அவனதிகாரம் - 95

 

 

அதிகாரம் – 95

 

யாழினி அவர்களிடம் தான் திருமண பத்திரிக்கையில் தங்கள் இருவரின் பெயரையும் எழுதியதைப் பற்றி கூறிவிட்டு, வெட்கப்பட்ட படி அமர்ந்திருக்க.

 

ஆரணி, இதுக்கு ஏன் நீ இவ்வளவு வெட்கப்படுற? உங்க ரெண்டு பேருடைய பெயர் தான எழுதுன... இதுல என்ன இருக்கு? என்றாள் புரியாமல்.

 

வெண்ணிலா, உன் வீட்டுக்காரர் அதைப் பார்த்துட்டு என்ன சொன்னார்?.

 

யாழினிக்கு, அபிமன்யு மீண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டது மனக்கண் முன்பு வந்து போக, முகம் சிவந்தபடி அமர்ந்திருந்தாள்.

 

வெண்ணிலா, நீ கொடுக்குற ரியாக்ஷ்னைப் பார்த்தா, பெருசா எதுவோ நடந்திருக்கு போலருக்கு.

 

அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா. சும்மா என்னையே கிண்டல் பண்ணாதீங்க. சும்மா தோணுச்சுன்னு எங்க பெயரை எழுதி பார்த்தேன் அவ்வளவு தான்... உடனே, எல்லாரும் அதையே சொல்லி என்னை கிண்டல் பண்ணாதீங்க.

 

ஆரணி, யாழினி, உனக்கு கல்யாணம் பண்ணா இந்த மாதிரி ப்ராப்பரா பண்ணனும்னு ரொம்ப எதிர்பார்த்தியா?.

 

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இதுவரைக்கும் அப்படி எல்லாம் யோசிச்சதும் கிடையாது‌. அன்னைக்கு ஷைலஜா அக்காவுடைய மேரேஜ் இன்விடேஷன் பார்க்கும் பொழுது தான் எனக்கு இப்படி தோணுச்சு. அதான், சரி சும்மா எழுதி பார்ப்போம்னு ஒரு இன்விடேஷன் எடுத்துக்கிட்டு போய் எழுதி பார்த்தேன். ஆனா, நல்லா மாட்டிக்கிட்டேன்.

 

கயல்விழிக்கு, யாழினியை பார்க்கும் பொழுது இந்த விஷயத்தில் எவ்வளவு முயன்றும் அவளால் தன் பொறாமையை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி என்ன இவர்களிடம் இருக்கிறது? காதல் திருமணம் செய்த எங்களை விட, விருப்பம் இல்லாமல் திருமணம் செய்த இவர்கள் இருவருக்கும் நடுவே இவ்வளவு காதல் கரை புரண்டு ஓடுகிறதே..

 

எப்படி.. என்று அவ்வபொழுது இவர்களைப் பார்க்கும் பொழுது சிறு பொறாமை தலை தூக்க தான் செய்தது. பிறகு, மூவரும் அவளை மாற்றி மாற்றி கிண்டல் செய்து முடிக்க. அப்பொழுது தான் ஆரியன் அந்த இடத்திற்கு வந்தான்.

 

ஆரணி, எங்கடா போற, அடிக்கடி காணாம போயிடுற? இப்போ எல்லாம் உன்ன கையிலேயே பிடிக்க முடியலையே.

 

யாழினி, அது எப்படி பிடிக்க முடியும். எப்பவும் லேடீஸ் ஹாஸ்டல் முன்னாடியே நின்னுட்டு இருந்தா, நம்ம கண்ணுல எப்படி மாட்டுவாறு என்று ஆரியனைக் கிண்டல் செய்ய.

 

ஆரணி, என்ன சொல்ற நீ. லேடீஸ் ஹாஸ்டல்லயா? என்றாள் ஆரியனை சந்தேகப் பார்வைப் பார்த்தபடி.

 

ஆமா, சார் இப்போலாம் டெய்லி ஆபீஸ் போறாரோ இல்லையோ.. லேடிஸ் ஹாஸ்டல் முன்னாடி போய் அட்டன்டன்ஸ் போட்டுடுறாராம்.. நியூஸ் வந்துச்சு.

 

ஆரணி, அப்படியா..! என்று ஆச்சரியமாக கேட்பது போல் பாவனை செய்ய.

