அவனதிகாரம் - 83

 

 

அதிகாரம் – 83

 

நேரங்கள் கடந்து கொண்டே சென்றதே தவிர, அபிமன்யு சாப்பிட்டு முடிப்பதாக இல்லை. ஒவ்வொருவராக சாப்பிட்டு முடித்து எழுந்து செல்லும் வரையிலும் கொஞ்சம் கொஞ்சமாக வேண்டும் என்றே யாழினியை ஊட்ட வைத்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

 

அனைவரும் உணவருந்தி விட்டு எழுந்து சென்ற பின்னும் கூட ஆரியன் அபிமன்யுவிற்கு போட்டியாக மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

ஆரணி ஆரியனின் காதில், எல்லோரும் சாப்பிட்டு முடிச்சிட்டாங்க. நீ மட்டும் ஏன் இவ்வளவு நேரமா சாப்பிட்டுக்கிட்டு இருக்க.

 

ஏன், இதே மாதிரி போய் அண்ணன் கிட்ட கேளு பார்ப்போம்.

 

அவங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் அவங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும். நீ ஏன்டா அவங்கள பார்த்துகிட்டு உட்கார்ந்திருக்க. சீக்கிரமா வா போகலாம் என்று ஆரியனை அவசரப்படுத்தினாள்.

 

அதில், எழுந்து சென்று கையை கழுவி விட்டு வந்தவன். அபிமன்யுவையும், யாழினியையும் பார்த்தபடி நின்று இருந்தான்.

 

தன்னை சுற்றி நடக்கும் எந்த ஒரு விஷயமும் அபிமன்யுவின் கவனத்திற்கு சென்றடையவில்லை. யாழினியின் கண்களோடு தன் கண்களால் உறவாடியபடியே மெதுவாக தன் உணவை உண்டு கொண்டிருந்தான்.

 

அபிமன்யுவின் விழிகள் யாழினியின் விழிகளிலேயே நிலைத்து நிற்க. யாழினிக்கோ விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்குமாய் அலை பாய்ந்தபடி இருந்தது.

 

அலைபாயும் யாழினியின் விழிகளை ஒரு வழியாய் தன் விழிகளால் ஈர்த்து தன்னை பார்க்கும்படி செய்தான்.

 

அவ்வளவு தான்..! இதற்கு மேல் சொல்ல வேண்டுமா.. இருவரும் வேறொரு தனி உலகத்திற்குள் சென்றுவிட்டனர். தங்களை சுற்றி நடக்கும் எதுவுமே அவர்களின் மூளைக்கு எட்டவில்லை.

 

ஆரியன் பொறுத்து பொறுத்து பார்த்தவன். இருவரும் அசையாமல் ஒரே நிலையிலேயே அமர்ந்திருப்பதை பார்த்து, ஏன் ஆரணி, நிஜமாவே அண்ணா சாப்பிட்டுக்கிட்டு தான் இருக்காரா. இங்க பாரு நானும் எவ்வளவு நேரமா இங்க நிற்கிறேன். ரெண்டு பேரும் ஒரே போஸ்லையே உட்கார்ந்து இருக்காங்க. போஸ் கூட மாத்த மாட்டேங்குறாங்களே. ஒருவேளை உட்கார்ந்துக்கிட்டே தூங்கிட்டாங்களோ.

 

இதெல்லாம் ரொமான்ஸ் டா. உனக்கு இதை பத்தி எல்லாம் தெரியாது. நாம சின்ன பசங்க. வா போகலாம் என்று அவனின் கையைப் பிடித்து இழுத்தாள்.

 

என்னது ரொமான்ஸா! ரொமான்ஸ்னா என்னனே தெரியாத என் அண்ணனையே இப்படி ரொமான்ஸ் பண்ண வச்சிட்டாளே என்று பொங்கி எழுந்தவன்.

 

இருவருக்கும் இடையே கையை ஆட்ட. இருவரும் எந்த அசைவம் இன்றி அதே நிலையில் இருந்தனர்.

 

என்னடி இது. இங்க ஒருத்தன் கையை ஆட்டுறது கூட தெரியாம உட்கார்ந்து இருக்காங்க.

 

ஆரணி தன் கைகளை கட்டியபடி ஆரியனை பார்த்து முறைத்தவள், நான் தான் சொன்னேன்ல. வா போகலாம்.

 

ஆரியன், அதெல்லாம் முடியாது என்று இருவருக்கும் இடையே சத்தமாக கையைத் தட்டினான்.

 

அதில் சுயநினைவு பெற்ற இருவரும் வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்ய.

