அவனதிகாரம் - 93

 

அதிகாரம் – 93

 

மறுநாள் விடியல் அழகாய் விடிந்தது. யாழினி ஆழ்ந்த நித்திரையில் இருக்க. அவளின் மேல் எதுவோ ஊருவது போல் இருக்கவே தூக்கத்திலிருந்து பதறி எழுந்தாள்.

 

ஐயோ அம்மா...! என்று கத்தியபடி அவள் எழுந்து அமர.

 

அவசரமாக அவளின் வாயில் கையை வைத்துப் பொத்திய அபிமன்யு, எதுக்குடி இப்போ கத்துற? என்றான் யாழினியின் முகத்தருகில்.

 

இருவரின் முகத்திற்கும் இடையே ஒரு இன்ச் இடைவெளி மட்டுமே இருக்க. தூக்க கலக்கத்தில் எழுந்த பதட்டத்தில், இவ்வளவு நெருக்கத்தில் அபிமன்யுவைப் பார்த்த பதட்டமும் சேர்ந்து கொள்ள பதட்டத்தில் செய்வதறியாது அபிமன்யுவை பிடித்து பின்னே தள்ளி விட்டாள்.

 

யாழினியின் இந்த எதிர்பாராத தாக்குதலினால் அபிமன்யு நிலை தடுமாறி ஒரு எட்டு பின்னோக்கி சென்றவன் கீழே விழாமல் லாவகமாக தப்பித்தான். யாழினி பதட்டமாக தன் கைகள், முகம் என்று தடவி தடவி பார்த்தாள்.

 

என்ன பண்ற நீ. எதுக்காக இப்போ நீ என்னை இப்படி பிடிச்சு தள்ளிவிட்ட.

 

நீங்க ஏன் என் வாயை பொத்துனிங்க.

 

இப்படி நீ கத்துனா, எல்லாரும் என்னை தான தப்பா நினைப்பாங்க. அதனால தான் உன் வாயப் பொத்தினேன். அதுக்காக என்னைப் பிடிச்சு இப்படித் தான் தள்ளி விடுவியா? ஜஸ்ட் மிஸ், இந்நேரம் கீழ விழுந்திருப்பேன்.

 

அபிமன்யு கூறுவதை கவனிக்காமல், யாழினி தன்னையே பரிசோதித்தபடி இருக்க.

 

என்ன டி பண்ற, நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?.

 

யாழினி, கனவு போலருக்கு என்று எண்ணியவள், அது ஒன்னும் இல்ல.. ஏதோ, மேல ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் ஏதாவது பூச்சியா இருக்குமானு செக் பண்ணேன்.

 

பூச்சி எல்லாம் ஒன்னும் இல்ல. அது நான் தான்.

 

யாழினி பதட்டமாக, என்னது நீங்களா...?.

 

ஆமா, நான் தான். இப்போ என்ன அதுக்கு.. என்ன, எங்க அம்மாகிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ண போறியா. சீக்கிரமா கிளம்பி வா ஒரு முக்கியமான விஷயம், அதுக்கு தான் உன்ன எழுப்பலாம்னு அப்படி செஞ்சேன்.

 

யாழினி, தூக்கத்துல இருக்கும் போது இப்படி தான் பண்ணுவீங்களா...? என்றவள் மனதிற்குள், ஐயோ! இன்னைக்கு காலையிலேயே இவ்வளவு பதட்டமா முழிச்சிருக்கோம். அப்போ, இந்த வருஷம் ஃபுல்லா இப்படி தான் இருக்குமோ? போன வருஷம் தான் எல்லாமே அதிரடியாக நடந்துச்சு. இந்த வருஷமாவது கொஞ்சம் அமைதியா போகும்னு பார்த்தா, இவர் இருக்க வரைக்கும் அது நடக்காது போலருக்கே...என்று எண்ணியபடி அதே நிலையில் அமர்ந்திருக்க.

 

அபிமன்யு, என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க. நான் வேணும்னா உன்ன எப்படி எழுப்பினேன்னு மறுபடியும் செஞ்சு காட்டவா என்று கேட்டபடி யாழினியை நோக்கி முன்னேற.

 

யாழினி ஒரு எட்டு பின் நகர்ந்தவாறு, அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. நான் ரெடி ஆகிட்டு வரேன், நீங்க போங்க.

 

சரி, சீக்கிரம் வா. கீழ உனக்காக ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.

 

என்ன சர்ப்ரைஸ்? என்றாள் ஆர்வமாக.