 

ரொம்ப பண்ணாத.. என்ன போய் என்ன பிரயோஜனம். நான் எதுக்காக போறேனோ அந்த வேலை மட்டும் நடக்கவே மாட்டேங்குது. எல்லாம் உங்க கண்ணு தான்.

 

யாழினி, இது நல்ல கதையா இருக்கே.. உன்னால அவள கரெக்ட் பண்ண முடியலன்னதும், எங்க மேல பழி போடுறியா என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே யாழினியின் நண்பர்கள் பட்டாளம் இவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

 

அவர்களைப் பார்த்ததும் யாழினியின் முகம் பிரகாசமானதோ இல்லையோ.. ஆரியனின் முகம் நன்றாக பிரகாசமானது வர்ஷினியை பார்த்ததும்.

 

பிறகு, நண்பர்கள் அனைவரும் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற. அனைவரும் ஒவ்வொரு பரிசு பொருளாக கொடுத்தனர்.

 

யாழினி, என்ன எல்லாம் கிஃப்டெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க. அதுவும் சொல்லாம கொள்ளாம வேற வந்திருக்கீங்க.

 

வர்ஷினி, எல்லாம் என்னோட பிளான் தான். உன்னுடைய பர்த்டேக்காக ஒரு சின்ன சர்ப்ரைஸ்.

 

ஆரியன், நிஜமாவே இது ரொம்ப பெரிய சர்ப்ரைஸ் தாங்க... என்றான் அசடு வழிந்தபடி.

 

ஆரணி யாழினியின் காதில் கிசுகிசுப்பாக, ஆரம்பிச்சுட்டான்... என்று கூறி சிரித்தாள்.

 

மீண்டும் அபிமன்யு மாயமாக மறைந்து விட்டான். யாழினி எங்கு தேடியும் அவளிடம் சிக்காமல் தப்பித்துக் கொண்டே இருந்தான். வீட்டில் உள்ள அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொல்லி பரிசுகளை கொடுத்தாலும், யாழினி எதிர்பார்த்தது அபிமன்யுவின் வாழ்த்தை தான். அது மட்டும் அவளுக்கு கிடைக்கவே இல்லை.

 

அதில், அபிமன்யுவின் மீது பெரும் கோபம் எழுந்தது. கோபத்தில் அவனை திட்டுவதற்காக அவனின் செல்போனிற்கு பலமுறை முயற்சி செய்தும் அவன் எடுக்கவே இல்லை.

 

கிஷோருக்கு அழைத்தாலும், மேடம், சார் கொஞ்சம் பிஸியா இருக்காங்க என்று கூறி அழைப்பைத் துண்டித்து விட்டான்.

 

அதில், கடுப்பான யாழினி, வரட்டும், எப்படியும் வீட்டுக்கு தானே வந்தாகணும். ஒரு தடவ கல்யாணம் பண்ணதுக்கே பொண்டாட்டி பிறந்தநாள் மறந்திடுச்சு... இதுல, திரும்பவும் பத்திரிக்கை அடிச்சு வேற கல்யாணம் பண்ணிக்கணுமாம் என்று திட்டியபடி அமர்ந்திருந்தாள்.

 

யாழினிக்கு திருமணம் நடந்த செய்தியை அறிந்த பிறகு அஷ்வின் பழையபடி யாழினியிடம் பழகுவதில்லை. ஏதோ ஒரு திரை யாழினிக்கும், அவனுக்கும் இடையே இருந்து கொண்டே இருந்தது.

 

அதை யாழினி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அஷ்வின் பேசாவிட்டாலும், இவள் எப்பொழுதும் போல் அஷ்வினிடம் தானே சென்று பேசிக்கொண்டு இருந்தாள்.

 

அதில், அஷ்வின் தன்னிடம் பேசாமல் விலகுவதையே அவள் கவனிக்கவில்லை. மீரா, அனைவருக்கும் மதிய உணவை வீட்டிலேயே தடபுடலாக தயாரித்தார்.

 

வர்ஷினி, என்ன ஆன்ட்டி, பெரிய விருந்தா ரெடி பண்ணிட்டீங்க போலருக்கு.

 

மீரா, ஆமா மா... என்னுடைய மருமகளுக்கு கல்யாணமான பிறகு வர முதல் பிறந்த நாள் இல்லையா, எங்க வீட்டுல கொண்டாடுற முதல் பிறந்தநாள். அதான் மறக்க கூடாதுல்ல.. அதுக்காக தான் இவ்வளவு ஐட்டம்ஸ் செஞ்சிருக்கேன்.