 

ஆரியன், போதும் போதும்.. இவ்வளவு நேரம் நடந்த கூத்தை எல்லாம் நாங்க பார்த்துட்டோம். வயசு பசங்க வீட்ல இருக்காங்களேன்றது கூட இல்லாம, அண்ணா என்ன இது. நீங்களா இப்படி? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படி நடு ஹாலில் உட்கார்ந்துகிட்டு என்ன வேலை பார்க்குறீங்க? எல்லாரும் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க. உங்கள பொண்டாட்டிதாசன்னு சொல்லிட மாட்டாங்க.

 

அபிமன்யு, பொண்டாட்டிதாசனா.. அப்படினா என்னடா?.

 

இப்போ இது தான் ரொம்ப முக்கியம் பாருங்க. நடு ஹால்ல உட்கார்ந்துகிட்டு பார்க்கிற வேலையா இதெல்லாம்?.

 

அபிமன்யு சட்டென்று எழுந்தவன் யாழினியின் கையை பிடித்து, சரி வா நாம ரூமுக்கு போய் சாப்பிடலாம் என்று அழைத்தான்.

 

ஆரியன், அதெல்லாம் அவளை அனுப்ப முடியாது. நீங்க சாப்பிட்ட வரைக்கும் போதும். நீங்க எப்படி சாப்பிடுறீங்கனு நாங்களும் தான் பார்த்தோமே. நீங்களே சாப்பிட்டா போதுமா, அவ சாப்பிட வேண்டாமா.

 

அப்பொழுது தான் அபிமன்யுவிற்கு உரைத்தது யாழினி இன்னும் உணவருந்தவில்லை என்று.

 

ஓகே.. ஓகே.. நீ சாப்பிட்டுட்டு ரூமுக்கு வா என்று விட்டு கண்களால் ஏதோ ஜாடை செய்து விட்டு அறைக்கு சென்று விட்டான்.

 

ஆரியன், இங்க பாரு யாழினி, இதெல்லாம் ரொம்ப ஓவர். உங்க வீட்டுக்கு வந்ததும் ரொம்ப பண்றியா.

 

நான் என்ன பண்ணேன். உங்க அண்ணன் தான் பண்றாரு என்று விட்டு கிச்சனுக்கு ஓடி விட்டாள்.

 

ஆரியன் ஆரணியிடம், இவங்க ரெண்டு பேருமே சரியில்ல. இனிமே நாம தான் கேர் ஃபுல்லா வாட்ச் பண்ணனும்.

 

ஆரணி, இனிமே அவங்கள வாட்ச் பண்ணி என்ன பண்ண போற. அவங்க கல்யாணம் ஆனவங்க. அவங்க என்ன லவ்வர்ஸா நம்ம வாட்ச் பண்றதுக்கு என்று விட்டு அவளும் வெளியே சென்று விட்டாள்.

 

என்ன யாருமே நாம சொல்லுறத மதிக்க மாட்டேங்குறாங்க. சரி, யாருடைய துணையும் இல்லாம நாம தனியாவே இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணுவோம்.

 

யாழினியை தனியாக அழைத்து வந்த அவளின் அம்மா லட்சுமியும், மரகதம் பாட்டியும், யாழினி, இப்போ மாப்ள உன்கிட்ட நல்லா நடந்துக்குறார் போலருக்கே.

 

ஆமா மா. இப்போலாம் அவர் என்னை அடிக்கடி திட்டுறது கூட இல்ல என்றாள் முகம் எல்லாம் புன்னகையாக.

 

மரகதம், கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு யாழினி. இனிமே, மாப்ள சொல்றபடியே நடந்துகோ. அவர் உன்ன நல்லா பார்த்துப்பார்.

 

ஆனா, என்ன தான் என்கிட்ட நல்லா பேசினாலும், நம்ம குடும்பத்து மேல இருக்க கோபம் மட்டும் அவருக்கு மாறவே மாட்டேங்குது பாட்டி. அத்த கூட எடுத்து சொல்லி பார்த்துட்டாங்க. அப்போ கூட அவர் கேட்குறதா இல்ல என்றாள் வருத்தமாக.

 

லட்சுமி, இந்த அளவுக்கு நம்ம குடும்பத்து மேல கோபம் இருக்கும் போதே மாப்ள உன்கிட்ட நல்லபடியாக தான நடந்துக்குறார். நாம கொஞ்சம் பொறுத்து தான் போகணும் யாழினி. ஒரு நாள் அவருக்கு உண்மை தெரியவரும், எவ்வளவு நாள் தான் உண்மையை மூடி மறைக்க முடியும். அப்போ நம்ம மேல இருக்க எந்த தப்பும் இல்லனு அவருக்கு புரியும். அப்போ நம்ம குடும்பத்தையும் அவர் புரிஞ்சுப்பார். நீயும், அவரும் சந்தோஷமா இருக்கீங்கல்ல அதுவே எங்களுக்கு போதும்மா.