 

அபிமன்யு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், அதெல்லாம் சொல்ல முடியாது. நீயே வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ.

 

யாழினி அவனின் கையை தட்டி விட்டவாறு, இப்போ நீங்க சொல்லலைனா நான் பிரஷ் பண்ணாமலே போய் பார்ப்பேன்.

 

அபிமன்யு அவளை இழுத்துக் கொண்டு போய் பாத்ரூமில் தள்ளியவன், ஷவரை ஆன் செய்து விட்டு, ரெடியாகிட்டு வா. நான் போறேன் என்று விட்டு கதவை அடைத்து விட்டு சென்று விட்டான்.

 

யாழினி ஆர்வத்தில் அவசர அவசரமாக தயாராகி வெளியே வர. கட்டிலின் மேலேயே ஒரு அழகிய குர்த்தி செட் இருந்தது. அதை பார்த்ததும் யாழினிக்கு பெரும் மகிழ்ச்சி.

 

அப்படி என்றால் இன்று தனக்கு பிறந்தநாள் என்று அவருக்கு தெரிந்திருக்குமோ. அதனால் தான் புது உடை வாங்கி வைத்திருக்கிறாரோ என்று எண்ணியபடி அதே மகிழ்ச்சியான மனநிலையோடு புதிய உடையை அணிந்து கொண்டவள்.

 

அவசரமாக தயாராகி கீழே இறங்கி சென்றாள். உண்மையிலேயே கீழே யாழினிக்கு கார்த்திருந்தது பெரும் இன்ப அதிர்ச்சி தான்.

 

ஆம்..! அவளின் மொத்த குடும்பமும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். யாழினிக்கு தான் பார்க்கும் காட்சியை நம்ப முடியவில்லை.

 

நேற்று கூட பேசினோமே அம்மா வரேன்னு ஒன்னும் சொல்லலையே. ஒருவேளை கனவா இருக்குமோ என்று எண்ணியவள் அப்படியே நிற்க.

 

ஆரியன், மேடம் வந்துட்டாங்க எல்லாரும் ரெடியா... என்று கேட்க.

 

ஆரணி, ரெடி...! என்று கூற‌.

 

அனைவரும் எழுந்து நின்று கைதட்டியவாறு, ஹேப்பி பர்த் டே டூ யூ.... ஹேப்பி பர்த் டே டு யாழினி..... ஹாப்பி பர்த் டே டூ யூ.... என்று பாட.

 

யாழினியால் இது உண்மையிலேயே நடக்கின்றது என்பதை சுத்தமாக நம்ப முடியவில்லை. அதுவும், தன் தந்தை கைதட்டி பாட்டு பாடுவதெல்லாம் எப்படி சாத்தியம்..

 

இதுவரை அவரை இப்படி ஒரு அவதாரத்தில் யாழினி பார்த்ததே கிடையாது. பெரும் வியப்பாக இருந்தது. பாட்டிகள் கூட தப்பு தப்பாக பாடினாலும், ஒரு வழியாக சமாளித்து பாடி முடித்தனர்‌‌.

 

உண்மையிலேயே யாழினி ஸ்தம்பித்து நின்று விட்டாள். நடப்பது அனைத்தும் உண்மை தானா என்று அப்படியே நின்ற நிலையிலே நின்றிருந்தாள்.

 

இதுவரை யாழினியின் பிறந்தநாள் மட்டும் கிடையாது, அவளின் குடும்பத்தில் யாருடைய பிறந்தநாளுக்காகவும் இப்படி எல்லாம் அவர்கள் செய்ததே கிடையாது.

 

மேலும், அவளின் அப்பா இதெல்லாம் ஆடம்பரம்... தேவையில்லாத செலவு என்று கூறுபவர். பிறந்தநாள் அன்று கேக் கூட வெட்ட மாட்டார்கள். சிறுவயதில் யாழினி சாக்லேட் வாங்கிச் சென்று தன் பள்ளி நண்பர்களுக்கு கொடுப்பாள். வளர்ந்த பிறகு, அதுவும் கிடையாது.

 

இது அனைத்துமே அவளுக்கு மட்டுமல்ல, அவளின் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே புதிதாக இருந்தது. இன்று யாழினியின் பிறந்தநாள் என்று அறிந்ததும், அவள் வருவதற்குள்ளாக ஆரியன் ஏற்பாடு செய்தது தான் இந்த பாடல் பாடும் நிகழ்ச்சி. இதை அரங்கேற்றுவதற்குள் அவன் அரும்பாடு பட்டு விட்டான்.