 

வர்ஷினி, உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க யாழினி ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் என்று கூறி நகைக்க.

 

ஆரியன், உங்களுக்கு ஓகேனா சொல்லுங்க, உங்களுக்கும் இதே மாதிரி மாமியார் இருக்குற மாதிரி ஒரு பையனை நான் பார்க்கிறேன் என்றான் பல்லை காட்டியபடி.

 

அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல. எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க வீட்ல ஆளுங்க இருக்காங்க என்று விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

ஆரியன் மனதிற்குள், எப்படி பேசுனாலும் இவள கரெக்ட் பண்ண முடியலையே. நம்மளுடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிக்கொண்டே இருக்கிறது என்று வருந்தினான்.

 

பிறகு, அனைவரும் மதிய உணவை உண்டு முடித்ததும், யாழினி யாரும் அறியாதபடி மீராவிடம், அத்த, எங்கே உங்க பையன ஆளையே காணும். சாப்பிட கூட வரல.

 

ஓ..! அவனா... ஏதோ முக்கியமான வேலை இருக்குனு லன்ச்க்கு வரலைனு போன் பண்ணி சொல்லிட்டான் மா.

 

ஓ... அப்படியா... என்றவள் மனதிற்குள், இத்தன தடவ நம்ம போன் பண்ணோம். நம்ம போன எடுக்கவே இல்ல. அவங்க அம்மாவுக்கு மட்டும் போன் பண்ணி பேசி இருக்காரா என்று அதற்கும் சேர்த்து மனதிற்குள் இரண்டு திட்டுகள் திட்டினாள்.

 

நேரம் கடந்து கொண்டே சென்றதே தவிர, அபிமன்யுவை ஆளையே பார்க்க முடியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவள் வெறுத்துப் போய்விட்டாள். இனி கண்டிப்பாக அவன் வரமாட்டான் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.

 

மணி 7ஐ நெருங்கி விட, ஆரணி ஒரு பையுடன் யாழினியை நெருங்கியவள், இந்தா இதில் இருக்க டிரஸை போய் மாத்திக்கிட்டு வா.

 

யாழினி அலுப்பான குரலில், எதுக்குடி இப்போ இதெல்லாம். இதுவே நல்லா தான இருக்கு. இதுவும் புதுசு தான் என்றாள் தான் அணிந்திருக்கும் உடையைக் காண்பித்து.

 

அதெல்லாம் எனக்கு தெரியும். உனக்காக நாங்க ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணி இருக்கோம் என்று அவளை வற்புறுத்த.

 

வேறு வழியின்றி அவள் கொடுத்த உடையை மாற்றிக்கொண்டு வந்ததும், ஆரணி ஒரு துணியால் பின்னிருந்து யாழினியின் கண்களை கட்ட.

 

ஹே.... என்ன பண்ற என்றபடி தன் கண்கட்டை அவிழ்க்கப் போக.

 

அவளின் கையைப் பிடித்து தடுத்த வெண்ணிலா, கொஞ்ச நேரம் சும்மா இரு யாழினி. நாங்க எல்லாம் சேர்ந்து உனக்காக ஒரு சர்ப்ரைஸ் ரெடி பண்ணி இருக்கோம்.

 

இந்த முறை யாழினிக்கு சர்ப்ரைஸ் என்றதும் எந்த ஒரு ஆச்சரியமும் எழவில்லை. அவளுக்கு அபிமன்யு வாழ்த்து சொல்லாமல் நேரம் கடத்துவதே மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.

 

இவர்கள் தனக்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தன்னுடைய வருத்தத்தைக் காட்டி இவர்களையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணியவள், அமைதியாக அவர்கள் கூறுவதைக் கேட்டுக் கொண்டாள்.

 

பிறகு, கண்ணை கட்டியபடியே யாழினியை அவர்களின் வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றனர். சற்று நேரத்திற்கு யாரின் குரலும் யாழினியின் செவியை எட்டவில்லை. கண்கள் கட்டிய நிலையில் யாரின் குரலுமே கேட்காமல் தனித்து விடப்பட்டது போல் தோன்ற.

 

ஆரணி.. அக்கா.. எல்லாம் எங்க இருக்கீங்க. யாருடைய சத்தமுமே காணும் என்று கேட்க.