 

இருந்தாலும், அவர் உங்கள பத்தி எல்லாம் என்கிட்ட கோவமா பேசும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமா. எந்த தப்பும் பண்ணாம நாம ஏன் தண்டனையை அனுபவிக்கணும்.

 

மரகதம், எந்த தப்பும் பண்ணலைனு நமக்கு தெரிஞ்ச மாதிரி, உன் வீட்டுக்காரருக்கும் தெரியுற வரைக்கும் நாம கொஞ்சம் கார்த்திருந்து தான் ஆகணும் யாழினி. சீக்கிரமே அந்த கடவுள் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார் கவலைப்படாத.

 

சரி பாட்டி. வெண்ணிலா அக்கா கூப்பிடுறாங்கனு ஆரணி சொன்னா. நான் போய் என்னன்னு கேட்டுட்டு வரேன் என்று விட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

இப்போ தான் மனசுக்கு நிறைவா இருக்கு அத்தை. யாழினியை இப்படி பார்க்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. மாப்ள யாழினி மேல ரொம்ப பிரியமா இருக்கார்.

 

மாப்ள யாழினியை பிடிச்சு தானே கல்யாணம் பண்ணார். அப்புறம் எப்படி உன் பொண்ணு மேல பிரியம் இல்லாம இருப்பார். அவருக்கு நம்ம குடும்பத்து மேல தான் கோவமே தவிர, உன் பொண்ணு மேல கிடையாது. கண்டிப்பா அவள நல்லா தான் பார்த்துப்பார்.

 

கிருஷ்ணமூர்த்தி மாமா மட்டும் இப்படி அவர்கிட்ட மாத்தி சொல்லாம இருந்திருந்தா, இந்நேரம் நாம குடும்பமா சந்தோஷமா இருந்திருப்போம் என்றார் வருத்தமாக.

 

நடந்ததை பத்தி பேசி என்ன ஆகப் போகுது லட்சுமி. என் தங்கச்சி சந்தோஷமா இருக்கணும்னு எங்க புள்ளைய தூக்கி கொடுத்தோம். எங்க போயிட போறா, இங்க தானே இருக்க போறா நினைச்ச நேரம் பிள்ளையை பார்த்துக்கலாம்னு நினைச்சோம். ஆனா, இப்படி எல்லாம் நடக்கும்னு யாரு கண்டா. நல்லதை பண்ணிட்டு கடைசியில கெட்டவங்க பெயர் வாங்கிட்டு நிற்கிறோம்.

 

நீங்க வருத்தப்படாதீங்க அத்த மாப்ளைக்கு எல்லா உண்மையும் சீக்கிரமா தெரியனும்னு நான் சாமிகிட்ட வேண்டி இருக்கேன். நம்மள அந்த கடவுள் கைவிட மாட்டார்.

 

மரகதம் பாட்டி கலங்கிய கண்களுடன், நீ சொல்றது நடந்தா, நானும் ரொம்ப சந்தோஷப்படுவேன். புள்ளைய தூக்கி கொடுத்துட்டு எங்க இருக்காங்கனு தெரியாம இத்தன வருஷமா வேதனைபட்டுக்கிட்டு கிடந்தோம்.

 

இப்போ புள்ளைய பார்த்தும் சொந்த பேரனே இப்படி விரோதி மாதிரி பார்க்கிறான்னு தெரியும் பொழுது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாம என்ன புள்ளையை திருப்பி கொடுங்கனு கேட்கவா போறோம். அவங்களுக்குனு கொடுத்த பிள்ளைய நாம எப்படி கேட்போம். இப்படி அந்த புள்ளையோட மனசுல சின்ன வயசுலையே நஞ்ச விதைக்காம இருந்திருந்தா, இன்னைக்கு நம்மள இப்படி விரோதி மாதிரி பார்க்காம சொந்தக்காரங்கனு நினைச்சு பார்த்திருப்பான்ல.

 

நம்ம யாழினியும் ஆரம்பத்தில் இருந்து சந்தோஷமா இருந்திருப்பா. என்ன தான் அவளை சந்தோஷமா பார்த்துக்கிட்டாலும், பெத்தவங்கள கஷ்டப்படுத்துறாரே நம்ம வீட்டுக்காரர்னு அவ மனசு கஷ்டப்பட தான செய்யும். இதெல்லாம் சீக்கிரமா மாறனும். அந்த ஆத்தா தான் எல்லாத்துக்கும் நல்ல வழியை காட்டணும் என்று கண்ணீர் மல்க கூறினார்.

 

இவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்க. இவர்களே அறியாமல் இரு காதுகள் அனைத்து உண்மையையும் தெரிந்து கொண்டது.