 

பாட்டிகளின் வாயிலிருந்து வார்த்தையை வர வைப்பதற்குள், அவனுக்கு போதும் போதும் என்று ஆகிவிட்டது. மேலும், யாழினியின் அப்பா முடியாது என்று மறுத்து விட.

 

அவரை ஒரு வழியாக சமாதானம் செய்து, அனைவரையும் கோரசாக ஒன்று போல் பாட வைப்பதற்குள் நொந்து நூலாகி விட்டான்.

 

அபிமன்யு அன்று ஊரிலிருந்து கிளம்பும் முன்பு, வேலுச்சாமி தாத்தாவை தனிமையில் அழைத்துச் சென்று யாழினியின் பிறந்தநாளுக்கு அவர்களை குடும்பமாக வரும்படி அழைத்திருந்தான்.

 

அவருக்கும் அபிமன்யு அழைத்தது பெரும் மகிழ்ச்சியே.. அதன் விளைவே, இன்று மொத்த குடும்பத்தினரும் இவர்களின் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர்.

 

யாழினிக்கு தன் பிறந்தநாள் நினைவில் இருந்தாலும், யாரிடமும் கூறவில்லை. இதையெல்லாம் அவர்கள் பெரிதாக கொண்டாடுவது இல்லை என்பதாலும், இதுவரை இவர்களின் வீட்டிலும் இவள் வந்ததிலிருந்து யாருக்கும் பிறந்தநாள் கொண்டாடி பார்த்ததில்லை.

 

ஆகையால், இதை ஒரு பெரிய விஷயமாக கருதாமல் அப்படியே விட்டுவிட்டாள். எனவே, இவளே எதிர்பாராமல் இவர்கள் இப்படி செய்தது அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது.

 

மரகதம் பாட்டி, என்ன டி எங்கள பார்த்ததும் ஓடி வருவனு பார்த்தா, அப்படியே நிக்கிற என்றதும்.

 

யாழினி என்ன கூறுவது என்று தெரியாமல் சிரித்து சமாளித்தபடி, பாட்டி, எல்லாம் எப்போ வந்தீங்க? என்று பொதுவாக கேட்டபடி அருகில் வந்தாள்.

 

நாங்க எல்லாம் இப்போ தான் வந்தோம். ஒரு மணி நேரம் ஆகுது.

 

ஆரியன், யாழினி, உங்க வீட்ல எல்லாருக்கும் ஹாப்பி பர்த்டே பாட சொல்லிதரர்துக்குள்ள எனக்கு தொண்டை தண்ணியே வத்திப் போச்சு. ஹப்பா..... முடியல..... உன் பாட்டி எல்லாம் வந்து ரெண்டு மணி நேரம் ஆகுது. ரெண்டு மணி நேரமா நான் இவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் தெரியுமா.

 

வேலுச்சாமி தாத்தா, ஏன் தம்பி, நாங்க தான் நீ சொல்லிக் கொடுத்ததும் சரியா பாடுனோமே. நீ தான் எப்படி பாடுனாலும் தப்புன்னு சொல்ற.

 

ஏன் தாத்தா ஹேப்பி பர்த்டேனு பாட சொன்னா, ஆப்பி பத்துடே, ஆப்பி பத்துடேனு பாடுறீங்க. இது தான் சரியா பாடுறதா.

 

சரிங்க தம்பி, கோச்சுக்காதீங்க. திரும்பவும் ஏதாவது பாடணும்னா சொல்லுங்க அசத்தி புடுவோம்.

 

ஆரியன் அதிர்ச்சியாக, என்னது.... திரும்பவும் உங்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து பாட வைக்கிற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல. இன்னைக்கு இது போதும் மிச்சத்தை நாளைக்கு பார்த்துக்குவோம். பார்த்தீங்களா பாட்டி என்று வள்ளியம்மையை அழைத்தவன்.

 

என்னுடைய அருமை, பெருமை எல்லாம் உங்களுக்கு தான் தெரியல. பாருங்க, வெளியூர்லருந்து வந்த தாத்தாவுக்கு கூட என்னுடைய பாடல் திறமையை பத்தி எப்படி தெரிஞ்சிருக்கு. இதுக்கு தான் வீட்டிலேயே இருந்தா மதிக்க மாட்டாங்கன்றது. என்னுடைய கலை திறமை எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருந்து வீணா போகுது.