 

அப்பொழுதும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவே.

 

அக்கா, அப்புறம் நான் கண்ண திறந்து பார்த்திடுவேன். என்கிட்ட நீங்க எதுவும் கோவப்படக்கூடாது.

 

இப்பொழுதும் எந்த ஒரு சத்தமும் இல்லாமல் நிசப்தமாகவே இருந்தது.

 

சரிக்கா, நான் கண்ண திறக்க போறேன் என்று கூறியபடி தன் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்ற.

 

அவளை சுற்றி இருள் கவ்வி இருந்தது. சற்று நேரம், தன்னைச் சுற்றி என்ன இருக்கின்றது என்பதே யாழினிக்கு புரியவில்லை.

 

பிறகு, ஒருவாறு கண்களைக் கசக்கி தன் பார்வையை சரி செய்தவள். உற்றுப் பார்க்க, அப்பொழுதும் ஒன்றும் தெரியவில்லை. எங்கும் வெறும் இருள் தான் சூழ்ந்திருந்தது. எங்கே நிற்கிறோம் என்று கூட அவளால் கணிக்க முடியவில்லை. அவ்வளவு இருட்டாக இருந்தது.

 

அதில், யாழினிக்கு சற்று பயம் தொற்றிக் கொள்ள.

 

அக்கா, ஆரணி.. எல்லாம் எங்க இருக்கீங்க... இங்க ரொம்ப இருட்டா இருக்கு. அத்தை, அம்மா.. யாராவது லைட் ஆன் பண்ணுங்க என்று குரல் கொடுத்தாள்.

 

ஆனால், அவள் குரலுக்கு எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் போக. இன்னும் பதட்டம் சற்று அதிகமானது. அப்பொழுது பின்னிருந்து யாழினியை அணைத்தவன்.

 

அவளின் காது மடலில் தன் மீசை முடி உரசும் அளவிற்கு நெருக்கமாக, ஹாப்பி பர்த்டே பேபி டால் என்றான் கிசுகிசுப்பாக.

 

பின்னிருந்து யாரோ அணைத்ததும், திடுக்கிட்டவளிற்கு அபிமன்யுவின் ஸ்பரிசமும், அவனின் வார்த்தையும் ஆசுவாசப்படுத்தியது. யாழினிக்கு இன்னும் பதட்டம் முற்றிலுமாக குறையவில்லை.

 

சற்று பதட்டமான குரலில், இப்படி தான் பயம்புடுத்துவீங்களா.. எதுக்கு இப்படி லைட்டெல்லாம் ஆஃப் பண்ணி வச்சிருக்கீங்க.. நான் பயந்துட்டேன் தெரியுமா.. எங்க யாரையுமே காணோம் என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

 

இருட்டில் அவளிற்கு அபிமன்யுவின் முகமும் தெரியவில்லை.

 

தன்னை நோக்கி அவளை திருப்பியவன், ஹாப்பி பர்த்டே சொன்னா இப்படி தான் பதில் சொல்லுவியா? என்றான் அதே கிசுகிசுப்போடு.

 

இப்போ தான் உங்களுக்கு என்னுடைய பர்த்டே ஞாபகம் வந்துச்சா.. நான் காலையிலருந்து வெயிட் பண்றேன் தெரியுமா.. நீங்க மட்டும் தான் எனக்கு விஷ் பண்ணவே இல்ல என்றாள் கம்மிய குரலில்.

 

அவளின் குரலே கூறியது, அவள் அபிமன்யுவை எவ்வளவு தேடி இருக்கிறாள் என்று.

 

யாழினியின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தியவன், அதான் இப்போ சொல்லிட்டேனே, ஹாப்பி பர்த்டே டு மை எவ்ரிதிங்! என்றவாறு அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

 

அபிமன்யுவின் எதிர்பாராத முத்தத்தில் யாழினியின் உடல் சிலிர்த்து அடங்க. அடுத்த நொடியே அபிமன்யு மீண்டும் மாயமானான். மீண்டும் யாழினி அந்த இருட்டில் சுற்றி முற்றி அபிமன்யுவை தேட.

 

சட்டென்று விளக்குகள் மிளிரத் தொடங்கியது. அதில், கண்கள் கூச ஒரு நொடி தன் கண்களை மூடி திறந்தாள். அந்த இடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவனதிகாரம் - 1

அவனதிகாரம் - 3

அவனதிகாரம் - 5