 

யாழினி, என்னக்கா கூப்பிட்டியா? என்று வெண்ணிலாவின் அருகில் சென்று அமர.

 

யாழினி.. என்ன நீயும், உன் வீட்டுக்காரரும் பகல்லையே நடுஹால்ல உட்கார்ந்துகிட்டு ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க.

 

யாழினிக்கு வெட்கத்தில் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டது.

 

யாழினி.. என்ன இது..? எங்க யாழினியா இது..? வெக்கம் எல்லாம் படுற. எப்பயுமே எது கேட்டாலும் ஒன்னுக்கு ரெண்டா பதில் சொல்லுவ. இப்போ வாய் அடைச்சு போய் உட்கார்ந்து இருக்க என்று கிண்டல் செய்ய.

 

அக்கா சும்மா இருக்கா. நீ வேற கிண்டல் பண்ணாத. அவருக்கு கையில அடிபட்டு இருக்கு. அதனால தான் ஊட்டி விட்டேன். வேற ஒன்னும் இல்ல.

 

பார்த்தா அப்படி தெரியலையே. ஆளை பார்த்தா நல்லா ஜிம் பாடி மாதிரி இருக்கார். உன்னை தூக்குனதுக்கு அவருக்கு கை வலி வந்துடுச்சா. இதெல்லாம் நான் நம்ப மாட்டேன்.

 

நிஜமா தான் அக்கா சொல்றேன். அவருக்கு வெயிட் தூக்குனதுல பாவம் கை வலிக்குதாம். சுளுக்கு புடிச்ச மாதிரி இருக்கு போலருக்கு என்று தான் சொன்ன பொய்யை அப்படியே சமாளித்தாள்.

 

நம்பிட்டேன், நம்பிட்டேன்.

 

அப்பொழுது அங்கே வந்த கயல்விழி, என்ன அக்காவும், தங்கச்சியும் ரொம்ப சந்தோஷமா எதையோ பேசிக்கிட்டு இருக்கீங்க.

 

வாடி வந்து இங்க உட்கார். சும்மா தான் பேசிகிட்டு இருந்தோம்.

 

என்னை பார்த்ததும் ஒன்னும் டாப்பிக்கை சேஞ்ச் பண்ணலையே.

 

நாங்க ஏன் டி பண்ண போறோம். நீ என்ன வேற யாரோ வா?.

 

அப்படி தான என்னை எல்லோரும் இப்போ பார்க்குறீங்க.

 

ஏன் கா இப்படி எல்லாம் பேசுற. யாரு இப்போ உன்னை அப்படி பார்த்தா.

 

யாரும் அப்படி பார்க்காம தான் இருக்காங்க. ஆனா, நீ வந்துட்டா எல்லாமே தலைகீழா மாறிடுது. எல்லாரும் யாழினி யாழினினு உன்னையே தலையில தூக்கி வச்சுக்கிட்டு கொண்டாடுறாங்க. ஒரு மாசமா இருக்க பொண்ணாச்சேனு என்னை யாரும் கவனிக்கிறதே இல்ல என்றாள் மூஞ்சை சிடுசிடு என்று வைத்துக் கொண்டு.

 

இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் யாழினி அமைதியாக அமர்ந்திருக்க.

 

வெண்ணிலாவிற்கோ, இவள் என்ன கூறினாலும் இப்படி தான் பேசுவாள் என்று கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

 

கயல்விழி, என்ன என்னை வெறுப்பேத்துக்காக தானே இரண்டு பேரும் இன்னைக்கு அப்படி பண்ணீங்க என்றாள் யாழினியைப் பார்த்து கோபமாக.

 

நான் என்னக்கா பண்ணேன்?.

 

அன்னைக்கு நான் உன்னை ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக உன் வீட்டுக்காரர் கோவில்ல வச்சு எல்லார் முன்னாடியும் என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார். இப்போ என் முன்னாடி ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்குற மாதிரி காட்டிக்குறீங்களா... என்றாள் வெடுக்கென்று.

 

அப்படி எல்லாம் எதுவும் இல்லக்கா. பாட்டி ஏதோ நேர்த்திக்கடன் வச்சிருந்தாங்க. அதனால தான் கோவிலுக்கு போகுறதுக்காக ஊருக்கு வந்தோம். அவருக்கு நிஜமாவே கை வலி. அதான் ஊட்டி விட்டேன்.

 

இந்த கதையெல்லாம் போய் வேற யார்கிட்டயாவது சொல்லு. உன் வீட்டுக்காரர் பத்தி எனக்கும் தெரியும். அவர் ஒன்னும் சாதாரணமான ஆள் இல்ல, பயங்கரமான ஆளு.

 

உண்மையை தெரிந்து கொண்ட அந்த நபர் யார்..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5