 

வள்ளியம்மை பாட்டி, உன்னை யாருடா வீட்டுக்குள்ளேயே இருந்து வீணாக்க சொன்னா... இனிமே, டெய்லி தெருத்தெருவா போய் பாட்டு பாடிட்டு வா.

 

ஆரியன் கோபமாக, நான் என்ன பிச்சைக்காரனா... தெரு தெருவா போய் பாட்டு பாடுறதுக்கு?.

 

வள்ளியம்மை பாட்டி, அப்போ தான இந்த ஊர் முழுக்க உன்னுடைய கலைத் திறமை பரவும் என்று கூற, அனைவரும் நகைத்தனர்.

 

மகேந்திரன், ஹாப்பி பர்த்டே யாழினி என்று கூற.

 

யாழினி, தேங்க்யூ மாமா என்று அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்.

 

அபிமன்யுவை அந்த கூட்டத்திலேயே காணவில்லை. இவர்களிடம் பேசினாலும், கண்களால் தன்னவனை தேட. எங்கு தேடியும் அவன் அவளின் கண்ணில் படவில்லை.

 

அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க. யாழினிக்கு தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இந்நாள் மாறிப்போனது.

 

பெரும் மகிழ்ச்சி.... ஆனாலும், ஏதோ ஒரு குறை இருப்பது போல் தோன்றியது.

 

ஆம்... யார் முதலில் கூற வேண்டுமோ அவனை இன்னும் காணோமே.... ஒருவேளை, வேலை இருக்கிறது என்று சீக்கிரமாக அலுவலகம் சென்று விட்டானோ. அபிமன்யு இப்படி செய்வது அடிக்கடி நிகழ்வது தான்.

 

அதிகமான வேலை இருந்தால், நேரம் காலம் பார்க்காமல் அலுவலகம் செல்பவன். அப்படி இன்றும் சென்று விட்டானோ என்று எண்ணியவள். அவனைப் பற்றி விசாரிக்கவில்லை.

 

மீரா அன்று ஆரணியையும், யாழினியையும் கல்லூரியை விடுப்பு எடுக்கும்படி கூற.

 

யாழினியும் தன் குடும்பத்தினர் வந்திருப்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டாள். அனைவரும் உணவருந்தி விட்டு சற்று நேரம் ஓய்வெடுக்க. அந்த இடைவெளியில் யாழினி தன்னவனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்த்தாள்.

 

ஆனால், எதிர் முனையில் எந்த ஒரு பதிலும் இல்லை. அழைப்பு சென்று கொண்டே இருந்ததே தவிர, யாருமே ஏற்கவில்லை.

 

யாழினி, என்ன இது, ரிங் போய்கிட்டே இருக்கு. இவர் போனை எடுக்காம என்ன பண்ணிகிட்டு இருக்காருனு தெரியலையே. ஆபீஸ்ல இருந்தா கூட, போன் பண்ணா உடனே எடுப்பார். ஏதாவது பிரச்சனையா இருக்குமா... என்று எண்ணியதுமே மனம் படபடக்க தொடங்கியது.

 

மேலும், அபிமன்யுவின் மீது கோபமும் எழுந்தது. எல்லாருமே எனக்கு விஷ் பண்ணிட்டாங்க. இவருக்கு கொஞ்சமாவது என் மேல அக்கறை இருக்கா... காலையிலருந்து ஒரு விஷ் கூட பண்ணல. எங்க போயிருக்கார்னு கூட தெரியல. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறார். வீட்ல கேட்டா இந்த ஆரியன் கிண்டல் பண்ணியே ஒரு வழி பண்ணிடுவான். ஒரு பொண்டாட்டியுடைய பிறந்தநாளை கூட ஞாபகம் வச்சுக்க முடியல. இவருக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்.. அவர் வீட்டுக்கு வந்தாலும், அவர் கிட்ட பேசவே கூடாது.

 

எங்க வீட்லருந்து எல்லாரும் என் பர்த்டே ஞாபகம் வச்சு கரெக்டா ஊருக்கு வந்து இருக்காங்க. ஆனா, இவர் என்னடானா, ஒரு போன் பண்ணி கூட விஷ் பண்ணாம இருக்கார். வீட்டுக்கு வரட்டும், அவர்கிட்ட நான் பேசவே மாட்டேன் என்று பொறிந்துக் கொண்டிருந்தாள்.

 

அபிமன்யு எங்கு சென்றிருப்பான்...?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5