல. அதனால, இந்த குழந்தை விஷயத்திலும் யார் முன்னாடியும் தோக்கக்கூடாது. எனக்கு வெற்றி கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.

 

யாழினி அவனைப் பார்த்து, வெற்றி கிடைக்கணுமா... என்ன வெற்றி கிடைக்கனும்..?.

 

என்ன டி மறந்துட்டியா... நேத்து தான உன் அக்கா சொன்னாங்க. அவங்க நமக்கு முன்னாடி குழந்தை பெத்துக்க போறாங்கனு.

 

ஆமா.... அதுக்கு என்ன இப்போ.. என்று கேட்டாள்.

 

கேட்கும் போதே இவன் ஏதோ வில்லங்கமாக தான் கூறப் போகிறான் என்பதை யூகித்தாள்.

 

அதான் நமக்கு ரெட்டை குழந்தை பிறக்கனும்னு வேண்டிகிட்டேன்.

 

யாழினிக்கு அபிமன்யுவின் வேண்டுதலை கேட்டதும் என்ன கூறுவது என்று தெரியவில்லை.

 

என்ன கோவிச்சுக்கிட்டியா?.

 

எதுக்கு?.

 

உன்னோட பர்மிஷன் இல்லாம ட்வின்ஸ் வேணும்னு வேண்டிக்கிட்டேனே அதுக்காக.

 

ச்ச.. ச்ச.. அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று இந்த பேச்சை முடிக்க நினைத்து கூற.

 

அப்போ உனக்கு ட்வின்ஸ் ஓகேவா?.

 

அபிமன்யுவின் கேள்விக்கு எப்படி பதில் கூறுவது என்று யாழினிக்கு வெட்கமாக இருந்தது.

 

அபிமன்யு மீண்டும் மீண்டும், சொல்லுடி உனக்கு ஓகேவா என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.

 

நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. எல்லாத்தையுமே இப்படி தான் ஓப்பனா கேப்பீங்களா.

 

கேட்டா தான நீ என்ன பதில் சொல்லுவனு எனக்கு தெரியும்.

 

யாழினி தன் முகச் சிவப்பை மறைக்க எண்ணி, தன் முகத்தை வேறு புறம் திருப்பியபடி, அதெல்லாம் நடக்கும் போது பார்க்கலாம் என்றாள்.

 

அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், அதெல்லாம் முடியாது. நீ இப்போவே சொல்லு. எப்போ எதை கேட்டாலும் நடக்கும் போது பார்க்கலாம், நடக்கும் போது பார்க்கலாம்னு சொல்ற. எனக்கு இப்போவே முடிவை சொல்லு என்று விடாமல் கேட்டான்.

 

ஐயோ மாமா ப்ளீஸ்... இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது.

 

அபிமன்யுவிற்கு யாழினியின் நிலை நன்றாகவே புரிந்தது. இருந்தாலும், அவளை மேலும் சீண்டுவதில் அவனுக்கு ஏனோ அலாதிப் பிரியம்.

 

சரி, உனக்கு வேண்டாம்னா விடு. என்னோட ஆஃபீஸ்ல வேலை பார்க்குறாளே பிரியா, நம்ம கூட அன்னைக்கு காபி ஷாப்ல மீட் பண்ணோமே ஞாபகம் இருக்கா என்று கேட்க.

 

யாழினி அவசரமாக, எனக்கு ஓகே தான் மாமா. எனக்கும் ட்வின்ஸ்னா ரொம்ப பிடிக்கும். இனிமே, நானும் கோவிலுக்கு போனா இதையே வேண்டிக்குறேன்.

 

அபிமன்யுவிற்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க என்றாள் கோபமாக.

 

பிரியாவுக்கு லீவு வேணும்னு கேட்டு இருந்தா, அதை தான் சொல்ல வந்தேன். நீ வேற என்னமோ நினைச்ச போலருக்கு என்று அவளை கிண்டல் செய்தான்.

 

அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கல. தேவையில்லாம நீங்களே கற்பனை பண்ணிக்காதீங்க. வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்று விட்டு முன்னே நடக்க.

 

இருவரும் இப்படி பேசிக்கொண்டே மற்றவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தனர்.

 

மரகதம் பாட்டி, என்ன யாழினி, நல்லா சாமி கும்பிட்டிங்களா என்று விசாரித்தார்.

 

ம்ம்... கும்பிட்டாச்சு கிளம்பலாமா.

 

யாழினி என்ன வேண்டிக்கிட்டனு உங்க பாட்டி கிட்ட சொல்லு என்று வேண்டுமென்றே அவளை சீண்டுவதற்காக கேட்டான்.

 

யாழினி அவனிடம் கூற வேண்டாம் என்று கண்ணை காட்டியபடி, தன்னையே பார்க்கும் தன் பாட்டியை பார்த்து சிரித்து சமாளித்தாள். மரகதம் பாட்டியும் மற்ற குடும்பத்தினரும் இவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க.

 

அது ஒன்னும் இல்ல. உங்க பேத்திக்கு இரட்டை குழந்தை வேணுமாம் என்று அனைவரின் முன்பும் போட்டு உடைத்தான்.

 

வள்ளியம்மை, அதுக்கு என்ன அபி கண்டிப்பா நடக்கும்.

 

ஆரியன், நான் அப்போவே நினைச்சேன். நீ இதுக்கு தான் எங்க அண்ணனை கூப்பிட்டுகிட்டு இவ்வளவு தூரம் கோவிலுக்கு நடந்து போனியா என்று ஒரு புறம் கேட்க.

 

யாழினிக்கோ அனைவரின் முன்பும் நிற்கவே முடியவில்லை வெட்கமாகி போனது. குடும்பத்தினர் அனைவரும் அபிமன்யு கூறியதை கேட்டு மகிழ்ச்சியாக சிரித்தனர்.

 

ஆனால், கயல்விழிக்கு மட்டும் இவர்கள் இருவரையும் பார்க்க பொறாமையாக இருந்தது.

 

எதுக்கு உங்க பேத்திக்கு ரெட்டை குழந்தை வேணும்னு நீங்க கேட்கவே இல்லையே என்று மீண்டும் மரகதம் பாட்டியை பார்த்து கேட்க.

 

யாழினி இப்பொழுது என்ன கூறப் போகிறானோ என்று திருதிருத்தபடி நின்றிருந்தாள்.

 

மரகதம் பாட்டி, எதுக்கு தம்பி? என்றார் சிரித்த முகமாக.

 

நேத்து உங்க இரண்டாவது பேத்தி சொன்னாங்கல்ல. யாழினிக்கு முன்னாடி மாசம் ஆயிட்டாங்கனு அதான் நாங்க லேட்டா குழந்தை பெத்துக்கிட்டாலும் ட்வின்சா பெத்துக்கிட்டா அவங்கள ஜெயிச்ச மாதிரி ஆயிடும்ல என்று கூற கயல்விழிக்கு கோபம் வந்துவிட்டது.

 

அபிமன்யுவின் வேண்டுதல் பலிக்குமா..?

 

அல்லது, யாழினியின் வேண்டுதல் பலிக்குமா..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5